05 October 2007

இதுதாண்டா பாக்டீரியா!

பூமியின் மிக ஆழமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாழும் நுண்ணுயிரி பாக்டீரியா!

இந்தக் கண்டுபிடிப்பு இந்தியானா மாவட்டம், ப்ளூமிங்டனிலிருந்து (அட, அமெரிக்காவிலிருந்துதாங்க!) வெளியிட்டு, ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைகிறதால், விஞ்ஞானம் விரும்பும் தமிழ் கூறும் நல்லுலகினருக்கு இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை.

தென்னாப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்களில், நிலத்தின் சமவெளியிலிருந்து ஏறக்குறைய 2 மைல்கள் அடியில், தன்னுயிர்ப்பு பாக்டீரியாக்களைக் கண்டறிந்துள்ளனர். கதிரியக்க யுரேனியத்தை வைத்து, தண்ணீர் அணுக்களை சிதறடித்து, அதிலிருந்து சக்தியை மீட்டு உண்டு, உயிர் வாழ்கிறது, இந்த ஹை-தெக் பாக்டீரியாக்கள்!

அதிசயம் என்னவென்றால், இவை பல லட்சம் ஆண்டுகளாக அவ்விடத்திலேயே உயிர் வாழ்ந்து வருகின்றன! எனவே, நம் கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டு, செவ்வாயிலும், ஏனைய சில கிரகங்களிலும், உயிர்கள் இருக்கும் எனும் கருத்து, வலுப்பெருகிறது!

லிஸா ப்ராட் எனும் உயிரிவேதியல் (BIOCHEMIST) நிபுணர், "நிஜத்தில், நமக்கு, மூலம், காலமாற்றம், உயிர்களின் எல்லை என்று எதுவும் சரிதாகத் தெரிவதில்லை. இப்போதுதான் விஞ்ஞானிகள், புதிது புதிதாக பல நுண்ணுயிர்களை கண்டறிந்து, ஆராய்ந்து வருகிறார்கள். ஆழ்கடலடிகளிலும், பூமியிலிருந்து சுமார் அரைக் கிலோமீட்டருக்கும் மேலான இடங்களிலும் நாம் சரியாக ஆராயவில்லை! நம் கண்ணுக்குத் தெரியும் வாழ்க்கை முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் இவை வாழ்கின்றன," என்று ஆச்சரியப் படுகிறார்!

சுரங்களின் வெடிப்புகளுக்குள் தண்ணீர் விட்டு, சுமார் 54 நாட்களாக சேமித்த பலதரப்பட்ட தண்ணீர் மாதிரிகளை சேர்த்து ஆராய்ந்ததில், இக்கிருமிகள் கண்களில் பட்டுள்ளன! நாட்கள் அதிகமாக, அதிகமாக, இவை நிறம் மாறுகின்றனவா, உயிர்வாழ்கின்றனவா, உருமாற்றம் செய்கின்றனவா, என்றெல்லாம் ஆராய்ந்தனர்.

அதேபோல் நாட்கள் அதிகமான, சுரங்கத்து நீரையும், அதன் மூலப் பொருட்களின் ரசாயனக் கலவையையும் ஆராய்ந்தனர். அந்த நீர் அணுக்களை சிதைத்து (FRACTIONING) பார்க்கையில், அவை உயிரியல் கலவையால் உருவாகாமல், யுரேனியம் உள்ள பாறைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால், சிதறுபட்ட நீர்திவலைகளால் உருவானதை கண்டறிந்தனர்!

அதிக சக்திவாய்ந்த டீ.என்.ஏ. நுண்ணுயிர் சோதனை செய்தபோது, அந்த பாக்டீரியாவிலேயே, பல வகை இருந்தது தெரிய வந்தாலும், அதிகபட்சமாக, ·பிர்மிக்யூட்ஸ் எனும் நீராவியிலுருவாகும் பாக்டீரிய இனமே அதிகமாகக் காணப்பட்டது! இந்த கால அவகாச சோதனையால், இந்த பாக்டீரியாக்கள் நிலப்பரப்பிலுல்ள ஏனைய பாக்டீரியாக்களிருந்து சுமார் 30 லட்சம் ஆண்டுகளிலிருந்து, 25 லட்சமாண்டுகளுக்கு முன்னரேயே பிரிந்து, "என் வழித் தனிவழி" என்று பூமிக்கடியில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கபட்டது!

இவை வாழும் பாறைகள் சுமார் 270 லட்சம் ஆண்டுகள் முதுமையானவை! எப்படி, பூமியின் மேற்பரப்பிலிருந்த இந்த பாக்டீரியாக்கள், பல லட்சம் ஆண்டிகளுக்கு முன்பே, பிரிந்து, இப்படி பூமிக்கடியில் உயிர் வாழ்ந்து வந்துள்ளது, என்பதே, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது!

26 September 2007

கணபதி பப்பா, மோரியா!!!

ரீ.ச் பவுண்டேஷன் மூலம் பழைய கோவில்களைத் தேடிப் போவேன் என்பது பலருக்குத் தெரியும். அப்படி நான் போன ஒரு கோவில், சென்னை மகாபலிபுரம் ரோட்டிலுள்ள கோவளம் கைலாசநாதர் கோவில். எதிர்பார்த்தபடியே, புராதனமான, உதாசீனப் படுத்தப்பட்ட கோவில். கோவிலை எதிர்த்துள்ள காலி இடத்தில் இஸ்லாமியருக்கான மயானத்தை கட்டிவிட்டதால், கோவிலைச் சேர்ந்தவர்கள் அதை மூடி சுவரெடுத்துவிட்டு, தெற்குப்பக்கமாய் ஒரு வாசல் வைத்து விட்டார்கள். அப்படி இப்படி என்று சில நல்லவர்கள் சேர்ந்து, ஒரு கால பூசை நடக்கிறது. விமானம் முழுதும் மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை நீக்க மரம் கொல்லி ரசாயனம் வரவழைத்துள்ளோம். நித்திய பூசை செய்ய கோவில் பூசாரியும் தேடி வருகிறோம். சனி, ஞாயிறுகளில், பஜனை அல்லது தேவாரப் பாடல் பாட வழிசெய்து வருகிறோம். கோவில் மதில்சுவர்களைச்சுற்றி மற்றவர்கள் மூன்று சுவர்கள் எழுப்பி, ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். குளத்தியும் அசுத்தப் படுத்தி வைத்துள்ளார்கள். அதை ரோட்டரி சங்கம் மூலம் தூர்வார முயற்சி செய்து வருகிறோம்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து போன ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரை கிணற்றிலோ,குளத்திலோ, கடலிலோ போடவேண்டும். நான் வேறு ஒரு பழைய கோவிலுக்குப் போய் தகவல்கள் சேகரிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அதிசயமாய் வீட்டில் எல்லாரும், எதோ, கோவளமாமே? கேரளத்துக் கோவளம் மாதிரி இல்லையென்றாலும், காலியாய் இருக்குமாமே? அங்கே போய் மண் பிள்ளையாரைக் கடலில் கரைத்துவிட்டு வருவோமா? என்று கேட்டார்கள்! எனக்கு அதிசயமாய் போகிவிட்டது! என்ன இது அந்த கைலாசநாதர் மீண்டும் அழைக்கிறார் என்று! அங்கே எனக்கு பரிச்சயமானவர் நாராயணன். மீனவ நண்பர். பக்கத்திலிருக்கும் டாஜ் நட்சத்திர ஹோட்டலில் வரும் வெளிநாட்டவர்கள், கடலில் நீந்த செல்வது வழக்கம். அப்போது கடலில் தத்தளிப்பவர்களை காப்பற்றுவது இவரது வேலை! அப்படி கிட்டத்தட்ட 300 பேர்களுக்கு மேல் இவர் காப்பற்றியுள்ளார்! அதி ஒரு நாட்டு தூதரும் அடங்குவார்! மகிழ்ந்துபோய் பணமோ, பரிசோ தருபவர்களிடம், "எனக்காக எதுவும் செய்யவேண்டாம். என் கிராம பெண்களுக்கு காலைக் கடன் செய்ய இடமில்லை. கடற்கறையோரம் செல்வது சங்கடமான வேலை. எனவே, ஒரு கழிப்பிடம் கட்டிக் கொடுங்கள் என்று கேட்டும், பிள்ளைகளுக்கு கல்விக் கூடம், மற்றும் சுயவேலை வாய்ப்புக்காக சமுதாயக் கூடம் என்று பல கட்டிடங்களை கட்டி வாங்கியுள்ளார்! தனக்காக எல்லாம் கேட்டும் உலகத்தில், தன் ஊருக்காக இவர் கேட்க, மனமகிழ்ந்து செய்வோரும், அதிகமாகவே இவர்களுக்கு செய்ய முன் வருகின்றனர். கைலாசநாதர் கோவிலையும் இவரே பராமரித்து வருகிறார். விவேகானந்த பக்தரான இவர், கோவிலை செப்பனிட முனைந்துள்ளார். கட்டாயம் இந்த சமூக நலக் காவலரோடு, எங்கள் ரீ.ச் இயக்கமும் கை கோர்த்து, கோவிலிலேயே, மூலிகைத் தோட்டம், கல்விக் கூடம், மற்றும் மருத்துவர் வருகை போன்றவற்றையும் நாங்கள் செய்ய முயல்கிறோம்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் என் குடும்ப சகிதமாய் அங்கே வருகிறேன் என்றதும் சந்தோஷமாய் வரச்சொன்ன நாராயணன், எங்களை கடலுக்கருகில் கூட்டிக் கொண்டு பொய் விநாயகர் சிலைகளை கடலில் போட உதவினார். என் நண்பர் ராஜன் கணேஷ் கோவில் செலவுக்காக பலரிடம் சேர்த்த பணத்தை அவரிடம் குடுத்தேன். மனமகிழ்ந்த அவர், கட்டாயம் வார பிரார்த்தனையை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.

கடல் அன்று கொஞ்சம் ஆக்ரோஷமாய் இருந்தது. அதனால், அருகில் தேங்கிய நீரில், படகை விட்டு, எங்கள் அண்ணன் மகனின் படகு சவாரி ஆசையையும் தீர்த்து வைத்தார்.

