19 August 2006

தேன்கூடு போட்டி: தாயுமானார் அவரே தந்தையுமானார்!

முதுகில் பெரிய கட்டி; காலில் போலியோ தாக்கம்; கருமை நிறம்; நெஞ்சில் ஈரமின்றியோ அல்லது வெளியில் சொல்லிக்கொள்ளுமாறு இல்லாத ஒரு உயிரை உயிர்பித்ததாலோ, அந்த பிஞ்சுக் குழந்தையை தெருவில் விட்டுப் போய்விடுகிறாள் ஒரு பெண்.(தாய் எனச்சொல்ல மனம் ஒப்பவில்லை!) கண்டது ஒரு நன்னெஞ்சம்; கொண்டு சென்று, வளர்த்து, புண்ணை போக்கி, கண்ணாய் வளர்த்து பெண்ணாய் ஆக்கி, இன்று பேர் சொல்ல ஒரு பிள்ளையாய், இல்லை இப்படி பேர் சொல்ல பல பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, ஆண் தெரசாவாக வாழ்ந்து வருகிறார் "பப்பா" (அப்பா) என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் வித்யாகர்; சென்னை அருகிலுள்ள திருவேற்காட்டிலும் மற்ற பல இடங்களிலும் இன்று வேர்விட்டு ஆலமரமாக தழைத்து ஓங்கும் சேவாலயம், "உதவும் கரங்கள்".

அன்றலர்ந்த மலர்களாக பிஞ்சுக் குழந்தைகள், சில மாதங்களிலேயே கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற முதியோர், புத்தி ஸ்வாதீனமற்ற, சமூகத்தால் பரிகசிக்கப் பட்ட ஆண்கள், பெண்டிர், மற்றும் அங்கேயே வளர்ந்து, சேவை ஆற்றி வரும் பெண்கள், ஆடவர், வளர்ந்து பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர் என் ஒரு உலகத்தையே உருவாக்கியுள்ளார், வித்யாகர். 100 வயது கடந்த மூதாட்டியும் இதில் ஒருவர்!

தினமும் எல்லாரையும் பற்றி விசாரித்து, நலம் கண்டு, சிறு தொழில் முனைந்து, அதில் அவரது மக்கள் பணியாற்ற துணை நின்று, பம்பரமாய் சுழலும் இந்த 'பப்பா'வை பார்க்கையில், ஒரு தாய் செய்யக்கூடிய அத்தனையும், தந்தையாகிய இவரே எப்படி செய்கிறார் என மனம் வியக்கிறது!

மேற்படி பொறுப்பு, சமீபத்தில் ஒரு நற்செயலால், முழுமை அடைந்துள்ளது! எப்படி என்று பார்ப்போமா?

தான் வளர்த்த இரு பெண்களுக்கு அடுத்த அடுத்த மாதங்களிலேயே, சம்ப்¢ரதாயம் மாறாமல், பத்திரிகை அடித்து, கல்யாண மண்டபத்தில், அக்கினி வளர்த்து அருந்ததி பார்த்து, உற்றார், உறவினர், இரு வீடுகளிலிருந்தும் வர, தன்னை பெண்ணின் தந்தையென ப்ரகடனப் படுத்தி, அருமையாய் இரு திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் இந்தத் "தந்தை" வித்யாகர்!

எனக்கு இந்த செய்தி எப்படி தெரியும்? எங்கள் வீட்டில் குழந்தைகளின் பிறந்த நாளானால், கேக் வெட்டி, கைதட்டி, வசதியானவர்களை அழைத்து விருந்துண்ணும் பழக்கமில்லை. அரிசி மூட்டைகள், இனிப்புகள், கைக்குழந்தைகளுக்கு புதிய சட்டைகள் வாங்கிக் கொண்டு, எல்லாருமாய் "உதவும் கரங்கள்" க்கு சென்று, எல்லாருமாய் சேர்ந்துண்டு, நம் வீட்டுக் குழந்தைகளுக்கும், இல்லாதாருடன் பகிர்ந்துண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்;

மாதா மாதம் வீட்டில் சேரும் நாளிதழ்கள், பழைய, ஆனால் நன்றாக இருக்கும் துணிமணிகள், மேசை நாற்காலி, குழந்தைகள் பொம்மைகள், என எதைக் குடுத்தாலும், அவர்களே ஒரு வண்டியில் வந்து பொருட்களை எடுத்து செல்கின்றனர்! வரும் நபர், கையோடு ஒரு ரசீது புத்தகமும் கொண்டு வருகிறார். அத்தனை பொருட்களையும் பட்டியலிட்டு எழுதி, 'பெற்றுக்கொண்டோம், நன்றி' என எழுதி கையொப்பமிட்டு, ரசீது தருகிறார். அப்படி ஒரு முறை வரும்போது, சந்தோஷமாக, "அய்யா, எங்க தங்கச்சிக்கு கல்யாணம்" எனக் கூறி ஒரு பத்திரிகையை நீட்டினார்! மகிழ்ந்த என் தாய், உடனே, ஒரு புது பட்டுப்புடவையை கல்யாணப் பெண்ணுக்குத் தந்தார். அதற்கும், ஓரிரு நாட்களில், திரு. வித்யாகரிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு நன்றிக் கடிதம் இல்லம் தேடி வந்தது!

