21 July 2006

கோவில்கள் மறையும் அபாயம்! - 2

http://www.pkblogs.com/maraboorjc/2006_04_02_maraboorjc_archive.html

எனும் வலைத்தளத்தில் ( என்ன செய்ய சுற்றி வளைத்து மூக்கைத் தொடுமாறு நமது முட்டாள் அரசாங்கம் நம்மை பாடாய் படுத்துகிறது! 18 குறிப்பிட்ட வலை தளைத்தை தடை செய்வதற்கு பதில், எல்லா ப்ளாக்ஸ்பாட் வலைத்தளங்களையும் ப்ளாக் அவுட் (Black-out) செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை!! ) .. விஷயத்துக்கு வருகிறேன்..
மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் கோயில்கள் மறையும் அபாயத்தைப்பற்றி எழுதியிருந்தேன். பின்னூட்டத்தில், 'குன்றத்தூரான்' என்ற பெயரில், ஒருவர் எங்கள் குழு செய்யும் உழவாரப் பணியை கேலி செய்து பேசினார்). அனாமதேயமாக, தனது தொலைப் பேசி எண், மின்னஞ்சல் ஏதும் தராமல், அவர் குறிப்பிட்ட நவக்ரஹஸ்தலங்களை எங்கள் R.E.A.C.H குழு பார்வையிட்டு வந்தது. 'குன்றத்தூரான்' குறிப்பிட்ட கோவூர் சிவாச்சாரியாரான தியாகராஜனின் ஒத்திழைப்போடு எல்லா கோவில்களையும் பார்வையிட்டோம். அவர் கூறியதுபோல், எந்த கோயிலும் 'கேட்பாரற்று கிடக்க'வில்லை!! மாறாக, ஒரே ஒரு கோயிலைத்தவிர (கெருகம்பாக்கம்) மற்றவை நன்றாகவே இருந்தது. மக்கள் வராததற்குக் காரணம், சரியான விளம்பரம் இல்லாததே!
எங்கள் அதிர்ஷ்டம், நாங்கள் அக்கோவில்களை பார்த்துவிட்டு வந்த மறுவாரமே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை தலைவரான திரு. இறையன்பு IAS (என்ன பெயர் பொருத்தம்!!) ப்ல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்களை அழைத்து, ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், எங்கள் R.E.A.C.H குழுவின் தலைவரான, முன்னாள் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழக திரு.டாக்டர்.டி.சத்யமூர்த்தி ஒரு பவர் பாயிண்ட் விளக்கவுரை அளித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர், மற்றும் செயலர் (இறையன்பு அவர்கள்) மற்றும் ஏனைய பெருந்தலைகள் அங்கே அமர்ந்திருக்க, அவ்விளக்கவுரையில் நமது சென்னையைச் சுற்றியுள்ள நவக்ரஹக்கோவில்களின் படங்களும், விளக்கவுரையும் இடம் பெற்றிருந்தன. மறு வாரமே, சுற்றலாத்துறையைச் சேர்ந்த அதிகாரி ராஜசேகர் அவர்கள், நம்முடன் தொடர்பு கொண்டு அக்கோவில்களை பற்றிய விபரங்களையும், போகும் வழிகளையும் கேட்டுத்தெரிந்து கொண்டு, ஏனைய அதிகாரிகளுடன் சுற்றிப்பர்ர்த்து வந்து, அத்தலங்களை சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கச் செய்தார். நேற்றைய தினகரம், மதுர்ம் இன்றைய இந்து நாளிதழ்களில் சுற்றலாத் துறையின் சிறப்பு அறிவிப்பில், நபர் ஒருவருக்கு ரூ.150 பெற்றுக்கொண்டு, தமிழக சுற்றலாத்துறையே, இந்நவகிரஹக் கோவில்களை சுற்றிக்காட்ட ஏற்பாடு செதுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், மக்கள் வரவு அதிகரிக்கும். உள்ளூர் மக்கள் பிரசாத, பூசைக்குரிய பொருட்கள் விற்று சுய தொழில் புரிய முனைவர்; அதனால் பணப் புழக்கம் மற்றும் கோவில்களின் நிலைமை சேரமையும் என நம்புவோம். சுற்றலாத்துறை காட்டிய வேகத்தையும், விவேகத்தையும், ஏனைய துறைகளான இந்து அறநிலையத்துறையும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையும் காட்டினால், சிகப்பு நாடாக்கள் அவிழ்க்கப் பட்டு, கோவில்களில் பூசைகள் தினந்§தோறும் நடைபெறும்; இக்கோவில்களிலிருந்து காணாமல் போகும் கல்வெட்டுச்செய்திகள் உலகெங்கும் அறிய வரும். எல்லாரும் சேர்ந்து இப்பணையை செய்வார்களா?
நீங்களும் இந்த நவக்ரஹ தலங்களை பார்க்க ஆவலாக உள்ளீர்களா? பயணிக்கவும் :-

http://puggy.symonds.net/~madan/navagraha/tour.html

இந்த வலைத்தளத்தில் உள்ள சிகப்புப் புள்ளிகளை சுட்டினால், உங்களை அந்தந்த ஸ்தலங்களுக்கே கொண்டு போகும்!

இப்போதைக்கு எந்த பதிவையும் படிக்க இயலாதவர்கள் மூக்கைச் சுற்றி pkblogs மூலம் முயலலாம்!

19 July 2006

போட்டி - "கருப்பய்யா"

காற்று ஊழிக்காற்றாய் அடித்தது. ஏற்கனவே, மெல்லிய தேகம். அத்தனை உயரத்துக்கு போனதால், உடம்பு, 'S' போல் காற்றில் வளைவது போல் இருந்தது.

சோழிங்கநல்லூரின் பல உயர்ந்த I.T.பார்க் கட்டடங்களில் இதுவும் ஒன்று. அதன் உயரத்திலிருந்த படியே, கீழே பென்சில் கீரலாய்த் தெரியும் சாலைகளையும், இவன் நிற்பதை அண்ணாந்து பார்க்கக்கூட, நேரமில்லாமல், கடிகாரத்தை மிழுங்கியது போல் திரியும் இளைஞர் கூட்டம், எறும்பு ஊர்வதுபோல் கட்டிடத்துக்கு உள்ளேயும் வெளியேயும் போவதையும் ஒரு முறை பார்த்துக்கொண்டான்.

அவசர அப்பா, அன்பு அம்மா, அநியாயத்துக்கு விரட்டும் பாஸ், மதிக்காத ஏளன விழிகளால் பார்க்கும் சக ஊழியர்கள், தினம் பார்த்து சிரிக்கிறாள் என நினைக்கும் அந்த பெயர் தெரியாத பெண், வேலையிடத்து சகலைகள், என எல்லாரும் ஒரு ரவுண்டு, மனக்கண்ணில் வந்து விட்டுப்போனார்கள்!
குதிக்கவேண்டியதுதான் பாக்கி. "ஒன். டூ.." சொல்லுமுன், அந்த 'எண்ண' ஓட்டத்தை முந்திக்கொண்டு நெஞ்சின் லப்-டப் சப்தம் அதிகமாக கேட்டது!

