09 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-5.



அடுத்து, புள்ளமங்கைக் கோயிலில் சமத்துவ நோக்குகொண்ட சிற்பங்கள் உள்ளன!! ஆம், சிவன் கோயிலில் ராமாயணக் காட்சிகள்!!
ஒரு சிலவற்றைப் பார்ப்போமா?
வில்லெடுத்த ராமனின் காட்சி! அந்த வில்லை எடுத்து தூக்கிப் பிடித்த அதே ஜோரில் ஒரு மந்தஹாசப் புன்னகை புரியும் ராமன்! ராவணனை அழிக்க ஒரே ஒரு அம்பை வீசுகிறான்! அந்த நொடியில் அவன் நிற்கும் அழகே அழகு! வீரு கொண்ட நிமிர்ந்த நோக்கு. அருகில் சீதை(?) வியக்க, சுற்றுமுள்ள வானரங்கள் ஆச்சரியப்பட, வலது கால் கீழ் அசுரர்கள் பொடிபட, மேலிருந்து அவதாரத்தின் நோக்கம் நிறைவேறப் போவதால், வாழ்த்தும் தேவர்கள். கடவுள் மிகப் பெரியவன் என்பதையோ, அல்லது விசுவரூபத்தைக் குறிக்கவோ கைகள் ஆச்சரியக் குறியை காட்டுவதுபோல், சிற்பி இக்காட்சியை வடித்துள்ளான்.


மற்றொரு சிதைந்த ஆனால் சிந்தை கவர்ந்த சிற்பம், சூர்ப்பனகை மூக்கறுப்பு! ஒரு பக்கம் பயந்து போன சீதையை ராமன் தேற்றிக்கொண்டிருக்க, மறுபக்கம், ஜடைமுடிவிரிந்த நிலையில், அகோரமாகக் கத்தும் சூர்ப்பனகை மூக்கறுப்பு வைபவம், இலக்குவனால், இனிதே ?? :-) நடைபெறும் காட்சி! எளிமையான ஆனால், அற்புதமான படைப்பு இது!

08 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-4


Action Still of a stunt scene!! புள்ளமங்கை கோயிலில் இதுவும் ஒரு கல்லோவியம்!
போர் காட்சி! குதிரையில் ஏறிய வீரன், பின்னால் துரத்திவருகிற யானையை அடக்கும் காட்சி. யானையின் கோபமும், அங்குசத்தால் தாக்கியபடியும், குதிரையையும் ஓட்டிக்கொண்டே போகும் வீரனை ஒரு சேரக் காட்டும் இக்கல்லோவியம்,காலத்தால் சிறிது சிதைந்திருந்தாலும், கோலத்தால் நம் மனதை வெல்கிறது அன்றோ?


மிக அருகே, தூண்களின் இரு புறமும் கீழ் நிலையில் பல யாழி முகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமின்றி பார்க்கும் கண்களூக்கு, அந்த யாழியின் வாய்க்குள் ஒரு உருவம் இருப்பது புலப்படாது! சற்றே நெருங்கி உற்றுப் பாருங்கள்! ஆ! யாழி வாயை கிழித்துக் கொண்டு ஆயுதம் ஏந்திய ஒரு வீரன் வெளியே வருகிறான்!! எனக்கென்னவோ அது காளிங்கனை சம்ஹாரம் செய்யும் கண்ணனாகவே தோன்றியது! இந்த அற்புத படைப்பின் மொத்த அளவும், நம் கைக்குள் அடங்கிவிடும்!!