சரி, பிள்ளையார்படத்தைப் பாருங்கள்! அதை செய்தது அடியேந்தான். கடலில் சேர்க்கையில் மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது, எதோ நம் பிள்ளையை நாம் வெளியூருக்கு அனுப்புவது போல்!

பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் குழந்தைகளை அழைத்து ஒரு நண்பர் வீட்டில், நிறைய களிமண் கொடுத்து அவரவரிஷ்டம் போல் பிள்ளையார் பிடிக்கச் சொன்னார்கள்! தெரியாத் தனமாய் நிறைய்ய்ய்ய்ய மண் வாங்கிவிட்டார்கள்! என் அண்ணனும், இதுக்கு எதுக்கு கவலைப் படறீங்க? கொஞ்சம் என் கையில் குடுங்க, என் தம்பி நல்லாவே சிலை செய்வான் என்று சொல்லி, ஒரு அரை சாக்கு மண்ணோடு வீடு வந்து சேர்ந்தார்! முதலில், திண்டில் சாய்ந்தபடி, புது போஸாக இருக்கட்டுமே என்று குட்டியாய் ஒன்று செய்து முடித்தேன். 11 மணிக்கு பார்த்த என் அம்மா, "அட, என்னடா இது? நிறைய மாலைகள் வாங்கி வெச்சுருக்கேன். நல்லா பெரிய பிள்ளையாராப் பண்ணுடா!," என்று 'அன்பு'க் கட்டளை இடவே, ஆரம்பித்தது இரண்டாம் பிள்ளையார் சிலை செய்தல்! நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! நல்லா இருந்தால், "கணபதி பப்பா, மோரியா, கணபதி பப்பா, லவ்கரியா", என்று ஜோராக ஒரு முறை சொல்லி கூவி அழையுங்கள்! மராட்டியர்கள் அப்படித்தான் கடலில் போடும்போது கூவுவார்கள் (கணபதியே, திரும்பிவா, சீக்கிரமாய் வா, என்று அர்த்தம்). என்ன கூவிட்டீங்களா? எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பிள்ளையாரை எடுத்துக் கொண்டு கிளம்புகையில் அவரை தலையில் வைத்துக் கொண்டு, கணபதி பப்பா...கூவினார்கள். என் பெண் தன் சைசுக்குத் தகுந்த மாதிரி, பிள்ளையாரின் வாகனமான 'எலி' யாரை தலையில் எடுத்து வைத்துக் கொண்டாள்! சும்மா அதிருதுல்ல?

04 September 2007

ஆத்ம விசாரம்!

பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகத்தினருக்கு ஒரு ஆத்ம விசாரம்!
அன்புள்ள தினசரி, நாளிதழ்கள், வார, மாத பத்திரிகை மற்றும் தொலைகாட்சி சானல் உறுப்பினர்களுக்கு, சற்றே சிந்தித்துப் பாருங்கள்!


நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கையிலேயே அனந்தநாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மேஜர்.மனீஷ் பிதாம்பரேவின் தகனம், ராணுவ மரியாதைகளுடன் நடந்து முடிந்திருக்கும்.


சமீபத்தில் 'சஞ்சய் தத் ஜாமீனில் விடுதலை' என்பதை முதல் பக்க செய்தியாகவும், தொலைக் காட்சியிலோ, நாள் முழுவதும், கிளிப் பிள்ளையின் வரட்டு செய்தியாகவும், பலமுறை வந்திருக்கும். மற்றும், வெறும் 'முன்னா', தான், 'பாய்' இல்லை' (குழந்தை, குண்டர் இல்லை எனும் பொருள் பட), '13 ஆண்டுகளின் வனவாசம் முடிகிறது?', துப்பாக்கி வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டு இருந்தாலும், தடா குற்றம் ரத்து," என்றெல்லாம் செய்திகளை நாள் முழுதும், ஏன் வாரக் கணக்காக காட்டிக் கொண்டிருந்தீர்களே? அதற்கு மகுடம் வைத்தார்போல், சல்மான் கான் (மானைச் சுட்ட குற்றத்துக்காக கோர்ட் வாசல் மிதித்த அதே சல்மான் கான் தான்!), "சஞ்சய் மிகவும் நல்லவர்; அவர் பரிசுத்தமாக வெளியே வருவார், " என்றும், அமிதாப் போன்றோர், " தத் குடும்பமும் நாங்களும் பால்ய காலத்திய நண்பர்கள், சஞ்சய் நல்ல பிள்ளை; அவர் என் மகன் அபிஷேக்கிற்கு அண்ணன் போல,"என்று சொல்வதையும், அவர் சகோதரியும் எம்.பி யுமான ப்ரியா தத், "நாங்கள் இன்று நிம்மதியாக தூங்கலாம்; இச்செய்தி மிகப்பெரிய விடிவு," என்றெல்லாம் பேசியதை மீண்டும் மீண்டும் செய்திகளாக்கினீர்களே?

அதே நேரத்தில், மற்றொரு சானலில், ஷாருக்கானா, அமிதாபா, யார் 'கோன் பனேகா க்ரோர்பதி' யை நன்கு நடத்தினார்கள் என்பதையும், க்ரேக் சாப்பல் இந்திய கிரிக்கெட் அணியை பற்றி விமர்சித்ததையும், இன்ன பிற அவலங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லிவந்தாலும், "சஞ்சய் தத்" பீனி·க்ஸ் பறவைபோல் மீண்டு வந்ததையே, அனேகமாக கிட்டத்தட்ட நாட்கள் கணக்காக தொடர்ந்து சளைக்காமல் காட்டிக்கொண்டிருந்தன!

எதேச்சையாக பி.பி.சி சானலைப் பார்க்கையில் தான், இந்த அதிர்ச்சிகரமான செய்தியை கண்டேன்! "சோஹல் பைசல்" எனும் முஜாஹிதீனின் பயங்கரவாதி, அனந்தநாகில், இந்திய ராணுவ மேஜர் ஒருவரின் நேரடி தாக்குதல் மற்றும் உயிர் தியாகத்தால், கொல்லப்பட்டான், எனும் செய்தி! அத்துடன் மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்!


நடுநிசியில் தூக்கம் வராமல், புரண்ட போது டீ.வி.யை சுவிட்சினால், அது, மீண்டும் "சஞ்சய் தத் (?!) மகிமை பாடிக்கொண்டிருந்தது! சஞ்சய் தத் எப்படி கோர்ட்டாரிடம், " நான் எனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவன்; என் மகள் அமெரிக்காவில் படிக்கிறாள், அவளுக்கு நான் தான் பணம் அனுப்ப வேண்டும், "என்றெல்லாம் மன்றாடியதை காட்டினார்கள்! அவர் தனது ராசியான நீல சட்டை அணிந்திருந்தது, எப்படி கோவில் கோவிலாக போய் ப்ரார்த்தனை செய்கிறார், என்றெல்லாம் விலாவாரியாக காண்பித்தார்கள்.
மும்பை குண்டு வழக்கின் குற்றவாளி, ஆயுதம் கடத்தியதற்கு சிறை சென்றவன், இன்று ஒரு பெரிய கதாநாயகன் போல் உலவி வருவதை வெட்கம் கெட்ட சானல்காரர்கள் காட்டிவருகிறார்கள்.ஆம், சஞ்சய் தத்துக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்;சரி. அவர் எந்த தீவிரவாத நடவடிக்கையும் செய்யவில்லை, ஏ.கே.47 ரக துப்பாக்கி வைத்திருந்தது பயங்கரவாதிகள் பாஷையில், "சிறு பிள்ளை பொம்மை", ஆம், அவர் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார், சரி. மறந்தேவிட்டேன், அவர், "காந்திகிரி செய்து, மகாத்மாவானார் (படத்தில்..!) எல்லாம் சரி.

மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது ரகசிய செய்தியாளர்களிடமிருந்து தீவிரவாதிகள் இருக்குமிடத்தைப் பற்றிய தகவல் கிடைத்ததுமே, நொடிப்பொழுதும் வீணாக்காமல், அவர்கள் கூடாரத்தை தாக்கி, ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவனான சோஹல் பைசலைக் கொன்றார். அந்த சண்டையில், தனது உயிரை கொன்றது எது தெரியுமா? தீவிரவாதிகளால் "பொம்மை" என்று கேலி செய்யப்படும் ஏ.கே.47 க்கிலிருந்து வந்த குண்டு ஒன்றுதான்! மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது மனைவியும், 18 மாதமேயான மகளும் இருக்கின்றனர்! அவர் ஒருபோதும், "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்," என்று தயங்கவில்லை. அவர் தனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் என்று யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் மரணத்தையோ, அல்லது, கொடி போர்த்தி அஞ்சலி செய்த காட்சியையோ, எந்த சானலும் நேரடி ஒலிபரப்பவில்லை! காரணம், ஒரு முன்னாள் போதை பழக்கத்தினன், குண்டு வெடிப்புக்கு சம்பந்தமுள்ள குற்றவாளி, எம்.பி, தந்தை, எம்.பி சகோதரி கொண்ட, 50 கோடி சொத்து கொண்ட, பணக்கார மகன்கள் வயசில் செய்யும் குறும்பு அதிகமாக துப்பாக்கி ஒளித்து விளையாடிய, காந்தி பேச்சை கேட்பதுபோல் (காசு வாங்கிக் கொண்டுதான்) நடித்த ஒரு மகா, மகா புருஷனான சஞ்சய்தத் மகராஜை பின் துரத்தி படம் எடுப்பதில் எல்லா சானல்காரர்களும் பிஸியாக இருந்துவிட்டார்கள்! அதனால்தான் மனீஷ் போன்ற 'சாதாரண' ராணுவ தியாகிகளை படமெடுக்கவில்லை! ஆனால், மறுபக்கம், இங்கே சஞ்சய் தத் விஷயத்திலோ, தடா சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி அவரை குற்றவாளியை தப்பிக்கவைத்தோம்," என்று ஒரு பெரிய பணக் கும்பல் சந்தோஷப்பட்டு, மிட்டாய் வழங்கிக் கொண்டிருந்தது! அவர் தாய் தந்தையர், வானத்திலிருந்து அவர்களது "மகனை" வாழ்த்திக்கொண்டிருப்பார்கள், என்ற ரன்னிங் கமெண்டரி வேறு! தூ!


