20 October 2008

பண்டைய கோவில் ஓவியங்கள் அழிகின்றன

கோவில்களைப் புனரமைப்பு செய்யும் போது, சுவற்றில் உள்ள அழகான பல்லவர், சோழர், நாயக்கர் காலத்து ஓவியங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியிருந்த நாயக்கர் காலத்து ஓவியங்கள், இவ்வாறு அழிந்தது உலகப் ப்ரசித்தி ஆகிவிட்டது!

அப்படி அதில் என்ன இருக்கிறது?

பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?
இவை இயற்கை மூலிகைச் சாயங்களால் வரையப் பெற்றவை
கோட்டோவியங்களின் தடிமனைப் பார்த்தால், இன்று தயாரிக்கப்படும் மைக்ரோ டிப் பேனாக்கள் பக்கத்தில் கூட வராது! அத்தனை மெலிய கோடுகள்.

  1. வர்ணத்தோடு, உணர்வுகளை மெலிதாகப் படம் பிடித்துக் காட்டும் நயம்.
    ஸ்தல புராணங்களை, இதிகாசங்களை, மன்னர் காலச் சரித்திரத்தைப் ப்ரதிபலிக்கும் ஓவியங்கள்.
  2. இவை காலச் சின்னங்கள். 100 வருடம் ஆகிவிட்ட அனைத்துமே, பாதுகாக்கப் பட வேண்டிய சின்னங்கள் என்று தொல்பொருள் இலாகா சொல்லும் காலத்தில், இந்து அறநிலையத் துறைக்கு மட்டும் அந்தச் சட்டங்கள் பொருந்தாதா என்ற கேள்வி எழுகிறது.
  3. இவற்றை மீண்டும் வரையவோ, மீட்கவோ, மிக சொற்பமான கலைஞர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள் உள்ளனர்!

    சமீபத்தில் அப்படி செப்பனிட்டுப் பணிகள் நடக்கும் இரண்டு கோவில்களுக்கு செல்ல நேர்ந்தது.

    1) மன்னார்கோவில்: குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் தினமும் பாடப்பெற்ற, அவரது சமாதி உள்ள ராஜ கோபாலஸ்வாமி பெருமாள் கோவில்.

ஏறத்தாழ 10 வருடங்களாய் ஹிந்து நாளிதழ் மற்றும் எனைய எல்லா பத்திரிகைகளிலும் கோவில் நலிந்த நிலையிலுள்ளது என்று கட்டம் கட்டி எழுதி வந்த முக்கிய ஸ்தலம். இன்று புனரமைப்பு நடக்கின்றதே என்ற சந்தோஷத்தில் பார்க்கப் போன நமக்கு மன வேதனை அதிகமானதுதான் மிச்சம்.

நின்ற, கிடந்த, அமர்ந்த கோலங்களில், இரண்டே கோவில்கள் ஒரே விமானத்தில் மூன்றடுக்குகளில் பெருமாளைப் பார்க்கலாம் என்றால் எனக்குத் தெரிந்து அது இந்த மன்னார்கோவில், மற்றும் உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில்கள் மட்டுமே.
சுதையினால் செய்யப்பட்டு, மேலே, கண்களைக் கவரும் இயற்கை சாயங்களினால் வர்ணம் பூசப்பட்ட மூலவர்கள்! கோவில் வேலைகள் நடப்பதால், மேலே ஏற முடியவில்லை. இருந்தாலும் வேலை செய்யக் கட்டிய சாரங்களால் மேல் ஏறிப் பார்த்தால்,

வழியிலேயே, கல்வெட்டுக்கள் மேலேயே சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளது. அருகில் வருங்காலத்தில் கோபுரத்தியே சாய்க்கக்கூடிய சிறி செடி தலை நீட்டிப்பார்க்கிறது!

கோவில்கள் அழிய முக்கிய காரணம் இந்த கவனிப்பார் அற்று வளரும் செடிகளே! பெரும்பாலும், ஆல், அரச மரங்கள் பெரிதாய் வளர்ந்து அஸ்திவாரத்தியே ஆட்டிச் சாய்த்த கோவில்களின் படங்கள் என்னிடம் ஏராளமாய் உள்ளன.

முதல் தளத்தின் முன் பகுதியை ஏதோ கழிவறை கட்டுவதுபோல், அழகின்றி, புராதன வடிவத்துக்கு சிறிதும் ஒப்பாமல், கட்டுவதையும், உள்ளே சன்னதி முன்மண்டபத்தில் முட்டுக் கொடுக்க வைத்த சவுக்குக் கம்புகளும், கரைத்த சிமெண்ட் சாரல்களும், அரிதான அந்த ஓவியங்களை அழித்துக் கொண்டிருப்பதையும் எந்த கண்கள் உள்ள புத்தி ஸ்வாதீனம் உள்ளவரும் பார்க்கச் சகியார்! புராதன முறையில் கட்டப் பட்ட சுதை செங்கல் கட்டுமானம் 1000 ஆண்டுகள் தாங்கி வந்துள்ளது. செடிகளினாலும், கவனிப்பாரற்று பராமரிப்பு இல்லாமையாலும் தான் இந்த கோவில்கள் சிதிலமடைந்துலள்ளன. தொல்பொருள் கட்டிடவல்லுநர்கள் சுண்ணாம்பு, செங்கலினாலேயே கட்ட முடியும் என்கிறபோது இந்த சிமெண்ட் பணி (கலையழகைக் கெடுக்கும் பாத்ரூம் கட்டும் முறை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ) தேவையா?

நல்ல தொல்பொருள் ஆய்வாளர்கள், புராதன ஓவியம் தெரிந்த வல்லுநர்கள், ஸ்தபதிகள் ஆகியவர்களை கலந்தாலோசிக்காமல், நம் பண்டைய சின்னங்களை,கலை பொக்கிஷங்களை சீர் செய்கிறேன் பேர்வழி என்று அழிக்கிறார்களே! கேட்பார் இல்லையா? இவற்றைத் தடுக்க எதேனும் சட்டங்கள் இல்லையா (anti- antique and artifacts act??)

மனதை நெருடும் கோவில் புனரமைப்பு செலவுகள் பட்டியலில், சுமார் 19 லட்சம் சாண்ட் ப்ளாஸ்டிங் (கல் சுவர்களை மிக அதிக அழுத்தக் கம்ப்ரெஸர் காற்றால், மணல் கலந்து அடிப்பது! இதன் மூலம் கல்வெட்டுக்கள் அழிந்துவிடுவது திண்ணம். இந்த முறையை எப்போதோ தொல் பொருள் துறையினர் தடை செய்து விட்டனர். இங்கே எப்படி அனுமதித்தார்கள்? சம்பந்தப் பட்டவர் கவனிப்பார்களா?
படங்களை இந்த பிகாசா படத்தொகுப்பில் அளித்துள்ளேன்.
மன்னார்கோவில் பற்றி அறிய இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

இரண்டாவதாக நான் பார்க்கப்போன கோவில் களக்காடு சத்திய வாகீஸ்வரர் ஆலயம். ஆம், முண்டந்துறை – களக்காடேதான்!

மலைசூழ் இயற்கை பின்பலத்தோடு, தனியே தெரிய நிற்கும் கோபுரம், ஒரு கண்கவர்காட்சி. அங்கே கோபுரம் 9 நிலைகள் கொண்டது. அத்தனை நிலைகளும், மரத்தாலேயே நிறுவப்பட்டு, சுண்ணாம்புச் சுதையினால் பூசப்பட்டு, வெளிச் சுற்றில் கணக்கிலடங்கா சுதை பொம்மைகள் நிறுவப் பெற்று, உள்சுற்றில் ஒன்பது நிலைகளிலும் ஓவியங்கள் வரையப் பட்டு, காலத்தை வென்ற கலைப் பெட்டகமாகத் திகழ்கிறது.

இதுவரை வந்த புனரமைப்பு கணக்கீடுகளில், அரசியல் சத்தியங்கள் செயலற்றுப் போய், உள்ளூர் மக்கள், தாங்களே ஒவ்வொரு செலவாய் சேர்த்து, உள்ளேயுள்ள ஓவியங்கள், வெளியே உள்ள சுதை பொம்மைகளை நிறுவ ரீச் பஃவுண்டேஷனின் உதவியை நாடியுள்ளனர்.

இங்கேயும், பெண் உருவங்களின் முக்கிய பகுதிகளில் குரூரர்கள் பொத்தல் போட்டு ஓவியங்களை பாழாக்கியுள்ளனர்.

