15 November 2006

இலவசம் தேன்கூடு போட்டிக்கு

தவறிய நேரம், தவிச்ச படிப்பு சோத்துக்கு லாட்டரி இலவசம்
ராத்திரி முழிப்பு ஆத்தா பழிப்பு கண்களில் வளையங்கள் இலவசம்
குப்புற படுத்து குத்துப் படம் பார்த்தா, பெண்டுவலி முதுகில் இலவசம்
கணக்கில்லாம புகை பிடிச்சா காசம், கான்சர் இலவசம்
வீட்டை மறந்தா மத்தவ கிட்ட எய்ட்ஸ் நோயும் இலவசம்
வாயில வார்த்தை தடிச்சு இருந்தா தர்ம அடிகளும் இலவசம்
எதுக்கும் அடிதடி வம்புன்னு போனா, அடுத்தவன் பகையும் இலவசம்
பொங்கப் பண்டிகை தீபாவளின்னு வேட்டிச் சட்டை இலவசம்
கட்சிக்காரன் முட்டாளாக்க டி.வி. கொடுத்தான் இலவசம்,
பாவி மனுஷா, மேலும் உன்னை சோம்பச் செய்யும் இலவசம்
எல்லாஞ் சரிதான் ஏளனம் செஞ்சா ஏமாற்றம் என்றும் இலவசம்!

இந்த இலவசங்கள் தேவையா?

எடுத்ததை நடத்தி, தடுப்பதை விடுத்தா வெற்றிப் பாதை இலவசம்
வாழற வாழ்க்கை ரசிச்சு வாழ்ந்தா நீங்கா மகிழ்ச்சி இலவசம்!

14 November 2006

குழந்தைகள் தினம்???


இன்று பேச்சளவில் குழந்தைகள் தினம் என்று கொண்டாடினாலும், fபிரோசாபாத்திலும், சிவகாசியிலும் அல்லல்படும் ஏராளமான குழந்தைகளுக்காக வருந்தி இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

சிவகாசியில் இன்றும் குழந்தைகள் வெடிகள், மத்தாப்புகள் செய்யும் அவலம் பலருக்குத் தெரிந்திருக்கும். முறையாக லைசன்ஸ் பெறாத திருட்டி மத்தாப்புக் கம்பெனிகளே சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளம்.

ஆனால், Fபிரோசாபாத்தில் 4 வயதுமுதலே, பள்ளிப் பை தூக்கும் முன்னரே, கண்ணாடிக் கைவளையல்களுக்கு மெருகேற்ற, ஜிமிக்கி ஒட்ட, உருக்கு கண்ணாடியை அச்சில் சுற்றி வட்டமாய் ஒட்ட, இப்படி ஏராளமான வளையல்கள் செய்யும் வேலைகளுக்கு பெரும்பாலும் குழந்தைகளையே ஈடுபடுத்துகின்றனர், அங்கே வளையல் தயாரிப்பாளர்கள்! காரணம்? ஸ்ட்ரைக் செய்ய மாட்டார்கள், கவனித்து செய்வார்கள், அதிக ஊதியம் கேட்கமாட்டார்கள்! எப்படி? அவர்கள் குடும்பத்தின் வருமை காரணமாக, பெற்றோர்களும் பிள்ளைகளை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள்! சரி, அப்படி தரப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? 100 வலையல்களில் ஜரிகை வேலை செய்தால் வெறும் 2.50 ரூபாய்தான்! பிஞ்சுக் கைகளினால் ஒருநாள் முழுதும் 100 வளையல்கள் ஒட்டினாலே பெரிது! அதேபோல், 320 வளையல்கள் நெருப்பில் காட்டி ஒட்டினால் வெறும் ஒரு ரூபாய்! அந்த வளையல்களை ஒட்ட, குழந்தைகள் அல்லாடுவது, கிரசின் விளக்குகளில்! அந்த புகையை அருகிலிருந்து சுவாசிப்பதனால், அவர்களுக்கு, ஆஸ்மா, டீ.பி. மற்றும் கண் பார்வை மங்கலாகுதல் போன்ற வியாதிகள் ஏற்படுகிறது!