மேஜர் மனீஷின் பெற்றோர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்; தியாகி மகனின் நினைவுகளுடன், அவர்தம் மனைவி மக்களுடன், ஒரு அற்ப பதக்கமும், பென்ஷனும்பெற்றுக்கொண்டு! அந்த பெண்குழந்தை இனி அவளது தந்தையை நேரில் காண முடியாது!


இதைப் படிக்கும் ஒலி, ஒளி காட்சியாளர்கள், இனியேனும் மனசாட்சியை மாட்டிக்கொண்டு, பின்னர் காமெராவையும் மைக்கையும் கையிலெடுத்தால் நல்லது!நம் நாட்டு ராணுவ அதிகாரியின் தியாகம் கேவலம் ஒரு வெளிநாட்டு சானல் மூலம் நம் மக்களுக்கு தெரியவருகிறது! இந்திய தொலைக் காட்சியாளர்களே விழித்துக் கொள்வீர்களா?


(இது எனது மின்னஞ்சலில் வந்த ஒரு உண்மை செய்தியின் தமிழாக்கம், படித்து, ஒருநாள் முழுதும் உணவு உள்ளே செல்லவில்லை. நல்லவேளை எங்கள் வீட்டில் கடந்த 5 வருடங்களாக, தொ(ல்) லைக் காட்சி பெட்டியை ஒழித்துக் கட்டிவிட்டோம்! இந்த கண்ராவியை எல்லாம் பார்க்காமலிருக்க.

மனீஷ் போல் எத்தனையோ தியாகிகளின் வாழ்க்கை நம் கண்களுக்கு காட்டப் படுவதேயில்லை. இதில் புதிதாக இன்னும் பல சானல்கள் வேறு! ஹ¥ம்!

10 August 2007

உழவாரப் பணி-Heritage Wardens!

உழவாரப் பணி செய்யும் அன்பர்களுக்கான பணிவிளக்கப் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கத்தை REACH FOUNDATION, 5-8-2007 ஞாயிற்றுக்கிழமை, சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோடில் உள்ள தத்வலோகா கலையரங்கத்தில் நடத்தியது.

உழவாரப்பணி செய்யும் அன்பர்களுக்கு சந்திரசேகரன் அளித்த முன்னுரை:-

Rural Education And Conservation of Heritage என்பதன் சுருக்கம் தான் REACH. கிராம மக்களுக்கு கலாச்சாரமும், முன்னோர் விட்டுச் சென்ற பல செல்வங்களைப் பற்றிய பகுத்தறிவை ஊட்டவும், அந்த கலாச்சாரச் சின்னங்களான புராதன கோவில்கள், மண்டபங்கள், முற்றம் வைத்த வீடுகள், கல்வெட்டுக்கள், மற்றும் பழங்கலைகளைப் போற்றி பாதுகாக்கவும், தோன்றியது REACH.


கடந்த June 16 ம் நாள், எங்கள் இணையதளமான conserveheritage.org யின் திறப்பு விழாவும், இணையத்தின் மூலம் கல்வெட்டுப் படிப்பை நடத்தத் துவக்க விழாவும், ஆளுநர் மாளிகையில், திரு. சுர்ஜித் சிங் பர்னாலா துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 40,000 கோவில்கள் சிதிலமடைந்து உள்ளதாக தகவல்கள் உள்ளன. எங்கே அவை? யார் அவற்றை கண்டுபிடித்து சொல்வார்கள்? யாரிடம் சொல்வார்கள்? சொல்லி என்ன பயன்? ஒரே தொகுப்பாக, வணமாக, கோவில்கள் தொகுப்பு மஞ்சரியாக, இணையதளத்தில் இந்த செய்தி உலகம் முழுதும் போனால்தான், மண்ணின் மைந்தர்கள் பலர், அவற்றை சீர் செய்ய பொருளுதவியோடும், அருளுதவியோடும் ஓடிவருவர். அரசாங்கத்துக்கும், பொது மக்களுக்கும் இந்த பிரச்னையின் ஆழம் தெரியும். அதை நோக்கித்தான் இந்த முதல் படி.


மாணிக்கவாசகர் ஆரம்பித்து, ஆண்டாண்டு காலமாய் இன்றும் தொடரும் கோவில்களை சுத்தம் செய்துவரும் மாபெரும் பணியை ஆற்றிவரும் அன்பார்ந்த அடியார் நீங்கள். உங்களுடன், அடியார்க்கு அடியாராய் இன்று அறிவியலும், தொழில்நுட்பமும், வரலாறும் கைகோர்க்கக் காத்திருக்கின்றன! ஆம், REACH என்பதற்கு போய்ச் சேருதல் என்றும் பொருள் கொள்ளலாம்.


அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், உங்கள், ஆர்வம், ஆக்கம் மற்றும் செயல்களோடு சேர்த்து கோவில்களை செப்பனிட என்ன செய்ய வேண்டும் என ஒருசேர சிந்திக்கும் நன்னாள் இந்த பொன்னாள்!


நாம் சேர்க்கும் சிதிலமடைந்த கோவில்களை பற்றிய தொகுப்பு முதலில் வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும். தமிழகம் மட்டும் இப்படி என்றால், இந்தியா முழுதும் சுமார், 2 லட்சம் கோவில்கள் சிதிலமடைந்து போயுள்ளதாகச் சொல்கிறார்கள். நமது செயல்கள் பரந்து விரியும் தருணத்தில், நாம் தமிழகம் மட்டுமன்றி, பரதக் கண்டம், ஏன், இந்த உலகில் எங்கு நம் கலாசாரச் சின்னங்கள் சீரிழந்தாலும், அவற்றை சீர் செய்யும் பரந்த சிந்தனை கொள்ள வேண்டும். இதுவே REACH FOUNDATIONன் தொலை நோக்காகும்.

எங்கெல்லாம், பாழடைந்த கோவில்கள் உள்ளன எனும் தகவல் நம்மிடம், ஏன் அரசிடமும் இல்லை. அதேபோல், சீர்செய்யும் நல்லெண்ணம் இருந்தாலும், தவறான அணுகுமுறையால், பழங்கலைகள், ஆகம விஞ்ஞான வழிமுறைகள், செலவுகள் ஆகியவை நிலையில்லாமல் போய்விடுகின்றன. உழவாரப்பணி செய்பவர்களுக்குத் தான் தெரியும், எங்கெங்கே, பாழடைந்த கோவில்கள் உள்ளது என்று!

வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பழங்கட்டிடம் கட்டும் வல்லுநர்கள் ஆகியோரையும், இந்த உழவாரப்பணி செய்யும் அன்பர்களையும் ஒன்று சேர்த்தால், தகவல் பறிமாற்றம் செய்துகொள்ளலாம் எனும் ஆர்வத்தாலேயே, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

மிக நல்ல வரவேற்பு! கன்யாகுமரி, திருச்செந்தூர், முதல் கும்பகோணம், திருவண்ணாமலை, திருநல்வேலி, தரங்கம்பாடி வரை, ஏறத்தாழ 180 பேர் கலந்து கொண்டனர்!

குத்துவிளக்கு ஏற்றி விழா ஆரம்பமான பின்னர், "எல்லாரும் வாருங்கள், எல்லாரும் சேருங்கள், ஈசனை அன்பு செய்வோம்," எனும் சுத்தானந்த பாரதியின் பாடலை இறைவணக்கமாகப் பாடினார், மயிலை ஓதுவார், திரு. ஸற்குருநாதன்.

REACHன் தலைவர் தொல்பொருள் ஆய்வாளர் தியாக. சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். கேரள அரசின் முன்னாள் தொல்பொருள் துறை இயக்குநராய் இருந்தவரும், இந்திய தொல்பொருள் துறையில் தலைவராக இருந்தபோது, சமீபத்து சுனாமித் தாக்குதலில், மகாபலிபுரம் செல்லும் சாலையிலுள்ள புலிக்குகைக்கு அருகே வெளிவந்த சங்க காலத்து முருகன் கோவிலை மீட்டவரும், 4000 வருடங்களுக்கு முன்பே தமிழ் பிராம்மி எழுத்துக்கள் இருந்ததை திச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியால் கண்டெடுத்தவரும், தஞ்சை கோவில் கோபுரத்தினுள்ளே இருந்த சோழர் கால fresco ஓவியங்களையும், அதன் மேல் இருந்த நாயக்கர் கால ஓவியங்களையும் ஒரு சேர மீட்டு, வெளியே பிரகாரத்தில் நிரந்தரமாக அவற்றை போலவே அதே அளவில் ஒரு கண்காட்சியையும் ஏற்படுத்தித் தந்தவரும், சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டம் பெற்றவரும், இன்னும் எத்தனையோ தொல்பொருளாராய்ச்சிகளை செய்தவரும், செய்து வருபவர் REACH foundationனின் தலைவர் டாக்டர்.திரு. தியாக.சத்தியமூர்த்தி.


சுண்ணாம்பு, செங்கல், அந்த இடத்திலேயே கிடைக்கும் கற்கள் போன்றவற்றாலேயே, அழகான கோவில்களை சீர்செய்துவிடமுடியும் என்றும், தென்னகத்தில் மட்டும், ஒரு கிராமத்துக்கு என்று 3 கோவில்களாவது இருக்கும்; எனவே, சுமார் 40,000 முதல் 50,000 பாழடைந்த கோவில்களை சீர் செய்யும் மாபெறும் பணி நமக்கு உள்ளது என்றும் பேசினார்.


விழாவின் சிறப்பு விருந்தினரான சுற்றுலாத் துறை செயலர் திரு. ஸ்ரீதரன் IAS அவர்கள், "கடவுளின் சொந்த நாடு என்று கேரளத்தை மட்டுமின்றி, மொத்த நாட்டையே சொல்லலாம், அத்தனை கோவில்கள் உள்ளவை நம் நாடு," என்று பேசினார்.