தொண்டையில் வரண்டு, நாக்கு எங்கோ ஒட்டிக்கொண்டதுபோல் இருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டான். "குதி! குதி! அடக் குதிடா, இன்னும் அவமானங்களை தாங்கிகிட்டு எத்தனை நாள் வாழ்றது..கமான், குதி..." என மனதின் தைரியப் பகுதியின் ஆதிக்கம் அதிகரித்து, ரத்தம் குபுக்கென தலைக்கேற.. கு...

'விஷ்..' என மிக பக்கத்தில் ஒரு சப்தம் கேட்டதுபோலிருந்தது! மெதுவாக கண்ணைத்திறந்து பார்த்தான்! நம்ப முடியவில்லை! மிக,மிக அருகில் அவன்! அருகில் இவனதை விட பெரிதாக உள்ள கட்டிடத்தின் சுவற்றிலிருந்து அப்படியே ஒரு கயிற்றைப் பிடித்தபடி, ஸ்பைடர்மேன் போல், இவன் முகத்துக்கு முன் வருவதும், ஊசலாடி பின்னால் போவதுமாய் இருந்தான். மெதுவாக கயிற்றின் ஆட்டத்தை நிறுத்தி, இவன் பக்கமாக குதிக்க முயல்வது தெரிந்தது!

"யேய், வராத! என் கிட்ட வராத! ஐ யாம் கோயிங் டு ஜம்ப்!"

அவன் கத்தினான்."என்ன சொல்ற? காதுல விழல! இரு கயிறு கொஞ்சம் நின்னதும் பக்கத்துல வந்து கேக்கறேன்!"

"அதத்தான் சொல்றேன். பக்கத்துல வராதன்னு,டோண்ட் கம் நியர் மீ!"

"எதோ இங்கிலீஷ்ல சொல்றன்னு தெரியுது; ஆனா என்னன்னுதான் தெரியல. எனக்கு இங்கிலீஷ் வராது. இரு பக்கத்துல வர்றேன்."

சொல்ல சொல்ல கேட்காமல், மெதுவாக இந்தப் பக்கமாய் குதித்து, அருகே வந்தான். வருகையிலேயே, தன்னைச்சுற்றியிருக்கும் கயிற்றைக் கழற்றிக் கொண்டே வந்தான்.

குதிக்க வேண்டியதை மறந்து, "இவன்,இங்கே, எப்படி.." எனக்..

"என்ன கேக்கவர்றன்னு தெரியுது! எங்கிருந்து குதிச்சான்னா? அதான் பார்த்தயே? வானத்தில இருந்துதான்.." சொல்லி சிரித்தான்!

அதற்குள் மிக அருகில் வந்துவிட்டு, சகஜமாகத் தோளிலும் கை போட்டான்."கண்ணா, பாரு, எனக்கு இங்க்லீஷ் வராதுன்னு சொல்லிகிட்டே இருக்கேன்; நீ சும்மா பீட்டர் விட்டுகிட்டே இருக்கயே?"

'வெடுக்' கென கையை உதறிவிட்ட குலோத்துங்கன்(ஆபிஸில் குல், குல் என்பார்கள்!) "யேய், யூ.. சரி, தமிழ்லயே சொல்றேன். நீ எப்படி வந்தயோ அப்படியே போயிடு. என்ன தடுக்காதே, எனக்கு குதிக்கணும்!"
"குதி! ஆனா, அட்ரஸ் கொடுத்துட்டு போ! சொல்லிவிட உபகாரமா இருக்கும்; அதோடு, எதாச்சும் சொந்த பந்தம் இருந்தா, பாங்க் பாலன்ஸ் இருந்தா, விவரத்தை சொல்லு; கொஞ்சம் கவனிக்க வசதியா இருக்கும்" மீண்டும் சிரிப்பு!

"உனக்கு நக்கலா இருக்கா? எல்லாத்துக்கும் சிரிக்கிறயே? எம்மாதிரி உனக்கு ப்ரச்னைங்க வந்தா, நீயும் இதைத்தான் செய்வ!"

"அட, பார்றா! ப்ரச்னையா? எவனுக்கும் வராதது புதுசா உனக்கு வந்துருச்சா, என்ன? சரி, என்னன்னுதான் சொல்லேன்; எதாச்சும் சரி செய்ய வழிதெரியுதான்னு பார்ப்போம்; தெரியல, நீ என் கையத்துலயே தொங்கு, நானே அத்துவுடுறேன்"

சொன்னபடியே, மெதுவாக குல்.லின் (நாமும் அப்படியே கூப்பிடுவோமே,குலோத்துங்கன், எழுத ரொம்ம்ம்ப கஷ்டமாயிருக்கு!) கையைப் பிடித்து, சுவர் விளிம்பிலிருந்து உள் பக்கமாக, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வந்துவிட்டான், அந்த ஸ்பைடர்மேன்!

உடைந்து போயிருந்தான் கு.ல்! கொஞ்சம் நினைவு வந்தது போல்! தலைகுனிந்து கொஞம் போல் விசும்பி அழுதான்! ப்ரச்னைகளாலா, இல்லை தனது தற்கொலை முயற்சியும் தடைபட்டதாலா, தெரியவில்லை.

வேண்டுமளவு அழட்டுமென விட்டு, மெதுவாக மவுனத்தை உடைத்தான் ஸ்பைடர்மேன்." பார் இதோ பார்; என்ன ப்ரச்னை? எதுனாலும் பேசி சரி பண்ணீர்லாம்; இப்படி புசுக்குனு குதிக்கற முடிவெல்லாம் எடுக்கக்கூடாது! அப்படி எல்லாரும் ப்ரச்னைக்கு குதிக்க ஆரம்பிச்சாங்கன்னா, அதுக்கும் திருப்பதி மாதிரி க்யூ ஏற்பாடுதான் செய்யணும்! சொல்லு, என்ன ப்ரச்னை"

சிரித்துவிட்டான், கு.ல்!

"பார்றா, சிரிக்கறத; கொஞ்ச நேரம் முந்தி குதிச்ச பயலா இது, இப்ப சிரிக்கிறான்! என்னய்யா ஒரே கன்ப்யூஷியஸா இருக்கயே! எதுக்குய்யா சிரிச்ச?"

"இல்ல, திருப்பதி மாதிரி க்யூல எல்லாரும் நின்னு, ஒவ்வொருத்தனா குதிக்கிற மாதிரியும், அத கன்ட்ரோல் பண்ண செக்யூரிட்டி வெச்சு, ஒவ்வொருத்தறா அனுப்புற மாதிரியும் நினைப்பு வந்து, சிரிப்பு வந்துச்சு, அதான்; அதவிடு, நீ..நீங்க இப்ப கன்ப்யூஷ்யஸ்ன்னு சொன்னீங்கல்ல? அது ஆங்கில வார்த்தையே இல்ல; அந்த பேர்ல ஒரு பெரிய சீன மேதை வாழ்ந்தார்!"