இனியேனும், வளைகாப்பு, சீமந்தம், நவராத்திரி போன்ற விசேடங்களுக்கு வளையல்கள் வாங்கும் பெண்கள், அந்தப் பொருட்கள் குழந்தைத் தொழிலாளர்களால் ஆனவை இல்லை என உறுதி படுத்திக் கொண்டு வாங்குவதே உத்தமம். தங்க நகைகளுக்கு ஹால்மார்க் போல், "குழந்தைகளை ஈடுபடுத்தப்பட்ட பொருள் இல்லை" என்பதற்கு ஏதேனும் ஒரு முத்திரை அரசே கொண்டுவரலாம்.

அதேபோல் கல்யாணங்களிலும், ஊர்வலங்களிலும், விசேட நாட்களிலும் வெடி, மத்தாப்பு கொழுத்தும் போது, அங்கே ஒரு பிஞ்சுத் தளிரும் கந்தகத்தில் எரிந்து வாடுவதை மனதில் கொண்டு, அம்மாதிரி பொருட்களை வாங்கி காசை கரியாக்குவதை விட, அருகிலுள்ள குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்களுக்குச் சென்று, நம் பிள்ளைகள் மூலமே அக்குழந்தைகளுக்கும் எதேனும், புத்தாடை, இனிப்புகள் வழங்குவதை ஒரு நிரந்தரச் சடங்காகக் கொள்ளலாம்.

தகவல், புகைப்படம் ஆதாரம்: நன்றி. IBN news.

12 November 2006

நிஜ இந்தியனுக்கு... ஒரு கடிதம்!

படித்ததில் பிடித்தது - பிடித்தது என்றால் படிக்கச் சுவையாக இருந்ததென சொல்லவில்லை. என்னையே, 'பிடித்தது'! இந்த செய்தி, என்னை, என்னுள், ஒரு பொறியைப் பற்றி வைத்தது. நிஜ இந்தியராகிய எவரும் உதாசீனப்படுத்த முடியாத கருத்துக்களை ஹைதராபாத்தில் பேசுகையில் வெளியிட்டார், ஒரு மூத்த குடிமகன்,தலைவர்! பலர் படித்திருக்கலாம், பலருக்கு இதை முன்மொழிந்திருக்கலாம். அந்த தலைவர் கூறிவது போல் மின்னஞ்சல் அடையும் 100 பேரைவிட உரலி, வலைச் செய்தி மூலம் அதிகம் பேருக்கு செய்தி சொல்லுவோம் எனும் ஆசையில் இதை வலையில் பின்னுகிறேன்:-

=====================================================================================

இங்கே செய்தி தொடர்பு துறை மற்றும் பத்திரிகைகள் ஏன் தவறான செய்திகளையே வெளியிடுகின்றன?
நமது நாட்டின் பலம், சாதனைகளை பறை சாற்றிக்கொள்ள நாமே தயங்குவது ஏன்?
எத்தனை மாபெரும் தேசம் நமது தேசம்? எத்தனை சாதனைக் கதைகள் நம்மில் உருவாகியுள்ளன. அதை ஆமோதிக்க நாம் தயங்குகின்றோம். ஏன்?
பால் உற்பத்தியில், தொலைக் கண்காணிப்பு விண்கோள்கள் ஏவுதலில், நாம் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். கோதுமை, அரிசி பயிறிடுதலில் உலகின் இரண்டாமிடத்தை பெற்றுள்ளோம்.
டாக்டர் சுதர்சனம் என்பவரைப் பாருங்கள். ஆதிவாசி குடியிருப்புகளை தன்னிறைவு பெற்ற இடங்களாக மாற்றியுள்ளார்! இப்படி எத்தனையோ சாதனைகளுக்கு பதிலாக நமது தகவல் தொடர்புத் துறையினர், எப்போதும் சோக செய்திகள், தோல்விகள், பேரிழப்புகளை வெளியிடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்!

நான் ஒரு நாள் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் காலை செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஊரெங்கும் குண்டு மழை, அழுகைகள், போர் சங்குச் சப்தம். ஆனால், அப்பத்திரிகையின் முதல் பக்கத்திலோ, ஒரு யூதர் அங்கே பாலைவனத்தில், ஐந்தே வருடங்களில், சொட்டு நீர்ப்பாசனம் செய்து, பழ மரங்கள் நட்டு, சோலைவனமாக மாற்றிய கதைதான் பெரிய அளவில் பிரசுரமாகியிருந்தது! காலை எழுந்து முதன்முதலாக செய்தித்தாளைப் படிக்கும் யாரையும் அம்மாதிரியான சாதனையைச் செய்யத் தூண்டும் செய்தி அது! மற்ற குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய பக்கங்களில்,சிறு செய்திகளாக புதைந்து போயிருந்தது!