தத்வலோகா அரங்கத்தை இலவசமாக குடுத்துதவிய அதன் தலைவர் திரு. ராமச்சந்திரன், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனது மண்டபத்தை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
உழவாரப்பணி குழுக்களின் சார்பாக பேசிய திரு.கோமல். வி.சேகர், செப்பனிடும் போது, மக்கள் படும் அவஸ்தைகளையும், பாழடைந்த கோவில்களின் பணியாளர்கள், மற்றும் அர்ச்சகர்கள் படும் அல்லல்களையும், பணக்கஷ்டங்களையும் உணர்ச்சி பூர்வமாக விவரித்தார்.
ரீச் நிர்வாகிகள் H. சந்திரசேகரும், ஹரிஹரனும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

தலைமையுரை ஆற்றிய சிலை மீட்ட செம்மல், கலைமாமணி டாக்டர்.திரு.நாகசுவாமி பேசுகையில், "தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி எனும் கூற்று, வெறும் புகழ்ச்சி அல்ல, நிஜ கூற்றே! என்று சரித்திர ஆதாரங்களோடு விளக்கினார். உதாரணமாக, 2500 வருடங்களுக்கு முன்னால் செய்த கிரேக்க நாணயத்தில், ஒரு புரம் பலராமனின் உருவமும், மறு பக்கம் கிருஷ்ணனின் முகமும் பதிந்திருந்ததாம்! தரங்கம்பாடி மாசிலாமணி நாதர் கோவிலை பற்றிய ஆவணப் படத்தை காட்டி, சீர் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்றும் அறிவுரை பகர்ந்தார்.

தமிழக தொல்பொருள் ஆய்வுக்கழகத்தலைவராய் இருந்தவரும், பன்னாட்டிலும் இன்னாட்டுப் பெருமையை இன்றும் பறை சாற்றி வருபவர் டாக்டர். திரு. நாகசுவாமி. சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். புகழூரில், முதல் நூற்றாண்டுச் சேரர் கல்வெட்டுக்கள், கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சோழர்கள் அரண்மனை, மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடியிலுள்ள டச்சுக் கோட்டை, எட்டயபுரத்திலுள்ள சுப்ரமணிய பாரதியார் பிறந்த வீடு, பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனின் அரண்மனை இருந்த இடம், இப்படி எத்தனையோ பொக்கிஷங்களை நமக்கு மீட்டு நாட்டுக்கு அர்ப்பணித்தவர். பூம்புஹாரில் முதன் முதலாக கடலுக்கடியில் தொல்பொருள் ஆராய்ச்சியை செய்தவரும் திரு. நாகசுவாமி ஆவார்கள். புகழ் பெற்ற லண்டனிலிருந்து நடராஜர் சிலையை மீட்க, இந்தியாவிலிருந்து முக்கிய சாட்சிவல்லுநராக டாக்டர். நாகசுவாமி சென்ற போது, அவரது திறனை, லண்டன் நீதிபதியே வியந்து மெச்சியுள்ளார். கரூர், ஆலங்குளம், கொர்க்கை, போன்ற இடஙளில் தொல்பொருள் ஆராய்ச்சி மேற்கொண்டு, பல அரிய செய்திகளை தந்தவரும், இவரே! தமிழகத்தில் பல இடங்களில் அருங்காட்சியகம் அமைத்தவரும், சிதம்பரத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்.கபிலா வாத்சாயனருடன் சேர்ந்து, நாட்யாஞ்சலி விழாவைத் தோற்றுவித்தவரும், தமிழகத்தில் முதலில் கல்வெட்டு படிக்கும் துறையை ஆரம்பித்தவரும், டாக்டர்.நாகசுவாமியே! சரித்திர புத்தகங்கள், நாடகங்கள் என சுமார் 150 படைப்புகளுக்கு இவர் ஆசிரியர். BBC உட்பட, இன்றும் பல வெளிநாட்டு வானொலி மற்றும் தொலைகாட்சியினர் இவரது பேட்டிகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த விழாவிற்கு அவரை அழைக்கச் சென்றபோது, தரங்கம்பாடி கோவிலைப்பற்றியும், சமீபத்தில் அவர் சென்று வந்த அயோத்தி ராமர் கோவிலைப் பற்றியும், ஒரு சிறு குழந்தையின் குதூகலத்துடனும், அதே சமயம் கருத்து செரித்த, முதிர்ந்த விஷயங்களை சொன்னது இன்றும் நினைவில் நிற்கிறது. இத்தனை பெருமைக்கு உரியவர், "சிலை மீட்ட செம்மல்", கலைமாமணி. டாக்டர். நாகசாமி அவர்கள்.

தொல்பொருள் ஆய்வாளர் ஸ்ரீராமன் தனது தொகுப்பான, "பழங்கலை கட்டிடங்களை மீட்க, பொதுமக்களின் பங்கு," என்பதை அழகான Power Point ஆவணமாக காண்பித்து உரை நிகழத்தினார்.

பழங்கோவில்களை சீர் செய்யும் போது செய்யக் கூடாதவை/ செய்ய வேண்டியவை:

· கூரையை மழைநீர் வராமலிருக்க பூசுகிறேன் என்று அதிக தளங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிப் பூசாதீர்கள்! அதிக எடை ஏறி, மொத்த தூண்கள் சரிந்துவிடலாம்!
· அங்கு கிடைக்கப் பெறும் கற்களை வைத்தே சீர்செய்யலாம்.
· சிமெண்ட் உபயோகிக்காதீர்கள்
· சிறு செடிகள், கொடிகள், மரங்கள், விமானத்திலோ அல்லது வெறு எந்த பகுதியிலும் வளர விடாதீர்கள். உடனே, பிடுங்கி எறிந்துவிடுங்கள்.
· சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள். பூச்செடி, துளசி, வில்வம் போன்றவற்றை சுற்றுப்புரத்தில் வளர்ப்பதன் மூலம், தூய்மையாகவும் இருக்கும், அவை பூஜைக்கும் உதவும்.
· நீர் வரத்து உள்ள வழிகளை சீர்செய்யவும். அவை தண்ணீரை நேராக குளத்தில் சேர்த்துவிடும். இதன் மூலம், தரையினடியில் நீர் அதிகரிக்கும். என்றும் குளம் சுத்தமாக இருக்கும்.
· மழைகாலங்களில் மதில்சுவர் மற்றும் பழைய விமானங்கள் கோபுரங்களின் மேல் ஏற முயலாதீர்கள். சரிந்து விழ, வாய்ப்புகள் உண்டு.
· அக்ரலிக், காவி, எனாமல் பெயிண்டுகளை உபயோகிக்காதீர்கள். அவை கட்டிடத்தை பாழ்படுத்திவிடும். சுற்றுப்புற சூழலுக்கும் பாதுகாப்பற்றது.
விழாவை தொகுத்து வழங்கிய சந்திரசேகரன் நல்ல தமிழில் பேசினார். மேற்கோள்கள் காட்டி, பேசியது நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரீச் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. சுந்தர் பரத்வாஜ் நன்றி கூர, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

இனி வரும் நாட்களில், இந்த உழவாரப்பணியினரைக் கொண்டே, அந்தந்த ஊரிலுள்ள கோவில்களை சீர் செய்ய முயற்சிப்பது. விபூதி, குங்குமம், கோவில்களுக்கு வேண்டிய பொருட்கள் தயார் செய்வதன் மூலம் சுயவேலை வாய்ப்பு குழுக்கள், அவர்தம் குழந்தைகளுக்கு இலவசமாக ஓராசியர் பள்ளி, மற்றும் மூலிகை, இயற்கை உர காய்கறிகள் போன்றவற்றை பயிரிட பயிற்சி இவற்றை போதித்து, கோவில், கோவிலைச் சார்ந்த மக்கள் எனும் நல்லுலகம் படைப்பதே REACH Foundation ன் இளைஞர்கள் குழுவின் தொலை நோக்காகும்.

17 July 2007

கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி - விழா

கந்தர்வன் பெயரில் ஒரு பரிசு அல்லது அங்கீகாரம் என்றதும், நமக்கு ஒரு ஆவல் ஏற்படுகிறது அல்லவா? அதுதான் எனக்கும் ஏற்பட்டது. 07-07-07 அன்று புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய விழாவில், கந்தர்வன் பெயரில் நடத்திய சிறுகதை போட்டியில் எனது கதை "கருப்பய்யா" பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், அடியேனையும் அழைத்திருந்தார்கள். கதை இங்கே!


கந்தர்வன் @ நாகலிங்கம், அரசு ஊழியர். கம்யூனிச சிந்தனை கொண்ட தமிழ் அறிஞர். கதை கவிதை எழுதி, மக்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர். முக்கியமாக புது எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தி, முன்னே கொண்டு வருபவர். எந்த விழா நடந்தாலும், அவர் மேடையில் வரமாட்டார். அருகிலுள்ள வேப்பமரத்து நிழலில், இளைஞர்கள் புடை சூழ, பேசிக்கொண்டிருப்பார்.
அவரது பெயரில் நடந்த இந்த விழாவின் ஒரே ஆறுதல், அவரது குடும்பத்தார் அதில் பங்கு கொண்டு, சிறுகதைகளில் முதல் மூன்று கதைகளுக்கு உண்டான பரிசுத் தொகையை அவர்களே தந்ததுதான். மற்றபடி, கந்தர்வன் அங்கு இருந்திருந்தால், என்னவெல்லாம் செய்ய மாட்டாரோ, அவை அமோக மாக நடந்தது தான் மனதுக்கு வருத்தம் தருவதாக அமைந்திருந்தது.


1) நேரம் கடைபிடிக்காமை. : கருத்தரங்கம் காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை என்று அறிவித்துவிட்டு, பகல் 12.40 மணிக்குத்தான் தொடங்கியது. மாலை கிட்டத்தட்ட 5.00 மணிவரை இழுத்துக்கொண்டு போனது.


2) மேலாண்மை பொன்னுச்சாமி முதலில் பேசவேண்டியதுதான் நிகழ்ச்சியில் முக்கிய முதல் நிகழ்வு. எல்லாரையும் உட்கார வைக்கவே, இழுத்தடித்து, கடைசியில் அவரை பேச வைத்து, மற்றவர்கள் பேசுவதையும், கம்யூனிச சிந்தனை கொண்ட பாடகர்கள் பாடுவதையும் நிர்பந்தத்தால் கேட்க வேண்டியதையும் என்ன என்று சொல்வது?