கணக்கிலடங்கா , மரச் சித்திரங்கள், இதிகாச, புராண, அன்றைய வாழிவியல் ஓவியங்கள் என 9 நிலைகளிலும் ஓவியங்கள், சிற்பங்கள். அதிகம் ஆகையால் அவற்றை பிகாசாவில் வெளியிட்டுள்ளேன்.

களக்காடு பற்றி மேலும் தகவல்கள் பெற இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

மேலும், குற்றாலம் சித்திரசபையிலுள்ள ஓவியங்கள், திருவாரூர் தியாகராஜர் கோவில் ஓவியங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுள்ள அம்மன் சன்னதியிலுள்ள ஓவியங்கள் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். காலம் கடந்து அவை அழியுமுன், காப்பார் யார்?

மேற்சொன்ன ரீச் பஃவுண்டேஷன் மூலம், காஞ்சி வரதராஜர் பெருமாள் கோவில் பிரகாரத்தில் உள்ள ஓவியங்களை கோவை L.M.W அதிபர் ரவி சாம் தன் செலவிலேயே செப்பனிட முன் வந்துள்ளார். இம்மாதிரியான தன்னார்வலர் குழுக்களுக்கு அரசு உடனே அனுமதி தந்தால், மக்கள் பலத்தோடு, அவர்களே இப்படி பல கலைச் செல்வங்களை காப்பார்ற இயலும்.

இப்படி ஆயிரம் தன்னார்வக் குழுக்கள் நம்மிடையே உடனே தேவை! இல்லையேல் கோவில் கலைகளும், ஓவியங்களும், நம் கண் முன்னேயே அழிவதைக் காணும் ‘கண்ணிருந்தும் குருடர்கள்’ என்ற அவப் பெயர் நம் சந்ததியினருக்கு வரும்!

ஹிந்து மற்றும் Front line மூத்த நிருபர் டி. எஸ். சுப்ரமணியம் அவ்வப்போது இவற்றைப் பற்றி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். அச்சோடு நின்று விடாமல் அரசிலும் கவனிக்கவேண்டியவர்கள், கவனிப்பார்களா?
ஒரு மடல் இங்கே

29 September 2008

மல்லை என்ன கொல்லையா?

மல்லை அல்லது மகாபலிபுரம் எனும் மாமல்லபுரம் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று போற்றப்படுகிறது. ஆனால் அங்கே அத்தகைய பெரிய இடத்திற்குத் தகுந்தாற்போல் காவலர்கள்,பாதுகாவலர்கள், உள்ளார்களா என்பது சந்தேகமே.

அகில இந்திய தொல்லியல் துறையின் ஓரிருவரே கண்களில் தென்படுகின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஆட்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு பஞ்சம். அர்ச்சுனன் தவசு எனப்படும் பாறையை நோக்கி நிற்கையில், உங்களுக்கு வலது பக்கத்தில் உள்ள கம்பி கேட் (சிறிய வாயில்) நேராக தர்மராஜா மண்டபம் போன்றவற்றுக்குப் போக முடியாமல் எப்போதும் மூடியே வைத்திருக்கிறார்கள்?! ஆனால், த்ரிமூர்த்தி குகைக்கு எதிரே உள்ள கேட் எப்போதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது! (இரவில் எனக்கு எப்படி என்று தெரியாது, பகலில் நான் பார்த்த எந்த நேரத்திலும் அது திறந்தே இருக்கிறது! யார் நன்மைக்கு?

உள்ளூர் மக்கள் உள்ளே போய்வந்து, காலைக் கடன்களை பின்னே உள்ள பஞ்சபாண்டவர் குகை மற்றும் கோடிக்கால் மண்டபக் குகைகளில் மல ஜலம் கழிக்கவும், சிராய், விறகு ஒடித்துக் கொள்ளவும், சுற்றுப் பாதையாய் ஊருக்குள் நடக்காமலிருக்கவும் அதனால், பின் புறம் பலர் கண்களுக்கு தென்படாத குகைக் கோவில்களில் ‘குடி’ மக்கள் அதகளம் செய்யவும், இன்ன பிற அசிங்கங்கள் நடந்தேறவும் வழி செய்கிறார்களே காவலர்கள் என்ற பெயரில் அங்கே பணிக்கு அமர்த்தப் பட்ட பண்டை கால சின்னங்களை சின்னாபின்னப் படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட கிராதகர்கள்? அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. வெளிநாட்டவருக்கு 250 ரூபாயும் பிடுங்கிக் கொள்ளும் தொல்பொருள் துறையும், இந்த உலக அதிசயத்தை ஊரறியச் சொல்லிச் சொல்லியே பெயரும் பணமும் வாங்கத் துடிக்கும் தமிழக சுற்றுலாத் துறையும் என்ன கிழிக்கிறார்கள்?

மேலும் சில மெய்ப்பொருள் காண்பது .. கொடுமை!

மகிஷாசுரமர்த்தினிக் குகை மற்றும் தர்மராஜ மண்டப சுவர்களில் மற்றும் வாயில் நடைபாதையில் உள்ள அபூர்வ கிரந்த எழுத்துக்கள். நடந்து நடந்தே தேய்ந்து போவிடும், காலப் போக்கில். இந்தக் கோயிலில் சிறப்புவாய்ந்த வடமொழிக் கல்வெட்டு ஒன்று தென்புறச் சுவரில் காணப்படுகிறது. இதில் பதினொரு செய்யுட்கள் உள்ளன.

'பகைவர்களை வென்றவனும் ரணஜெயன் என்று பட்டம் கொண்டவனுமான அத்யாந்தகாமன் என்ற மன்னனால் இக்கோயில் சிவபெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது.

இது போன்ற கல்வெட்டுக்களை ஒரு கண்ணாடி அல்லது உடைக்க முடியாத சிலிகோன் பூசப்பட்ட பாலிகார்பனேட் எனும் கண்ணாடி போன்ற ஷீட்டினால் கவசம் செய்து மூடினால் என்ன? கணேச மண்டபத்திலும், பின்னர் புலிக்குகை அருகே உள்ள அதிரண சண்டேஸ்வர மண்டபத்திலும் கூட அறிய பல்லவக் கிரந்த எழுத்துக்களும், தர்மராஜ மண்டபத்தில் காணப்படும் அறிய செய்யுளின் அதே பிரதி, தேவநாகரி எழுத்துக்களில் ஒரே பொருள் பட எதிரும் புதிருமாக பொறிக்கப்பட்டுள்ளன. ஒரே பொருள் படும் இரு வேறு எழுத்துக் கல்வெட்டுக்கள் ஒரே இடத்தில் இருப்பது உலகிலேயே வேறெங்கும் கிடையாது.
அதிரண சண்டேஸ்வரக் குகையின் கிரந்த எழுத்துக்களுக்கு நேர் கீழே தரையில், அரிய சோழர்கால கல்வெட்டும் உள்ளது.
இதுவும் காலாகாலத்தில் மூடி வைக்கப்படவில்லையென்றால், தேய்ந்து அழிந்து போய்விடும்.

அதேபோல், மக்கள் நடமாடும் கடற்கரையில், கடற்கரைக் கோவிலின் தெற்கே, ஒரு குட்டிப் பாறை உள்ளது. அது, புலிக் குகையின் மாதிரி (model) போல் உள்ளது. அதை அப்படியே வெளியே விட்டு விட்டார்கள். வேலி கிடையாது. மக்கள் கிறுக்கல்கள் ஏராளம். கடற்கரைக் கோவிலின் வடக்கே, தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் வேலிக்கு வெளியே, மகிடாசுரனை தேவி அடக்குமுன், வாகனமான சிங்கம் அப்படியே பாய்வது போலவும், அரக்கன் ஓடமுயலுவது போலவும் புடைப்புச் சிற்பமும் கூட பாதுகாப்பில்லாமல், மக்களின் (அருகிலுள்ள மீனவர் குப்பத்தின்) அறிவிக்கப்படாத கழிவறையாக உள்ளது!

இவையும் காலச்சின்னங்கள் தான். ஒருதலைப் பட்சமாக, இவற்றை வேலியால் மூடாமல், திறந்த வெளியில் விட்டதற்கு காரணம் என்ன?

மூக்கை பொத்திக் கொண்டே காண வேண்டிய குகை தர்மராஜ மண்டபக் குகை மற்றும் கோனேரி மண்டபம். ஒரே மூத்திர நாற்றம். ஏன்?

த்ரிமூர்த்தி குகை சுற்றி உள்ள பாறைகள் மேலெல்லாம், வழியெங்கும் கண்ணாடி பாட்டில் சிதறல்கள். ஏன் இங்கே குடிக்க அனுமதிக்கிறார்கள்?