ஆனால், இங்கு நாம் மரணம், நோய்கள், நீவிரவாதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என செய்திகளைப் பற்றியே அதிகம் காண்கிறோம்.

ஏன் இத்தனை பின்தங்கிய சிந்தனைகள், தவறான பார்வைகள்?

மற்றொரு கேள்வி. நாம் ஏன் வெளிநாடு, வெளிநாட்டுப்பொருட்கள் மேல் இத்தனை மோகம் கொள்கிறோம்?
நமக்கு வெளிநாட்டு டி.வி, வெளிநாட்டு சட்டை, வெளிநாட்டு தொழில்நுட்பம் வேண்டும் என ஏங்குகிறோம். இறக்குமதிப் பொருட்களில் அப்படி என்ன மோகம்?

சுயநம்பிக்கையும், சுயசார்புமே நமக்கு சுய மரியாதையைத் தரும் எனும் எண்ணத்தை நாம் ஏன் மறந்துவிட்டோம்?

நான் ஹைதராபாத்தில் சொற்பொழிவு ஆற்றியவுடன் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுமியிடம் கேட்டேன்."உன் வாழ்கை குறிக்கோள் என்ன?" என்று. அவள்" முன்னேறிய இந்தியாவில் வாழ வேண்டும்," என்றாள்!

அவளுக்காக, அவளைப்போன்ற வருங்கால சந்ததியருக்காக, 'முன்னேறிய இந்தியாவை' உருவாக்க வேண்டியது நமது முதல் கடமை.
நாம் இதற்காக ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் முற்போக்கு சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
என்ன என்று?

இந்தியா 'முன்னேறும்' நாடல்ல; 'முன்னேறிய' நாடு!

சரி, இன்னும் ஒரு பத்து நிமிஷங்கள் எனக்காக ஒதுக்க முடிந்தால் நல்லது. நான் மீண்டும் உத்வேகத்தோடு, உணர்ச்சியோடு சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். நிஜ இந்தியனாய் இருந்தால்,படித்தால் படியுங்கள்.

நீங்கள்...
- நமது சட்டங்கள் மிகவும் பழமையானதாக உள்ளன;
- நமது முனிசிபாலிடி, கார்ப்பரேஷன்காரர்கள் குப்பை அள்ளுவதில்லை;
- நமது தொலைபேசிகள் வேலை செய்வதில்லை என்று;
- ரயில்வே துறை ஒரு கோமாளிக் கூட்டம் என்று;
- உலகிலேயே மோசமான விமான சர்வீஸ் இங்குள்ளது என்று;
- கடிதங்கள் நேரத்தில் போவதில்லை என்று;
- நாட்டை நாய்களுக்கு ரொட்டித்துண்டு போல் கடித்துக் குதற விட்டுவிட்டோம், மிகவும் அதளபாதாளத்தில் உள்ளது...."

இப்படி எத்தனையோ ... சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள்! என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூருக்கு செல்லுமொரு இந்தியனாக உங்களையே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முகம், உடல், உயிர். சரியா?
நீங்கள் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியேரும்போது, உலகிலேயே முதல் தர மன்ணில் கால் பதிப்பதை உணர்கிறீகள்!
சிங்கப்பூரில் நீங்கள் தெருக்களில் சிகரெட் முனைகளை எற்¢வதில்லை. கடைகளுக்குள்ளேயே தின்பதில்லை.
பாதாள சாலைகளை நீங்களும் பெருமையான ஒரு சாதனையாக எண்ணுகிறீர்கள்; அங்கே ஆர்சர்ட் சாலையில் (மும்பையில் மாஹிம்- பெட்டார் ரோடு போலவேயுள்ள சாலை) மாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை பறக்கிறீர்கள். சர்வ சாதாரணமாக கார் பார்க்கிங்கில் அதிக நேரம் செவவிட்டமைக்காக $5 சிங்கப்பூர் டாலரை கப்பம் கட்டுகிறீர்கள் (சுமார் ரூ.60) ஆனால் குறை சொல்வதில்லை! வாயைத்திறக்கிறீர்களா? இல்லை. ஏன்?