3) அதேபோல், மாலை கலை நிகழ்ச்சி, சிறுகதை போட்டியில் தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர்களை கவுரவப் படுத்தவேண்டிய நிகழ்ச்சி. தெரியாத்தனமாக, ஜெயகாந்தனும், கவிஞர் நா. முத்துகுமார் இன்ன பிற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பல மணி நேரமாக காத்திருந்து, வேண்டாத கலை (கொலை) நிகழ்ச்சியையெல்லாம் பார்க்கவேண்டிய துற்பாக்கிய சாலிகள் ஆயினர்.


கடைசியில் நன்கு பேசி இருக்க வேண்டிய ஜெயகாந்தன் ரத்தின சுருக்கமாக் பேசிவிட்டு போய்விட்டார். நா.முத்துக் குமார், தனது கவியுலக ஆசானாக கந்தர்வனை போற்றி வணங்குவது, அவரது உணர்ச்சிபூர்வமான பேச்சினிலேயே தெரிந்தது. அதனால், கால தாமதமான நிகழ்வுகளை பொறுத்து தனது அஞ்சலியை தெரிவித்துவிட்டு, அன்னாரது குடும்பத்தாரின் அருகிலேயே அமர்ந்திருந்து பேசிவிட்டுப் போனார்.


அந்த சிறுகதைப் போட்டியின் கதைகளுள் ஒரு கதையாக எனது கதை தேர்வானதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால், கேட்பாரற்று அங்கே சுற்றி திரிந்திருந்து, கடைசியில் ஜெயகாந்தன் கைகளிலோ, அல்லது வேறு விதமாகவோ அங்கீகாரம் கிடைக்கப்படாமல், பின்னிரவு, 12.30 மணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றாலும், அவமானமாவது செய்யாமலாவது இருக்கலாமில்லையா எனக்கேட்டு வற்புறுத்தி வெளியான சிறுகதை புத்தகத்தை கேட்டு வாங்கி வந்தேன்.


கந்தர்வன் எனும் பேருக்குள்ள மரியாதை, புது எழுத்தாளர்களை அவர் எப்படி உற்சாகப் படுத்துவார் எனும் சிந்தனை என்னுள் மீண்டும் எழுவதனாலேயே, நான் எனக்கு நேர்ந்த இந்த விஷயத்தை மனதுள் பூட்டி வைத்து, வெளியேறினேன்.


வருகையில், வாசலருகே உள்ள வேப்பமரத்துனருகே யாரோ அழைப்பது போலிருந்தது. போனேன். என்ன ஆச்சரியம்! கந்தர்வன் தான்! கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தேன். சந்தேகமேயில்லை அவர்தான்! "என்ன நீ சொன்னமாதிரி நான் இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்க இந்த மரத்தடியில் தானே இருப்பேன்.


மேடையில் எனக்கென்ன வேலை? என் பேரைச்சொல்லி அவர்கள் காலம் தாழ்த்தி நடத்து கூத்து மனதுக்கு வேதனையை தருகிறது. இங்குதான், ஜெயகாந்தனையும், அன்பன் முத்துகுமாரையும் சந்தித்து, "இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்த முறை எல்லாம் நேரத்தில் நடக்கும்" என்று கூர, அவர்களும், "கந்தர்வா, உன் காந்த சக்திக்கு நாங்கள் இழுபட்டே இங்கு வந்தோம். இனியும் வருவோம்" எனச் சொல்லி சென்றனர். நான் எதிர்ப்பார்த்த கதையின் ஆசிரியன் நீ. இளைஞன் நீ. மனதில் எதையும் கொள்ளவேண்டாம்," என்றார்!


"அட, நான் புதியவன். உங்கள் பெயர் கொண்ட மோதிரக்கை குட்டு பெற்றுவிட்டேன். இனி நான் எழுத்துப்பணியை என்றும் தொடர்வேன். கந்தர்வனுக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் நடக்கும் போட்டிகளிலும் பங்கு பெறுவேன். என்பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. கதை புத்தகத்தின் பெயர் "எச்சங்கள்"; யார் எச்சம்? மிச்சம்? கந்தர்வனுடையது. எனவே, நான் எந்த பிழைகளையும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும், நான் உண்மையையே சுவாசிக்கும் ஒரு பத்திரிகையாளன், கதாசிரியன். எனவேதான், இதை பதிவு செய்யாமல் எனது மனம் ஆறாது," என்றேன். அவரும், " அப்படியே நான் எதிர்பார்க்கும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமுள்ள இளைஞனாக இருக்கிறாய், மகிழ்ச்சி! மனதுக்கு பட்டதை பட்டென சொல்லும் பாங்கு எனக்கு பிடித்திருக்கிறது. மேடையில் ஏறிச் சொல்லாமல், மெதுவாக முத்து நிலவனிடம் நீ போய் சொன்னதையும் நான் பார்த்தேன். அதுதான் அழகு. மீண்டும் சந்திப்போம்," என்றார். இனி வரும் காலங்களில் அந்த வேப்பமர சந்திப்பு நிகழும் நாளை எதிர்நோக்கி மன நிறைவோடு நான் புதுக் கோட்டையை விட்டு கிளம்பினேன்.

05 April 2007

விளம்பர படம் -முதல் முயற்சி!

http://www.youtube.com/watch?v=7ReF2sHuvRw

திரைப்படம் எடுத்தலில் என்னுடைய கன்னி முயற்சி. தலைப்பு - மரபு சார் இந்தியா (Generic India)
கொடுத்த நேரம்: 1 நிமிடம். கோவிலுக்கு வரும் பெண் குழந்தை தானாக, நாட்டிய சிற்பங்களைக் கண்டு, ஆட முயல்கிறாள். அதிசயங்கள் நிறைந்த நம் பாரம்பரியத்தை உணர்த்தும் சிறு முயற்சி. பரதநாட்டியம், நமது பெண்கள் தானாக கற்றுக் கொள்தல், கோவில் (கதை தளம்) மற்றும் சிற்பங்கள் என இந்த படப்பிடிப்பில் யாவும் பாரம்பரியமிக்கவையே!

08 February 2007

நல்ல ஹெல்மெட் - கண்டுபிடிப்பது எப்படி?


இன்றைய தினசரிகளில் வந்த செய்தி - தலை கவசத்தை கட்டாயமாக்க ஆலோசனை!


சென்னை வலை பதிவர் சந்திப்பின் போது, சில நண்பர்கள் கேட்ட கேள்வி - நல்ல தலை கவசம் - ஹெல்மட் தரம் அறிவது எப்படி? என்பதே!
அவர்களுக்குக் கூறிய தகவல்கள், மற்றவருக்கும் உபயோகமாய் இருக்க இப்பதிவு.


மூல பொருட்களை தெரிந்து கொள்ளுங்கள் :

ஃபைபர் க்ளாஸ் எனப்படும் கண்ணாடி நார்களை ஒன்றாக இணைக்க, ஒரு பைண்டர் ரெசின் (அசின் எப்படி விஜயோட ஒட்டிகிறாரோ, அதே மாதிரி பிசின் போல ஒரு ஈரப் பதம் உள்ள ப்ளாஸ்டிக் திரவம்). இதில் வெயிலில் மக்கிப்போகாமல் இருக்க ஒரு துளி யூ.வி ஸ்டெபிலைசர் ( UVStabilizer) மற்றும் ரெசினும் நாரும் சீக்கிரம் சேர்ந்து உறைந்து கெட்டியாக ஒரு செய்வினைவிரட்டி(Catalyst) ஒரு துளியும் சேர்த்து, கலந்து, தயாரிக்கின்றனர்.

ஹெல்மெட் வடிவிலுள்ள அச்சில் முதலில் ஒரு பூச்சு. அப்புறம் ஒரு பின்னிய கண்ணாடி நார் பூச்சு. மீண்டும் ஒரு கோட்டிங் ரெசின். இப்படியாக வேண்டிய அளவு தடிமன் கிடைக்க, பூச்சு மேல் பூச்சு பூசினால், அவை காய்ந்து, திடப் பொருளாகி, கிடைக்கும் வடிவமே ஹெல்மெட். இப்போது, கழுத்துப் பட்டி, அலங்கார ஸ்டிக்கர், மற்றும் உள்ளே தலையை ஒட்டிய பஞ்சு லைனிங், துணி லைனிங் இவை அனைத்தும் சேர்ந்து ஒரு Hல்மெட் உருவாகிறது. சரி, இதிலென்ன ப்ரச்னை என்கிறீர்களா?

கலப்படத்துக்கு பேர் போன டெல்லிக்காரர்கள் இந்த இழையிலும், ரெசினிலும், கலப்படம் செய்ய ஆரம்பித்து, வழக்கமாய் ரோட்டோரம் விற்கப்படும் ஹெல்மெட்டுகளை தயாரிக்க ஆரம்பித்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் ஆகின்றன! முதலில் ரெசினை எடுத்து கொள்வோம். நல்ல பாலிஎஸ்டர் மற்றும் ஈபாக்ஸி ரெசின்களை உபயோகித்தால், அவை நல்ல இருகுத்தன்மை உள்ளவையாக இருக்கும். இவை தொழிற்சாலைகளில் பைப்புகள், மின் தாங்கிகள், கூரைகள் போன்றவை செய்ய உபயோகிக்கப் படுகின்றன. ஆனால், அதற்கு மாற்றாக, ஆமணக்கு போன்ற தாவரங்களில் இருந்தும், நீர் கலந்தும், கொஞ்சம் போல் பெயின்டில் உபயோகிக்கும் தின்னர் கலந்தும் செய்யப்படும் ரெசின்கள் நீர் போல் குறைந்த பசைத்தன்மை உள்ளதால், அதிக பரப்பளவில் பூசப்படும். உதாரணம்: நல்ல ரெசினால், சுமார் ஒரு சதுர அடி பூச முடியுமானால், இந்த கலப்பட ரெசினால், சுமார் நான்கு சதுர அடி பூசிவிட முடியும்! ஹெல்மெட் செய்பவர்க்கு ரெசின் செலவு குரையும். ஆனால், அணிபவர்க்கு? மிக மெலிய பூச்சு கொண்ட ரெசின் சீக்கிரம் மக்க ஆரம்பித்து, பொடிப் பொடியாக ஆரம்பிக்கும் (மேலே அடிக்கப்பட்டுள்ள பெயிண்டினால் கண்ணுக்குத் தெரியாத அளவுகளில்!).

