12 November 2008

பெண்ணியம் பேசும் பேனா திருமதி ராஜம் க்ருஷ்ணன்

பெண் எழுத்தாளர்களில் தைரிய லட்சுமி என்ற பெயர் பெற்ற திருமதி ராஜம் க்ருஷ்ணனைக் கண்டு ஒரு பேட்டி:

இங்கே காணவும். சிறு தட்டச்சுப் பிழைகள் உள்ளன. பொறுத்துக் கொண்டு செய்தியின் சாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளவும்.

இதனை தமிழ் மரபுக் கட்டளையினர் மின்தமிழ் மூலமாக வெளியிட்டுள்ளனர். காண மட்டும் போதாது; தமிழ் வளர்க்கும் (?) அரசுக்கு எல்லாருமாய் குரல் கொடுத்து அந்த மாபெரும் எழுத்தாளருக்கு,இருக்க இடம், போதிய மருத்துவ வசதி, அவர் படைப்புகளை தேசீயமாக்குதல் போன்ற நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபடச் செய்ய வேண்டும்.

அந்தப் பதிப்பைக் கீழேயும் தந்துள்ளேன்:
=============================================================
எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் - பெண்ணியம் பேசும் பேனா
[திரு சந்திரசேகரன், சென்னை (02/11/2008)]


[ஆம், பேசும் பேனாதான்! நாங்கள் பார்க்கச் சென்ற போது கூட, அவர் தினமலருக்கு (திருச்சி பதிப்பு) நாட்டு நடப்புகளைப் பற்றிய தன் எண்ணங்களை பதிவு செய்து வருவதாகக் குறிப்பிட்டார். விஷ்ராந்தியின் நிறுவனர் சாவித்ரி வைத்தி இவரைப் பற்றி குறிப்பிடுகையில் அவருக்கு கைகளை வைத்துக் கொண்டு எழுத லகுவாக மேசை செய்து தர எண்ணம் என்று சொன்னார்.] இன்றோ கூர் மழுங்கினாலும், மையின் தாக்கம் குறையவில்லை!


ராஜம் கிருஷ்ணன். 5/11/1925 பிறந்த நாள். நானும் தமிழ் தேனீ க்ருஷ்ணமாச்சாரி அவர்களும் அம்மாவை சந்தித்தது, சனிக்கிழமை அன்று.(1/11/2008)



'அவன் ஏன் இன்னும் என்னையெல்லாம் அழைத்துக் கொண்டு போகவில்லை?' என்றார், திடுப்பென்று! மனம் கனத்துப் போனது. இவருக்கே உலகில் இடமில்லை என்றால், தமிழ் தமிழ் என வெற்றுப் பறை சாற்றும் 'தமிழ் மானத் தலைவர்களுக்கு' ஏன் இங்கே இடம் விட்டு வைத்துள்ளார்கள்?


தலை நரைத்திருந்தது. ஆனால் குரலில் சிந்தனையில் காரம் குறையவில்லை. அவர் பேசப் பேச இதுவன்றோ பெண்மை? இதுவன்றோ உண்மை பெண் குரல், பெண் உரிமை என்றெல்லாம் மனம் கொக்கரித்தது. பேனாவின் முனை மழுங்கினாலும், அதிலிருந்து வரும் செய்திகள் சாட்டையடிகள் போலவே மிளிர்ந்தன!


தமிழ்த்தேனீ ம்ருதுவான அவர் குரலைப் பதிவு செய்தாலும், எங்கே செய்திகள் விடுபட்டு விடுமோ என்று, நானும் குறிப்பெடுத்துக் கொண்டேன்.


அவற்றில் சில...


விடுபட்ட விருதுகள்..


- சாகித்ய அகாடமி –இரு முறை

- பாரதீய பாஷா விருது, சோவியத் நாடு – நேரு விருது 1975
- ந்யூயார்க் ஹெரால்டு சர்வதேச விருது. இது எதற்காக என்று அவரையே கேட்டேன். (பெண்ணியத்தை வெளிப்படுத்தக் கூடிய எழுத்துக்களுக்கு ஆசியாவிலிருந்து வருடம் ஒருவரை தேர்வு செய்து பரிசுகள் வழங்குவார்களாம். 1950 வருடத்திய விருது இவருக்கு கிடைத்துள்ளது.)
- கலைமகள் விருது 1973
- திரு.வி.க விருது 1991

மொத்தம் 59 படைப்புகள் வெளிவந்துள்ளன.