"பார்றா, பையன் பிச்சு உதர்றத! இவ்வளவு தெரிஞ்சு வெச்சுருக்க? இப்படி அல்பாயுசுல போறதுக்கா?" எனக் கேட்டவனை முறைத்தான், கு.ல்.

"சரி, கோவிச்சுக்காத; என்ன ப்ரச்னை சொல்லு"

"உன் கிட்ட ஏன் சொல்லணும்? நீ யாரு? எதுக்கு என்ன தடுத்த? எப்படி இப்படி அந்தரத்துல இருந்து வந்த?"- சரமாரியாகக் கேட்டான்!

"யப்பா, யப்பா, மெதுவா, ஒண்ணொண்ணாக் கேளு, சொல்றேன்"

"நா யாரு? உன்னவிட அதிகம் சோகத்தைக் கண்டவன்; எப்படீன்னு கேக்கறியா? சுனாமில எங்குடும்பத்த மொத்தமா தொலைச்சேன்! படிச்ச சர்டிபிகேட்டுங்களயும்தான்! கவருமெண்ட்ல அப்ளை பண்ணா, நேரத்துக்கு அதுங்க வந்து சேரல; நிவாரணமும் வந்து சேரல; இப்ப நான் தனிகட்டை!"

"எதுக்குத் தடுத்தேன்? அதுவாதான் போகும் உசிரு; வாழ எத்தன ஆசப்பட்டாலும், சுனாமிலயோ, இல்ல இப்ப நடந்த குண்டுவெடிப்பிலோ செத்தவங்கள நம்மால காப்பாத்த முடிஞ்சுதா? இல்லையே?
அப்படிப்பட்ட அபூர்வமான உசிர நாமளா போக்கிகிட்டா? சரி, நீ குதிக்கிறதப் பார்த்துட்டு சும்மா இருக்க நான் என்ன கல்நெஞ்சக் காரனா?"

"அந்தரத்துல இருந்து எப்படி வந்தேன்? அதான்யா பொழப்பு! என் வயசு என்ன இருக்கும்னு நினைக்குற? உன் வயசுதான்! ஆனா, காத்துலயும், அந்தரத்துலயும் இப்படி லோல் பட்டு கறுத்துப்போய், தோல் சுருங்கி, இப்படி இருக்கேன்! என்ன பொழப்புங்கறயா? இந்த உயரமான கட்டடத்தை, கண்ணாடிங்களால சுத்தி மூடிருக்காங்களே? அத சுத்தப் படுத்தற வேலை! மேலேர்ந்து கீழே வர ஒரு கயிறு; எத்தனை சதுர அடி துடைக்கிறோமோ அத்தன பணம்; அதுக்காக இஷ்டத்துக்கு வேகமா தொடைக்க முடியாது; அழுக்கு காட்டிக் கொடுத்துடும்! தலைக்கு பேருக்கு ஒரு ஹெல்மெட்டு; அவ்வளவு தான்; இன்சியூரன்ஸ் கிடையாது; வேலை நிரந்தரம் கிடையாது; பின்ன எதுக்கு இந்த வேலை? இப்ப, இந்த வேலைக்குத்தான் ரொம்ப டிமாண்ட்; இதுக்குத்தான் கொஞ்சம் பண அதிகம் புரளும்; உயிர பணயம் வெச்சு, கொஞ்சம் காசு பார்க்கறேன்!"

"இப்ப சொல்லு, நான் உன்னய கேள்வி கேக்கறது நியாயமா இல்லையான்னு?"

பேச நாக்கே எழவில்லை கு.ல்லுக்கு!

"முதல்ல எம்பேரே சரியில்ல; குலோத்துங்கன்னு! எங்கப்பா சரித்திர பிரியர்; அதான் எனக்கு இந்த பெயர்; இங்க வேலைக்கு வந்தப்புறம்தான், ஆளாளுக்கு கேலி செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.."

"இந்த மாதிரி 'பாதோஸ்' லாம் பாடாதப்பா! பேரு பிடிக்கல, ஊரு பிடிக்கலன்னு. நிஜ காரணத்தை ரத்தின சுருக்கமா சொல்லு. கீழேர்ந்து சூப்ரவைசர் இப்பவே பார்க்க ஆரம்பிச்சுட்டான்; எங்கடா ஆளக் காணோம்னு; உன் காரணம் சரின்னா, நானே, பிடிச்சு தள்ளி விட்டுர்றேன்!"

"மூணு வருஷமாவே நான் ரொம்ப கஷ்டப்பட்டுதான் என் கம்பெனீல வேலை செய்யறேன்; இங்கிலீஷ் கொஞ்சம் தடுமாறும்; முடிஞ்சவரைக்கும் இங்கிலீஷ்ல பேசி, அத சரிப் படுத்தறேன்.."

"அதான் சாகக் கடக்கையில ரொம்ப பீட்டர்விட்டயோ, நல்ல ஆள்யா நீ"

"குறுக்க கேலி பேசாதே! என் நிலைமையக் கேளு! ப்ரொக்ராமிங்ல நான் ஸ்ட்ராங்! அதனால், பொறுப்புகள் தேடி வந்துச்சு. யார் கண்ணு பட்டதோ, இப்ப நாலு மாசமா, என்னய ஒதுக்குற மாதிரி fபீலிங்."

"எப்படிச் சொல்ற?"

"நான் செஞ்ச ஒரு ப்ரொக்ராம் ஒரு யூ.எஸ்.களையண்டுக்கு பிடிச்சுப் போச்சு; அவன் இங்க வரச்ச, என்னை அறிமுகம் கூட செஞ்சு வெக்கல; சரின்னு விட்டேன்; அதே சப்ஜெக்டுல ரெண்டு மூணு புது ப்ராஜெக்ட் வந்தது; அதுல என்ன சேர்த்துக்கல; இப்ப என்னடான்னா, முதல்ல சொன்ன யூ.எஸ். க்ளையண்ட் ஆர்டர் கொடுத்து, இன்னும் ஒரு வாரத்துல எங்க ஆபீஸ்லேர்ந்து 10 பேர் அங்க ப்ரொபேஷன்ல போறாங்க; அதுலயும் என் பேர் இல்ல! அந்த ப்ராஜக்ட்ல புதுசா போடற மத்த இன்ஜினீயருங்களும் என் டேபிளைக் கடந்து போறச்ச கண்டுக்காமலே போறாங்க! சரி, பேசாம பாஸ் கிட்ட நேரே பேசிடலாம்னு போனா, அவர் அப்பாயிண்ட்மண்டே தரமாட்டேங்கிறாரு! ஒரு வேளை என் இங்கிலீஷ¤க்கு பயந்துதானோ என்னை வெளிநாட்டு வாய்ப்புகள்ளேர்ந்து கழட்டிவிடுறாங்களோன்னு தோணுது! அதான்!"