அதேபோல், கண்ணடி இழைகளிலும், C க்ளாஸ், E க்ளாஸ் என, நல்ல தாங்கு சக்தி உள்ள பலவகை இழைகள் உள்ளன. அவற்றை விட மிக குறைந்த விலையில், தரக் கட்டுப்பாட்டில் தனியே ஒதுக்கப் பட்ட இழைகளும், சீன மார்க்கெட்டுகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் தரமற்ற இழைகளும் கொண்டு தயாரிப்பாளர்கள், தங்களது செலவுகளைக் குறைக்க இது போன்ற தரமற்ற மூலப் பொருட்களை வாங்கி ஹெல்மெட்டுகள் செய்கின்றனர். என்னய்யா இது, அதற்கு மேலேதான் ISI முத்திரை இருக்கிறதே என்றால், அதுவும் போலி! சும்மா ஒரு ISI முத்திரை போல் ஸ்க்ரீன் பிரின்டிங் செய்துவிட்டால், போலி ஹெல்மெட் தயார்!

அட, எப்படி இதை தெரிந்து கொள்வது?

1. விலை - நல்ல fஃபைபர் ஹெல்மெட் கட்டாயம் ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதைவிட கம்மியாக விற்பனைக்கு வந்தால், 2ஆம் சோதனையை மேற்கொள்ளவும் :-

2. முடிந்தால் உள்ளே தைக்கப் பட்டுள்ள துணியை விலக்கிப் பார்க்கவும். கரடு முரடாக இழைகள் தெரிந்தாலோ, அல்லது, இடை இடையே மண் துகள்கள் போல் தெரிந்தாலோ (ஆம்! மண் துகள்கள்தான்! எடையை கூட்ட அதிக ரெஸினை இழுக்காமல் இருக்க போலி ஹெல்மெட் தயாரிப்பவர்கள் மூலப் பொருளில் மண்ணைக் கூட சேர்ப்பார்கள்.) கட்டாயம் அது தரமானது அல்ல. வாங்காதீர்கள்.

3. எடை - தேங்காய் அல்ல ஹெல்மெட்! எடை அதிகமாக, அதிகமாக, தலையைக் காப்பாற்றும் (அடிவாங்கும்) சக்தி அதிகம் என்று நம்பாதீர்கள். நல்ல ஹெல்மெட் அதிகம் போனால் சுமார் 800 கிராமிலிருந்து, 2 கிலோவுக்கு மேல் எடை பெறாது.

இப்போது இந்த ரெஸின்+கண்ணாடி இழை ஹெல்மெட்டுக்களை விட இஞ்சக்க்ஷன் மோல்டிங் செய்யப்படும் மெலிதான ஆனால் வலுவான ஹெல்மெட்டுகள் கிடைக்கின்றன. இவற்றைப் பார்த்தாலே சொல்லிவிடலாம். மேலே பெயின்டிங் ஏதும் செய்திருக்கப் படாது. உள்ளே இழைகள் கைகளை நெருடாது; உள்ளே, வெளியே அதன் பளபளப்பும் மிருதுவான பரப்பும் ஒரே மாதிரியாக இருக்கும். குண்டு துளைக்க முடியாத Polycarbonate, வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட ரப்பர் கலந்த ABS ம் கலந்து மோல்டிங்க் செய்யப்பட்ட இந்த ஹெல்மெட்டுகள், சுமார் 2000 முதல் 3000 ரூபாய் வரையிலான விலைகளில் கிடைக்கின்றன! அதுதான் கனமும் குறைவு, பயமும் குறைவு! அதில் கலப்படம் செய்வதும் கஷ்டம். ஏனெனில், ஒரு மோல்டிங் அச்சு செய்ய குறைந்த பட்சம் 20 லட்சங்கள் வேண்டும். தரமான தயாரிப்பாளரே, அம்மாதிரியான அச்சுகளை செய்ய முடியும். கலப்படக் காரர்களுக்கு அவ்வளவு பணம் போட்டு செய்ய மனம் வராது. Steelbird, Studd, Protech போன்ற நிறுவனங்கள் தயாரிக்கும் ஹெல்மெட்டுகள் தரமானவை. அவர்களது நேரடி விற்பனை நிலையங்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் உள்ளன.

அரசாங்கம் கட்டாய ஹெல்மெட் அணியும் சட்டத்தை போடுமுன், முதலில், இம்மாதிரியான தகவல்களை நாளிதழ்களில் வெளியிட்டு, கலப்படக் காரர்களை இருட்டடிப்பு செய்தால்தான் நம் தலை தப்பும்! சட்டம் போட்டதற்கும் பலன் இருக்கும்.

எனக்கு தெரிந்த சில நண்பர்கள், ரோட்டோரம் வாங்கிய ஹெல்மெட்டுகள் அணித்ததால், இறந்து போயுள்ளனர்! எப்படி? அந்த தரமற்ற ஹெல்மெட்டே அவருக்கு காலனாய் அமைந்துவிட்டது! அந்த ஹெல்மெட் சம்பவ இடத்திலேயே நொறுங்கி, தலை அதனுள்ளே சிக்கி, உடைந்த சில்லுகள் தலையில் தைத்து, அதனாலேயே, தலையும், தலைக்குண்டான உயிரையும் காப்பாற்ற முடியாமல் போனதுதான் பரிதாபம்!

எனவே, நண்பர்களே உஷார்!! இது நம் வாழ்க்கை ப்ரச்னை. நம்மை நம்பி, வீட்டில் காத்திருக்கும் குடும்பத்தாரின் ப்ரச்னை. ஆயிரம் ரூபாய் அதிகம் போட்டு சட்டை வாங்கினாலும், குறைந்த விலையில் தரமான காதியில் கதர் அணிந்தாலும், நம் மதிப்பு, நம் நடத்தையிலேயே உள்ளது.

ஆனால், ஹெல்மெட் போன்ற தலைக் கவசங்களில் நாம் காசு மிச்சம் பிடிக்கப் பார்த்தால், அப்புறம் வீட்டிலுள்ளவர்கள் நாம் திரும்பி வரும் வரை இன்னொரு கவசத்தை நம்ப வேண்டியது தான்!

அது - கந்தர் சஷ்டி கவசம்!

31 January 2007

புலம் பெயர்ந்த தமிழன் தாலாட்டு !

துவக்கு.காம் கவிதைப் போட்டி அறிவித்து, ஆறேழு மாதங்கள் ஆகியும், முடிவுகளை அறிவிக்கவில்லை. எனவே, எனக்குப் பிடித்த கவிதையை இங்கு தருகிறேன்.



சூழ்நிலை: கணவன் வெளிநாட்டில் உள்ளான்; மனைவி இந்தியாவில் உள்ளாள். அவள் கையில் குழந்தை. அந்தக் குழந்தைக்கு இருவருமே தாலாட்டுப் பாடுகிறார்கள்!! இருவரும் மறுகரையை நோக்கிப் பாடுவதாக அமைத்துள்ளேன்!

பெண்: அழகிய கண்விருந்தே, அம்மாவின் அருமருந்தே
அணைச்ச கைய உதறாம, பிடிச்சுகிட்டு கண்ணுறங்கு..!
அக்கரைப் பச்சையின்னு அவசரமாப் போனவரே
அக்கரை இருந்தும் அக்கரையில் என்ன செய்வீர்?

ஆண்: இன்பம் தந்த அற்புதமே, அப்பனுக்கு அச்சரமே
இலமறவு காய்மறவா இருக்குதடீ எந்தன் பணி
இக்கரைப் பச்சையின்னு இங்கு வந்த அப்புறந்தான்
இனிக்கப் பேசி இடித்துரைப்பார் எப்படின்னு நானறிஞ்சேன்!

பெண்: உமக்கென்ன மகராசா குளிர்வசதி மச்சுவீடு
உய்யாரமாயுலவ உயர்தர பிளைமூத்தூ!
உக்கார்ந்து சாப்பிடவே உயர்ந்த ரகம் நாக்காலி
உலகம் மறந்திடவே ஒரு சாண் சொகுசு மெத்தை

ஆண்: உண்மையை நானுரைச்சா, உன் தூக்கம் போகுமடி
உசுரிருந்தும் இல்லாதான் போல ஒரு வாழ்க்கையடி
உள்ள தள்ளும் உணவெல்லாம் உழைச்சு நான் பணிசெய்ய
உன்ன காண வாரையிலே, உன்னதப் பொன் சேர்த்திடவே..

பெண்: புள்ள பேரு வெக்கையிலே, சோறூட்டும் போதினிலே
அள்ளிக் கொஞ்ச வாராம அய்ய என்ன வேலையதோ
தெள்ளுதமிழ் பேசுதய்யா, மழலை மழை பெய்யுதய்யா
கொள்ளையழகு காணவாச்சும் எப்போநீ வாரீக?

ஆண்: காலையெது மாலையெது எக்கணமும் தெரியாம
வேலையொண்ணே வேதமென வேதனைகள் நான்மறந்து
லீலைசெய்யும் மாயமது கைநிறையக்காசிருந்தா
சோலையாகும் நம்வாழ்வு சொல்லிடுவேன் சத்தியமா

பெண்: காசுமட்டும் போதாது கடுதாசு நிதம் போடுமய்யா
காதல்மட்டும் மாராம கவலைகள் ஏறாம
கானலிலே கால் பரப்ப கனிவுடனே போனமாமன்
கணநொடியில் வந்திடுவான் கண்மணியே கண்ணுறங்கு

ஆண்: ஊர்பேச்சு கேக்காத, உடன்பிறந்தார் ஏசாத
உண்மையன்பு உள்ளமட்டும் உலகமது நம்ம கையில்
உயிர் உனையே உள்ளவெச்சு உமிழ்நீர் பருகிவர்றேன்
உடன் இருக்க ஓடிவர்றேன், பாப்பாகிட்டச் சொல்லிவெய்யி!