துபாயில் ரமலான் நோன்பு காலங்களில் வெளியிடங்களில் தப்பித்தவறி உணவு உண்பதில்லை. ஏன்?

லண்டனில் ஒரு தொலைபேசி நிறுவன ஊழியரிடம், "ஏன்பா, என் STD,ISD பில்லெல்லாம், வேற ஏதாச்சும் இளிச்சவயன் பில்லோட சேர்த்துடு,' எனக் கூறி அவருக்கு பணத்தை லஞ்சமாகத் 'தள்ளுவதில்லை'! ஏன்?

வாஷிங்டன் தெருக்களில் மணிக்கு 55 mph (88 Km/h) காரோட்டிவிட்டு தட்டிக் கேட்கும் போக்குவரத்து போலீஸிடம், "ஏய் நான் யார்னு தெரியுமா. ..... இன்னாரோட மகன், இந்தா இந்த நோட்ட எடுத்துகிட்டு ஓடிப்போ?'' என்று சூளுரைப்பது இல்லை. ஏன்?

ஆஸ்திரேலியாவிலோ, நியூசிலாந்திலோ தின்றுவிட்டு பேப்பரையோ, குடித்துவிட்டு இளநீர் காயையோ அப்படியே நடு ரோட்டில் எற்¢யாமல், குப்பை தொட்டியிலேயே எற்¢கிறீர்கள்! ஏன்?

ஜப்பானிலுள்ள டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை குதப்பிவிட்டு 'புளிச்' எனத் துப்புவதில்லை. ஏன்?

பாஸ்டன் பல்கலைக்கழகத்தில், பரிட்சை எழுதவோ, போலி சர்டிபிகேட் வாங்கவோ, வேறு ஆளையோ, பிட்டுகளையோ நம்புவதில்லை; பயப்படுகிறீர்கள். ஏன்?

நான் அதே- 'உங்களை'ப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

அங்கெல்லாம் சட்டத்தை மதிக்கும் நீங்கள், இந்த மன்ணை மிதித்ததும் மாறிவிடுகிறீர்கள்! பேப்பரை எறிவீர்கள், சிகரெட்டை போட்டு மிதிப்பீர்கள், அனாசாயமாக துப்புவீர்கள்! மற்ற நாட்டு சட்ட திட்டங்களை இவ்வளவு மதித்து போற்றும் நீங்கள், சொந்த நாட்டில் வேறு மாதிரி நடந்து கொள்வது ஏன்? எப்போது நம் நாட்டு சட்ட திட்டங்களையும் மதிக்க கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?

மும்பையில் மிகவும் பிரபலமாக இருந்த முன்னாள் முனிசிபல் கமிஷனர், திரு.தினாய்கர், ஒரு பேட்டியில், " இந்த ஊரில் பெரிய மனிதர்கள் நாய்களை கூட்டிக்கொண்டு தெருவில் வாக்கிங் போவார்கள். அப்போது நாய் தெருவிலேயே செய்யும் அசிங்கங்களை பாராமல் இருப்பார்கள். அதே பெரிய மனிதர்கள் தான், நிர்வாகத்தைப் பற்றி," என்ன கவர்ன்மெண்ட்? கொஞ்சம்கூட ரோடையெல்லாம் சரியா வெச்சுக்க மாட்டேங்கறாங்க?," என்று குற்றப் பத்திரிகை வாசிப்பார்கள்! நீங்கள் அந்த அரசாங்கத்தினரிடம் என்ன எற்றிபார்க்கிறீர்கள்? நாய் எப்போதெல்லாம் காலை தூக்குகிறதோ, எப்போதெல்லாம் உட்கார முற்படுகிறதோ, அப்போது அங்கே ஆஜராகி ஒரு சட்டியை அடியில் ஏந்திப்பிடிக்கச் சொல்கிறீகளா?" என்று சூடாக சொன்னாராம்!

அமெரிக்காவிலும், லண்டனிலும் நாய் சொந்தக்காரர்களே, நாயின் அசிங்களை சுத்தம் செய்ய கைகளில் உறை அணிந்து, உடன் ஒரு பையையும் கொண்டு வரவேண்டுமாம்; ஜப்பானிலும் அப்படியே. பின்னர் இந்தியாவில் மட்டும் ஏன் நாம் அப்படிச் செய்வதில்லை? தினாய்கரின் கோபம் சரியே!