"அடப் பாவி, இந்த சாதாரண விஷயத்துக்கா தற்கொலை முயற்சி!" விட்டுத்தள்ளு, வேற வேலைக்கு போகவேண்டியது தானே, இப்பதான் உங்க லைன்ல மந்தை மந்தையா ஆளெடுக்கறாங்களே!''
"அதுவும் ட்ரை பண்ணியாச்சு, ம்ஹ¥ம், வேலை கிடைக்கலே!"

"சரி, நான் கேக்கறதுக்கு பதில் சொல்லு - நீ வீட்ல ஒரே பிள்ளையா?"
"ஆமாம்"
"நீ கேக்கறதெல்லாம் கிடைச்சுடுமா?"
"ஆமாம், அப்பா பிசினஸ் பிசினஸ்னு ஒரேடியா அலைவாரு; என்னை அவர்கூட சேரச்சொன்னாரு; நான் தான், கம்ப்யூட்டர் லைன்ல பெரியாளா வரணும்னு, ஐ.டி ல சேர்ந்தேன்; சரின்னுட்டாரு, முதல் சம்பளத்துல ஒரு பைக் வாங்கிக்கிறேன்னேன்; சரின்னுட்டாரு"

"கொடுத்து வெச்சவன்யா, அப்பா எல்லாத்துக்கும் சரிங்கறாரு. ஆனா அதான் ப்ராப்ளமே; எங்க குதிக்க பர்மிஷன் வாங்கிகிட்டு வா பார்ப்போம்!"

"எ..என்ன சொல்ற?"

"ஆமாம்; நினைச்சதெல்லாம் கடைச்சுதுல்ல? அதான் இங்கயும் நீ எல்லாத்தையும் உடனே எதிர்பார்க்கிறே! கொஞ்சம் பொறு! நீயே ஒத்துகிட்ட இங்லீஷ் கொஞ்சம் இடிக்கும்னு. நல்ல வசதியான் பிள்ளதானே,ஏன் வாத்தியாரு வெச்சு ட்யூஷன் வெக்கிறது; படிக்கிறது! அத விட்டுட்டு, சுய பச்சாதாபத்துலயும், அவசரத்தாலயும் உசிர விடப்பார்த்தயே? சரி, விடு. உங்க அப்பனாத்தா உன்ன பொணமா பார்க்கவா இப்படி செல்லமா வளர்த்தாங்க? சொல்லு!

பேர் சரி இல்லங்கறியே குலோத்துங்கன் எவ்வளவு பெரிய ராஜாத் தெரியுமா? ராஜாவாட்டம் பேரு, வசதி, இப்படி பொறந்தும், பெத்தவங்க நம்பிக்கைய கெடுக்கிறத விட, சாகறதே மேல், போ, போய் குதி!"

பதிலேதும் வரவில்லை; அங்கே, மவுனம் ஒரு யுகப் புரட்சியை செய்துகொண்டிருந்தது!


சிறிது நேரத்துக்குப் பிறகு, குலோத்துங்கன் மெல்ல நடந்து வந்து, "உன்..உங்க பேர் என்ன?"

இப்பவாச்சும் கேட்டயே? 'யமன்'னு கூட வெச்சுக்க, நாந்தான் உன் உசிரு போகாம நிப்பாட்டிட்டேனே; பாரு, என் கைல கூட கயிறு! இல்ல, "கடவுள்" னு வெச்சுக்க" ..சிரித்தான்.

"என் பெயர், கருப்பய்யா; குலோத்துங்கன்கிற பேர விட நல்லாயிருக்கில்ல?
..அட, உன் லொள்ளுல, என் பொழப்புல மண்ணு. இந்நேரம் ஒரு 200 சதுர அடி கண்ணாடி துடைச்சா, நல்லா காசு பொரண்டுருக்கும்; அப்பா, கண்ணு நல்லாயிருப்பா; எனக்கு நஷ்டக் கணக்க ஈடுகட்டவாச்சும் நீ கொஞ்ச நாள் உயிரோட இருந்து வேல செய்யணும். நான் இங்கதான் எங்காச்சும் தொங்கிகிட்டு இருப்பேன்; முடிஞ்சா என் பணத்தக் குடு," என்று சொல்லி..."ஸ்வயிங்..." எனக் கயிறு பிடித்து, ஆடியபடி,கீழிறங்கி விட்டான்!

மறுநாள்..
ஆபீசுக்குள் நுழைந்த குலோத்துங்கனுக்கு, ரிசப்ஷனிஸ்ட் அவசரமாக, "எல்லா ஸ்டாfபும் பாஸ் ரூமுக்கு போயிருக்காங்க, எதோ அர்ஜண்ட் மீட்டிங்; நீங்க வந்தவுடனேயே உள்ள வரச்சொன்னாரு பாஸ்," என்றாள்!!

"அட, நான் குதிக்கப் போன விஷயம் யாருக்கும் தெரியாதே? எதற்கு பாஸ் கூப்பிடுகிறார்?" மனதுக்குள் கேள்விகளுடன்,பாஸ் ரூமுக்குள் நுழைந்தான்.

"வாங்க,குலோத்துங்கன்; ஸோ, வாட் இஸ் யுவர் ப்ளான்?"

என்ன இப்படி திடுதிப்னு கேக்குறாரு? எதைப்பத்தி?

"நான் நேரா விஷயத்துக்கு வரேன்; யூ.எஸ்.ப்ராஜக்ட்க்கு எல்லாரையும் கலந்தாலோசித்து பேசினதுல, 10 பேர் செலெக்ட் செஞ்சாச்சு. ஆனா, அந்த பத்து பேரும், உங்க தலைமைலதான் வேல செய்ய விருப்பப்படறாங்க; என் விருப்பம், க்ளையண்ட்டின் விருப்பம்; அதுவே, கூட வேல பார்க்கிறவங்களின் விருப்பமாகவும் ஆகி, ஏகோபித்த முடிவில், நீங்க 'மேலே' ப்ரமோட் ஆகறேங்க! ஐ,மீன், யூ ஆர் தெ பாஸ் fஆர் யூ.எஸ்.ப்ராஜெக்ட்!! என்ன பாஸ்போர்ட்டெல்லாம் இருக்குதானே? கங்கிராட்ஸ்!" எனக் கை குலுக்கினார்!!

பின்னால், பலத்த கரகோஷம், பாராட்டுக்கள்..! ஹேய்,குலோத்துங்கன். அமெரிக்கன் உன் பெயரச் சொல்லிச் சொல்லியே, மூச்சு விட்டுடுவான்; அதானாலதான் நீ பாஸ்..!" என்றான் மணி. எல்லாரும் சிரித்தார்கள்!

குலோத்துங்கனுக்கோ...

"யேய், உன் பாஸ் 'மேலே ப்ரமோட்' பண்ணார்; நேத்து நீயா, 'மேலே' டிமோட் ஆக இருந்தயே!" என்று அறைக்கு வெளியே கண்ணாடியைத் துடைத்தபடி, கருப்பய்யா கேட்பதுபோலிருந்தது!!

17 July 2006

தேன்கூடு-போட்டி - காத்தான் !

