திருக்கோவூர்: செவ்வாய் ஜனவரி 17 திரு.ஞான வெட்டியான் "தாள் எறியால் நெற்றியில் வடு' எழுதிய நிகழ்ச்சி, மீண்டும் நடந்தேறியுள்ளது!! ஆனால், அதை சோழன் செய்யவில்லை; நவீன கோயில் செப்பனிடுபவர்கள் செய்துவிட்டார்கள்! இது போல் எத்தனையோ கோயில்கள். சமீபத்தில் சென்னை போரூர் அருகேயுள்ள திருக்கோவூர் கருணாகரப் பெருமாள் கோயிலை சுத்தமிடச்சென்ற [கோயில்சுத்தம் செய்வோர் (temple cleaners yahoo group) யாஹ¥ குழுமத்தால்] இளைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது!! கோயில் மதில்சுவற்றையொட்டி பல கல் தூண்கள் விழுந்து கிடந்தன! கோயில் சுத்திகரிப்போர் பற்றிய செய்தியை, இங்கு காணலாம் http://templesrevival.blogspot.com
இக்கோயிலின் மிக அருகே பாடல்பெற்ற ஸ்தலமான கோவூர் சிவபெருமான் கோயில் உள்ளது. தியாகராஜ சுவாமிகள் தனது நண்பர் சுந்தரேச ஐயரைக் காண வருகையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் மீதான 5 பாடல்கள் கொண்ட "கோவூர் பஞ்சரத்ன கீர்த்தனைகள்" பாடிய ஸ்தலம். 1968ல் இக்கோயிலின் புனருத்தாரணப் பணிகளின் போது, அருகிலுள்ள பெருமாள் கோயில் தூண்கள், நன்றாக இருந்த காரணத்தால், அவ்ற்றை வைத்து, இக்கோயிலைச் செப்பனிட்டுள்ளனர், அதிகாரிகள். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே, இரு கோயில்களுமே, ஒரே மாதிரியாகச் சோழர்களால் கட்டபெற்று, இன்று, ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய் எனும் கதையாக ஆகிவிட்டது!!
இது போல், பல கோயில்கள், சரித்திர செய்தி சொல்லும் கலைகள், கல்வெட்டுகள், அழிந்து வருகின்றன! அதை மீண்டும் எழுச்சியுறச் செய்யும் பணியில் சில குழாம்கள் பணி செய்துவருகின்றன! அவற்றில் ஒன்று, மேற்கண்ட temple cleaners குழு. மேலும், வடபழனி சிவன் கோயிலில் உள்ள உழவாரப்பணி நற்பணிமன்றம், திருவான்மியூரைச் சேர்ந்த ஆடலரசன் என்பவரின் கீழ் இயங்கும் குழு, மாம்பலம் சாய் சமிதி திரு.நாகசுப்ரமணியனின் குழு, போன்ற குழுக்கள், கேட்பாரற்றுக்கிடக்கும் பல கோயில்களுக்குச் சென்று, அதனைச் சுத்தம் செய்து, கோயிலமைந்த ஊர் மக்களை அழைத்துப் பேசி, கோயிலை நிர்வாகத்தை மீண்டும் ஏற்படுத்தும் பணியை இக்குழுக்கள் செய்துவருகின்றன. என்னால் முடிந்தது, எல்லாக் குழுவினரையும் ஒன்று சேர்க்கும் முயற்சி! மீண்டும் அடுத்த பதிப்பில் பழைய படி புள்ளமங்கை சிற்பங்களைக் காண, சந்திப்போம்...!
5 comments:
நாவுக்கரசர் பெருமான் உழவாரப் பணியே தலையாயப் பணியாய் கொண்டவர். சீக்கியர்களும் கோவில் துபுரவு பணிகள் இறைவனுக்கே ஆற்றும் சேவைகளாகக் கொள்வர். இத்தகைய பணியை மேற்கொள்ளும் குழுவினருக்கும் அவர்களை ஒருக்கிணைக்கும் தங்களுக்கும் வளரும் தமிழகத்தின் நன்றிகள் உரியன.
நல்லதோர் பணி.
அனைத்தும் இனிதே நடந்தேற இறைவன் அருளட்டும்.
வாழ்க! வளர்க!
தங்கள் ஆசிகளுக்கு நன்றி மணியன். நாவுக்கரசரின் சீரிய உழவாரப்பணிபற்றி திரு.சேஷத்ரி கோகுல் அவர்கள் www.varalaaru.com சமீபத்திய வெளியீட்டில் அழகாக எழுதியுள்ளார். அதில் நான் சொன்ன குழுக்களைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
தங்கள் ஆசிகளுக்கு நன்றி ஞானவெட்டியான் அவர்களே. தங்கள் கட்டுரைகளை ரசித்துப் படிப்பவருள் நானும் ஒருவன். எனது மற்ற பதிப்புகளை பற்றி தங்களது விமிர்சனத்தை எதிர்நோக்குகிறேன். நன்றி.
great work keep it up!
Post a Comment