எப்படி எழுத்துகளின் மேல் மோகம் வந்தது?

அதைப் பற்றி அவர் கூறுகையில்,'சமூகப் ப்ரக்ஞையும், பெண்களை அவலமாய் சித்தரிக்கும் போக்குமே என்னை எழுத வைத்தன. நானும் பல பத்திரிகைகளுக்கு அனுப்புவேன். பதிவுத் தபாலில் திரும்பி வரும். ஆனால், முதன் முறையாக திருச்சி வானொலிக்கு எழுதிய நாடகம், ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று சாதாரண தபாலில் செய்தி வந்தது!


அவசரச் சட்டம் பிரகடனமான போது எழுதிக்கொண்டிருந்த ஒரே பெண் எழுத்தாளர் இவர்தானாம்.


திருச்சி வானொலியில், இவரது நாடகமான 'ஷட்டில் வண்டி' (லால்குடி – திருச்சி இடையே செல்லும் வண்டியை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை) நேரடியாக வாசிக்கச் செய்ய அழைத்தார்களாம். தாயாருடன் சென்றிருந்தார். முன்பெல்லாம், நேரடி ஒலிபரப்பு ஆதலால், அங்கே காகிதங்களை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், இயக்குநர் கையை மேலே உயர்த்தினால் குரலை உயர்த்த வேண்டும், கீழே இறக்கினால், குரலையும் சற்று மட்டுப் படுத்த வேண்டும்.புடவை சரசரப்புகள் பதிவு ஆகக் கூடாது, என்று பல கெடுபிடிகள். இவருக்கு இதெல்லாம் ஒத்துவரவில்லை. அதேசமயம் அவர்கள் எதிர்பார்த்த நேரத்தை விட, மிக வேகமாக, உணர்ச்சி பூர்வமாக தன் கருத்துக்களை கொட்டி விட்டு அமர்ந்திருந்தாராம். எனவே, வெளியில் வந்ததும், அப்போது இருந்த தொழில் நுட்ப வல்லுநர் ஹகிம் என்பவர்,'அப்பப்பா,உங்களுக்கு கடிவாளம் போடவே முடியாதும்மா! புருஷன் எப்படி மாட்டப் போறாரோ?' என்றாராம்.


இவர் பேசியதில் முக்கியமாக மனதில் கொள்ள வேண்டியது, ஆதாரத் தகவல்கள் சேர்த்த பிறகே அவர் கதைகளை உருவாக்குவார் என்பது. அதற்கு அவர் எடுத்துக் கொண்ட சிரமங்களை வருணித்துக் கொண்டே போனவர், நடு நடுவே, 'இதுதான் என் ப்ரச்னையே! எதிராளியை பேசவே விட மாட்டேன்!" நானே பேசிக் கொண்டிருப்பேன்!" என்றார்.


