கால வேளைல நான் ஏன் வாக்கிங் அது இதுன்னு கிளம்பரதில்லைன்னு ஒரு பதிவு போட்டேன். நாகரிகக் கோமளிகள்னு.[ http://sirichuvai.blogspot.com ] அதுல பணக்கார ரவுசுகளப் பத்தி முக்கியமாச் சொன்னேன்.
அதுல சொல்லவிட்ட ஒரு தினசரி நடக்கும் தப்பான விஷயத்த தனி பதிவா போட்டாதான், நமக்குள்ள இருக்குற சில பல பழக்கத்த நாம் மாத்திக்க முடியும்.!!
மரங்களப் பார்க்கறதே அபூர்வமாயிகிட்டு இருக்குற நகரங்கள்ல, அழகான கால நேரம், பூமரம், செடிங்கள்ல இருக்குற ஆயிரமாயிரம் பூக்கள், மெதுவா, சூரிய வளிச்சம் பட்டு, பனி வெலகி, வாய் திறந்து, காலக் காத்த உள் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமா, நிறம் மாறி, பூக்கும். அது முழுசா, பூக்க, எப்படியும் 7-8 மணி ஆயிரும். ஆனா, அதுக்குள்ள அந்த பூக்களுக்கு வர்ற ஆபத்து இருக்கே, அது சொல்லி மாளாது!
செம்பருத்தி, நந்தியாவட்டை, பவள மல்லி (சீசன்லதான் பூக்கும்), மஞ்சள் ஆம்பல், மஞ்ச ஸ்பீக்கர் பூ (இதுக்கு தமிழ் பெயர் தெரியாதுங்க!), சுருள் நந்தியாவட்டை, கொன்னை, இன்னும் பல விதமான பூக்கள் பூக்கறதப் பாக்குறது, அழகு.இத எந்த கவிஞனாலும் வருணிக்க முடியாது, எந்த ஓவியனாலும் வரைய முடியாது. ஆனா, பச்ச பிள்ள கண் தெறக்கறதுக்கு முன்னமே, குரல்வளைய நெர்¢க்கிற மாதிரி, "பக் பக்" னு அத பறிச்சுகிட்டு போய்டுவானுங்க, சில பெருசுங்க.
வெள்ள வேஷ்டி மடிப்புக்குள்ள, கைல உள்ள மஞ்சப் பையி, விட்டா வாயிலயும் போட்டுகிட்டு போயிடுவாங்க போல! சூரியன் எந்திரிக்க லேட்டானாலும், இவனுங்க எந்திரிச்சு `அட்டாக்' பண்றத விடமாட்டாங்க! என்னங்கடா, இப்படி விடிகாலைல பறிக்கிறாங்களேன்னு பார்த்தா, கோவிலுக்கு, சாமிக்குன்னு சொல்லி பிடுங்குறாங்க! அட பாவிகளா, சாமி வாயத்திறந்து "எனக்கு பச்ச புள்ளயொத்த, கண்ணு தெறக்காத பூவப் பறிச்சு போட்டாதான், அருள்பாலிப்பேன்னு" சொன்னாரா? அதுக்குன்னு வேற பல பூ இருக்கே? முல்லை, மல்லிகை, துளசி இலை, வில்வ ன்னு பல தினுசு. ரெண்டு கோஷ்டிக்கும் ( குறுக்குக் கோடு கோஷ்டி, நெட்டுக் கோடு கோஷ்டி!! நான் இல்லைன்னாலும் மனுசப்பயலுவ விடுறாங்களா? கோடுல நிக்கிறவன் அதத் தாண்டி வரமாட்டேங்கிறான்கறத தனியா எழுதணும் போல; ஆனா, அது எழுதி, திருந்தற கோஷ்டியவிட, ஏன் எழுதினன்னு திட்டற கோஷ்டிதான் அதிகமாகும்கிறதால், அந்த மேட்டரை இப்ப டச் பண்ணல!)
ஆண்டவனே, துளசியையும், வில்வத்தையும் படைச்சு வெச்சுருக்கானே? ஒரு துளசியால பாமா, கிருஷ்ண்ன அடைஞ்சதும், ராத்திரி பூரா, வில்வ மரத்துல ஒதுங்குன திருடன், வில்வம்னு தெரியாம பறிச்சு,பறிச்சு கீழ எறிஞ்சுகிட்டேயிருந்ததுல, கீழே இருந்த சிவலிங்கம் சந்தோஷப்பட்டு, திருடனுக்கு காட்சியளிச்சு, அவனுக்கு நல்ல புத்தி தந்ததையும் நாம படிச்சதில்லையா? பின்ன, பிஞ்சுப் பூக்களை ஏன்யா பறிக்கிறீங்க??
அதுலயும், சில தாத்தாக்கள் பலே தாத்தாக்களாக இருப்பாங்க! கைல ஒரு நடை குச்சிய (walking stick க்கு தமிழாக்கம். 'டாக்டர் ஐயா' மன்னிப்பாராக!) கொண்டாந்து, அத விட்டு, மேலேயுள்ள கிளைய அப்படியே வளைச்சு, மத்த கையால இறுக்கிப் பிடிச்சு, சட சடன்னு,மேல உள்ள பூவையெல்லாம் பறிக்கிறப்ப, "அட, மேல தப்பிச்ச, கொஞ்ச நஞ்சப் பூவ, தல தப்ப விட மாட்டேங்கிறாங்களே"ன்னு, கோவமா வரும். ஆனா, பெருசுங்கள திட்ட முடியுமா? ஒரு பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, மொத்த மரமும் கைம்பெண் போல் நிக்கிறதப் பார்க்கும் மனசுள்ள மனுசனுக்கு 'பகீர்' னு இருக்கும்.