"என்னடா வாயே திறக்க மாட்டேங்கறே? நேத்து படிச்சுப் படிச்சுச் சொன்னேன்; காத்தான் கிட்ட. தலைவர் போயிட்டாரு. ராவோட ராவா, சடங்கெல்லாம் முடிச்சு, காலைல பத்து மணிக்கெல்லாம் எரிச்சரணும்னு. அதுக்கு மேலே, மினிஸ்டிரீல கொஞ்சம் வேலையிருக்கு போகணும்னேன்ல?"

" கபாலி அண்ணே, விடுங்கண்ணே; ஏதோ புதுபயலாட்டம் தெரியறான். செய்றான்ல; இதோ இப்ப ஆயிடும்!டே, தம்பி, சீக்கரம் ஆகட்டும்பா; எத்தனை கட்டைங்க வெச்ச? 8 லோடு சொன்னோம்; 7 போலத் தெரியுதே?"

"மாமா, காலைல கட்ட எறங்கறச்சே நான் பார்த்தேன்; 8 லோடு போட்டானுங்க; சரிதான்."

"பானை இருக்கா? கோடி வேட்டி, 4 வடம் ரோசாப்பூ மாலை? காத்தான் இருந்தா எல்லாம் ரெடி பண்ணீருவான்; இன்னிக்கீன்னு பார்த்து எங்கய்யா போனான்; உன்ன பார்த்தா சின்னப் பயலாத் தெரியறே! இந்த வேலைக்கெல்லாம் ரொம்ப பக்குவம், அதே சமயம் அனுபவம், வேகம் ரெண்டும் வேணும். என்னவோ போ!நான் சொல்லிகிட்டே இருக்கேன், நேரமில்ல; சீக்கிரம், சீக்கிரம்..யோவ், அய்யரே, சந்தனக் கட்டை கொண்டாந்தீங்களா?"

"இல்லண்ணா, தலைவரை வண்டிலேர்ந்து இறக்கறச்சே, நம்ம சிஷ்யப் பைய கூடவே வருவான்ல; சந்தனக் கட்டை அவன் கைல இருக்கு; கட்டாயம் கொண்டாருவான்."

பக்கத்தில் ஒருவன் ஒத்து வாசித்தான்.."எல்லாம் ரெடிண்ணே; புதுசுன்னாலும், பைய கெட்டி, எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டான்; என்ன வாயத்தான் கொஞ்சம்கூட திறக்க மாட்டேங்கிறான்!"

கீழே குனிந்த படி வேலை செய்து கொண்டிருந்த முத்துவோ, கருமமே கண்ணாயிருந்தான். கடகடவென கட்டைகள் அடுக்கப் பட்டன. சமயத்தில் சில விளாறுகள், சில்லுகள் கையில் ஏறினாலும், ரத்தம் கசிந்தாலும் பொருட்படுத்தாமல், கட்டைகள் மளமளவென மேடையேறின! சுற்றி கட்டைகள், நடுவில் நன்கு காய்ந்த விராட்டிகள், அதற்கு மேலே, சிறிய சைஸ் கட்டைகள்; இப்படி. ஒரு வழியாக அடுக்குதல் முடிந்து, தலையை நிமிர்த்தி," ரெடி" என்றான்.

செல் போனில் கட்டளைகள் பறந்தன! மணி எட்டு! அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் தலைவரின் பூத உடலும், கழகக் கண்மணிகளின் ஆர்பாட்ட ஊர்வலமும் சுடுகாட்டை அடைந்தன! தாரை, தப்பட்டை, தப்பாட்டம், ஒப்பாரி, மலையென மாலை.. இப்படி கட்சிப் பயலுகள் நன்றாகவே ஏற்பாடு செய்திருந்தனர்! எல்லாம் முடிந்து, சரியாக 9.30க்கு அடுக்கிய கட்டைகளுக்கு மேல் தலைவரின் பாடை வைக்கப் பட்டு, ஒப்பாரி, மயக்கங்கள் இத்யாதி நாடகங்களுடன், சிதைக்கு அவர் மகன் (வருங்கால தலைவர்?) தீ வைக்க, சுடுகாட்டுப் படலம் நன்கே முடிந்தது.

கும்பல் ஒட்டுமொத்தமாகக் கலைந்தவுடன், அண்ணன் கபாலி தனது பரிவாரங்களுடன், முத்துவினருகில் வந்தான்.
"என்னய்யா, காத்தான் கடைசி வரைக்கும் வரல? தலைவர்னா அவ்வளவு இளப்பமாப் போச்சா? இப்பதான்யா எதிர்கட்சி; நாளைக்கு? ம்ம்.. சரி, சரி என்ன செலவாச்சு, சொல்லு தரேன்..."

அதற்குள், பின் பக்கமாக வேலை முடிந்து பையெல்லாம் முடிந்துக் கொண்டு வந்த சாஸ்திரியின் சிஷ்யன் முத்துக்கிருஷ்ணன், அவசரமாக, கபாலி கிட்டே வந்து, "அண்ணா, இது முத்து! நம்ம ஹைஸ்கூல்ல வாத்தியார்! இவன்..ஸாரி, இவரெங்க இங்க வந்து..?"

"யோவ், இன்னாய்யா இது? உம்மாதிரி குஷால் வேல செய்ற ஆளுக்கு எதுக்குய்யா இந்த வேலைல்லாம்? என்ன ரெட்ட வேலை பார்க்கறியா? இதக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா? காத்தான் பொழப்பக் கெடுக்கறயா, இல்ல இங்கயும் ஷிப்டு, கமிஷன்னு வந்துருச்சா? வாத்திண்றாரு அய்யரு, நீ என்னடான்னா பொணத்த எரிக்க வரயே?"

"இப்ப நான் பேசலாமா? +2 பசங்களுக்கு ராத்திரி இலவசமா எக்ஸ்ட்ரா க்ளாஸ் எடுத்துட்டு வரப்ப, அய்யா, ரொம்ப இருமிகிட்டு இருந்தாரு. கொஞ்சம் போல மருந்து குடுத்துட்டு, சாமானெல்லாம் அடுக்க உதவி பண்ணேன்; பக்கத்துல இருந்த என்னக் கூப்பிட்டு, "யப்பா, எல்லாம் ரெடி; தலைவர காலைல வெக்க வராங்க; பத்து மணிக்குள்ள எல்லாம் ஆயிறணும்; அதனால நீ சுருக்க எந்திரிச்சு, எனக்கு உதவியா ஒரு கை கொடுத்தா, வேலை நேரத்துல முடிஞ்சுடும்," னார்!

காலைல 5 மணிக்கு எந்திரிச்சுப் பார்த்தா, அவர வீட்ல காணல; அவசரமாத் தேடி வந்தா, சாமானெல்லாம் இங்க வரிசையா அடுக்கிக் கிடக்கு; ஒரு பக்கம் இருமிகிட்டே, கட்டை அடுக்கி கிட்டு இருந்தாரு...