06 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-3


அடுத்த ,கலைச் சதுரம், ருத்ர தாண்டவம்!! கல்லினை அடிக்கும், உளிக்குக் கூட உக்ரம் ஏற்பட்டாலொழிய, இத்தகைய ஒரு சிற்பத்தை வடித்திருக்க இயலாது! கோர ரூபம், ஜடை முடி குலுங்க, சகல அவயங்களும் ஆட, ஒவ்வொரு கையும், உடுக்கு, மணி, ஆயுதங்கள் ஏந்தி, ஆட, இடது பக்கத்து ஒரு கை மட்டும், கலைஞனின் தனது ஆச்சரியத்தை, சிவபெருமானின் ஒரு கையில் முத்திரையாகப் பதித்து விட்டான்! இறைவம் மிகப்பெரியவன் எனும் தத்துவத்தைக் கூட அந்த கை காட்டுவதாக அர்த்தம் கொள்ளலாம்!

சிவனின் கீழே ஒரு யானை சிரம் தாழ்ந்து தலை குனிவதைக்காட்டி, ருத்ரனின் விசுவரூபத்தை நமக்கு சிற்பி எவ்வளவு எளிமையாகக் காட்டிவிட்டார்!!
(இது கஜசம்ஹாரமூர்த்தி வடிப்பு என்பது பின்னாளில் எனக்குத் தெரிய வந்து, இந்த வரியை சேர்த்துள்ளேன். படிப்பூட்டியவர்க்கு நன்றி.)

சரி, ஓவியம் வரையும் போது, 'balancing' என்று ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வார்கள். ஒரு செய்தியோ, அல்லது நிறமோ மிக அதிக அளவில் வரையப் படும் போது, அது மிகையாகத் தோன்றும்! எனவே, அதை சரி செய்ய, contrast நிறங்களோ, அல்லது, வெண்மையோ, ஓவியத்தில் புகுத்தப்படும். அதே பாணியை, இங்கே, சிற்பக் கலைஞரும் பின்பற்றியுள்ளார்! ருத்ரம் கல்லில் மிகை படுவதை, அழகான நகைச்சுவையும், வாழ்வியலும் புகுத்தி, நம்மை வியக்க வைக்கிறார்!

சிவனின் இடப்பக்கம் கீழே,பாருங்கள்! குழந்தை ஒன்று, தன்னை மறந்து, சிவதாண்டவத்தைக் காணும் பெண்ணின் கைகளிலிருந்து தாவிக்குதிக்க, அதை அவசரமாக ஏந்த மற்றொரு பெண் விரைவதையும், எத்தனை அழகாக வடித்துள்ளார்? நாட்டியத்தைக் காணும் பெண்ணின் மனதில் மகிழ்ச்சி!! உக்ரன் சிவனைப் பார்த்து எப்படி சிரிக்க முடியும்? ஆம், முடியும்!! வாழ்வியல் தத்துவம் அது! ஆட்டுவித்தால் ஆடும் மனித மனநிலையை ப்ரதிபலிக்கிறது, இச்சித்திரம்! அதே போல், கோபம், துன்பம், இன்பம் போன்றவை இறைவன் அடியார்க்கு ஒன்றே எனச் சொல்லுகிற மாதிரியும் உள்ளது, இப்பதிப்பு!

இச்செய்தி balancing செய்ய போதாதே? என்ன செய்ய? கீழே பாருங்கள்! குட்டி பூதகணம் ஒன்று, வாய் கோணி, கேலி செய்கிறது! அதைப் பார்த்துச் சிரிக்காதவர்கள் இருப்பார்களோ?

கோபத்தை ப்ரதிபலிக்கும் இந்த கல்லோவியத்தை, காண்பவர் மனம் வியக்கும் வகையாக செதுக்கிய சிற்பியின் கற்பனை வளத்தை என்னேவென்பது?

03 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-2


புள்ளமங்கைக் கோயில் தொடர்ச்சி..