அடர்ந்த காட்டினுள் சென்று இந்த மண்டபங்களைக் காணலாம். இப்படி கடற்கரையை ஒட்டி எஞ்சியுள்ள பசுஞ்சோலைகளின் ஒன்று இந்த பாதை! இப்பாதை த்ரிமூர்த்தி குகையின் எதிரே ஆரம்பித்து, சிங்கக் கட்டில்வரை செல்கிறது.

பல இடங்களில் சிலைகளின் மீது கிறுக்கியுள்ள, தங்கள் வெறுக்கத்தக்க கலை அபிமானத்தை (?) வெளிப்படித்தியுள்ள ‘நவீன சித்திரக்காரர்கள் அல்லது ‘கிறுக்கர்’களின் கையை வெட்ட வேண்டாம்?

புகழ் மிக்க உழக்கு எண்ணை ஈச்வரர் கோவில் சிற்பமான ராவணேஸ்வரன் கைலைமலையைத் தூகுவது போன்ற சிலை முழுவதும் கிறுக்கல்கள். ராவணனின் வயிறு முழுதும் ‘கிறுக்கர்;களின் பெயர்கள்!

ஏன்? உலகப் புகழ் பெற்ற மல்லை என்ன உங்கள் கொல்லையா? பராமரிக்க வக்கில்லை என்றால், வழி விடுங்கள்; ஆர்வலர்கள் பலரைக் கொண்டு நாங்கள், தன்னார்வலர் குழுக்கள் இவற்றை சுத்தம் செய்கிறோம். அரசு தடுப்புகள், அனாவசிய சட்டங்கள், குறுக்கீடுகள் வழிவிடுமா? அதன் பிறகு, தப்பு செய்வோரை தண்டிக்கவும் அதே தன்னார்வக் குழுக்களுக்கு அதிகாரம் தரப்படுமா? சரி, என்றால் இந்த மல்லை எனும் உங்கள் கொல்லையை முல்லை நந்த வனமாய் மாற்ற நாங்கள் ரெடி!
--------------------------------------------------------------------------------------------------------
படங்கள் உதவி: ஸ்ரீராம் ராஜாராம், நந்தகுமார் செல்வராஜ், லெஷ்மி -பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தினர்.
லலிதா வெங்கட்டின் படங்கள் கிடைத்த உரலி: http://www.indian-heritage.org/poimahabs/mahabtrp.html
நானும் மற்ற பொன்னியின் செல்வன் யாஹூ இணையக் குழுமத்தினருடன், மேற்சொன்ன ஐ.ஐ.டியின் ஓய்வு பெற்ற மாமல்லை ஆராய்ச்சியாளர் திரு. சுப்ரமணியம் சுவாமிநாதன் அவர்களுடன் சமீபத்தில் மல்லை விஜயம் செய்தோம். மேலுள்ள உரலியில் சொன்ன கருத்துக்களுக்கு முற்றிலும் ஒப்பான கலந்துரையாடலே நடந்தமையால், அவற்றை மீண்டும் பதியவில்லை. உரலியில் கண்டது போக, கடற்கரை கோவிலையும், அதன் வேலிகளின் வெளியே உள்ள பாதுகாப்பற்ற நிலையிலுள்ள மகிடன் குன்றும், புலிக் குகையின் மாதிரிக் குன்றும், பார்த்தோம்.





02 March 2008

சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி...

சென்னை நாரத கான சபாவில், இன்றைய மாலைப் பொழுது.. (ஞாயிறு 2 மார்ச்) வாசல் வரை நிரம்பி வழியும் கூட்டம்.. கலைந்த தலை, கசங்கிய சட்டைகளுடன் இருவர் என்னை பிடித்துத் தள்ளாத குறையாக முண்டியடித்து போய், இருக்கை தேடி அமருமுன், அவர்களை நேரில் ஒரு பிடி பிடித்து ஏன் இப்படி? ' என்று கேட்கும் முன், நானும் அரங்கத்துள் நுழைந்தேன். அந்த சூழ்நிலை யாரையுமே பேசவிடாது. மேடையில் ஒருவர் பின் ஒருவராக பேசுபவரைத்தவிர!

என்னை தள்ளிவிட்டு இருக்கை தேடி அமர்ந்தவர்கள் கணேஷ். வசந்த்! சுஜாதாவின் ஆதர்ஸ புருஷர்கள், கதை நாயகர்கள்! வசந்தை இதுபோல் சிரிப்பு கலைந்து நான் பார்ப்பது இதுவே முதல் முறை! கணேஷின் சீரியஸ் முகம், முதல் முறை வெளிரிப் போயிருந்தது! இனி இவர்கள் ப்ரதாபத்தை யார் அரங்கேற்றுவார்கள்?

ஆம், அங்கு நடந்த நிகழ்ச்சி, சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி. கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன், நல்லி செட்டியார், பார்த்திபன், இயக்குநர் வசந்த், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி!

எல்லார் பேசியதிலிருந்து சில சாராம்சம்:

சத்யராஜும், பத்திரிகையாளர் சுதாங்கனும், பெருமை பட்டுக்கொண்டார்கள். அவர்கள் இயற்பெயரும் ரங்கராஜன் என்பதால்! தன் மனைவியின் பெயரில் அவர் பிற்காலத்தில் தான் எழுதினாராம். முதலில் எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் குமுதமும், கணையாழியும்தான் கதைகள் பிரசுரித்துள்ளன!

திரு. கஸ்தூரி ரங்கனுடன் இணைந்து அவர் நடத்திய கணையாழி இதழில், சுஜாதாவின் 'கடைசி பக்கம்' எத்தனை எத்தனை பேருக்கு தமிழ் தாக்கம் ஏற்படுத்தியிருந்தது என்பதை ரா.கி.ரங்கராஜன், சாரு நிவேதிதா, எஸ்.ராம்கிருஷ்னன், மதன், சுதாங்கன், இரா.முருகன், போன்றோரின் சொற்களில் வெளிப்பட்டன!

அவர் தம்பி பேசும்போது, சுஜாதா தமிழ் சொற்களை கணினிமயமாக்கியதில் சுஜாதாவின் பங்களிப்பைப் பற்றிச் சொன்னார். பேடண்ட் வாங்கியிருந்தால், அவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரார் ஆகியிருப்பார், ஆனால் தமிழை நவீன மயமாக்குதலில் இருந்த ஆர்வத்திலும், இன்றைய இளைஞர்களுக்கு தமிழின் ஆழ அகலதை சுட்டிக் காட்ட அவர் கணினி தமிழைத் தந்தார் என்றும் குறிப்பிட்டார்.

அவரது தங்கையார் பேசுகையில், சுஜாதாவுக்கு புல்புல்தாரா, மாண்டொலின் அருமையாக வாசிக்கவும், திறம்பட ஓவியம் வரையத் தெரியும் என்றும், எல்லாரும் அவர் ஒரு இசைக்கலைஞராகவோ அல்லது ஒரு ஓவியனாகவோ வருவார் என எண்ணியிருக்கையில், விஞ்ஞானியாகவும் (பெங்களூரூ பாரத் எலக்ட்ரிகலில் உயரதிகாரி - மின் ஓட்டுப்பதிவு இயந்திரம் கண்டுபிடித்த குழுவின் தலைவர்), கவிஞராகவும் (சுதாங்கன் வாசித்துக் காட்டிய வேலை செய்யும் சிறுவனைப்பார்த்து சுஜாதா எழுதிய கவிதை கண்களில் நீர் வரவழைத்தது!), வசன கவியாகவும் (கவிஞர் தமிழச்சி வாசித்துக் காட்டினார்), நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் (எல்லாரும் இதை குறிப்பிட்டு பல மேற்கோள் காட்டினர்), எல்லாரும் அறிந்த கதை, கட்டுரை, நாவல் ஆசிரியராகவும் எப்படி ஆனார்," என அதிசயித்தார். என்று அவர் வீட்டுக்குச் சென்றாலும், சுற்றி பல பிரபலங்கள் பேசிக் கொண்டிருப்பதால், இவர் உள்ளே செல்ல தயங்குகிறார் என்றால், நாற்காலியைத் திருப்பிப் போட்டுக் கொண்டு, தமக்கையை மட்டும் பார்த்தவாரே நலம் விசாரித்து, இருக்கச் சொல்லி வற்புறுத்துவாராம்!

மதன் மற்றும் கமலஹாசன் பேசுகையில் எழுத்தாளர்களையும், திரைக் கதை எழுத்தாளர்களையும் சில தயாரிப்பாளர்கள் எத்தணை மோசமாக நடத்துவார்கள், பணம் பட்டுவாடா செய்யாமல், என்பதையும் சற்று காட்டமகவே சுட்டிக் காட்டினார்கள் !

பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில், கள்ளழகர் மலையில்தான் ஆண்டாளின் ஜீபசமாதியிருக்கிறது என்பதை மதுரைக்காரரான தமக்கு சுஜாதாவுடன் அக்கோவிலுக்கு செல்லுகையில்தான் தெரிந்தது என்று, செய்வன திருந்தச் செய்யும் பண்பாளர்களில் சுதாதாவை மிஞ்ச ஆள்கிடையாது என்று அடித்துச் சொன்னார்.

ஆம், கமல், பார்த்திபன், பேசமுடியாமல் கண்ணீர் விட்ட பாலு மகேந்திரா, சிவசங்கரி, வைரமுத்து, சுஜாதாவின் நாடகங்களை மேடைகளில் அரங்கேற்றிவரும் பூர்ணம் விஸ்வநாதனின் நாடகக் குழுவினர், திருப்பூர் கிருஷ்ணன், ஆல் இந்திய ரேடியோ முன்னாள் இயக்குநர் நடராஜன் போன்றோர் பேசுகையில்தான் சுஜாதா எனும் மனிதன், கோபமே காட்டாத மனிதன், பல்கலை வித்தகன்(multi tasking), இசைக் கலைஞன் சுஜாதா, என்கின்ற அவரது பல புதிய பரிமாணங்கள் வெளிச்சத்துக்கு வந்தன!

பத்து வருடங்களாக அவரை நோய்களினூடே, காலனின் வரவைத் தள்ளி வைத்து தமிழ் சேவை செய்ய அவரது மனைவியார் சுஜாதா எத்தனை மெனக்கட்டிருக்கிறார் என்பதும், பெற்றோரை தனியே விட்டு வெளிநாடுகளில் வாழ் இளைஞர்களினால் அவருக்கு இருந்த மனபாரமும், பற்பல கலைஞர்களுக்கு அவர் ஒரு சுமைதாங்கிக் கல்லாகவும் (தங்கர் பச்சான் பேசியதிலிருந்து) இருந்த செய்தியும் புதிது!

இனி ஒரு சுஜாதா வருவாரா? கலையுலகத்து விருதுகளான ஏகப்பட்ட "பத்ம.., சாகித்ய.." விருதுகளை இவருக்கு தந்து, நல்ல வேளை இவர் தரத்தை அரசாங்கம் ஜால்ரா அடிக்கும் மற்றும் பலராக்கிவிடவில்லை! சிவாஜிக்கு தேசிய விருதும், சுஜாதாவுக்கு சாகித்ய, பத்ம.. விருதுகளைவிட, அரங்கமே நிறைந்த மக்கள் கூட்டம், இந்த அஞ்சலி நாள் நிகழ்வே,பெரியதொரு விருது.

ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் வண்ண ஓவியம் அவரது மகன்களிடம் நினைவுச்சின்னமாக வழங்கப்பட்டது. அந்தப் படத்தின் தீர்க்கமான பார்வையும், அவரது பிரத்யேகமான முன் முடிக் கற்றையும் என் கண்களில் பிம்பமாக இன்னும் நிலைத்து நிற்கிறது!

வெளியே வரும் போது யாரோ தோளைத் தொட்டனர்! திரும்பிப் பார்த்தால், கணேஷ¤ம், வசந்த்தும்! "ஸாரி, ப்ரதர், அவசரத்துல கொஞ்சம் இடிச்சுட்டு போய்ட்டேன்.." என ஆரம்பிக்க, "பரவாயில்லை" என நட்புரிமையோடு கைகுலுக்கி வந்தேன். இந்தத் காலத்தில் யார் இதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கிறார்கள்? அதும் 4 மணி நேரம் கழித்து? என்ன இருந்தாலும் சுஜாதாவின் வளர்ப்பு அல்லவா? அவர்கள் அப்படித்தான்!

05 October 2007

இதுதாண்டா பாக்டீரியா!

பூமியின் மிக ஆழமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாழும் நுண்ணுயிரி பாக்டீரியா!

இந்தக் கண்டுபிடிப்பு இந்தியானா மாவட்டம், ப்ளூமிங்டனிலிருந்து (அட, அமெரிக்காவிலிருந்துதாங்க!) வெளியிட்டு, ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைகிறதால், விஞ்ஞானம் விரும்பும் தமிழ் கூறும் நல்லுலகினருக்கு இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை.

தென்னாப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்களில், நிலத்தின் சமவெளியிலிருந்து ஏறக்குறைய 2 மைல்கள் அடியில், தன்னுயிர்ப்பு பாக்டீரியாக்களைக் கண்டறிந்துள்ளனர். கதிரியக்க யுரேனியத்தை வைத்து, தண்ணீர் அணுக்களை சிதறடித்து, அதிலிருந்து சக்தியை மீட்டு உண்டு, உயிர் வாழ்கிறது, இந்த ஹை-தெக் பாக்டீரியாக்கள்!

அதிசயம் என்னவென்றால், இவை பல லட்சம் ஆண்டுகளாக அவ்விடத்திலேயே உயிர் வாழ்ந்து வருகின்றன! எனவே, நம் கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டு, செவ்வாயிலும், ஏனைய சில கிரகங்களிலும், உயிர்கள் இருக்கும் எனும் கருத்து, வலுப்பெருகிறது!

லிஸா ப்ராட் எனும் உயிரிவேதியல் (BIOCHEMIST) நிபுணர், "நிஜத்தில், நமக்கு, மூலம், காலமாற்றம், உயிர்களின் எல்லை என்று எதுவும் சரிதாகத் தெரிவதில்லை. இப்போதுதான் விஞ்ஞானிகள், புதிது புதிதாக பல நுண்ணுயிர்களை கண்டறிந்து, ஆராய்ந்து வருகிறார்கள். ஆழ்கடலடிகளிலும், பூமியிலிருந்து சுமார் அரைக் கிலோமீட்டருக்கும் மேலான இடங்களிலும் நாம் சரியாக ஆராயவில்லை! நம் கண்ணுக்குத் தெரியும் வாழ்க்கை முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் இவை வாழ்கின்றன," என்று ஆச்சரியப் படுகிறார்!

சுரங்களின் வெடிப்புகளுக்குள் தண்ணீர் விட்டு, சுமார் 54 நாட்களாக சேமித்த பலதரப்பட்ட தண்ணீர் மாதிரிகளை சேர்த்து ஆராய்ந்ததில், இக்கிருமிகள் கண்களில் பட்டுள்ளன! நாட்கள் அதிகமாக, அதிகமாக, இவை நிறம் மாறுகின்றனவா, உயிர்வாழ்கின்றனவா, உருமாற்றம் செய்கின்றனவா, என்றெல்லாம் ஆராய்ந்தனர்.

அதேபோல் நாட்கள் அதிகமான, சுரங்கத்து நீரையும், அதன் மூலப் பொருட்களின் ரசாயனக் கலவையையும் ஆராய்ந்தனர். அந்த நீர் அணுக்களை சிதைத்து (FRACTIONING) பார்க்கையில், அவை உயிரியல் கலவையால் உருவாகாமல், யுரேனியம் உள்ள பாறைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால், சிதறுபட்ட நீர்திவலைகளால் உருவானதை கண்டறிந்தனர்!

அதிக சக்திவாய்ந்த டீ.என்.ஏ. நுண்ணுயிர் சோதனை செய்தபோது, அந்த பாக்டீரியாவிலேயே, பல வகை இருந்தது தெரிய வந்தாலும், அதிகபட்சமாக, ·பிர்மிக்யூட்ஸ் எனும் நீராவியிலுருவாகும் பாக்டீரிய இனமே அதிகமாகக் காணப்பட்டது! இந்த கால அவகாச சோதனையால், இந்த பாக்டீரியாக்கள் நிலப்பரப்பிலுல்ள ஏனைய பாக்டீரியாக்களிருந்து சுமார் 30 லட்சம் ஆண்டுகளிலிருந்து, 25 லட்சமாண்டுகளுக்கு முன்னரேயே பிரிந்து, "என் வழித் தனிவழி" என்று பூமிக்கடியில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கபட்டது!

இவை வாழும் பாறைகள் சுமார் 270 லட்சம் ஆண்டுகள் முதுமையானவை! எப்படி, பூமியின் மேற்பரப்பிலிருந்த இந்த பாக்டீரியாக்கள், பல லட்சம் ஆண்டிகளுக்கு முன்பே, பிரிந்து, இப்படி பூமிக்கடியில் உயிர் வாழ்ந்து வந்துள்ளது, என்பதே, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது!