"ஒரு வார்த்தை ஓங்கிக் குரல் கொடுத்தா, எந்திரிச்சுருப்பேன்ல?" ன்னு கேட்டதுக்கு, "அட, நீ பகல் பூரா பசங்களோட கத்தி கத்தி லோல் படறே; அசந்து தூங்கிட்டு இருந்தே, சரி, எழுப்ப வேணாம்னு நானே, மெதுவா எல்லா வேலையையும் முடிச்சிட்டேன்," ங்கறார்!

"என்னய்யா, கொஞ்சம் இருங்க, ஒரு வா காபி போட்டு கொண்டாறேன்,"னு கிளம்பின என்ன, தடுத்து நிறுத்திடார்;
"இருப்பா, ஒரு வா தண்ணி கொடு போதும்,"னு சொல்லி என் கையால தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு அப்படியே என் முகத்தப் பார்த்தவர்தான்...

"போய்ட்டார்! என்ன பண்றதுன்னே தெரியல; ஒரு பக்கம் இவரு, மறு பக்கம் உங்க வேலை! சரின்னு மனசக்கல்லாக்கிகிட்டு, அடுக்கின கட்டைலயே, அவரக் கிடத்தி, அவருக்கு கொள்ளிய வெச்சு எரியூட்டிட்டு, புதுசா இந்தப் பக்கம் தலைவருக்காக கட்டைங்கள அடுக்க ஆரம்பிச்சேன், அதான் லேட்டாயிடுச்சு!"

ஓஹோ, அதான் வாத்தியாரு, காத்தான் வேலையச் செஞ்சீகளா? பார்றா, காத்தான் வீட்ல பேயிங் கஸ்ட் வேறயா? இக்கட்ல மாட்டிகிட்டு, அதான் லோல் பட்டீகளோ? உங்களுக்கு எதுக்குய்யா இந்த வேல? சரி, வரேன்; காத்தான் இப்படி திடீர்னு மண்டையப் போடுவான்னு நான் எதிர்பார்க்கலை; கொடுக்கல் கணக்கிருந்தா அவன் கிட்ட கொடுப்பேன்; வாத்யாரு, உங்ககிட்ட என்னத்த தர?"

"பரவாயில்ல கொடுங்க; நான் வாங்கிக்கிறேன்; கணக்கு கணக்குதான? இதோ செலவு எழுதி வெச்ச பேப்பர்!"
"ஏய், வாத்தி! உனக்குதுக்குய்யா குடுக்கணும்? பொணம் எரிக்க கட்டணத்த நேத்தே ஆபீசுல கட்டி ரசீது வாங்கியாச்சு; சாமான்களுக்குத்தானே; உங்கிட்ட எப்படி கொடுக்கறது? போய்யா, அடுக்கி வெச்ச கட்டைலதான் கை வெச்சன்னு பார்த்தா, இப்ப காத்தான் பணத்துலயும் கை வெக்கிறயே! வேணும்னா, அவரு யாராச்சுமிருந்தா அவங்கிட்ட கொடுக்கலாம், சொல்லு.."

"நாந்தான் அவர் பையன்; காத்தான் என் அப்பாதான்! அவர் பேரு மட்டும் 'காத்தான்' இல்ல. அவர் சொல்லும் அப்படித்தான்; அதனாலதான் நான் அவர் வாக்கைக் காப்பாத்த வேலையச் செஞ்சு முடிச்சேன். அங்க பாருங்க, இப்பதான் அவருக்கு வெச்ச நெருப்பு நல்லா பத்திகிட்டு எறியுது! இப்பதான் அவர் நெஞ்சு நல்லா வேகும்!" உடைந்து போய் அழும் வாத்தியார் முத்துவை எழுப்ப அங்கே யாருக்கும் திராணி இல்லை!

13 July 2006

தேன்கூடு-போட்டி-மரணக் குறியேடு!

வெந்து எரிந்தாலும் வெட்டுகுழி புதைந்தாலும்
வெளிச்சத்துக்கு வந்த உயிர் எத்தனை?

பிறந்து இறந்தாலும் சக்கரம் சுழன்றாலும்
பிறருக்கு செய்த பணி எத்தனை?

பிறப்பைக் கண்டாலும் இறப்பைக் கண்டாலும்
குறிப்பை அறிந்த தலை எத்தனை?

அலைந்து அளந்தாலும் அளந்து அலைந்தாலும்
முதல் முடி கண்டோர் எத்தனை?

அத்தனையும் ஆய்ந்திடுமுன் பித்தனைப் போல்
ஆகும் நிலை கண்டோர் எத்தனை?

மரணமெனும் சொல் கேட்டு கரணமடித் தாடும்
மனம் சரணம் செய்ய இனி

உன்னுள் தேடு; உன்-உள் தேடு இனியிச்
சொல்லை - பின்னால் போடு !

10 July 2006

தேன்கூடு போட்டி - 'மரணக் கதைகள் - 2

காதல் : சாதல் 50:50 !!

இதுவும் உபனிஷதங்களில் வரும் ஒரு அழியாக் காதல் பற்றிய காவியம்!

கந்தர்வர்களின் அரசனுடன் சல்லாபித்ததால், தேவகன்னிகை அப்ஸரஸுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. பூலோகத்தாய்மார்கள் போல், குழந்தை மேல் பிரியமோ, அனுதாபமோ வராதவர்கள் இத்தேவ கன்னிகைகள்! குழந்தையை ஒரு ஆசிரமத்து வாசலில் போட்டுவிட்டு போய்விட்டாள்!

ஸ்தூல கேசர் எனும் ரிஷி அந்த குழந்தை மேல் இரக்கம் கொண்டு, ப்ரேமதர்வா எனப் பெயரிட்டு, எடுத்து வளர்த்து வந்தார்.

ப்ரேமதர்வா பக்தியும், மிக்க அழகும் உள்ள பெண்ணாக வளர்ந்தாள். ப்ருகு முனிவரின் கொள்ளுப்பேரரான ருரு எனும் ரிஷிகுமாரன், ப்ரேமதர்வாவின் அழகில் மயங்கி, அவளை மணமுடிக்க பெரியவர்களிடம் பேசி முடித்து, மறுநாள் நடக்கவிருக்கும் கல்யாணக் கனவுகளில் மூழ்கி அயர்ந்து தூங்கிப் போனான்!

மாலைவேளையில் தோழிகளுடன் நந்தவனத்தில் விளையாடிக் கொண்டிருந்த ப்ரேமதர்வா, அவளது விதியின் படி, காலம் முடிந்து, ஒரு பாம்பு கடித்து, அக்கணமே இறந்து போனாள்! இறப்பிலும், அவள் பார்க்க அழகாகவே இருந்தாள்!

பொழுது யாருக்கும் சரியாக விடியவில்லை! ஆசிரமத்து முனிவர்களோ, மணவறை பிணவறை ஆகிய காலத்தின் கோலத்தை எண்ணி ஓலமிட்டுக்கொண்டிருந்தனர்! வளர்த்த முனிவர் ஸ்தூலகேசரோ, பச்சை பசும் கொடி போன்ற இத்தனை அழகான பெண்ணை ஏன் இறைவன் தன்னிடம் வளர விட்டு, பின்னர் தளர விட்டார் என எண்ணி எண்ணி விம்மினார்!