அடுத்து, நான் போன இடுகையில் குறிப்பிட்ட சின்னச் சின்ன அற்புதக் கல்வெட்டுச்சித்திரங்கள் ப்ரகாரத்தினைச் சுற்றிலும் உள்ளன. மிக அதிக பட்சமாக 6" X 4" அளவே கொண்ட மினி கலைப் புதையல் அவை!! ஒன்றொன்றும் ஒரு கதை பேசுகிறது!!
முதலில் நாம் காண்பது சிவதாண்டவத்தில் சில காட்சிகள்:-

முதல் கலைக் கல் ஒரு நிஜ கலக்கல்!! சிவனைப் பாருங்கள்! மேல் நோக்கிய ஒரு மந்தஹாசமான பார்வை! 8 கைகளும் பல முத்திரைகள் தாங்கி, ஒரு கால் தூக்கிய நிலையில், இடுப்பிலுள்ள நாகாபரணப் பாம்புகூட ஆடும் ஒரு action shot!! சுற்றியுள்ள பூதகணம், மெய்மறந்து ஆச்சரியத்தைத் தாங்கிய முகபாவம்! (முகம் சிதைந்து போனாலும், நம்மால் அந்த ஆச்சரிய பாவத்தை அனுபவிக்க முடிகிறது!) அருகிலுள்ள தேவகன்னிகை (அ) பார்வதி, விசுவருபமெடுத்து ஆடும் ஆனந்த தாண்டவனை உவகை மேலிடக் காண்கிறாள்!! இவை அத்தனையும், இச்சிறு கற்சதுரத்தில் பதிக்கப் பட்டிருக்கும் அழகு, சோழர்காலத்து கலைஞர்களின் உயரிய நயத்துக்கு எடுத்துக்காட்டன்றோ?

01 February 2006

தெரிந்த ஊர் தெரியாத செய்தி

திருக்கோவூர்: செவ்வாய் ஜனவரி 17 திரு.ஞான வெட்டியான் "தாள் எறியால் நெற்றியில் வடு' எழுதிய நிகழ்ச்சி, மீண்டும் நடந்தேறியுள்ளது!! ஆனால், அதை சோழன் செய்யவில்லை; நவீன கோயில் செப்பனிடுபவர்கள் செய்துவிட்டார்கள்! இது போல் எத்தனையோ கோயில்கள். சமீபத்தில் சென்னை போரூர் அருகேயுள்ள திருக்கோவூர் கருணாகரப் பெருமாள் கோயிலை சுத்தமிடச்சென்ற [கோயில்சுத்தம் செய்வோர் (temple cleaners yahoo group) யாஹ¥ குழுமத்தால்] இளைஞர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது!! கோயில் மதில்சுவற்றையொட்டி பல கல் தூண்கள் விழுந்து கிடந்தன! கோயில் சுத்திகரிப்போர் பற்றிய செய்தியை, இங்கு காணலாம் http://templesrevival.blogspot.com

இக்கோயிலின் மிக அருகே பாடல்பெற்ற ஸ்தலமான கோவூர் சிவபெருமான் கோயில் உள்ளது. தியாகராஜ சுவாமிகள் தனது நண்பர் சுந்தரேச ஐயரைக் காண வருகையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்கி, சிவபெருமான் மீதான 5 பாடல்கள் கொண்ட "கோவூர் பஞ்சரத்ன கீர்த்தனைகள்" பாடிய ஸ்தலம். 1968ல் இக்கோயிலின் புனருத்தாரணப் பணிகளின் போது, அருகிலுள்ள பெருமாள் கோயில் தூண்கள், நன்றாக இருந்த காரணத்தால், அவ்ற்றை வைத்து, இக்கோயிலைச் செப்பனிட்டுள்ளனர், அதிகாரிகள். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே, இரு கோயில்களுமே, ஒரே மாதிரியாகச் சோழர்களால் கட்டபெற்று, இன்று, ஒரு கண்ணில் சுண்ணாம்பு, மறு கண்ணில் வெண்ணெய் எனும் கதையாக ஆகிவிட்டது!!