27 January 2007

வி.வ.போ - 5(விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டீ -5)

விடாதே பிடி!

முன்னர் ஈ.கோலி எனும் பாக்டீரியா செய்யும் அழிவு வேலைகளைப் பார்த்தோம். (http://maraboorjc.blogspot.com/2007/01/4.html) இந்த கட்டுரையில், ஒரு பாக்டீரியாவின் ஆக்க வேலையை பற்றி பார்ப்போம்!


நீர் ஈரம் உள்ள இடங்களில், மிக குறைவான உணவை உட்கொண்டு, எந்த விதமான நச்சு பொருட்களையும் காற்றில் கலக்காத ஒரு முனிவர் பாக்டீரியா இந்த காலோபாக்டர் க்ரெஸன்ட்டஸ் எனும் பாக்டீரியா. இது தனது நீண்ட தண்டுபோன்ற பகுதியின் மூலம் எந்த சமதளமானாலும், அதனோடு ஒட்டிக் கொள்கிறது! அத்தண்டினுள் பாலிசாக்கரைடு எனும் சர்க்கரை ரசாயன சங்கிலிகள் அமைந்துள்ளன. இவற்றில் சில சர்க்கரை மூல சங்கிலிகள் புரத சத்து சங்கிலிகளோடு இணைந்து, ஒரு விதமான ஜவ்வை உருவாக்கியுள்ளன. அந்த ஜவ்வு மூலமே, இந்த ஜந்து சமதளங்களோடு ஒட்டிக்கொள்கின்றன. இதில் ஆச்சரிய பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது!


நாம் சாதாரணமாகப் பார்க்கும் வஜ்ரம், இன்ன பிற கோந்துகள் ஒரு சதுர இன்ச் பரப்பளவில் சுமார் 2 கிலோ எடையை விடுபடாமல் தான்கி நின்றாலே அதிசயம். fபெவிகாலின் ஜோரு! என்று விளம்பரம் செய்யும் fபெவிகால், அதிக பட்சமாக 5 கிலோ எடையை ப்ரிந்து விழாமல் தாங்கும். ஆனால், இந்த பாக்டீரிய ஜவ்வுன் தாங்கும் சக்தி எவ்வளவு தெரியுமா? ஒரு சதுர இன்ச்க்கு 5 டன்!(ஒரு டன் = 1000 கிலோ. இந்த பாக்டீரியாவின் ஜவ்வை பல மடங்காக பரபணு சோதனை மூலம் பன்மடங்காக்கி, உற்பத்தி செய்யும் முறையை கண்டுபிடித்தால், உலகிலேயே மிக அதிகமான பிடிப்பு சக்தி கொண்ட பசை தயார்! ப்ளூமிங்டன் மற்றும் ப்ரவுன் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.


மருத்துவ அறுவை சிகிச்சைக்கு இரு பாகங்களை ஒட்ட இயற்கையிலிருந்து தயாரித்த ஜவ்வாகவும், கட்டிடக் கலை மற்றும் பொறியியல் துறைகளில் எந்த பொருளையும் ஒட்ட இந்த ஜவ்வு ஒரு வரப்ரசாதமாக இருக்கும்!


ஆனால், ஒரே ஒரு ப்ரச்னை! எல்லாவற்றோடும் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையதால், எந்த கலத்தில்( பாத்திரத்தில்) இயந்திரத்தில் இதை தயாரித்தாலும், அந்த பத்திரத்தோடு இது ஒட்டிக்கொண்டு பிரிக்கமுடியாமல் போய்விட்டால்? !!


ஆராய்ச்சி தொடர்கிறது...

24 January 2007

முராரி பாபு!


ஆன்மீக வாதிகளுக்கு, நல்லதொரு எடுத்துக் காட்டு - முராரி பாபு! தன்னை ஒரு மத குருவாகவோ, ஒரு ஆன்மீக போதகராகவோ தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவர்! வால்மீகி ராமாயணத்தை சுவை படக் கூறுவதில் வித்தகர். ராமர் கதையில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. அதை பின்பற்ற மக்களிடையே, மனித நேயம் வளர ஆவன செய்வதுதான் என் பணி, என்கிறார் முராரி பாபு. சமீபத்தில், அவர் செய்துவரும் ஒரு மிக நல்ல பணியைப் பற்றி சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

தொலைதூர நாடுகளான மெக்சிகோ, ஆஸ்திரேலியாவிலிருந்து, வெதுவெதுப்பான நீரை நோக்கி இந்த சொற்பமே எஞ்சியுள்ள சுறாத்திமிங்கிலங்கள் ( எட்டு முதல் பத்து - டன் எடை இருக்கக்கூடியது), குஜராத்திலுள்ள வீரவல், போர்பந்தர், துவாரகா, பீடியா, டியு, மங்க்ரோல் கடலோரங்களில் குட்டிபோட கரை சேருவது வழக்கம்.


அப்போது மீனவர்களுக்கு நல்ல வெட்டைதான்! பல வருடங்களாக இந்த சுறா இனம் அழிந்து வருவதைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள் போட்டாலும், பல லட்சம் பெறுமான ஒரிரு சுறா பிடித்தால் போதும், ஒரு வருட செலவுக்கான பணம் கிடைத்துவிடும் என்பதால், அங்குள்ள 'கார்வா' எனும் மீனவ சமுதாயத்தினரை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை.


அங்கு பயணிக்கையில் இதை கேள்விப்பட்ட முராரி பாபு, உடனே, படகிலேறிச் சென்று, ஒரு பிடிபட்ட திமிங்கிலத்தை வலையை அறுத்து விடுவித்தார்! பயங்கர எதிர்ப்பு கிளம்பியது; ஆனாலும், தங்கள் குருவாயிற்றே! என்ன செய்வது என்று தெரியாத அந்த மீனவர்களை நோக்கி முராரி பாபு சொன்னது: "குழந்தை பெற்றுக் கொள்ள தாய் வீட்டுக்கு வரும் உங்கள் பெண்ணை கொல்வீர்களா? அப்படித்தானே இந்த வாயில்லா ஜீவன்களும்? இனத்தில் சுறா ஆயினும் அவை இங்கு வருகையில் தாய்மை அடைந்து வருகின்றன. யாரையும் கொல்வதில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த இனத்தையே அழித்துவிட்டால்? வருங்காலம் நம்மை ஒரு ஜீவகாருண்யமற்ற கொலைகாரர்களாகத்தான் பார்க்கும். "இந்தோ, அறுத்த வலைகளுக்கான நஷ்ட ஈடு 10,000 ஆயிரம் ரூபாய்," என்று தன் கையால் எடுத்து கொடுத்தார்!

இந்த செய்கை அம்மீனவர்களின் மனதை உலுக்கி விட்டது. இன்று கடந்த மூன்று ஆண்டுகளாக, திமிங்கிலங்கள் வேட்டை ஆடப் படுவதில்லை!

முன்பு திமிங்கிலங்களை வேட்டையாடும்போது பிடியா, மற்றும் விராவல் கடல் நீரெல்லாம், ரத்தச்சிவப்பாகக் காட்சியளிக்குமாம்! இப்போது நீரின் நிறம், மனிதரின் மனதுள் ஈரம், பாயக் காரணம், ஒரு ஆன்மீகவாதி! இதுபோல், சமுதாய நோக்கோடு எல்லா சாமியார்களும், மத போதகர்களும் இருந்தால், மனம், மதம், எல்லாவற்றுக்கும் நல்லது.

அங்குள்ள வன அதிகாரிகள், மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள், முன்னணிக் கம்பெனிகளான குஜராத் கெமிகல்ஸ் மற்றும் உப்பளம் அதிகம் வைத்துள்ள டாடா கெமிகல்ஸ், தற்போது நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்! "இத்தனை ஆண்டுகள் எங்களால் முடியாததை பாபா செய்துவிட்டார்!" என்கின்றனர் மகிழ்ச்சி பொங்க!

போலி பிஷப்களும், கோலாகலச் சாமியார்களும், கொலை கொள்ளையில் ஈடுபட்டும் 'பெயர்'இழப்பு ஆகாமல், இப்படி நல்ல காரியம் செய்தால், சுற்றுப்புற சூழலும் சரியாகும், மக்களும் மாறுவர்!

06 January 2007

வி.வ.போ - 4 - தலை நிமிர் தமிழா!

வி.வ.போ - 4 (விஞ்ஞானத்தை ளர்க்கப் போறேண்டீ -4)

மரபணு சோதனை செய்த பருத்தி, கடலை விதைகள், மற்றும் சிக்குன்குனியா போன்றவை நம்மை மட்டும் கிடுகிடுக்க வைக்க வில்லை! நுண்கிருமிகளான பாக்டீரியா அமெரிக்க அரசை கிடுகிடுக்க வைத்துள்ளது.