செய்தி கேட்டு வந்த மணாளன் ருரு, துக்கம் மேலிட, காட்டுக்குள் நடந்து போய், மனம் அமைதியடைய ஒரு குன்றின் மேல் அமர்ந்து, ஆண்டவனை துதிக்கலானான்!

"தேவர்களே, தவத்தில் திளைத்த என்னுள், காதல் முளைத்ததெப்படி? வினையோ, விதியோ? ப்ரேமதர்மாவின் மேல் ப்ரேமை வந்தது ஏன்? அவள் மரணத்தை என் மனம் ஒப்பாத்தது ஏன்? ஏன்? ஏன்? என் தவம் நிஜமென்றால், தவப்பயன் நிஜமென்றால், பதில் சொல்லுங்கள்! என, வானத்தை நோக்கி அரைகூவல் விடுத்தான்!

பளீரென அங்கு ருருவின் முன் தோன்றினான் ஒரு தேவன்! அவன், " இது காலத்தின் கட்டாயம். அவள் தந்தை கந்தர்வ ராஜனே, அவள் உருவானதும் மறந்தான்; தாய் அப்ஸரஸ், பெற்றதும் துறந்தாள்! வளர்ப்புத் தந்தை ஸ்தூல கேசரோ, விதியை எண்ணி நொந்து அங்கே, சிதைக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார்!" என்றான்.

சினத்தில் ருரு, "பின் என் காதல் துச்சமானதா? காடு நோக்கிப் போனவனை வீடு நோக்கி வரச்செய்த அவளை நான் மனதார நேசித்துவிட்டேன். மணவறையில் அமராவிட்டாலும், என் மன அறையுள் சென்றுவிட்ட ப்ரேம தர்வாவை யார் வெளியே கொண்டு செல்ல இயலும்? எனக்கு அவள் வேண்டும்; ஆசை காட்டி மோசம் செய்யும் இந்த கால விளையாட்டை என்னிடம் சொல்லி, சாபத்தை பெறாதீர்கள்," என்று எச்சரித்தான்!

முனிவனின் சாபம் எப்படி வலுவானது என்றறிந்த தேவன், "சரி; உன் ஆயுளில் பாதியை அவளுக்கு தர இசைந்தால், அதையும், அவளது தந்தையும், யம தர்மனும் ஒப்புக்கொண்டால், நீங்கள் இருவரும் சில காலம் உயிர்வாழலாம்! " என்று சொன்னான்.

தன் உயிரில் பாதியை யார் தருவர்? இந்த ஒரு நிபந்தனையைக் கேட்டு, ருரு மடங்கி விடுவான் என்றெண்ணிய தேவனின் எண்ணத்தில் விழுந்தது அடி!! எப்படி?

ருரு சொன்னான்!"ஐயா, என் தவப் பயனில் பாதியைத் தருகிறேன்; அதனால், யமதர்மனும், கந்தர்வ ராஜனும் என் முன்னே வரட்டும்; மீதி தவப் பயனை, என் ஆயுளில் பாதியை என் உயிருக்கும் உயிரான ப்ரேம தர்வாவை உயிர்பிக்கத் தாரை வார்க்கிறேன்! எனது ஆயுள் ஒரு நாள் என வைத்துக் கொள்ளுங்கள், இருவரும் சேர்ந்து அரை நாள் வாழ்வோம், அத்தகைய நொடிப்பொழுதான வாழ்வுகூட எனக்கு ப்ரேம தர்வாவுடனே இருக்கவேண்டும்; அவளில்லாமல் நானில்லை " என்றான்!

ஆச்சரியப்பட்டான் தேவன்; அதிசயித்தனர் தேவர்கள்!

தர்மராஜனான யமனும், கந்தர்வ ராஜனும் அவ்விடத்தில் தோன்றினர்!
ருருவின் வேண்டுகோள் நிறைவேறியது!!உயிர் பெற்றெழுந்தாள் ப்ரேமதர்வா; காதல் கணவனுடன் பல்லாண்டு காலம் வாழ்ந்து ஒரு அழியாக் காவியம் படைத்துப் போயினர்!

09 July 2006

தேன்கூடு-போட்டி: மரணம்- குட்டிக் கவிதைகள்!

கொலை
ஒரு மரணத்தால் வந்தது
நான்கு மரணதண்டனை!
வெட்டுப்பட்டது
நான்குபச்சை மட்டைகள்!

அடக்கம்
அடக்கம், அமரருள் உய்க்கும்!- அந்த
அமரரும், அமரராய் அடக்கம்!
அடக்கம் செய்யப்பட்டார்,
அமைதியாய் அமரரானார்!

காலமானார்
அக்காலம், இக்காலம் எதிர்காலம்
எக்காலமாயினும்,என்றும் மாறா
'இறந்த' காலம்; ஒருவர்
போனதும் சொன்னார்- அவர்
"காலம்" ஆனார்!!

06 July 2006

தேன்கூடு-போட்டி : மரண கதைகள்- 1

மரணத்தை வென்றவன்!

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே! என பாரதி பாடியதை ஒரு சிறுவன் வாழ்ந்து காட்டியுள்ளான். ஒருவனை, "இவனைப் போல் இரு, அவனைப் போலிரு" என்று உதாரணம் காட்டுவதுபோல், நான் இருக்க விரும்புவது, 'நசிகேதனை'ப் போல்!
நசிகேதன்? யாரிவன்?
கதோபனிஷதத்தில் வரும் உபகதை இந்த நசிகேதன் புராணம்.
உபனிஷதங்கள், வேதசாரங்களை மக்களுக்கு எளிய வகையில் புரிய வைக்க கதைகள் மூலமாக ஏற்படுத்தப் பட்டவை.

தனது தந்தையார், வயதான பசுக்களையும், வற்றிப் போன மாடுகளையும், தானம் என்ற பெயரில் தருவதைக் கண்ட அப்பாவிச் சிறுவன் நசிகேதன், "ஏனப்பா இவற்றை தானமாகத் தருகிறீர்கள்?" எனக் கேட்டான்.பதிலில்லை."வயதான மாடுகளாயிற்றே, பலனில்லையே?" பதிலில்லை"தானம் தருவது அடுத்தவர் பயன்படுத்தத்தானே?"பதிலில்லை."இந்த மாடுகளை ஏன் தருகிறீர்கள்?''
எரிச்சலடைந்த அவன் தந்தை, "அட, வேண்டாததெல்லாம்,தானம் தான், சும்மாயிரு," என்று அதட்டினார்.
சற்று மவுனம் காத்த சிறுவன்,மீண்டும், 'வேண்டாதவை' என்றால் என்ன?" என்றான்.
"பயனற்றவை வேண்டாதவை."
அப்படியானால், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன்? என்னால் உங்களுக்கு என்ன பயன்?"
பதில் இல்லை.
"அப்படியானால் என்னையும் தானமாகத் தந்துவிடுவீர்களா? யாருக்கு?"
பொறுமையிழந்த அவன் தந்தை, "உன்னை யாருக்குக் கொடுப்பது, யார் பெற்றுக்கொள்வார்? அந்த யமனுக்குத்தான்,போ! பேசாதே!" எனக்கூச்சலிட்டார்!"ததாஸ்து" என மந்திரம் சொல்லவும், தாரை வார்க்கும் நீர் தறையில் விழவும் சரியாக இருந்தது.
அப்பொழுதும், முகத்தில் மகிழ்ச்சியே காட்டி நின்றுகொண்டிருந்தான் நசிகேதன்!
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தந்தை, மகனை ஆரத்தழுவி,கண்ணீர் விட்டார்!