26 September 2007

கணபதி பப்பா, மோரியா!!!

ரீ.ச் பவுண்டேஷன் மூலம் பழைய கோவில்களைத் தேடிப் போவேன் என்பது பலருக்குத் தெரியும். அப்படி நான் போன ஒரு கோவில், சென்னை மகாபலிபுரம் ரோட்டிலுள்ள கோவளம் கைலாசநாதர் கோவில். எதிர்பார்த்தபடியே, புராதனமான, உதாசீனப் படுத்தப்பட்ட கோவில். கோவிலை எதிர்த்துள்ள காலி இடத்தில் இஸ்லாமியருக்கான மயானத்தை கட்டிவிட்டதால், கோவிலைச் சேர்ந்தவர்கள் அதை மூடி சுவரெடுத்துவிட்டு, தெற்குப்பக்கமாய் ஒரு வாசல் வைத்து விட்டார்கள். அப்படி இப்படி என்று சில நல்லவர்கள் சேர்ந்து, ஒரு கால பூசை நடக்கிறது. விமானம் முழுதும் மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை நீக்க மரம் கொல்லி ரசாயனம் வரவழைத்துள்ளோம். நித்திய பூசை செய்ய கோவில் பூசாரியும் தேடி வருகிறோம். சனி, ஞாயிறுகளில், பஜனை அல்லது தேவாரப் பாடல் பாட வழிசெய்து வருகிறோம். கோவில் மதில்சுவர்களைச்சுற்றி மற்றவர்கள் மூன்று சுவர்கள் எழுப்பி, ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். குளத்தியும் அசுத்தப் படுத்தி வைத்துள்ளார்கள். அதை ரோட்டரி சங்கம் மூலம் தூர்வார முயற்சி செய்து வருகிறோம்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து போன ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரை கிணற்றிலோ,குளத்திலோ, கடலிலோ போடவேண்டும். நான் வேறு ஒரு பழைய கோவிலுக்குப் போய் தகவல்கள் சேகரிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அதிசயமாய் வீட்டில் எல்லாரும், எதோ, கோவளமாமே? கேரளத்துக் கோவளம் மாதிரி இல்லையென்றாலும், காலியாய் இருக்குமாமே? அங்கே போய் மண் பிள்ளையாரைக் கடலில் கரைத்துவிட்டு வருவோமா? என்று கேட்டார்கள்! எனக்கு அதிசயமாய் போகிவிட்டது! என்ன இது அந்த கைலாசநாதர் மீண்டும் அழைக்கிறார் என்று! அங்கே எனக்கு பரிச்சயமானவர் நாராயணன். மீனவ நண்பர். பக்கத்திலிருக்கும் டாஜ் நட்சத்திர ஹோட்டலில் வரும் வெளிநாட்டவர்கள், கடலில் நீந்த செல்வது வழக்கம். அப்போது கடலில் தத்தளிப்பவர்களை காப்பற்றுவது இவரது வேலை! அப்படி கிட்டத்தட்ட 300 பேர்களுக்கு மேல் இவர் காப்பற்றியுள்ளார்! அதி ஒரு நாட்டு தூதரும் அடங்குவார்! மகிழ்ந்துபோய் பணமோ, பரிசோ தருபவர்களிடம், "எனக்காக எதுவும் செய்யவேண்டாம். என் கிராம பெண்களுக்கு காலைக் கடன் செய்ய இடமில்லை. கடற்கறையோரம் செல்வது சங்கடமான வேலை. எனவே, ஒரு கழிப்பிடம் கட்டிக் கொடுங்கள் என்று கேட்டும், பிள்ளைகளுக்கு கல்விக் கூடம், மற்றும் சுயவேலை வாய்ப்புக்காக சமுதாயக் கூடம் என்று பல கட்டிடங்களை கட்டி வாங்கியுள்ளார்! தனக்காக எல்லாம் கேட்டும் உலகத்தில், தன் ஊருக்காக இவர் கேட்க, மனமகிழ்ந்து செய்வோரும், அதிகமாகவே இவர்களுக்கு செய்ய முன் வருகின்றனர். கைலாசநாதர் கோவிலையும் இவரே பராமரித்து வருகிறார். விவேகானந்த பக்தரான இவர், கோவிலை செப்பனிட முனைந்துள்ளார். கட்டாயம் இந்த சமூக நலக் காவலரோடு, எங்கள் ரீ.ச் இயக்கமும் கை கோர்த்து, கோவிலிலேயே, மூலிகைத் தோட்டம், கல்விக் கூடம், மற்றும் மருத்துவர் வருகை போன்றவற்றையும் நாங்கள் செய்ய முயல்கிறோம்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் என் குடும்ப சகிதமாய் அங்கே வருகிறேன் என்றதும் சந்தோஷமாய் வரச்சொன்ன நாராயணன், எங்களை கடலுக்கருகில் கூட்டிக் கொண்டு பொய் விநாயகர் சிலைகளை கடலில் போட உதவினார். என் நண்பர் ராஜன் கணேஷ் கோவில் செலவுக்காக பலரிடம் சேர்த்த பணத்தை அவரிடம் குடுத்தேன். மனமகிழ்ந்த அவர், கட்டாயம் வார பிரார்த்தனையை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.

கடல் அன்று கொஞ்சம் ஆக்ரோஷமாய் இருந்தது. அதனால், அருகில் தேங்கிய நீரில், படகை விட்டு, எங்கள் அண்ணன் மகனின் படகு சவாரி ஆசையையும் தீர்த்து வைத்தார்.

சரி, பிள்ளையார்படத்தைப் பாருங்கள்! அதை செய்தது அடியேந்தான். கடலில் சேர்க்கையில் மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது, எதோ நம் பிள்ளையை நாம் வெளியூருக்கு அனுப்புவது போல்!

பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் குழந்தைகளை அழைத்து ஒரு நண்பர் வீட்டில், நிறைய களிமண் கொடுத்து அவரவரிஷ்டம் போல் பிள்ளையார் பிடிக்கச் சொன்னார்கள்! தெரியாத் தனமாய் நிறைய்ய்ய்ய்ய மண் வாங்கிவிட்டார்கள்! என் அண்ணனும், இதுக்கு எதுக்கு கவலைப் படறீங்க? கொஞ்சம் என் கையில் குடுங்க, என் தம்பி நல்லாவே சிலை செய்வான் என்று சொல்லி, ஒரு அரை சாக்கு மண்ணோடு வீடு வந்து சேர்ந்தார்! முதலில், திண்டில் சாய்ந்தபடி, புது போஸாக இருக்கட்டுமே என்று குட்டியாய் ஒன்று செய்து முடித்தேன். 11 மணிக்கு பார்த்த என் அம்மா, "அட, என்னடா இது? நிறைய மாலைகள் வாங்கி வெச்சுருக்கேன். நல்லா பெரிய பிள்ளையாராப் பண்ணுடா!," என்று 'அன்பு'க் கட்டளை இடவே, ஆரம்பித்தது இரண்டாம் பிள்ளையார் சிலை செய்தல்! நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! நல்லா இருந்தால், "கணபதி பப்பா, மோரியா, கணபதி பப்பா, லவ்கரியா", என்று ஜோராக ஒரு முறை சொல்லி கூவி அழையுங்கள்! மராட்டியர்கள் அப்படித்தான் கடலில் போடும்போது கூவுவார்கள் (கணபதியே, திரும்பிவா, சீக்கிரமாய் வா, என்று அர்த்தம்). என்ன கூவிட்டீங்களா? எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பிள்ளையாரை எடுத்துக் கொண்டு கிளம்புகையில் அவரை தலையில் வைத்துக் கொண்டு, கணபதி பப்பா...கூவினார்கள். என் பெண் தன் சைசுக்குத் தகுந்த மாதிரி, பிள்ளையாரின் வாகனமான 'எலி' யாரை தலையில் எடுத்து வைத்துக் கொண்டாள்! சும்மா அதிருதுல்ல?

04 September 2007

ஆத்ம விசாரம்!

பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகத்தினருக்கு ஒரு ஆத்ம விசாரம்!
அன்புள்ள தினசரி, நாளிதழ்கள், வார, மாத பத்திரிகை மற்றும் தொலைகாட்சி சானல் உறுப்பினர்களுக்கு, சற்றே சிந்தித்துப் பாருங்கள்!


நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கையிலேயே அனந்தநாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மேஜர்.மனீஷ் பிதாம்பரேவின் தகனம், ராணுவ மரியாதைகளுடன் நடந்து முடிந்திருக்கும்.