இது போல், பல கோயில்கள், சரித்திர செய்தி சொல்லும் கலைகள், கல்வெட்டுகள், அழிந்து வருகின்றன! அதை மீண்டும் எழுச்சியுறச் செய்யும் பணியில் சில குழாம்கள் பணி செய்துவருகின்றன! அவற்றில் ஒன்று, மேற்கண்ட temple cleaners குழு. மேலும், வடபழனி சிவன் கோயிலில் உள்ள உழவாரப்பணி நற்பணிமன்றம், திருவான்மியூரைச் சேர்ந்த ஆடலரசன் என்பவரின் கீழ் இயங்கும் குழு, மாம்பலம் சாய் சமிதி திரு.நாகசுப்ரமணியனின் குழு, போன்ற குழுக்கள், கேட்பாரற்றுக்கிடக்கும் பல கோயில்களுக்குச் சென்று, அதனைச் சுத்தம் செய்து, கோயிலமைந்த ஊர் மக்களை அழைத்துப் பேசி, கோயிலை நிர்வாகத்தை மீண்டும் ஏற்படுத்தும் பணியை இக்குழுக்கள் செய்துவருகின்றன. என்னால் முடிந்தது, எல்லாக் குழுவினரையும் ஒன்று சேர்க்கும் முயற்சி! மீண்டும் அடுத்த பதிப்பில் பழைய படி புள்ளமங்கை சிற்பங்களைக் காண, சந்திப்போம்...!

31 January 2006

கல்லிலே கலைவண்ணம்!-1


யாஹ¥ குழுமங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் க்ரூப் உபயத்தில், தஞ்சை பெரிய கோயிலையும், புள்ளமங்கைக் கோயிலையும் காணப்பெற்றேன். 'கல்லிலே கலை வண்ணம் கண்டார்' எனும் கண்ணதாசன் பாட்டை பாடவைத்த எத்தனையோ ஆச்சரியங்களில் தஞ்சை கோயில் ஒன்று. அதனைப்பற்றியும், அதனது கர்த்தாவான சோழர்கால கோயில்கள், கல்வெட்டுகள் பற்றியும் விரிவாக, சுவையான செய்திகளை www.varalaaru.com எனும் உ.ஆர்.எல்லில் படிக்கலாம். ஆனால், எழுதப்படாத பல சிறு கோயில்களிலும் ஊர்களிலும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன! பல நண்பர்கள் வெளிநாடுகளில் உள்ளனர். எத்தனை பேர் இந்தியாவிலுள்ள பல அரிய சுற்றுலா தலங்களைக் கண்டுள்ளனர்? அட, இந்தியா சரி, தமிழ்நாட்டில் எத்தனை அதிசயங்கள் உள்ளன தெரியுமா? அவற்றைக் காணவே நம் வாழ்நாள் போதாது. சரி முடிந்தவரை பார்ப்போம், பார்ப்பவற்றைப் பற்றி பகிர்ந்து கொள்வோம் என்பதற்காகவே இந்த கட்டுரை.

இனி வரும் நாட்களில் "தெரிந்த ஊர் தெரியாத செய்தி" எனும் தலைப்பில், ஒவ்வொரு இடமாக எழுத உத்தேசம். என்ன நீங்களும் தயார் தானே?

1) புள்ளமங்கைக் கோயில்: இந்த கட்டுரைக்கு மட்டும் சற்று வித்தியாசமான் பெயர்! "கல்லிலே கலை வண்ணம்" ஏன்? கட்டுரையைப் படித்தபின் எல்லோர்க்கும் இது புரியும்!

தஞ்சைக்கு 15 கிலோமீட்டர் தூரத்தில் இந்த புள்ளமங்கைக் கோயில் உள்ளது. http://www.templenet.com/Tamilnadu/s206.html எனும் உ.ஆர்.எல் லில் இக்கோயிலைப்பற்றிய வரலாற்று செய்திகளை விரிவாகக் காணலாம்.