தேர்தலில் ஓட்டுப் போட்டதோடு நாம் நமது கடமைகளை மறந்துவிடுகிறோம். ஒன்றும் செய்யாமல், சோம்பியிருந்து, இனி எல்லாமே புதிய அரசாங்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நமது பங்களிப்பு? - பெரிய சைபர்!

நாம் குப்பைகளை எங்கும் எறிவோம்; அர்சாங்கம் உடனே சுத்தம் செய்ய வேண்டும். நாம் ஒரு சிறிய காகிதத்தைக் கூட கீழே குனிந்து, எடுத்து, குப்பை தொட்டியில் போட மாட்டோம்.

ரயில்வே துறை, ரயில் நிலையங்களிலும், ரயில் பெட்டிகளிலும் கழிவறைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று கோபமாக சொல்லுவோம்;ஆனால் நாம் அதை சுத்தமாக வைத்திருக்க மாட்டோம்.

இந்தியன் ஏர்லைன்ஸ¤ன், ஏர் இந்தியாவும் நல்ல சுத்தமான, சுவைமிக்க உணவும், துடைத்துக்கொள்ள நல்ல நாப்கின்களையும் தரவேண்டுமென எதிர்பார்ப்போம்; ஆனால், சாப்பிட்டவுடன் அந்த தட்டு, பேப்பர் நாபிகின் போன்றவற்றை அப்படியே, ஏர்போர்ட் எனக்கூட பாராமல், எறிய நாம் தயங்கமாட்டோம்! இது அங்கு பணி புரிபவர்களுக்கும் பொருந்தும். "பொதுமக்களுக்கு சேவை செய்கிறோம்; நாம் சுத்தமாக இருக்கவேண்டும், சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்,"என அங்கிருப்பவர்களும் எண்ணுவதில்லை.

பெண் குழந்தைகள் காப்பு, வரதட்சிணைக்கொடுமை,பெண்ணுரிமை பற்றி வாய் கிழிய வெளியே பேசி விட்டு, வீட்டில் அப்படியே நேர்மாராக நடப்போம்!

அதற்கு நாம் சொல்லும் சாக்குப்போக்கு?சப்பை கட்டுதல்கள்?

நான் ஒருவன் மட்டும் என் மகனுக்காக வரதட்சிணை வாங்காமலிருந்தால் போதாது. வேறென்ன செய்ய வேண்டும்?
யார் இந்த வழக்கங்களை மாற்றுவது?

இந்த வழக்கங்களை கையாள்பவர்கள் யார், யார் மாறவேண்டும் என்றால், எல்லாரும் மாறவேண்டும்!

"என் பக்கத்து வீட்டுக்காரர், என் தெருவிலுள்ளவர்கள், என் அதிகாரிகள், மற்றைய ஊர்களில் உள்ளோர், ஏனைய மதத்தினர், ஜாதியினர், இவையெல்லாம் போக, நமது அரசாங்கம் மாற வேண்டும்," என்று சொல்வோமே தவிர "நான் என்னை, என் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்", என்று யாராவது நினைக்கிறார்களா?

இந்த சீர்திருத்தங்களையும் சமுதாய நலத் திட்டங்களையும் செய்ய நாம் முன்வராமல், வீட்டுக்குள் அடைகாக்கும் பெட்டை போல் ஒளிந்துகொண்டு, தூரத்திலிருக்கும் நாடுகளைப் பார்த்து, அங்கிருந்து நமக்காக, ஒரு மிஸ்டர்.க்ளீன் வந்து, கையிலுள்ள மந்திரக் கோலால், எதேனும் மந்திரங்கள், மாயாஜாலங்கள் செய்து, நமது நாட்டையே மாற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறிர்கள்!

கோழையாக ப்ரச்னைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க திராணி இல்லாமல், "இது சரியில்லை, அது சரியில்லை," எனக்கூறி, அமெரிக்காவுக்கு ஓடிப்போய் அங்கே அண்டிப்பிழைத்து, அவர்களின் வெளிச்சத்தில் குளிர் காய்ந்து, அவர்கள் புகழ் பாடுகிறீர்கள்! அங்கே நமது நாட்டைப்பற்றிய கவலையோ, பயமோ இன்றி, வாழ்கிறீர்கள்!