சமீபத்தில் 'சஞ்சய் தத் ஜாமீனில் விடுதலை' என்பதை முதல் பக்க செய்தியாகவும், தொலைக் காட்சியிலோ, நாள் முழுவதும், கிளிப் பிள்ளையின் வரட்டு செய்தியாகவும், பலமுறை வந்திருக்கும். மற்றும், வெறும் 'முன்னா', தான், 'பாய்' இல்லை' (குழந்தை, குண்டர் இல்லை எனும் பொருள் பட), '13 ஆண்டுகளின் வனவாசம் முடிகிறது?', துப்பாக்கி வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டு இருந்தாலும், தடா குற்றம் ரத்து," என்றெல்லாம் செய்திகளை நாள் முழுதும், ஏன் வாரக் கணக்காக காட்டிக் கொண்டிருந்தீர்களே? அதற்கு மகுடம் வைத்தார்போல், சல்மான் கான் (மானைச் சுட்ட குற்றத்துக்காக கோர்ட் வாசல் மிதித்த அதே சல்மான் கான் தான்!), "சஞ்சய் மிகவும் நல்லவர்; அவர் பரிசுத்தமாக வெளியே வருவார், " என்றும், அமிதாப் போன்றோர், " தத் குடும்பமும் நாங்களும் பால்ய காலத்திய நண்பர்கள், சஞ்சய் நல்ல பிள்ளை; அவர் என் மகன் அபிஷேக்கிற்கு அண்ணன் போல,"என்று சொல்வதையும், அவர் சகோதரியும் எம்.பி யுமான ப்ரியா தத், "நாங்கள் இன்று நிம்மதியாக தூங்கலாம்; இச்செய்தி மிகப்பெரிய விடிவு," என்றெல்லாம் பேசியதை மீண்டும் மீண்டும் செய்திகளாக்கினீர்களே?

அதே நேரத்தில், மற்றொரு சானலில், ஷாருக்கானா, அமிதாபா, யார் 'கோன் பனேகா க்ரோர்பதி' யை நன்கு நடத்தினார்கள் என்பதையும், க்ரேக் சாப்பல் இந்திய கிரிக்கெட் அணியை பற்றி விமர்சித்ததையும், இன்ன பிற அவலங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லிவந்தாலும், "சஞ்சய் தத்" பீனி·க்ஸ் பறவைபோல் மீண்டு வந்ததையே, அனேகமாக கிட்டத்தட்ட நாட்கள் கணக்காக தொடர்ந்து சளைக்காமல் காட்டிக்கொண்டிருந்தன!

எதேச்சையாக பி.பி.சி சானலைப் பார்க்கையில் தான், இந்த அதிர்ச்சிகரமான செய்தியை கண்டேன்! "சோஹல் பைசல்" எனும் முஜாஹிதீனின் பயங்கரவாதி, அனந்தநாகில், இந்திய ராணுவ மேஜர் ஒருவரின் நேரடி தாக்குதல் மற்றும் உயிர் தியாகத்தால், கொல்லப்பட்டான், எனும் செய்தி! அத்துடன் மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்!


நடுநிசியில் தூக்கம் வராமல், புரண்ட போது டீ.வி.யை சுவிட்சினால், அது, மீண்டும் "சஞ்சய் தத் (?!) மகிமை பாடிக்கொண்டிருந்தது! சஞ்சய் தத் எப்படி கோர்ட்டாரிடம், " நான் எனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவன்; என் மகள் அமெரிக்காவில் படிக்கிறாள், அவளுக்கு நான் தான் பணம் அனுப்ப வேண்டும், "என்றெல்லாம் மன்றாடியதை காட்டினார்கள்! அவர் தனது ராசியான நீல சட்டை அணிந்திருந்தது, எப்படி கோவில் கோவிலாக போய் ப்ரார்த்தனை செய்கிறார், என்றெல்லாம் விலாவாரியாக காண்பித்தார்கள்.
மும்பை குண்டு வழக்கின் குற்றவாளி, ஆயுதம் கடத்தியதற்கு சிறை சென்றவன், இன்று ஒரு பெரிய கதாநாயகன் போல் உலவி வருவதை வெட்கம் கெட்ட சானல்காரர்கள் காட்டிவருகிறார்கள்.ஆம், சஞ்சய் தத்துக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்;சரி. அவர் எந்த தீவிரவாத நடவடிக்கையும் செய்யவில்லை, ஏ.கே.47 ரக துப்பாக்கி வைத்திருந்தது பயங்கரவாதிகள் பாஷையில், "சிறு பிள்ளை பொம்மை", ஆம், அவர் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார், சரி. மறந்தேவிட்டேன், அவர், "காந்திகிரி செய்து, மகாத்மாவானார் (படத்தில்..!) எல்லாம் சரி.

மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது ரகசிய செய்தியாளர்களிடமிருந்து தீவிரவாதிகள் இருக்குமிடத்தைப் பற்றிய தகவல் கிடைத்ததுமே, நொடிப்பொழுதும் வீணாக்காமல், அவர்கள் கூடாரத்தை தாக்கி, ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவனான சோஹல் பைசலைக் கொன்றார். அந்த சண்டையில், தனது உயிரை கொன்றது எது தெரியுமா? தீவிரவாதிகளால் "பொம்மை" என்று கேலி செய்யப்படும் ஏ.கே.47 க்கிலிருந்து வந்த குண்டு ஒன்றுதான்! மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது மனைவியும், 18 மாதமேயான மகளும் இருக்கின்றனர்! அவர் ஒருபோதும், "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்," என்று தயங்கவில்லை. அவர் தனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் என்று யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் மரணத்தையோ, அல்லது, கொடி போர்த்தி அஞ்சலி செய்த காட்சியையோ, எந்த சானலும் நேரடி ஒலிபரப்பவில்லை! காரணம், ஒரு முன்னாள் போதை பழக்கத்தினன், குண்டு வெடிப்புக்கு சம்பந்தமுள்ள குற்றவாளி, எம்.பி, தந்தை, எம்.பி சகோதரி கொண்ட, 50 கோடி சொத்து கொண்ட, பணக்கார மகன்கள் வயசில் செய்யும் குறும்பு அதிகமாக துப்பாக்கி ஒளித்து விளையாடிய, காந்தி பேச்சை கேட்பதுபோல் (காசு வாங்கிக் கொண்டுதான்) நடித்த ஒரு மகா, மகா புருஷனான சஞ்சய்தத் மகராஜை பின் துரத்தி படம் எடுப்பதில் எல்லா சானல்காரர்களும் பிஸியாக இருந்துவிட்டார்கள்! அதனால்தான் மனீஷ் போன்ற 'சாதாரண' ராணுவ தியாகிகளை படமெடுக்கவில்லை! ஆனால், மறுபக்கம், இங்கே சஞ்சய் தத் விஷயத்திலோ, தடா சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி அவரை குற்றவாளியை தப்பிக்கவைத்தோம்," என்று ஒரு பெரிய பணக் கும்பல் சந்தோஷப்பட்டு, மிட்டாய் வழங்கிக் கொண்டிருந்தது! அவர் தாய் தந்தையர், வானத்திலிருந்து அவர்களது "மகனை" வாழ்த்திக்கொண்டிருப்பார்கள், என்ற ரன்னிங் கமெண்டரி வேறு! தூ!


மேஜர் மனீஷின் பெற்றோர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்; தியாகி மகனின் நினைவுகளுடன், அவர்தம் மனைவி மக்களுடன், ஒரு அற்ப பதக்கமும், பென்ஷனும்பெற்றுக்கொண்டு! அந்த பெண்குழந்தை இனி அவளது தந்தையை நேரில் காண முடியாது!


இதைப் படிக்கும் ஒலி, ஒளி காட்சியாளர்கள், இனியேனும் மனசாட்சியை மாட்டிக்கொண்டு, பின்னர் காமெராவையும் மைக்கையும் கையிலெடுத்தால் நல்லது!நம் நாட்டு ராணுவ அதிகாரியின் தியாகம் கேவலம் ஒரு வெளிநாட்டு சானல் மூலம் நம் மக்களுக்கு தெரியவருகிறது! இந்திய தொலைக் காட்சியாளர்களே விழித்துக் கொள்வீர்களா?


(இது எனது மின்னஞ்சலில் வந்த ஒரு உண்மை செய்தியின் தமிழாக்கம், படித்து, ஒருநாள் முழுதும் உணவு உள்ளே செல்லவில்லை. நல்லவேளை எங்கள் வீட்டில் கடந்த 5 வருடங்களாக, தொ(ல்) லைக் காட்சி பெட்டியை ஒழித்துக் கட்டிவிட்டோம்! இந்த கண்ராவியை எல்லாம் பார்க்காமலிருக்க.