டாக்டர் ரெங்காச்சாரியின் சுய சரிதை எழுதுகையில், அவர் தொழில் புரிந்த எத்தனையோ ஊர்களுக்கு சென்று பயனுற்றவர்களை பேட்டி எடுத்துள்ளார். அதிகாலை நடை செல்லும் போது இவர் பிரசவம் பார்த்த ஆடு மேய்க்கும் பெண்ணையும் பார்த்து அவளைப் பேட்டி எடுத்துள்ளார். டாக்டர் ரெங்காச்சாரி வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்ப்பாராம். எனினும் ஒரு மருத்துவ கருத்தரங்கத்துக்கு செல்ல நேரிட்டபோது, உடன் சென்ற அவரது நண்பர் மட்டுமே இவர் பேசியதைப் பதிவு செய்திருந்தாராம். படுத்த படுக்கையாய் இருந்த அநத நண்பரைப் பேட்டி காண ராஜம் அம்மா, செல்கையில், டாக்டரின் பெயரைக் குறிப்பிடதுமே, 'இரு, நான் சொல்கிறேன்' என்று அந்த நிலையிலும், விரிவாக செய்திகளைப் பகிர்ந்து கொண்டாராம். (நண்பர் கஸ்தூரி ஸ்ரீநிவாசன் என்று நினைக்கிறேன்.) மறுநாள் பத்திரிகையை பிரித்த ராஜம் கிருஷ்ணனுக்கு தூக்கிவாரிப் போட்டதாம்! அந்த நண்பரின் மரணச் செய்தியைக் கண்டு! எதற்கு இதை குறிப்பிட்டாரென்றால், ஒரு செய்திக்கு உண்மை எத்தனை முக்கியம் என்று எடுத்துக் காட்ட! (authenticity). மறுநாள் அந்த நண்பரைப் பார்க்கப் போகலாம் என்று அலட்சியமாக இருந்திருந்தால்?

அதேபோல் கஷ்டப்படும் ஏழை மக்களுக்கு வைத்தியமும் பார்த்து, கையில் பணமும் கொடுத்து அனுப்பியதைப் பார்த்து இவரது நண்பர் திரு. ராமஸ்வாமி சாஸ்திரி என்பவர், " உயிர் கொடுத்தான் அதனொடு, உடமையும்,பொருளும் கொடுத்த நவீன கடவுள் இவன்," எனும்பொருள் படியான ச்மஸ்க்ருத சுலோகத்தை பாடி, டாக்டரை புகழ்ந்தாராம்! நண்பர் ஆதலால்,மவுனம் காத்த டாக்டர். ரெங்காச்சாரிக்கு,கடவுள் நம்பிக்கை கிடையாதாம்!


சிகிச்சைக்கு படுத்திருந்த நோயாளி ஒருவர் கையில் விஷ்ணு சகஸ்ரநாம புத்தகத்தைப் பார்த்து டாக்டர் கோபம் கொண்டு, "அதை நம்புறதா இருந்தா ஏன் என்னிடம் வரே?" என்று கடிந்து கொண்டாராம்!


பிறகு எது உங்களை இவரது சரிதத்தை எழுத வைத்தது? என்று நான் கேட்டேன்.

"என் கணவர் காலாஅஜார் நோயினால் பாதிக்கப் பட்டிருந்தார்.அன்பும், அரவணைப்பும், நல் வார்த்தைகளும் சொல்லி, வைத்தியம் பார்த்த பாங்கைக் கண்டு அவரைப் பற்றி விசாரிக்க, ஊரே புகழ்ந்ததால், உந்தப்பட்டு அவரின் சரிதத்தை கதையின் நடையில் எழுதினேன்" என்றார்.


அதே போல், 'முல்ளும் மலர்ந்தது' என்ற சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையரைப் பற்றிய கட்டுரை மிகவும் பிரசித்தி பெற்றதற்குக் காரணம், இவர் நேரடியாக அவர்களை சந்தித்து பேசியதாலேயே!


தனது சகோதரரின் உதவியுடன் தொலை தொடர்பு துறை நண்பர்கள் மூலம, க்வாலியரில் போய் இறங்கினாராம்! பணியில் இருந்த கணவருக்கு பணி நீட்டம் செய்திருந்தாலும், அதனை உதறச் சொல்லிவிட்டு க்வாலியர் வந்து சேரும்படி சொன்னாராம்!


அங்கே, சரணடைந்த கொள்ளையர் ஒரு பக்கம். கொள்ளை,கொலைகள் செய்து கொண்டு பிடி குடுக்காத கும்பல் ஒரு பக்கம். முதலில் கூறிய மக்களைப் பற்றி அதிகமாக யாரும் எழுதாததால், அதைப்பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணி, அவர்கள் சரணடைந்தவுடன் வந்து சேரும் ஒரு ஆசிரமத்தில், (முன்னாள்) கொள்ளையரை சந்திக்கச் சென்றாராம்.