மறுமுறை பிறந்தநாள் கொண்டாட செல்கையில், மற்றொமொரு பெண்ணின் திருமண பத்திரிகையையும் தந்தார் 'பப்பா' வித்யாகர். மகிழ்ச்சி எங்கள் இல்லத்தையும் தொற்றிக் கொண்டது.

அதனால்தான், பெறாவிட்டாலும், குழந்தைகளுக்கு ஒரு தாயாயும், தந்தையுமாக, பெரியவர்களுக்கு ஒரு நல்ல சகோதரனாக, முதியவர்க்கு ஒரு நல்ல மகனாக, மன நலம் குன்றியவர்க்கு ஒரு நல்ல மருத்துவனாக வாழ்ந்து வரும் திரு.'பப்பா' வித்யாகரை பற்றி, இந்த "உறவுகள்" பற்றிய கட்டுரையில் எழுதியுள்ளேன்!

அந்த ஆலமரத்தின் சுட்டி http://www.udavumkarangal.org
முகவரி: திருவேற்காட்டில் நுழைந்து, "உதவும் கரங்கள்" என்றாலே போதுமே!

எல்லாரும் இத்தகைய நல்லார் பணியை ஆதரித்து வரவேண்டுமெனும் ஆவலில் இந்த கட்டுரை உருவாகியுள்ளது.

18 August 2006

தேன்கூடு போட்டி- தாய்


தாய்

தொப்புள் கொடியறுத்தும் தொடரும்
நோய் வந்தால் உடன் வாடும்
சிரிப்புகாட்ட குரங்காடும்!
நிமிர்ந்திடவே தான் குனியும்,
உண்ணாவிடில் விரதம் கொள்ளும்
தானுருகி தளிர் வளர்க்கும்
வளரும்வரை தாங்கிவரும்
வளர்ந்தபின்னும் நிழலாகும்
தாய் உறவுப்போல ஒரு
உறவுயினி உலகிலுண்டோ?

தேன்கூடு போட்டி - அந்த உறவுக்கு பெயரென்ன?

கலாவதி கார்த்திகேயன் என்ற பெயர். இதில் புதுமை என்ன என்கிறீர்களா? கார்த்திகேயன் தந்தையோ அல்லது கணவனோ அல்ல!

மகன்!

http://vijayanagar.blogspot.com/ எனும் வலை பதிவில், கார்த்திகேயன் எப்படி எழுதுவாரோ, அதே பாணியை பின் பற்றி, தன்னைத் தனது மகனாக பாவித்து, அந்தத் தாய் கடந்த இரு மாதங்களாக பதிவுகள் எழுதுகிறார். கார்த்திகேயனின் நண்பர்களோடு சேர்ந்து ஒரு அறக் கட்டளை நிறுவி அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முயன்று வருகிறார்!

எம்.ஏ,எம்.பில் (ஆங்கிலம்) மற்றும் எம்.பி.ஏ படித்த அந்தப் பள்ளி ஆசிரியை, ஓராண்டு காலமாக விறுப்பு ஓய்வு பெற்று, மகனின் பெயரை தன்னுடன் இணைத்துக்கொண்டு, மகன் என்ன பணிகளிலெல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரோ அந்த பணியிலெல்லாம், தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்கிறார், மகனை வாழவைக்கிறார்- ஏன்? அந்த உறவுக்கு பெயரென்ன?

மகன் கார்த்திகேயன் துடிப்பான இளைஞர். கணினி பொறியாளர்; அமெரிக்கா சென்று திரும்பி வந்த, அடக்கமான, உறவினர்களின் செல்லப் பிள்ளை. அலுவலகத்திலும் நல்ல பெயர்! நண்பர்களிடையேயும் நல்ல பெயர். தீயபழக்கங்கள் ஏதும் இல்லை. வரலாற்றுப் பிரியர்! அவர் செல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களே தென்னிந்தியாவில் இல்லை எனலாம்! அவருடைய கணிணியிலுள்ள folders புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன! அதனை தனது இடுகைகளில் எழுதியும், வரலாறு.காம் இணையப் பத்திரிகைக்கும் அனுப்பி வந்துள்ளார்!