மனீஷ் போல் எத்தனையோ தியாகிகளின் வாழ்க்கை நம் கண்களுக்கு காட்டப் படுவதேயில்லை. இதில் புதிதாக இன்னும் பல சானல்கள் வேறு! ஹ¥ம்!

10 August 2007

உழவாரப் பணி-Heritage Wardens!

உழவாரப் பணி செய்யும் அன்பர்களுக்கான பணிவிளக்கப் பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கத்தை REACH FOUNDATION, 5-8-2007 ஞாயிற்றுக்கிழமை, சென்னை தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோடில் உள்ள தத்வலோகா கலையரங்கத்தில் நடத்தியது.

உழவாரப்பணி செய்யும் அன்பர்களுக்கு சந்திரசேகரன் அளித்த முன்னுரை:-

Rural Education And Conservation of Heritage என்பதன் சுருக்கம் தான் REACH. கிராம மக்களுக்கு கலாச்சாரமும், முன்னோர் விட்டுச் சென்ற பல செல்வங்களைப் பற்றிய பகுத்தறிவை ஊட்டவும், அந்த கலாச்சாரச் சின்னங்களான புராதன கோவில்கள், மண்டபங்கள், முற்றம் வைத்த வீடுகள், கல்வெட்டுக்கள், மற்றும் பழங்கலைகளைப் போற்றி பாதுகாக்கவும், தோன்றியது REACH.


கடந்த June 16 ம் நாள், எங்கள் இணையதளமான conserveheritage.org யின் திறப்பு விழாவும், இணையத்தின் மூலம் கல்வெட்டுப் படிப்பை நடத்தத் துவக்க விழாவும், ஆளுநர் மாளிகையில், திரு. சுர்ஜித் சிங் பர்னாலா துவக்கி வைத்தார்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 40,000 கோவில்கள் சிதிலமடைந்து உள்ளதாக தகவல்கள் உள்ளன. எங்கே அவை? யார் அவற்றை கண்டுபிடித்து சொல்வார்கள்? யாரிடம் சொல்வார்கள்? சொல்லி என்ன பயன்? ஒரே தொகுப்பாக, வணமாக, கோவில்கள் தொகுப்பு மஞ்சரியாக, இணையதளத்தில் இந்த செய்தி உலகம் முழுதும் போனால்தான், மண்ணின் மைந்தர்கள் பலர், அவற்றை சீர் செய்ய பொருளுதவியோடும், அருளுதவியோடும் ஓடிவருவர். அரசாங்கத்துக்கும், பொது மக்களுக்கும் இந்த பிரச்னையின் ஆழம் தெரியும். அதை நோக்கித்தான் இந்த முதல் படி.


மாணிக்கவாசகர் ஆரம்பித்து, ஆண்டாண்டு காலமாய் இன்றும் தொடரும் கோவில்களை சுத்தம் செய்துவரும் மாபெரும் பணியை ஆற்றிவரும் அன்பார்ந்த அடியார் நீங்கள். உங்களுடன், அடியார்க்கு அடியாராய் இன்று அறிவியலும், தொழில்நுட்பமும், வரலாறும் கைகோர்க்கக் காத்திருக்கின்றன! ஆம், REACH என்பதற்கு போய்ச் சேருதல் என்றும் பொருள் கொள்ளலாம்.


அறிவியலையும், தொழில்நுட்பத்தையும், உங்கள், ஆர்வம், ஆக்கம் மற்றும் செயல்களோடு சேர்த்து கோவில்களை செப்பனிட என்ன செய்ய வேண்டும் என ஒருசேர சிந்திக்கும் நன்னாள் இந்த பொன்னாள்!


நாம் சேர்க்கும் சிதிலமடைந்த கோவில்களை பற்றிய தொகுப்பு முதலில் வெளியுலகத்திற்கு தெரிய வேண்டும். தமிழகம் மட்டும் இப்படி என்றால், இந்தியா முழுதும் சுமார், 2 லட்சம் கோவில்கள் சிதிலமடைந்து போயுள்ளதாகச் சொல்கிறார்கள். நமது செயல்கள் பரந்து விரியும் தருணத்தில், நாம் தமிழகம் மட்டுமன்றி, பரதக் கண்டம், ஏன், இந்த உலகில் எங்கு நம் கலாசாரச் சின்னங்கள் சீரிழந்தாலும், அவற்றை சீர் செய்யும் பரந்த சிந்தனை கொள்ள வேண்டும். இதுவே REACH FOUNDATIONன் தொலை நோக்காகும்.

எங்கெல்லாம், பாழடைந்த கோவில்கள் உள்ளன எனும் தகவல் நம்மிடம், ஏன் அரசிடமும் இல்லை. அதேபோல், சீர்செய்யும் நல்லெண்ணம் இருந்தாலும், தவறான அணுகுமுறையால், பழங்கலைகள், ஆகம விஞ்ஞான வழிமுறைகள், செலவுகள் ஆகியவை நிலையில்லாமல் போய்விடுகின்றன. உழவாரப்பணி செய்பவர்களுக்குத் தான் தெரியும், எங்கெங்கே, பாழடைந்த கோவில்கள் உள்ளது என்று!

வரலாறு மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பழங்கட்டிடம் கட்டும் வல்லுநர்கள் ஆகியோரையும், இந்த உழவாரப்பணி செய்யும் அன்பர்களையும் ஒன்று சேர்த்தால், தகவல் பறிமாற்றம் செய்துகொள்ளலாம் எனும் ஆர்வத்தாலேயே, இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது!

மிக நல்ல வரவேற்பு! கன்யாகுமரி, திருச்செந்தூர், முதல் கும்பகோணம், திருவண்ணாமலை, திருநல்வேலி, தரங்கம்பாடி வரை, ஏறத்தாழ 180 பேர் கலந்து கொண்டனர்!

குத்துவிளக்கு ஏற்றி விழா ஆரம்பமான பின்னர், "எல்லாரும் வாருங்கள், எல்லாரும் சேருங்கள், ஈசனை அன்பு செய்வோம்," எனும் சுத்தானந்த பாரதியின் பாடலை இறைவணக்கமாகப் பாடினார், மயிலை ஓதுவார், திரு. ஸற்குருநாதன்.

REACHன் தலைவர் தொல்பொருள் ஆய்வாளர் தியாக. சத்தியமூர்த்தி வரவேற்று பேசினார். கேரள அரசின் முன்னாள் தொல்பொருள் துறை இயக்குநராய் இருந்தவரும், இந்திய தொல்பொருள் துறையில் தலைவராக இருந்தபோது, சமீபத்து சுனாமித் தாக்குதலில், மகாபலிபுரம் செல்லும் சாலையிலுள்ள புலிக்குகைக்கு அருகே வெளிவந்த சங்க காலத்து முருகன் கோவிலை மீட்டவரும், 4000 வருடங்களுக்கு முன்பே தமிழ் பிராம்மி எழுத்துக்கள் இருந்ததை திச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியால் கண்டெடுத்தவரும், தஞ்சை கோவில் கோபுரத்தினுள்ளே இருந்த சோழர் கால fresco ஓவியங்களையும், அதன் மேல் இருந்த நாயக்கர் கால ஓவியங்களையும் ஒரு சேர மீட்டு, வெளியே பிரகாரத்தில் நிரந்தரமாக அவற்றை போலவே அதே அளவில் ஒரு கண்காட்சியையும் ஏற்படுத்தித் தந்தவரும், சமஸ்கிருத மொழியில் முனைவர் பட்டம் பெற்றவரும், இன்னும் எத்தனையோ தொல்பொருளாராய்ச்சிகளை செய்தவரும், செய்து வருபவர் REACH foundationனின் தலைவர் டாக்டர்.திரு. தியாக.சத்தியமூர்த்தி.


சுண்ணாம்பு, செங்கல், அந்த இடத்திலேயே கிடைக்கும் கற்கள் போன்றவற்றாலேயே, அழகான கோவில்களை சீர்செய்துவிடமுடியும் என்றும், தென்னகத்தில் மட்டும், ஒரு கிராமத்துக்கு என்று 3 கோவில்களாவது இருக்கும்; எனவே, சுமார் 40,000 முதல் 50,000 பாழடைந்த கோவில்களை சீர் செய்யும் மாபெறும் பணி நமக்கு உள்ளது என்றும் பேசினார்.