அதில் மறைந்த மாபெரும் கொள்ளையன் மான்சிங்கின் மகன் தாசில்தார் சிங் என்பவனுடன் பேச சுமார் அரைமணி நேரம் பொருமையாக அவனெதிரே இவர் அமர, அந்த மீசைக்கார கொள்ளையனோ, ஒரு தினசரியால் தன் முகத்தை மறைத்துக் கொண்டு, அப்படியே இழுத்தடித்துக் கொண்டிருந்தானாம்! ராஜம் அம்மாவின் பொறுமையைக் கண்டு, பின்னர் மனம் திறந்த அவன், நான்கு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தானாம்! இவன் சுமார் 400 கொலைகள் செய்தவன் என்பது குறிப்பிடத் தக்கது!


மற்றொரு சரணடைந்த கொள்ளையன் மகாவீர் சிங்கை, அவனது இல்லத்தில் சந்திக்க போகையில், இருட்டிவிட்டதால், அங்கேயே கணவன், மனைவி இருவரையும் ஓய்வெடுத்துக் கொள்ளச் செய்தானாம்! உபசாரமாய் நல்ல சப்பாத்தி, சப்ஜி (காய்கறி) தந்து, பின்னர் குளிருக்கு இதமாய் ரஜாயும் (கம்பளி) தந்தாளாம் அவனது மனைவி.


காலையில், கண் விழித்துப் பார்த்த ராஜம் அம்மாவின் கண்களில், அவனது மனைவி அணிந்திருந்த அதிகப்படியான கனத்த நகைகளே பட்டுக் கொண்டிருந்தது! கால்களை தொட்டு கும்பிட்டு வழியனுப்பியவளிடம் அம்மா, "இவை உங்கள் ஊரில் தாலியா?" என்று கேட்க, கணவனான மகாவீர் சிங் சிரித்துக் கொண்டே, "எல்லாம் கொல்ளையடித்தவை" என்று சொல்லி இடிச் சிரிப்பு சிரித்தானாம்! இவர்களுக்கு தங்க இடம் கொடுத்து வழியெல்லாம் சொன்ன திரு. இந்தூர்க்கர் இவர்களை (மும்பை) அன்றைய பம்பாய்க்கு ரயில் ஏறி அனுப்பி வைத்தாராம். அங்கே தேஷ்முக் என்பவரை சந்திக்கச் சொல்லியிருந்தாராம். தேஷ்முக்கிடம், "திரு. இந்தூர்க்கர் எங்களை அனுப்பி வைத்தார்," என்றதும். "Mr. Indurkar was shot dead yesterday," என்ற அதிர்ச்சி செய்தியை சொல்லி, செய்தித் தாளைக் காட்டினாராம்!

கணவரின் அரசுப்பணியினால், வட மாநிலங்களில் தங்க நேர்ந்ததையும், அப்போதைய கோவாவை தனி மாகாணம் ஆக்குவதா, மகாராஷ்டிரத்தோடு சேர்ப்பதா என்ற சண்டை நேரங்களில், பல இடங்களுக்கு மாற்றப்பட்டதை நகைச்சுவையோடு குறிப்பிட்டார்.


உங்களுக்கு இப்போது எத்தனை பாஷை தெரியும்? எனக் கேட்டேன்.


"ஏழு - 7?" என்றார் சிரித்துக் கொண்டே!


இந்த 'முள்ளும் மலர்ந்தது' புத்தகத்திற்கு முன்னுரை எழுத திரு. ஜெயப்ரகாஷ் நாராயணணை சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அவரைச் சுற்றி இருந்தவர் என்னை அருகிலேயே அண்ட விடவில்லை. சரி, வினோபா பாவேயிடம், சென்று வாங்கிலாம் என்றால், புத்தகத்தை (தமிழ்) முழுதும் பார்த்த அவர், தமிழிலேயே, "நான் சந்நியாசம் வாங்கிக் கொண்டவன். எனவே, என்னால் எந்த முன்னுரையும் தரலாகாது," என்றாராம்! ராஜம் அம்மாவோ, அங்கேயே சத்தியாக்ரகம் செய்து, "நீங்கள் தரும் வரை நான் இங்கேயே அமர்வேன்," என்று சொல்லி இருந்த இடத்தை விட்டு நகரவில்லையாம்! மனம் நெகிழ்ந்த பாபா (வினோபா பாவேயை அப்படித்தான் அழைத்தர்களாம்), "ஆசீர்வாதங்கள். அன்புடன், பாபா," என்று தமிழிலேயே எழுதி கையெழுத்திடாராம்! அந்த புத்தகம் எங்கோ போய்விட்டது என்றார் ஆதங்கத்துடன்.