ஆனா, "பூ பறிக்கத்தான் செய்வேன்; சாமிக்குப் போடத்தான் போடுவேன்; பாட்டன், முப்பாட்டன் காலத்துலேர்ந்து பூ பறிச்சு போடறோம். பழக்கத்த விட முடியாதுன்னு" சொல்ற மக்களுக்கு ஒரு தலை சாய்ந்த விண்ணப்பம், வேண்டுகோள் :
பூவோட காலம், ஒரு நாள் தான்; ராத்திரில வாடிடும். ஆனா, சாயங்காலம் பார்த்தீங்கன்னா, நல்லா பூத்து, வரப்போகும் இரவின் வாடுதலைப் பற்றி கவலைப் படாத, மாலைக் காத்துல சிலுசிலுத்துகிட்டு நிக்கும். அப்ப அந்த பூ கிட்ட பேசுங்க; "ஏ,பூவே.காலைல கண்ணுக்கு குளிர்ச்சியா, மனதுக்கு இதமா காட்சி தந்த. இப்ப, வாடி எப்படியும் கீழ விழப்பொற. அதுக்கு நான் சொல்ற உபாயம் ரெண்டு பேருக்குமே நல்லது. என்னால பூ பறிச்சு போடாம இருக்க முடியாது. உன்னால் உதிர்றத தடுக்க முடியாது. அதனால நான் உன்ன பறிச்சு, இறைவனடில சேர்க்கறேன். சந்தோஷமா இரு!" ன்னு!
கட்டாயம் வாய் இருந்தா அந்த பூ காலைல பறிச்சா உங்கள சாபமிடும், ஆனா மாலைல இறைவனடி சேர்த்தா, வாழ்த்தும்! என்ன, சரிதானே? நீங்க அப்படி காலைல பூ பறிச்சா, அத மாலை வேளைக்கு மாத்திக்கங்க! ஓ, ஒரு வேளை அத மாலை வேளைன்னு சொல்ற காரணம், இதுவாக் கூட இருக்குமா? பூக்கள் பறிக்கபபட்டு, மாலையாக சேர்ந்து, இறைவனடி சேரும் நேரம்ங்கிறதால, 'மாலை' நேரமாச்சுதோ?
மத்தவங்க அப்படி பறிக்கறதப் பார்த்தா, இதமா எடுத்துச்சொல்லி, நேரத்த மாத்தச் சொல்லுங்க!
சரி, காலைலதான் போடணும்னு அடம் பிடிக்கிறவங்க, அதுக்குன்னே விற்குற அந்தந்த சீசன் பூவ (மல்லிகை, முல்லை ஒரு சீசந்தான், கனகாம்பரம், டிசம்பர் பூ, ஒரு சீசன், சவந்தி ஒரு சீசன்) - இப்படி சல்லிசாவும் வாங்கி, சாமிக்கு சாத்தலாம்ல? எதோ, பூவித்து பொழக்கிற ஆத்மாக்கள் சந்தோஷப் பட்டு போலாம்ல?
மல்லிகைன்னதும் ஞாபகம் வருது. சென்னைக்குப் பக்கத்துல நத்தம் கிராமம். அங்க பசங்களுக்கு என்.எஸ்,கே. மாதிரி, "விஞ்ஞானத்த வளர்க்கப் போறோம்" னு சொல்லி, IIT பசங்களோட சேர்ந்து சில நாட்கள் போனோம். அந்த ஊருக்கு முக்கிய வருமானம் வர்றதே, மல்லிகை வியாபாரம்தான். ஆனா, சீசன்ல, கையால அத அவசரமா, பறிக்க முடியாம, பல பூக்கள் வாடி கீழ விழுகறதாயும், பல பூக்கள் பறிக்க நேரமில்லாம, வாடி வீணாப் போறதாயும் சொன்னாங்க! IIT படிச்ச பசங்களுக்கு ஒரு சவால்! "மொத்த பூவையும் சுலபமா, சீக்கிரமா, கீழ சிந்தாம, வீணாகாம பறிக்க ஒரு சாதனம், மெஷின கண்டுபிடிச்சு கொடுங்க ராசா"ன்னு ஒரு கிழவி கேட்டுச்சு! யாராச்சும் அப்படி ஒண்ணை யோசிச்சு சொல்லுங்களேன்!!
சொன்னா, பல கிராமங்கள்ல இதயே பொழப்பா வெச்சு நடத்தறவங்களுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு வரபிரசாதமா இருக்கும்! சரி, இது பறிக்கறதுக்கு மிஷன். ஆனா நான் இந்த பதிவ எழுதுனது, பூக்களப் பறிக்காதீங்கன்னு சொல்ற Mission! ரெண்டும் வேற; வேற!

