ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையாது என்பார்கள்! சரிதான்!அதாவது என் கணக்குப்படி, நான் ஐந்தாவது பிள்ளை. எதற்கும் ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்ந்ததில்லை! எதற்கும் சாதாரணமாக வளைந்து கொடுக்க மாட்டேன்! அதனால், பதில், அதனோடு அடி இரண்டும் கலந்து கட்டி கிடைத்திருக்கின்றன! இன்னும், என்னுள் கேட்டு, உலகத்தைக் கேட்டு, பதிவுகளில் கேட்டு, என் தேடுதல் இன்றும் தொடர்கிறது. அதன் விழைவே, நான் எழுத முயல்வது.
எனக்குத் தமிழ் ஆர்வம் வரக் காரணம்?
மார்கழி மாதம், வீட்டிலும், கோயிலிலும் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடப்போனதாலா? இல்லை திருக்குறளை அழகாகப் பிரித்துக் கூறி தமிழைப் புரிய வைத்த கமலா டீச்சர் காரணமா?ஐந்தாம் வகுப்பு படிக்கையில் குழந்தைப் புத்தகம் கோகுலத்தில் வந்த ஒரு பாட்டைக் கண்டு லயித்து, அதை நான் எழுதியதாகச் சொல்லி பின்னர் குட்டு வெளிப்பட்டு எல்லாரும் சிரித்ததாலா?
வானொலியில் கம்பர் விழா கேட்கமட்டும் லீவு போட அனுமதித்த அம்மாவினாலா? இல்லை கம்பர் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுவது போல், தாத்தாவின் தம்பி, கவியோகி மகரிஷி சுத்தானந்த பாரதியின் பாடல்களைக் கேட்டு, கேட்டுத் தெளிந்ததாலா? தெரியாது! ஆனால், கவிதை போட்டியாகட்டும், கல்லூரி நாட்களில் கட்டுரை ஆகட்டும், என்னை கொஞ்சம் தன்னம்பிக்கைக்குர்¢யவன் ஆக்கியது, தமிழ்!
கல்லூரி மூன்றாம் ஆண்டு படிக்கையில் ஆனந்த விகடன், ஜுனியர் விகடனுக்கான மதுரை மாவட்டத்து நிருபர்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்ட மூவருள் ஒருவனாக்கியதும், அதில் சிறப்பு நிருபர் விருது வாங்கச் செய்ததும், என்னுள் ஒளிந்திருந்த தமிழே! மற்ற இருவர், கல்பனா, மற்றும் இன்று சமீபத்தில் வெளிவரவிருக்கிற "திருட்டுப்பயலே" (திட்டலைங்க, அது திரைப்படத்து பேருங்க!) வின் இயக்குனர், சுகி.கணேசனான அன்றைய சு.கணேசன்!
வேலை நிமித்தம் 15 ஆண்டுகள் வடமாநிலங்களில் இருந்த என்னை கொஞ்சம் சுவாசிக்க வைத்தது, அவ்வப்போது கேட்ட அரட்டை அரங்கமும், தமிழ் சங்கத்தில் நடக்கும் விழாக்களுமே!
மீண்டும், தமிழகத்தில் வந்து வேலை செய்வேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை!! அதுவும் அதோடு, மீண்டும் என்னுள் வசந்தம் வரும், தமிழில் தினமும் எழுதுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை!
நீண்ட நாட்களாக மனதில் ஓடிய கருவே, முதன் முதலில் நான் பதிவு செய்த அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! சக மனிதன் சொல்லி கேட்காததையா, பொருட்கள் சொல்லிக் கேட்கப்போகிறான் மனிதன்? இருந்தாலும், வாய் பேசா ஜடப்பொருட்களே நமக்கு பல வாழ்வியல் பாடத்தை சொல்கிறது என்றால், வாயுள்ள நாம் எத்தனை தேர்ச்சி பெறவேண்டும்? மனதில் தோன்றிய சில கவிதைகளை என் வீட்டிலேயே உள்ள கவிஞர் குழாம் (ஆமாம்; நிஜம்! என் தாய் மாமன் வெங்கடரெங்கன், எனது பெரிய மாமா பெண் பேராசிரியையும் பிரபல நவீன கவிதாயினியான் ரெங்கநாயகி, மற்றும் எனது சகோதரிகள், தாயார் போன்றோர்) முன் வைத்தேன். முதன் முதலில் அவர்கள் அங்கீகாரம் கிடைக்கப் பெற்று அதிக ஓட்டு பெற்ற அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடல் - விளக்கு!!