இவரது உறுதியைப் பார்த்து கி.வா.ஜகந்நாதன் அவர்கள், 'உன்னை பார்த்தால், பத்ரகாளியைப் பர்ப்பதுபோல் இருக்கிறது," என்பாராம்!


தனது நடை, பற்றி பேச்சு வருகையில்,


(தேனீயார், "நீங்கள் ப்ராம்மண பாஷையிலேயே எழுதுவதாக.. என்று ஆரம்பித்தவுடனேயே, வேகமாக மறுத்து,)

"அப்படி முத்திரை பதிந்துவிடக் கூடாதென்பதில் நான் கவனமாய் இருந்தேன்.
கருப்பு மணிகள், வேருக்கு நீர் போன்ற பதிவுகளில் ப்ராம்மண பாஷை எங்கிருந்து வந்தது?

பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியே என் ஆதர்சன குரு. உண்மை, நெஞ்சில்பட்டது, சமூகப் ப்ரக்ஞை – இவை மூன்றுமே நல்ல எழுத்தாளனை வெளிக் கொணரும்.

பிற எழுத்தாளர்களைப் பற்றி கூறுகையில், தயங்காமல், தன் கருத்துகளைப்பட்டென போட்டு உடைத்தார்! லா.ச.ரா – பிறர் புகழ்ந்தாலும், எனக்குப் பிடிக்காது. காரணம், பெண்களை அவர் போகப் பொருளாக மட்டும் பார்த்தார்! சுஜாதா எத்தனை அறிவு ஜீவி,படித்தவர்? அவரும், பெண்களை அவர்களது அங்கங்களை வருணித்து எழுதுவதை தவிர்த்திருக்கலாம். அதே போல் ஜெயகாந்தன். பெண்கள் என்று ஒரு மனிதனாக மதிக்கப்பட்டு, கதைகளில் வெளி வருகிறார்களோ,அன்றுதான் தமிழ் எழுத்துக்களுக்கு விடியல்!" என்றார்!


அதோடு திரைப்படத் துறையையும் விட்டு வைக்கவில்லை! பாலசந்தர் என்று ஒருவர். இரண்டு பெண்டாட்டிக் கதை,பெண்களின் அந்தரங்கங்கள், இவற்றையே படம் எடுத்து 'சிகரம்' என்று பேரெடுத்தவர். சினிமா, பெண்களை இன்றும் தவறாகவே சித்தரிக்கும் ஒரு ஊடகம். அதிலிருந்தும் பலர் என் கதைகளைக் கேட்டனர். தர மறுத்து விட்டேன்," என்கிறார்!


சிறிய வயதில் தாம் பார்த்த படைப்புகள், படங்களான,


agony in ecstasy,

flower girl,
biography of Abraham Lincoln,
Ten Commandments,

போன்றாவையே தம்மை படைப்புலகத்திற்கு ஈர்த்தன- "எப்படிப்பட்ட காவியங்கள்? தமிழில் அப்படி எடுப்பதற்கு யார் உள்ளனர்?" என்கிறார்.


கணவரின் ஊக்குவிப்பு, ஒப்புதல் பற்றி பேசுகையில், "எந்த சூழ்நிலையிலும், தவறு செய்ய மாட்டேன், என்ற என் மேல் இருந்த நம்பிக்கையே," தன்னை சுதந்திரமாக பணி செய்யவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார்.