"மகனே, தவரிழைத்தேனே? ஒன்றா, இரண்டா?மனமில்லா தானம், உபயோகமில்லா தானம், சுய அறிவின்றி தானம்!
இதனால் நான் என்ன பலன் கண்டேன்? மகனை இழந்ததைத் தவிர?" கண்ணை துடைத்துக் கொண்டு, கேட்டார்," ஆமாம், நான் அழுகிறேன், நீ சிரிக்கிறாயே? " என ஆச்சரியத்துடன் வினவினார்!

தந்தையைப் பார்த்து நசிகேதன், "அப்பா, சந்தோஷப்படுங்கள்!, நீங்கள் சொன்ன மற்ற தவற்றையெல்லாம் சரி கட்டும் விதமாக, பெற்ற மகனையே, அதி உத்தமனான, நெறி தவராத தர்மராஜன் எனப்படும் யமதர்மனுக்குத் தந்ததிலேயே, தங்களுக்குறைந்த யாகத்தின், தானத்தின் பலன்கள் கிட்டும். அது போக, என்னால் என்ன பலன் என்று நான் நினைக்கையில், தங்கள் தானத்திலேயே, மிக அபூர்வமான தானத்துக்குப் பாத்திரமாகி, நான் புதிய உலகைப் பார்க்க போகிறேன்! எனவே, நிம்மதியும் ஆவலுமாய் நான் சந்தோஷமாய் இருக்கிறேன்!" என்ற மகனைக் கண்டு மலைத்தபடி நிற்கிறார் தந்தை!!

யமலோகம் போன நசிகேதன் 3 நாட்கள் காத்திருந்து, யமனை சந்திக்கிறான். பின்னே? நாள்குறிக்கப்படாமல், திடீரென தானமாக வந்தவன் எப்படி உள்ளே ஏற்றுக் கொள்ளபடுவான்? எனவே, மூன்று நாட்கள் வாசலிலேயே காத்திருக்கும்படி ஆகிவிட்டது நசிகேதனுக்கு!

அதனால் மனமிறங்கிய யமன், நசிகேதனுக்கு மூன்று வரங்களைத் தருகிறார்.

குழந்தை நசிகேதன்
1) என் தந்தை எனக்காக கவலை படக்கூடாது
எனும் வரத்தையும், இனி கேட்கும் கேள்விக்கு பதில்களைத் தருமாறும் கேட்கிறான்:-

2) நெருப்பினால் செய்யும் யாகத்தின் ரகசியம் என்ன?
3) மரணத்துக்குப் பின்னால் என்ன?

யமதர்மனின் பதில்கள்?

1) தன்னுள் உணர்வோர், காலத்திற்கு அப்பாற்பட்ட 'தன்னி'லை அடைவோர், மரணத்தைக் கண்டு அஞ்சார். அவர்கள் சாவுக்கு சாவு மணி அடித்தவர்கள்! உன் தந்தை எப்போது உன்னை எனக்கு தானம் அளித்தாரோ, அப்போதே அம்மாதிரியான ஞானத்தைப் பெற்றுவிட்டார்!

2) இருப்போர் இல்லாதவர்க்கு கொடுப்பது தானம்; கண்ணுக்குத் தெரியாத ஜீவராசிகளுக்கு அவிர்பாகமாக, நீர், நெருப்பின் ஆவி (புகை) மூலமாகத் கொடுப்பது, யாகம்.

3) மரணத்துக்குப் பின்னாலும் வாழ்வின் பல உண்மைகள் அறிய அந்த ஆத்மா பல ப்ரயாணங்களை மேற்கொள்கிறது. நீ வந்து, கண்டது போல்!" எனச் சொல்லி சிரிக்கிறான் யமதர்ம ராஜன்.

தர்ம ராஜன் அல்லவா? அநியாயமாக அங்கே வந்துவிட்ட சிறுவனுக்கு, உபதேசங்கள் செய்து, ஞான ஒளிபெற்ற மாமுனியாக மீண்டும் அவனது இல்லத்துக்கே அனுப்பிவைக்கிறான்.

மரணத்தை வென்ற நசிகேதன் ஞானி ஆகிறான்! மரணத்தை தனது ஞானத்தால் வென்று மீண்டும் பூமிக்கு வருகிறான்!!
இவனைப்போல் இருக்க வேண்டும் என்று நான் சொன்னது, 'அல்பாயுசில் மேலே கிளம்ப' வேண்டுமென்று சொல்ல இல்லை.
அவனது, அறிவுப்பசிதான், அவனை புதிய அனுபவம், புதிய உலகைக் காணச்செய்தது!
அவன் அப்படி என்ன செய்தான்? கேள்விகள் கேட்டான்; யாரை? தனது தந்தையை.
எதற்கு? அவன், அவனது தந்தை எந்த வேலையையும் சரியாக செய்வார், பதில்களை சரியாகச் சொல்வார் என நம்பினான்!
என்ன கேள்வி கேட்டான்? சாதாரணக் கேள்விகள் தான்.
தனது தந்தை செய்யும் எந்த காரியமும், காரணமின்றி செய்யப் படாது என அவன் நம்பினான். அது பொய்க்கையில், கேள்விகள் பிறந்தன, பறந்தன!
இப்போது யோசித்துப் பாருங்கள்? நாம் எதைச்செய்தாலும், காரண காரியங்களை ஆராய்ந்து, நல்லது கெட்டது பார்த்து செய்கிறோமா?
நம் பிள்ளையும், நம்மை நசிகேதன் தன் தந்தையைப் பார்த்த அதே, கண்களோடுதான், அதே கேள்விகளோடுதான் பார்ப்பான்/ள்.
அதனால் பொறுமையாய் பதில் சொல்லுங்கள், குழந்தைகள் கேள்வி கேட்டால்; நம்பும்படியாக, அவர்களுக்குப் புரியும்படியாக!
கேள்வி கேட்பவர்களால்தான், இன்று வளர்ச்சி உண்டாகிறது!
'ஏன் என்ற கேள்வி நான் கேட்காமல் வாழ்ந்ததில்லை,' என என்.ஜி.ஆர். பாடவில்லையா?
எனவே, நசிகேதனைப் போல் இருக்க முயலுங்கள்! கேளுங்கள், பயப்படாதீர்கள்!