நியூயார்க்கில் குண்டு வெடிப்பு, பாதுகாப்பு இல்லையெனத் தெரிந்ததும், இங்கிலாந்துக்கு ஓடி, ஒளிகிறீர்கள்!

இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எனத் தெரிந்ததும், உடனே, துபாய்க்கான அடுத்த விமானத்தைப் பிடிக்கிறீர்கள்!

அங்கேயும் வளைகுடா நாடுகளில் போர் முரசு கேட்டவுடன், உடனே, நமது அரசாங்கம் செலவில்லாமல், நம்மை மீட்டு, நமது மண்ணில் பத்திரமாக சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; இல்லையேல் அரசாங்கத்தை வாயில் வந்தபடியெல்லாம் ஏசி, குறை கூறி குளிர்காய்கிறீர்கள்!

யாரும், இந்த முறைகளை மாற்ற முனைவதில்லை. இந்த அரசு சக்கரத்தில் பிழை சரி செய்து, எண்ணெய் ஊற்றி, ஓடவைக்க முற்படுவதில்லை!

எல்லாரும் நமது மனங்களை பணத்துக்கு ஆசைப்பட்டு அடகு வைத்துவிட்டோம்!

ஜான் கென்னடி சொன்னது போல், நாம் இந்த இந்திய நாடு மேம்பட என்ன செய்கிறோம் என்று மனம் கூர்ந்து கேட்டுக்கொள்ளுங்கள். அதை இன்றே செய்ய முற்பட்டு, நமது தேசமும், அமெரிக்காவைப் போல், ஏனைய முற்போக்கு நாடுகள் போல் உருவாக்க முயலுங்கள்.

நம்மிடம் இருந்து இந்தியா என்ன எதிர்பார்க்கிறதோ, அதை இன்றே செய்ய முற்படுங்கள். இந்த செய்தியை நீங்களும் உள்வாங்கி, உங்களைப் போல் சிந்திக்கும் நல்லுள்ளங்களுக்கும் மின்னஞ்சல் செய்யுங்கள்; வெத்து ஜோக்குகளையும், அல்ப படங்களையும், மின்னஞ்சல் செய்வதை விட இதை அதிகம் பேருக்கு அனுப்ப முயலுங்கள்! நன்றி.

டாக்டர். அப்துல் கலாம்.
ஜனாதிபதி - இந்தியக் குடியரசு

09 November 2006

ரத்தத்தின் ரத்தமே!

ஒரு வெள்ளிக்கிழமை மாலை எனக்கு 0+ve ரத்தம் வேண்டுமென கைதொலைப்பேசி செய்தி வந்திருந்தது. வழக்கமாக ரத்ததானத்திற்கு நண்பர்களிடையே செய்தி அனுப்பி நாமும் ரத்ததானம் செய்யும் சுகமே அலாதி. வரும் திங்கள் காலை 8 மணிக்கு வருமாறும், பயனர்(ஒரு சிறுவன்), தொடர்புகொள்ள அவனது தந்தை பெயர் போன்ற அத்தியாவசியமான தகவல்கள் தரப்பட்டிருந்தது. வழக்கமாக எனக்கு வரும் அழைப்புகளில், A+ve, AB-, போன்றவையே அதிகம் வரும். ஓ பாஸிடிவ் என்பதை நான் நகைச்சுவையாக,"நாம ஓப்ளஸ் பசங்க (hopeless)! ஒரு பய கூட நம்ம ரத்தத்தை கேக்க மாட்டேங்கறானே" என்பதுண்டு! செய்தியறிந்ததுமே நான் அந்த தந்தைக்கு போன் போட்டு, "சார், .. நான் கட்டாயம் வரேன்" என ஊர்ஜிதம் செய்தேன்.
திங்கள் கிழமை விரைவாகவே சென்னை க்ரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே விவரத்தை சொன்னதும், ரத்த வங்கியில் ஒரு fபாரத்தை நிரப்பச் சொன்னார்கள். செய்தேன். ஆர்வமாக, பையன் பெயரைக் குறிப்பிட்டு, எப்படி இருக்கிறான்? என கேட்ட எனக்கு அதிர்ச்சி! ஆம்! முதல் நாள் இரவே அந்த சிறுவன் நோய் முற்றி போய் (என்ன நோய் என்பதா இப்போது முக்கியம்? மேலே படிக்கவும்...) இறந்துவிட்டான் என்றனர்! எனினும் நிரப்பிய fபாரம் நிரப்பியதுதான். நான் வங்கியில் சேர்த்திட ரத்தம் தருகிறேன் எனக் கூறிய என்னை அதிசயமாகப் பார்த்தாள் நர்ஸ்.