விழாவின் சிறப்பு விருந்தினரான சுற்றுலாத் துறை செயலர் திரு. ஸ்ரீதரன் IAS அவர்கள், "கடவுளின் சொந்த நாடு என்று கேரளத்தை மட்டுமின்றி, மொத்த நாட்டையே சொல்லலாம், அத்தனை கோவில்கள் உள்ளவை நம் நாடு," என்று பேசினார்.

தத்வலோகா அரங்கத்தை இலவசமாக குடுத்துதவிய அதன் தலைவர் திரு. ராமச்சந்திரன், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனது மண்டபத்தை தருவது மகிழ்ச்சி அளிக்கிறது," என்றார்.
உழவாரப்பணி குழுக்களின் சார்பாக பேசிய திரு.கோமல். வி.சேகர், செப்பனிடும் போது, மக்கள் படும் அவஸ்தைகளையும், பாழடைந்த கோவில்களின் பணியாளர்கள், மற்றும் அர்ச்சகர்கள் படும் அல்லல்களையும், பணக்கஷ்டங்களையும் உணர்ச்சி பூர்வமாக விவரித்தார்.
ரீச் நிர்வாகிகள் H. சந்திரசேகரும், ஹரிஹரனும், தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்கள்.

தலைமையுரை ஆற்றிய சிலை மீட்ட செம்மல், கலைமாமணி டாக்டர்.திரு.நாகசுவாமி பேசுகையில், "தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி எனும் கூற்று, வெறும் புகழ்ச்சி அல்ல, நிஜ கூற்றே! என்று சரித்திர ஆதாரங்களோடு விளக்கினார். உதாரணமாக, 2500 வருடங்களுக்கு முன்னால் செய்த கிரேக்க நாணயத்தில், ஒரு புரம் பலராமனின் உருவமும், மறு பக்கம் கிருஷ்ணனின் முகமும் பதிந்திருந்ததாம்! தரங்கம்பாடி மாசிலாமணி நாதர் கோவிலை பற்றிய ஆவணப் படத்தை காட்டி, சீர் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்றும் அறிவுரை பகர்ந்தார்.

தமிழக தொல்பொருள் ஆய்வுக்கழகத்தலைவராய் இருந்தவரும், பன்னாட்டிலும் இன்னாட்டுப் பெருமையை இன்றும் பறை சாற்றி வருபவர் டாக்டர். திரு. நாகசுவாமி. சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். புகழூரில், முதல் நூற்றாண்டுச் சேரர் கல்வெட்டுக்கள், கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள சோழர்கள் அரண்மனை, மதுரை திருமலை நாயக்கர் மகால், தரங்கம்பாடியிலுள்ள டச்சுக் கோட்டை, எட்டயபுரத்திலுள்ள சுப்ரமணிய பாரதியார் பிறந்த வீடு, பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனின் அரண்மனை இருந்த இடம், இப்படி எத்தனையோ பொக்கிஷங்களை நமக்கு மீட்டு நாட்டுக்கு அர்ப்பணித்தவர். பூம்புஹாரில் முதன் முதலாக கடலுக்கடியில் தொல்பொருள் ஆராய்ச்சியை செய்தவரும் திரு. நாகசுவாமி ஆவார்கள். புகழ் பெற்ற லண்டனிலிருந்து நடராஜர் சிலையை மீட்க, இந்தியாவிலிருந்து முக்கிய சாட்சிவல்லுநராக டாக்டர். நாகசுவாமி சென்ற போது, அவரது திறனை, லண்டன் நீதிபதியே வியந்து மெச்சியுள்ளார். கரூர், ஆலங்குளம், கொர்க்கை, போன்ற இடஙளில் தொல்பொருள் ஆராய்ச்சி மேற்கொண்டு, பல அரிய செய்திகளை தந்தவரும், இவரே! தமிழகத்தில் பல இடங்களில் அருங்காட்சியகம் அமைத்தவரும், சிதம்பரத்தில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்.கபிலா வாத்சாயனருடன் சேர்ந்து, நாட்யாஞ்சலி விழாவைத் தோற்றுவித்தவரும், தமிழகத்தில் முதலில் கல்வெட்டு படிக்கும் துறையை ஆரம்பித்தவரும், டாக்டர்.நாகசுவாமியே! சரித்திர புத்தகங்கள், நாடகங்கள் என சுமார் 150 படைப்புகளுக்கு இவர் ஆசிரியர். BBC உட்பட, இன்றும் பல வெளிநாட்டு வானொலி மற்றும் தொலைகாட்சியினர் இவரது பேட்டிகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த விழாவிற்கு அவரை அழைக்கச் சென்றபோது, தரங்கம்பாடி கோவிலைப்பற்றியும், சமீபத்தில் அவர் சென்று வந்த அயோத்தி ராமர் கோவிலைப் பற்றியும், ஒரு சிறு குழந்தையின் குதூகலத்துடனும், அதே சமயம் கருத்து செரித்த, முதிர்ந்த விஷயங்களை சொன்னது இன்றும் நினைவில் நிற்கிறது. இத்தனை பெருமைக்கு உரியவர், "சிலை மீட்ட செம்மல்", கலைமாமணி. டாக்டர். நாகசாமி அவர்கள்.

தொல்பொருள் ஆய்வாளர் ஸ்ரீராமன் தனது தொகுப்பான, "பழங்கலை கட்டிடங்களை மீட்க, பொதுமக்களின் பங்கு," என்பதை அழகான Power Point ஆவணமாக காண்பித்து உரை நிகழத்தினார்.

பழங்கோவில்களை சீர் செய்யும் போது செய்யக் கூடாதவை/ செய்ய வேண்டியவை:

· கூரையை மழைநீர் வராமலிருக்க பூசுகிறேன் என்று அதிக தளங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கிப் பூசாதீர்கள்! அதிக எடை ஏறி, மொத்த தூண்கள் சரிந்துவிடலாம்!
· அங்கு கிடைக்கப் பெறும் கற்களை வைத்தே சீர்செய்யலாம்.
· சிமெண்ட் உபயோகிக்காதீர்கள்
· சிறு செடிகள், கொடிகள், மரங்கள், விமானத்திலோ அல்லது வெறு எந்த பகுதியிலும் வளர விடாதீர்கள். உடனே, பிடுங்கி எறிந்துவிடுங்கள்.
· சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருங்கள். பூச்செடி, துளசி, வில்வம் போன்றவற்றை சுற்றுப்புரத்தில் வளர்ப்பதன் மூலம், தூய்மையாகவும் இருக்கும், அவை பூஜைக்கும் உதவும்.
· நீர் வரத்து உள்ள வழிகளை சீர்செய்யவும். அவை தண்ணீரை நேராக குளத்தில் சேர்த்துவிடும். இதன் மூலம், தரையினடியில் நீர் அதிகரிக்கும். என்றும் குளம் சுத்தமாக இருக்கும்.
· மழைகாலங்களில் மதில்சுவர் மற்றும் பழைய விமானங்கள் கோபுரங்களின் மேல் ஏற முயலாதீர்கள். சரிந்து விழ, வாய்ப்புகள் உண்டு.
· அக்ரலிக், காவி, எனாமல் பெயிண்டுகளை உபயோகிக்காதீர்கள். அவை கட்டிடத்தை பாழ்படுத்திவிடும். சுற்றுப்புற சூழலுக்கும் பாதுகாப்பற்றது.
விழாவை தொகுத்து வழங்கிய சந்திரசேகரன் நல்ல தமிழில் பேசினார். மேற்கோள்கள் காட்டி, பேசியது நல்ல வரவேற்பைப் பெற்றது.

ரீச் நிர்வாகிகளுள் ஒருவரான திரு. சுந்தர் பரத்வாஜ் நன்றி கூர, தேசிய கீதத்துடன் விழா இனிதே நிறைவுற்றது.

இனி வரும் நாட்களில், இந்த உழவாரப்பணியினரைக் கொண்டே, அந்தந்த ஊரிலுள்ள கோவில்களை சீர் செய்ய முயற்சிப்பது. விபூதி, குங்குமம், கோவில்களுக்கு வேண்டிய பொருட்கள் தயார் செய்வதன் மூலம் சுயவேலை வாய்ப்பு குழுக்கள், அவர்தம் குழந்தைகளுக்கு இலவசமாக ஓராசியர் பள்ளி, மற்றும் மூலிகை, இயற்கை உர காய்கறிகள் போன்றவற்றை பயிரிட பயிற்சி இவற்றை போதித்து, கோவில், கோவிலைச் சார்ந்த மக்கள் எனும் நல்லுலகம் படைப்பதே REACH Foundation ன் இளைஞர்கள் குழுவின் தொலை நோக்காகும்.