படத்தில் பார்ப்பது போல், வானுயர்ந்த கோபுரம் இல்லை. மிகவும் சின்னது. இதன் சுற்றுப்புறம், 2000 சதுர அடிக்குள் அடங்கிவிடும்! ஆனால் விமான கோபுரத்திலுள்ள சிற்பங்கள் "ஆஹா, இதுவல்லவோ சிற்பம்" என வியக்க வைக்கிறது. முதலில் பிள்ளையார் சுழி போடுவோமா? ஆமாம், முதலில் நாம் காண்பது பிள்ளையார். அழகான சிற்பம். கிட்டத்தட்ட 7 அடி உயரம், சுற்றிலும், அருமையான பல "Still cum action shots!". தேவர்கள், கன்னியர்கள் ஆச்சரியத்தைத் தாங்கி பாலகணேசனைக் காண்கிறார்கள். அவர்களது முகங்களில் ஆச்சரியம், புன்னகை, போன்ற பாவனைகள்! தாளம் வாசிப்பவர்கள் ஒரு புறம், அதற்கு ஜால்ரா போடும் கோஷ்தி மறுபுறம்! சவரி வீசும் பூதகணங்கள் கூட, மறு கையால் ஆஹா என வியக்கும்படியான முத்திரை காட்டுகிறார்கள்! தலைக்குமேலேயுள்ள முகப்புக் காட்சியில், பரமசிவன், பார்வதி தாயக்கட்டம் ஆடும் காட்சி! மேலே தெரியும் வர்ணங்கள் இயற்கை சாயங்கள்- காலத்தால் சிலவும், கயவர்களால் சிலவும் சிதிலமடைந்துள்ளது.மிக மேலே, சிகப்பும் மஞ்சளுமாய் தெரியும் வர்ணங்களினூடே உற்றுப்பார்த்தால், பல பாவனைகள் தாங்கிய பூதகணங்கள் காட்சியளிக்கின்றன! மற்ற சிற்பங்கள் சாத்திரப் பிரகாரம் செய்தாலும், வேலைசெய்பவர்க்கு ஒரு "Relaxation" வேண்டாமா? அதற்கு ஏற்படுத்தப்பட்ட வரிசைதான் இந்த பூதரேகை வரிசை. மிகவும் கீழே, சதுரம் சதுரமாக பல சிறு கல்வெட்டுக் காட்சிகள்! அவற்றை அத்தனயும் படம் பிடிக்க வேண்டுமென்றால், ஒரு நாள் போதாது. ஒன்றைப் பார்க்கையிலேயே லயித்துவிடும் மனம், மேலே செல்ல மறுக்கிறது! அவற்றைப் பற்றி அடுத்த பதிப்பில்..

10 January 2006

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம் - 6- கத்தி

கத்தி

சுருள்தகடு நீட்டி, தணல் நெருப்பில் காட்டி
சம்மட்டி அடி வாங்கி, மூக்குச் சாணைத் தீட்டி
பளபளக்க வந்தேன், கைப்பிடியும் பூட்டி!
இலை நறுக்கக் களையெடுக்க, காய்கனிகள் தான் அரிக்க
கலை பலதில் செப்பனிட கையுளியாய் ஆகிடினும்
தலை நறுக்க என்னை நீ இறக்குவது வேதனை!
நித்தம் நித்தம் பல நித்திரை போக்கும் அரக்கர் கையால்
ரத்தம் சுவைத்து குடற்கூழ் குடிக்க நான் மறுத்தேன்!
கத்தினேன், முனை மழுங்கினேன், கேட்பாரில்லை!
சித்தம் கூராக்கு; நித்தம் சீராகு!
சீரில்லா மதியும் கூரில்லா முனையும்- கேட்
பாரில்லா நிலையும் நமக்கெதற்கு?
மதி தீட்டு, உடற்சாணை பிடி
பளபளக்கும் உளம், உடல், உற்றார்!