எல்லா கடைகளுக்கும் ச்பினாச் (Spinach) எனும் இலை வகைகளை விற்கும் ஒரு மாபெரும் பேரங்காடி (சூப்பர் மார்கெட்), நாட்டிலுள்ள அத்தனை இலைகளையும் திரும்பப் பெற்று, புதைத்து விட்டது! காரணம்? ஒரு ஈ! இது நம்மூர் ஈ அல்ல; ஈ.கோலி எனப்படும் எஸ்செரீசியா கோலி! இந்த பாக்டீரியக் கிருமி, உணவை உண்பவருக்கு வாந்தி, பேதி, மயக்கம், உண்டுபடுத்தி, சில சமயம் மரணத்துக்கே கொண்டு போய் விடும்! வருடத்துக்கு 60-80 பேர் இந்த கிருமி தாக்கிய உணவை உண்டு மடிகிறார்கள், இல்லை குறைந்தது 80,000 பேர் நோயுறுகிறார்கள்!
சராசரியாக இந்த கிருமியின் வீரியத்தை கண்டு பிடிக்க குறைந்த பட்சம், 24 மணி நேரமாகும். மிக அதிகமான பொருட்களை தயார் செய்யும் ஒரு உணவு தொழிற்கூடமோ, உபயோகப்படுத்தும் ஹோட்டல்களோ, எப்படி கால விரயமாகாமல், இதை கண்டு பிடிக்க முடியும்?
பத்தே நிமிடங்களில் முடியும் என செய்து காட்டியவர், ஒரு இந்தியர், தமிழர் - ராஜ் முத்தரசன்! 60 வயதே ஆன துடிப்பான விஞ்ஞானி! ட்ரெக்சல் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்து, இப்போது, வேதியல் துறை பேராசிரியராக இருக்கும், ராஜ், ஒரு மிகச்சிறிய கண்ணடி ஊசியின் ஒரு முனையில் பீஜோஎலக்டிரிக் பீங்கான் டைடனேட் எனும் மின் இணைப்பையும், மறு முனையில், அந்த ஈ.கோலியின் எதிர்ப்பு கிருமிகளையும் கொண்ட சிறிய கருவியை உருவாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட உணவினுள் அதை வைத்தால் போதும்! எதிர்சக்தியை எதிர்க்க அந்த கிருமி போராடும் தன்மை அதிகமாக அதிகமாக, மின் அதிர்வும் அதிகமாகும். அதிர்வின் அளவை வைத்து, எத்தனை சதவிகிதம் அந்த ஈ.கோலி [ஈ கொல்லி என்று தமிழில் பெயர் வைக்கலாமோ? :-) ] உணவில் படிந்துள்ளது என துல்லியமாய் உடனடியாக கண்டுபிடித்துவிடமுடியும்! இதே போல் மற்றசில கிருமிகளை கண்டறியவும், ராஜ் இந்த கருவியை அமைத்துள்ளார். மிக குறைந்த செலவில், உடனடி தகவல் பெற இவர்கண்டுபிடித்த இந்த கருவிக்காக, பல பாராட்டுகளும், அமெரிக்க அரசின் மானியமும், லிவெர்சென்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தோடு, கூட்டுறவு தொழில் முனைப்பும் ஏற்பட்டுள்ளன! மும்பை பாபா சோதனை கூடத்தினர், "மிளகாய், மிளகு போன்றவற்றினால் இந்த ஈ.கோலியின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஆய்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளனராம்!
நான், திரு. ராஜ் முத்தரசனை பாராட்டி, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கூடவே, அவரின் கல்வி, பின்னணி பற்றியும் கேட்டு வினவினேன்! அவரும், அவரது அண்ணனும், சிறு வயதில், தமிழ் மொழியில் தான் எல்லா பாடங்களையும் படித்தார்களாம்! ஆங்கில தேர்ச்சி பெற, தனியாக ஒரு வாத்தியாரை அமர்த்தினாராம், இவர் தந்தை, திரு. ராஜகண்ணனார். அந்த ஆசிரியர், ஆதி அந்த விஷயங்களான 'வாட் இஸ் யுவர் நேம், வாடிஸ் யுவர் ஏஜ்?" போன்ற விஷயங்களே சொல்லித் தந்துள்ளார். ராஜின் தந்தை, பள்ளிக்கூடமே பார்க்காமல், தானாகவே படித்து தொலை தொடர்புக் கல்வியிலேயே பி.ஏ முடித்து, பின்னர் எம்.ஏ சென்னை பிரசிடன்ஸியிலேயே முதல் மாணவராகத் தேர்ந்தவராம்! மேம்பாட்டுக்காக, குடும்ப மொத்தமும் சிங்கப்பூர் செல்ல, அங்கு, மற்றவருடன் ஒப்பிடும் போது, ஆங்கிலம் குறைவாகவே தெரிந்தததால், வெட்கி தலை குனியாமல், விடாது முயன்று, இவர், இவர் அண்ணன், பள்ளியில் முதலிடத்தில் வந்தார்கள், எனும் செய்தி இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியம்! மீண்டும் இவர் தந்தை இந்தியா வந்து, கும்பகோணம் கலைக்கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக இருந்து, சிறிது காலம் ஊட்டியிலும், பின்னர் பல ஆண்டுகள் சென்னை பிரசிடன்ஸி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தாராம். அப்போது சென்னையிலிருந்த ராஜுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைத்துள்ளது! அதிலும் வேதியல் துறையில், முதல் மாணவராக வந்த ராஜ், ட்ரெக்சல் பல்கலைக் கழகத்திலேயே முதுநிலையும், ஆராய்ச்சியும் மேற்கொண்டு, இன்று பல அங்கீகாரம் பெற்று, பல்கலைக் கழக தலைவராக இருந்து, மீண்டும், இந்த பயோசென்ஸர் (நுண்உயிர்காட்டி) ஆராய்ச்சியை 2000 ஆண்டிலிருந்து செய்து வந்து, இப்போது வெற்றியும் பெற்றுள்ளார்! பல இந்திய மாணவருக்கு டாக்டர் பட்டத்துக்கான பரிந்துறையும், வழிகாட்டுதலும் புரிந்துள்ளார். இவர் அடிக்கடி, ஐ.ஐ.டி(IIT), பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி(IISc), பூனாவிலுள்ள என்.சி.எல்(NCL), ஹைதராபாத்திலுள்ள சி.சி.எம்.பி (CCMB) மற்றும் ஏனைய கல்வி நிலையங்களில் கலந்துரையாடல், சொற்பொழிவுகள் செய்துள்ளார்! CSIRO விஞ்ஞான துறை தலைவர், பாரத பிரதமரின் விஞ்ஞான ஆலோசகருமான டா. மால்ஷேகருக்கு பல விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஐ.ஐ.டியை சார்ந்த டா. எனாக்ஷி பட்டாசாரியா இவரது ஆராய்ச்சி கூடத்தில் இவரது ஆலோசனை பேரில் சில ஆய்வுகள் நடத்தியுள்ளார். எனவே தனது ஆராய்ச்சியின் மூலம் உலகுக்கே தமிழர் பெருமை பறைசாற்றி, அதோடு, தன்னால் இயலும்போது, நம் நாட்டினருக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார். இப்படி, எத்தனையோ இந்தியர்கள் மதிநுட்பத்தால் இந்தியா ஏற்கனவே ஒரு வல்லரசு ஆகிவிட்டது என்று உலகுக்கு பறை சாற்றி வருகின்றனர்!

02 January 2007

யார் மிருகம்?

காஷ்மீர் ஸ்ரீநகர் அருகேயுள்ள த்ரால் நகரத்தின் வெளிக் கிராமங்களில் ஒன்றான 'மண்டோரா' வில் சென்ற நவம்பர் மாதம் நடந்த துயர சம்பவம் இது!

காட்டிலிருந்து கரடி ஒன்று வழி தவறி ஊருக்குள் வந்துவிட்டது. வழியில் அகப்பட்ட குழந்தையையும் பிடித்துச் சென்றது! அதைக் கண்ட ஊரார், உடனே அதனை விரட்டினர். என்ன தோன்றிற்றோ தெரியவில்லை! அது குழந்தையை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டது. ஆனால், இரவு முழுதும் காத்திருந்த ஊரார், கரடி மீண்டும் உள்ளே நுழைகையில், அதனைப் பிடித்து அடித்து, எரித்துக் கொன்றுவிட்டனர்! வனவிலங்கு அதிகாரிகள் ஒரு சிலர் அங்கு போனாலும், இந்த இழிசெயலை தடுக்க முடியாமல் போனது. காரணம்? "மக்கள் கண்களில் தெரிந்த கொலை வெறி!" என்கிறார்களாம்!
வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, கருப்புக் கரடி, அதிசய பாதுகாக்கப்படவேண்டிய விலங்கினங்களில் ஒன்று. ஆனால், இரக்கமின்றி அதை கொலை செய்துவிட்டார்கள். அதை விடக் கொடுமை, கரடி பிடிபட்ட செய்தி கேட்டு அங்கே போன தனியார் திலைகாட்சியினர்! கொல்வதை தடுக்க முற்படாமல், சாவதானமாக, அந்த அடித்துக் கொடுமை செய்யும் காட்ச்சியையும், எரித்து கொலை செய்யும் காட்சியையும், படம் பிடித்து தொலைகாட்சியில் வெளியிட்டார்கள்! இதனை நமது நாட்டிம் முதல் எதிர்கண்ணோட்ட தகவல்தளமான BBC வெளியிட்டது! பாபர் மசூதி இடிக்கப் பட்ட போதும், குஜராத் கலவரத்தின் போதும், மும்பை வெடிகுண்டு செய்தியையும், முண்டியடித்து முதலில் உலகுக்கு தெரியச் செய்தது BBC! நாம் சுதந்திரம் பெற்று எத்தனை காலமாகியும், நம்முள் உள்ள சில சில தவறான செய்திகளை வெளியிட்டு குளிர் காய்வதை கடமையாக செய்கிறது. இவர்களுக்கு இப்படி செய்திகளை திரட்டி த் தருபவர் யார்? அவர்க்ளை முதலில் இனம் கண்டு தேச துரோக குற்றத்துக்கு அவர்களை உள்ளே தள்ளலாம். தப்பே இல்லை. இதை கருத்து சுதந்திரம் என்றோ, பத்திரிகை சுதந்திரம் என்றோ சொல்லி ஒருவர் நழுவக் கூடாது. சரி, விஷயத்துக்கு வருவோம். கரடி கொலையில் காவலர் விசாரணையின் கீழ் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பீகார் காடுகளில் சமீபத்தில் வெறிபிடித்த யானை பலரை கொன்று குவித்து அட்டகாசம் செய்துள்ளது. அதனை அதிகாரிகளே சுட்டு கொன்றுவிட்டனர். அது பரவாயில்லை. ஏனெனில், யானைக்கு 'மதம்' பிடித்து விட்டது. எத்தனையோ முயற்சி செய்தும், மருத்துவர்களால் அதனை கட்டுப் படுத்த முடியவில்லை! ஆனால், இங்கே? குழந்தை என்று தெரிந்தோ, அல்லது, ஆட்கள் கூச்சல் கேட்டோ, ஒரு விலங்கான கரடி கூட, குழந்தையை கீழே போட்டுச் சென்று விட்டது. ஆனால், ஆறறிவு படைத்த, பண்பட்ட மனிதர்கள், காத்திருந்து, ஒரு மிருகத்தை பிடித்து, அடித்து, எரித்தே கொன்றுவிட்டார்கள். இப்போழுது சொல்லுங்கள்? யார் மிருகம்?