http://maraboorjc.blogspot.com/2006/04/2.htmlஒரு வேளை ஒண்ணும் விளங்கவில்லையென்று, "விளக்கு" என்று சொல்லிவிட்டார்களோ?!நான் என் கவிதையைத் தேர்ந்தெடுத்ததாக நினைத்துவிட்டேனோ?) கவிதையை மூடிவைக்கப் போனேன்! ரெங்கநாயகிதான் என்னை அழைத்து, "டேய், நீ ஏன் இணையத்தில் எழுதக்கூடாது?" என்றார். தமிழிலா? அவரே எனக்கு "பதிவுகள்" இணையத்தின் பெயரைக் குறிப்பிட்டு, அதில் எனது கவிதைகளைப் போடச்சொன்னார். அவர்களுக்கு நன்றி.
எல்லாரும் முடிவில் நன்றி நவில்வார்கள். எழுந்து சென்றுவிடும் கூட்டத்துக்கு சொல்வதை விட, நட்சத்திர பேச்சாளர் பேச்சை கேட்க ஆவலாய் இருக்கும் கூட்டத்துக்கு தமிழ்மண அன்பர்களை ஒப்பிட்டு, எனது நன்றிகளை முதல் நட்சத்திரப் பதிவிலேயே சொல்லிவிடுகிறேன்.
திரு.மாலனுக்கு அவர் மதுரை திருநகரில், தனது தமக்கையாரின் வீட்டுக்கு வருவதைப் பற்றியும், அப்போது அவர் பேசும் செய்திகளை நான் கேட்டதாகவும் குறிப்பிட்டு, எப்படி இணையத்தில் எழுதவேண்டும் எனக் கேட்டு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன்; அத்தனை வேலைகளுக்கும் நடுவே, தனது ஆரம்ப வாழ்க்கை நிகழ்வுகளை நான் எழுதியது கண்டு மகிழ்வதாகவும், கவிதைகள் நன்கு உள்ளதாகவும், அவரும், திண்ணை, பதிவுகள், போன்றவற்றில் எழுதலாம் என்றும் குறிப்பிட்டு எழுதினார். அதோடு, யுனிகோடில் தமிழ் பதித்தால், மேலும் பல இணையங்களில் எழுதலாம் என்று சொன்னார். யுனிகோடைப் பற்றி விளக்கம் கேட்டு, மறுபடியும் அவருக்கு எழுதினேன். அவர் மீண்டும் பொறுமையாக, தமிழ்மணத்தை பற்றி குறிப்பிட்டு, அதில், எப்படி யுனிக்கோடில் பதிவது என எழுதியுள்ளதையும் குறிப்பிட்டார். அவருக்கு என் நன்றி.
முதலில் திருப்பதியில் மொட்டை தேடுவது போல் நுழைந்த நான், காசி ஆறுமுகம் அவர்களின் "உன்கோடு, தனிக்கோடு"- கண்டு தேன் குடித்த வண்டானேன்! எனக்கு தெரிந்த அத்தனை தமிழ் ஆர்வலர்களுக்கும் அந்த urlஐ அனுப்பி, படிக்கச் செய்தேன்! அந்த கடினமான விஷயத்தை, தேனில் தடவிக் கொடுக்கும் மருந்தைப் போல் அழகாக ஊட்டியிருந்தார் அவர். நேரில் பார்க்காமலே, அவரது அபரித ரசிகனானேன். என்னடா இவன் அடிக்கடி தேன் பற்றி சொல்கிறானே, என்று என்னை நரி ஆக்கிவிடாதீர்கள்!
பின்னர் மாலை நேரங்களில் சுரதா, முரசு அஞ்சல் போன்றவற்றின் உதவியோடு, தமிழ் எழுதிப்பழகி, மெல்ல மெல்ல தமிழ் மணத்துள் எட்டிப்பார்த்தேன்.
முதலில் பதித்த அத்தனையும் அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்!! ஆனால், அவற்றுக்கு மிக சில பின்னூட்டங்களே வந்தன. ஆனால், பின்னூட்டங்களை எப்படி பதிவுகளில் காணச்செய்யவேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. மீண்டும், காசி அவர்களுக்கு அஞ்சல் எழுதி, எப்படி, மட்டுறுத்தல் செய்வது என்று தெரிந்து கொண்டேன். காசி அவர்களுக்கு "கண்ணாயிரம்" (கைதி இல்லப்பா) எனச் செல்லப் பெயர் வைக்கலாம்! எப்படித்தான் அத்தனை பேருக்கும் கடிதம் வந்த வேகத்திலேயே, அவரால் சரியான பதிலை, உடனுக்குடன் அனுப்பி வைக்க முடிகிறதோ? அந்த அந்நியோன்னியம் நிறைந்த தகவல் செறிவுள்ள கடிதங்கள் எழுதி என்னைச் செம்மை படுத்திய காசி அவர்களுக்கு நன்றி.