அவ்வப்போது வந்து பார்த்துச் செல்லும் சகோதரனையும், அங்கே மருத்துவ காரணங்களால், 'சூழ்நிலைக் கைதி'யாய் இருப்பதையும், நடக்க இயலாமை பற்றியும், எப்போதும் கத்திக் கொண்டிருந்த தொ(ல்)லைக் காட்சிப் பெட்டியில் லயித்திருந்த பணிப் பெண்களின் அலட்சியம் (இருவர் தவிர – புகைப் படத்தில் கண்ட அம்மணி, மற்றும் சத்யா எனும் இளம் பெண்- அவர் புகைப்படத்திற்கு மறுத்துவிட்டார்), நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சுற்றியுள்ள முதியவர்களின் சோகம் போன்றவற்றையும், ஒரு படைப்பாளியைப் போலவே, கோர்வையாகப் பேசிப் பதிவு செய்தார்!


எங்களுக்கு என்ன செய்தி சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, "மனித நேயம், பெண்மை இரண்டுக்கும் மதிப்பு கொடுங்கள், அதுவே மனிதத்தை உயர்த்தும்,"என்றார்.


83 வயதிலும், தெளிந்த பேச்சு, தீர்க்கமான கருத்துக்கள், என்று தம்மை வெளிப்படுத்திக் கொண்டாலும், அழகிய கண்ணாடி ஜாடி போன்றே அவரது மனம் இருந்ததை எங்களால் உணர முடிந்தது. மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். யாரும் உதவி செய்வதை அவர் விரும்பவில்லை, என்பதும், தமது இந்த நிலை குறித்த வருத்தம் அவர் பேசியதில் வெளிப்பட்டது.


புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுதான். அதேபோல்தான் அம்மாவும். ஆனாலும் புலிக்கேற்ற உலவு தளம் தருவது, மிருக ஆர்வலர்களின் கடமையன்றோ? மிருகத்திற்கே அப்படி என்றால், தமிழில் தடம் பதித்த ஒரு பெண் எழுத்தாளருக்கு?


தங்குமிடமும், வைத்திய செலவும், தமிழ் வளர்ப்பதாகச் சொல்லும் அரசு ஏன் உடனடியாக செய்யக் கூடாது?


காலம் பின்னிரவு ஆகிவிட்டமையால், மனமின்றி அவரிடம், பிரிய மனமில்லாமல், பிரியா விடை பெற்றுக் கொண்டு வந்தோம்.

11 November 2008

மகாபலிபுரத்தில் ஒரு பசுமைக் கற்பழிப்பு!

உலக புராதனச்சின்னமான மாமல்லபுரத்தில் பசுமைக் கற்பழிப்பு!


மாமல்லபுரத்திலுள்ள த்ரிமூர்த்தி குகைக்கு எதிரே, ஒரு நவீனக் கழியலறைக் கட்டப்படுள்ளது. அழகான புராதனச் சின்னங்கள் இருக்குமிடத்தில் இத்தகைய நவீனத்துவம் தேவைதானா? பார்க்க வருபவர்கள் தங்கள் சிரமபரிகாரங்களை அவர்கள் தங்கியுள்ள விடுதிகளிலோ, அருகாமையிலுள்ள சிற்றுண்டி சாலைகளின் ஓய்வறைகளிலேயோ செய்து கொள்ளலாம். அப்படியிருக்க, புராதனத்தைக் கெடுக்கும் இந்த நவீனம் தேவைதானா?


புராதன ஆர்வலர்கள் இந்த நவீன கழிப்பறைக்கு பின்புறமாய் தொடங்கும் இடத்திலிருந்து, குன்றுகளைச் சுற்றி, சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலிருந்த, கோரமண்டல் வரண்ட பசுமைக் காடுகளிலேயே இயற்கை மாறாமல், இன்றும் உள்ள காடுகளினூடே நடந்து சென்று, இயற்கை அழகையும், மிகவும் காண்பதற்கு அரிய தாவரங்களைக் கண்டும் மகிழ்ந்து வந்தனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த காடுகள் இருப்பதே தெரியாது. கள்ளக் காதலர்களும், தண்ணியடிப்பவர்களும், ஊரைச் சுற்றி செல்ல சோம்பல்பட்டு, குறுக்கு வழியில்

செல்பவர்களுக்கும் தான் இந்த இடம் பரிச்சயம். ஆனால், அவர்களால், மரங்களுக்கு இதுவரை எந்த கெடுதலும் வந்ததில்லை.