ரத்தம் குடுக்கவேண்டும் என்பதும், 4 மாதத்திற்கு அல்லது கொஞ்சம் நிதானமாக 6 மாதத்திற்கு, வியாதி, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றதனால் பாதிக்கப்படாமலும், எந்த மருந்துகளும் அருந்தாதவரும், மது, புகை பழக்கம் இல்லாதவராயும் இருப்பவரே, ரத்தம் தர தகுதியானவர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே நாம் fபாரத்தில் எழுதி உறுதி செய்ய வேண்டும். சரி, ஆனால்....

எங்குமே இல்லாத ஒரு புதிய விநோத சட்டத்தை அப்போலோ இங்கு நடைமுறை படுத்தியுள்ளது!கைகளில், கால்களில் உறை அணிந்து, எடை மிஷினின் மேல் நின்ற என்னைப் பார்த்து," சார், நீங்க ரத்தம் தர முடியாது", என்றாள் நர்ஸ். "எதுக்கு?" மிக அடிபட்ட மனதுடன் கேட்டேன். நீங்க 49.66 கிலோதான் சார் வெயிட். குறைஞ்சது 50 கிலோவாவது இருக்கணும்!" என்றாள்.
"அட, 0.340 கிராம்ல நான் குறைஞ்சுபோயிட்டா, ரத்தம் தரக்கூடாதா? சட்டப்படி, 45 கிலோக்கு மேலே இருக்குற யாரும் ரத்தம் தரலாமே?"
"ரூல்ஸ் பேசாதீங்க சார். இங்க இதுதான் ரூல்ஸ். உங்க ரத்த செல்கள் (platelets) செறிவா இருக்காது. அதான்," என்றாள் அடுத்த படியாக!
கணக்கற்ற முறை ரத்தம் தந்தவன் நான். கல்லூரி நாட்களில், 45 கிலோ வெயிட் கொஞ்சம் குறைந்தாலும்,பேயாய் தின்று, அடுத்த முறை N.S.S. காரர்கள் ரத்ததானத்தில் உதாசீனப்படுத்தாமல் பார்த்துக்கொண்டவன், அதிலும் அறிவியல் படித்தவன். செல்லின் செரிவு பற்றி ஒரு கிளிப்பிள்ளை நர்ஸ் எனக்கு பாடம் எடுக்கிறாள்! கஷ்டகாலம்! எனக்கு இந்த மருத்துவமனையின் நிராகரிப்பு மிகுந்த மனவேதனை அளித்தது!

மேலே போய் அங்கிருந்த வாயிற்காப்போன் போல் அங்கங்கு நிற்கும் மக்கள் தொடர்பு அதிகாரிகளை கேட்டால், "சாரி" என கை விரித்தார்கள்.

மனம் நொந்து வரும் வழியில், ஜீவன் ரத்த வங்கி வந்தது. ஆத்திரத்துடன் அங்கே போய், "நான் ஓப்ளஸ்.. சாரி, ஓ பாசிடிவ், தானம் செய்யலாமா?" என்றேன். வழக்கம் போல் fபாரம் நிரப்புதல், எடை பார்த்தல் படலங்கள் நடந்தேறின. நான் மெதுவாக, "நான் (அங்கிருந்த எடை மிஷின் படி கம்மி!) 49 கிலோதான இருக்கேன்?" என்றேன்.

அங்கிருந்தவர், பட்டென்று, "ஆனா என்ன சார்? தானம் செய்ய மனசு இருக்கே? சீக்கு இல்லாம இருக்கீங்கல்ல? 45 கிலோ இருந்தாலே தரலாம் சார்," என்று என் மனதில் பால் வார்த்து, ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டாள்(சாரி... தானமாக எடுத்துக்கொண்டாள்). அப்போலோ ஆத்திரம் ஜீவனில் தணிந்தது :)

இம்மாதிரியான ரத்த வங்கிகள், உருப்படியாக elisa டெஸ்ட் (எய்ட்ஸ் உள்ளதா எனப்பார்க்கும் டெஸ்ட்) செய்தால் நல்லது. உலகமிருக்கும் நிலையில் தான தரும் யாருமே கட்டாயம் சம்மதித்திருப்பார்கள். ஆனால், அப்போலோ தனக்கென ஒரு தப்பான சட்டத்தை வைத்துக்கொண்டு, தானம் தர முன் வருபவர்களை இதுபோல் நிராகரித்தால்? நியாயமா?