பல அன்பர்கள் கூறுவது போல், எப்படி அதிகமான பின்னூட்டங்களைப் பெறுவது என மனம் தவித்தது உண்மை. ஆனால், சிலரது செய்திகள் படித்தபின், அந்த செய்திகள் மறுநாளே பழைய விஷயமாகிவிடுவதும், மீண்டும் படிக்கத் தூண்டுமா, அல்லது, மறக்கப்படுமா என்று ஒரு கேள்வி என்னும் எழுந்தது. SLANDEROUS, SCANDALOUS, SLEAZE என ஆங்கிலத்தில் சொல்வார்கள். அப்படிப் பட்டதை எழுதக் கூடாது என்று உறுதி கொண்டேன். என்று படித்தாலும், யாருக்கேனும், ஒரு புதிய தகவலோ, ஒரு நெறியோ, ஒரு நல்ல விஷயமோ தருவதாக இருந்தால்தான், அச்செய்தி காலத்தால் அழியாததாகும்; அப்படிபட்ட விஷயங்களையே எழுதவேண்டும் என்று என்னுள் ஒரு கோட்பாடு வைத்துக்கொண்டேன். பின்னூட்டங்களை விட, என் மனம் எதைப்பற்றி என்னை எழுதவைக்கிறதோ, அதையே நான் எழுத விழைகிறேன்.
மற்றவர் பதிவுகளை முடிந்த மட்டும் படிப்பேன். ஒரு முறை சாதி குறித்து, தவறான செய்தி கண்டு, என்னுள் இருந்த பத்திரிகையாளன் விழித்துக்கொண்டான்!! அந்த பதிவை இட்டவர், தனது பெயரிலேயே சாதியை உடன் ஒட்டிவைத்துள்ளார்!! உடனே, தவறுகளை சுட்டிக்காட்டி, நான் ஒரு பதிவு இட்டேன். அதற்கு, ஏராளமான பின்னூட்டங்கள்!! எது நாட்டுக்குத் தேவை இல்லையோ, எதை நாம் மறக்க முயல்கிறோமோ, அது மீண்டும், மீண்டும் பேசப்படுவதைக் கண்டு நான் மிகவும் கவலை கொண்டு, சாதி(தீ) என ஒரு பதிவு பதித்தேன், நான் என்ன சாதி என்று பரிகசித்து ஒரு கவிதையும் பதித்தேன்.
http://maraboorjc.blogspot.com/2005/11/blog-post.htmlhttp://maraboorjc.blogspot.com/2005/11/blog-post_06.htmlஆரம்பித்துள்ளேன். பிற இணைய ஆசிரியர்களுக்கும் எனது நன்றி.
தமிழ்மணத்தால், எனக்கு பல எழுத்தாளர்கள், நண்பர்கள் ஆயினர். ஒருவரை குறிப்பிட்டு, சிலரை மறந்திடலாகாது. எல்லாரது, பாராட்டுக்கள், மற்றும் விமர்சனங்களுக்கு நன்றி.
கடைசியாக, எனது நன்றி, மதி அவர்களுக்கு. எல்லாரையும் 'மதி'க்கத் தெரிந்த நிறை'மதி' போன்ற 'மதி' கொண்டவர்! ஒரு மாதம் முன், அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதத்தைக் கண்டு, எனக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி,சந்தேகம்! நமது பதிவுகளையும் ஆசிரியக் குழு பார்க்கிறார்களா? என்று! நட்சத்திர வாரம், ஏப்ரல் முதல் தேதிக்குப்பின் வருவதால், தருமி போல் (பதிவர் தருமி இல்லை, திருவிளையாடல் தருமி!!) ஏகத்துக்கும் கேள்விகேட்டு, அவருக்கு நீண்ட கடிதம் எழுதினேன். பதில் :- "நீங்கள்தான்"- அவ்வளவே!!
எனது நன்றியுரை மிகவும் நீண்டுவிட்டது என்ன செய்ய? மதி அவர்கள் போல் ரத்தினச் சுருக்கமாக எழுத நானும் இனி முயல்கிறேன். வரும் வார பதிவுகளை படித்து நிறை, குறை இருந்தால், சுட்டிக்காட்டி, என்னை இன்னும் மெருகேறச் செய்ய உதவப் போகும் ஆயிரமாயிரம் தமிழ்மண அன்பர்களுக்கு பணிவான நன்றி.