2005- ஆகஸ்ட் 26ஆம் தேதி. காலை அலுவலகம் சென்ற கார்த்திகேயன், சாலை விபத்தில்- காலமானார்!

இல்லை, என்னுடன், என்னுள் வாழ்கிறான் என புதியமுகம் பூண்டு வாழ்கிறார் கலாவதி கார்த்திகேயன்! பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஆசையாக மகன் வாங்கித் தந்த பெங்களூர் வீட்டை விட்டு, சென்னை வந்து, தனியே, அறை எங்கும் கார்த்திகேயனின் படங்களை ஒட்டி, சதா அவர் நினைவாக வாழும் - அந்த உறவுக்குப் பெயரென்ன?

968 உறுப்பினர் கொண்ட பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமம். பல மாநிலங்களில், ராஜ ராஜனின் சதயத் திருநாளை ஒட்டி, உறுப்பினர்கள் விழாக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் பொருட்டு எல்லாப் பழைய உறுப்பினர்கள், நீண்ட காலமாக தொடர்பு அற்றவர்களுக்கு ஒரு மடல் அனுப்பப்பட்ட மடலுக்கு வந்த பொன்னியின் செல்வியின் மடல் எல்லா உறுப்பினரையும் கலங்க வைத்து விட்டது!

பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமத்தில், மகன் கார்த்திகேயனின் புனைப்பெயரை ஒத்து (பொன்னியின் செல்வன் - கார்த்திகேயனின் மின்னஞ்சல் பெயர்; தாயார் கலாவதியின் மின்னஞ்சல் பெயர் பொன்னியின் செல்வி! )

அவரெழுதியதன் சாராம்சம்:

"என் பெயர் பொன்னியின் செல்வி. உங்கள் உறுப்பினர் கார்த்திக்கின் தாய். எனக்கு கணினி இயக்கிப் பழக்கமில்லை. இப்போதுதான்,மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறேன்; ஆம், கடந்த ஆண்டு என் மகன் மாண்டான் என என்றும் நினைக்க முடியாமல், ஆனால் அவனை நேரில் பார்க்கவும் முடியாமல், நான் தவித்து வருகையில், மெதுவாக அவனது கணினியைத் திறந்து கொஞ்சம்,கொஞ்சமாக இயக்க பழகி வருகிறேன். உங்கள் குழு என் கண்ணில் பட்டது; எனது மகன்தான் நடத்துகிறான் என நினைத்து திறக்க முற்படுகையில், உங்கள் குழுவை பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் எனது மகனும் ஒரு முக்கிய உறுப்பினர் என்பதையும் தெரிந்து கொண்டேன். எத்தனை செய்திகள் அளித்துள்ளான் என்பதை எண்ணி வியக்கிறேன்.என் மகன் அளவுக்கு சுவையாக எழுத முடியாவிட்டாலும், ஏதோ, என்னால் முடிந்த வரை இதில் பங்கேற்க முயல்கிறேன். வணக்கம்!"

அதற்கு எத்தனை பின்னூட்டங்கள் வந்தன என நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நான் அந்தத் தாயைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றேன்.

இரண்டரை மணி நேரங்கள்! அந்தத் தாய் சொன்னது கேட்கக் கேட்க மலைப்பாக இருந்தது! தந்தை 2000 ஆண்டே காலமானதும், மகன் கார்த்திக் (கார்த்திகேயனை அவர் அப்படித்தான் அழைக்கிறார்!) அவரை எப்பொழுதும் அரவணைத்து தாய்க்கு எந்த ப்ரச்னைகளும் வரக்கூடாது என வாழ்ந்த "தாய்ச் செல்லம்".

தாய் மகன் இருவருக்குமே சரித்திர நாவல்கள் மிகவும் பிடிக்கும்! இருவரும், நண்பர்கள் போல் கேலியும் கும்மாளமும் செய்து வாழ்ந்ததாகவே சொல்கிறார்,கலாவதி!

கவிதை, கதை, வரலற்று தலங்களுக்குச் சென்று எழுதும் பயணக் கட்டுரை, புகைப் படங்கள், கார், பைக், அமெரிக்க பயணம், டெல் நிறுவனத்தில் நல்ல பணி,சொந்த வீடு - என மிகவும் வேகமாக fast forward modeல் வளர்ந்த அந்த வாழ்க்கை, எப்படி திடீரென முடிந்து போகும்?

ஏன் இப்படி? என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில், மகனாகவே வாழ முயற்சிக்கும் அந்த தாயின் உறவுக்கு என்ன பெயர் வைப்பது? அந்த உறவுக்கு பேரென்ன???