16 October 2006

தேன்கூடு போட்டி - விடுதலை-2

அத்தனையும் 'விடுதலை'க் கற்றால்தான் நிஜ விடுதலை!

வருகைதரும் நேரம் உயிர்மூச்சு பெற்றுவிடுதலை
வளருகின்ற தூரம் வாழ்வைக் வாழக் கண்டுவிடுதலை
காணும் வாழ்வில் கல்வி காதல் கடமை கற்றுவிடுதலை
கண்டபின்னர் வந்த தூரம் திரும்பிப் பார்த்துவிடுதலை

காணும் பொருள் யாவற்றையும் உடன் பெற்றுவிடுதலை
பெற்றபின்னர் அத்தனையும் இயைந்து றந்துவிடுதலை
துறக்கும் நிலை போகும் மனம் முற்றும் துள்ளிவிடுதலை
கண்டிடும் நாள்தான் எமக்கு முற்றிலுமாய் விடுதலை!

தேன்கூடு போட்டி - விடுதலை

விடுதலை நாடினால் விடுதலை!

உட்புகும் காற்றை மூச்சாகிவிடுதலை
கற்றிடும் கூற்றைப் பேச்சாகிவிடுதலை
நட்டிடும் நாற்றை கனிக்கவிடுதலை
விட்டுவி ட்டாடும் கூத்தாகிவிடுதலை

காணாத கண்களை தேற்றிவிடுதலை
காட்டும் வித்தைபல காட்டிவிடுதலை
வேணாத ஈட்டுதல் நீட்டிவிடுதலை
என்றுநீ தெரிந்தே ஓட்டிவிடுதலை

காணும் மாந்தர்மனம் மாற்றிவிடுதலை
கண்டபொருள் யாவும் போற்றிவிடுதலை
உணரு(ம்) மனமதை உட்காணவிடுதலை
புணரும் சட்டையை கழற்றிவிடுதலை

வாடிடும் நாடிதில் வளர்ந்துவிடுதலை
தேடிடும் கோடிகள் கூட்டிவிடுதலை
சாடிடும் மதப்பேய் ஓட்டிவிடுதலை
நாடினால் நாடிதில் வரும் நிஜவிடுதலை!

03 September 2006

இன்னும் இருக்கிறது ஆகாயம்! poetry for T.sangam competition

கரிமல எரிவகை மாசுகள் நிறைந்தும்
சிறுசி றுகருப்பொருள் நச்சென ஆயியும்
கோளில் ஒன்று குறைந்ததென் றாகியும்
சூழல் நசிந்து ஊழல் பெறுகினும் - பாரில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

தாய்காட்டி உணவூட்டும் நிலவு மெங்கே
கட்ட டங்கள்கண் மறைக்க வானமெங்கே
எட்டிப் பார்க்கும் வானவில்லின் ஜாலமெங்கே?
காலை மாலை கதிரவனின் வர்ணமுமெங்கே? - எனினும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

கனவுகள் தகர்க்க கிடைக்கா கல்வி,
கிடைத்தும் மனதுக்கு எட்டா வேலை
எட்டியும் பிடிக்கா சூழல் எல்லாம்
விட்டு விடுதலையாகி பறக்கும் எல்லை - விதிக்க
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

கற்பனை விரிய எல்லையை விரிக்க
பறந்தும் உயர எட்டா நிலையை
எண்ணிய படியே எங்கும் பறக்க
விண்ணதின் உச்சம் கண்டிட விழைய - உயர்த்த
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

அப்துல் கலாமெனும் மீனவ நண்பன்
அண்டம் துளைக்க விண்ணியல் படிக்க
கற்பனை கனவுகள் நனவென வாக்க
கல்பனா சாவ்லா சாவிலும் வாழ்ந்திட - திறந்து
இன்னும் இருக்கிறது ஆகாயம்!

தொடுதல் இன்றி எல்லை காட்டும்
விடுதல் வந்தால் விடுதலை நாட்டும்
ஆதாய மின்றி ஆதார மின்றி
அதுவே அதற்கு சாட்சியமாக - எங்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!