19 August 2006

தேன்கூடு போட்டி: தாயுமானார் அவரே தந்தையுமானார்!

முதுகில் பெரிய கட்டி; காலில் போலியோ தாக்கம்; கருமை நிறம்; நெஞ்சில் ஈரமின்றியோ அல்லது வெளியில் சொல்லிக்கொள்ளுமாறு இல்லாத ஒரு உயிரை உயிர்பித்ததாலோ, அந்த பிஞ்சுக் குழந்தையை தெருவில் விட்டுப் போய்விடுகிறாள் ஒரு பெண்.(தாய் எனச்சொல்ல மனம் ஒப்பவில்லை!) கண்டது ஒரு நன்னெஞ்சம்; கொண்டு சென்று, வளர்த்து, புண்ணை போக்கி, கண்ணாய் வளர்த்து பெண்ணாய் ஆக்கி, இன்று பேர் சொல்ல ஒரு பிள்ளையாய், இல்லை இப்படி பேர் சொல்ல பல பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, ஆண் தெரசாவாக வாழ்ந்து வருகிறார் "பப்பா" (அப்பா) என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் வித்யாகர்; சென்னை அருகிலுள்ள திருவேற்காட்டிலும் மற்ற பல இடங்களிலும் இன்று வேர்விட்டு ஆலமரமாக தழைத்து ஓங்கும் சேவாலயம், "உதவும் கரங்கள்".

அன்றலர்ந்த மலர்களாக பிஞ்சுக் குழந்தைகள், சில மாதங்களிலேயே கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற முதியோர், புத்தி ஸ்வாதீனமற்ற, சமூகத்தால் பரிகசிக்கப் பட்ட ஆண்கள், பெண்டிர், மற்றும் அங்கேயே வளர்ந்து, சேவை ஆற்றி வரும் பெண்கள், ஆடவர், வளர்ந்து பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர் என் ஒரு உலகத்தையே உருவாக்கியுள்ளார், வித்யாகர். 100 வயது கடந்த மூதாட்டியும் இதில் ஒருவர்!

தினமும் எல்லாரையும் பற்றி விசாரித்து, நலம் கண்டு, சிறு தொழில் முனைந்து, அதில் அவரது மக்கள் பணியாற்ற துணை நின்று, பம்பரமாய் சுழலும் இந்த 'பப்பா'வை பார்க்கையில், ஒரு தாய் செய்யக்கூடிய அத்தனையும், தந்தையாகிய இவரே எப்படி செய்கிறார் என மனம் வியக்கிறது!

மேற்படி பொறுப்பு, சமீபத்தில் ஒரு நற்செயலால், முழுமை அடைந்துள்ளது! எப்படி என்று பார்ப்போமா?

தான் வளர்த்த இரு பெண்களுக்கு அடுத்த அடுத்த மாதங்களிலேயே, சம்ப்¢ரதாயம் மாறாமல், பத்திரிகை அடித்து, கல்யாண மண்டபத்தில், அக்கினி வளர்த்து அருந்ததி பார்த்து, உற்றார், உறவினர், இரு வீடுகளிலிருந்தும் வர, தன்னை பெண்ணின் தந்தையென ப்ரகடனப் படுத்தி, அருமையாய் இரு திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் இந்தத் "தந்தை" வித்யாகர்!

எனக்கு இந்த செய்தி எப்படி தெரியும்? எங்கள் வீட்டில் குழந்தைகளின் பிறந்த நாளானால், கேக் வெட்டி, கைதட்டி, வசதியானவர்களை அழைத்து விருந்துண்ணும் பழக்கமில்லை. அரிசி மூட்டைகள், இனிப்புகள், கைக்குழந்தைகளுக்கு புதிய சட்டைகள் வாங்கிக் கொண்டு, எல்லாருமாய் "உதவும் கரங்கள்" க்கு சென்று, எல்லாருமாய் சேர்ந்துண்டு, நம் வீட்டுக் குழந்தைகளுக்கும், இல்லாதாருடன் பகிர்ந்துண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்;

மாதா மாதம் வீட்டில் சேரும் நாளிதழ்கள், பழைய, ஆனால் நன்றாக இருக்கும் துணிமணிகள், மேசை நாற்காலி, குழந்தைகள் பொம்மைகள், என எதைக் குடுத்தாலும், அவர்களே ஒரு வண்டியில் வந்து பொருட்களை எடுத்து செல்கின்றனர்! வரும் நபர், கையோடு ஒரு ரசீது புத்தகமும் கொண்டு வருகிறார். அத்தனை பொருட்களையும் பட்டியலிட்டு எழுதி, 'பெற்றுக்கொண்டோம், நன்றி' என எழுதி கையொப்பமிட்டு, ரசீது தருகிறார். அப்படி ஒரு முறை வரும்போது, சந்தோஷமாக, "அய்யா, எங்க தங்கச்சிக்கு கல்யாணம்" எனக் கூறி ஒரு பத்திரிகையை நீட்டினார்! மகிழ்ந்த என் தாய், உடனே, ஒரு புது பட்டுப்புடவையை கல்யாணப் பெண்ணுக்குத் தந்தார். அதற்கும், ஓரிரு நாட்களில், திரு. வித்யாகரிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு நன்றிக் கடிதம் இல்லம் தேடி வந்தது!

மறுமுறை பிறந்தநாள் கொண்டாட செல்கையில், மற்றொமொரு பெண்ணின் திருமண பத்திரிகையையும் தந்தார் 'பப்பா' வித்யாகர். மகிழ்ச்சி எங்கள் இல்லத்தையும் தொற்றிக் கொண்டது.

அதனால்தான், பெறாவிட்டாலும், குழந்தைகளுக்கு ஒரு தாயாயும், தந்தையுமாக, பெரியவர்களுக்கு ஒரு நல்ல சகோதரனாக, முதியவர்க்கு ஒரு நல்ல மகனாக, மன நலம் குன்றியவர்க்கு ஒரு நல்ல மருத்துவனாக வாழ்ந்து வரும் திரு.'பப்பா' வித்யாகரை பற்றி, இந்த "உறவுகள்" பற்றிய கட்டுரையில் எழுதியுள்ளேன்!

அந்த ஆலமரத்தின் சுட்டி http://www.udavumkarangal.org
முகவரி: திருவேற்காட்டில் நுழைந்து, "உதவும் கரங்கள்" என்றாலே போதுமே!

எல்லாரும் இத்தகைய நல்லார் பணியை ஆதரித்து வரவேண்டுமெனும் ஆவலில் இந்த கட்டுரை உருவாகியுள்ளது.

5 comments:

Anonymous said...

நன்றி

Maraboor J Chandrasekaran said...

for what, can u pls explain?

Anonymous said...

For this article.

Ponniyinselvan/karthikeyan(1981-2005 ) said...

chandra,
please make it a point to write articles like this,which will be an eye opener,because, many people like me who have the intention may not know the right way.
karthik amma

Maraboor J Chandrasekaran said...

dear Karthik Amma,
Did you read the other article which I wrote on your dedicted love to Karthik? Ungal aasirvaadathaalum, aadaravaalum idhu poal niriya ezhudhugireyn, Nandri.