ஆனால், ஏ.எஸ்.ஐ. எனும் அகில இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் நேர் கண்காணிப்பில், வேலிகளால் வரையறுக்கப்பட்ட இடத்துள் இன்று, பாதி, காட்டு தீ வைத்தும்,புல்டோசர்களாலும், அரிவாள் அழிப்பினாலும், அழிக்கப்பட்டு விட்டது!


கேள்விப்பட்டதும், குடும்பத்தில் ஒருவருக்கு தீ விபத்தால் மரணம் ஏற்பட்ட தாக்கத்தோடு அங்கே வந்த இயற்கை ஆர்வலர்கள், பல தகவல்களை நமக்கு அளித்தனர்.

170க்கும் மேற்பட்ட அரிய தாவர வகைகள் இங்கு வளர்ந்துள்ளன. அவற்றில் சில உலகிலேயே இங்கு மட்டுமே காணக்கிடைக்கும்!

பாலைவனங்களில் மட்டும் வளரும் குட்டை பேரீச்ச மரங்கள் (100 வயதானவை) சில அழிந்துவிட்டன். சில பிழைத்துள்ளன.


பேய் அத்தி, கரடிப்புங்கம், என்றூம் பசுமை இலைகள் கொண்ட,இலையே உதிராத கார்சினியா ஸ்பிகடா வகை மரங்கள், ஆலமரத்திலேயே அதிக வைரம் பாய்ந்த, வேர், விழுதுகள்

விடாத வகை மரங்கள், சில காப்பிச் செடிகள், காட்டு எலுமிச்சை, ஒரு சில கருங்காலி மரங்கள், 250 வயது தாண்டிய டெரிஸ் ஸ்காண்டன்ஸ் எனும் அரிய வகைக் கொடி, போன்றவை, அதிர்ஷ்ட வசமாக உயிர்

தப்பியுள்ளன.

ஆனால் பல கணக்கற்ற 100 வயதிற்கும் மேலான மரங்கள், புகை கக்கியபடி சாய்ந்துள்ளன! அந்த புகை மூட்டமும், கருகிய மரங்களையும் காண்கையில், நமக்கும் நெஞ்சு விம்மியது.

த்ரிமூர்த்தி குகையிலிருந்து, இக்காட்டின் நடுவேயுள்ள கோனேரிக் குடைவறைக் குகை

வரையிருந்த மரங்கள் எல்லம் வெட்டப்பட்டுவிட்டன!ஒரு சில நாட்கள் முன்னர், ஒற்றையடிப் பாதையாய் இருந்த காட்டு வழி, வெயில் படாத இயற்கை இன்று இல்லை. புல்டோசர்களும், லாரிகளும் சென்று, பாதையில்,

சக்கரத் தடங்கள் தோன்றியுள்ளன.


கோனேரி மண்டபத்துக்கு நேர் எதிரே, வேலி வரை செல்லும் இப்புதிய பாதை, அங்கேயே முடிவடைகிறது! வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு பெரிய நீர் நிலை,கண்மாய் போல். புதிதாக அதன் கரைகள் உயர்த்தப் பட்டிருப்பது தெரிகிறது.

மரங்களை சாய்த்துவிட்டு, அப்படி என்ன செய்யப் போகிறார்கள்?

படகு சவாரி செய்யும் படகுத் துறை ஏற்படுத்தப் போவதாகக் கேள்வி! மல்லைக்கு அருகிலேயே முத்துக்காடும், முதலியார்குப்பம் படகுத் துறைகளும் கடலன்னையை வருடியபடி இருக்கையில், இந்த குளம் குட்டையில், அப்படி என்ன படகு சவாரி செய்ய மக்கள் வரப் போகிறார்கள்? இல்லையேல், மேலும் நவீன கழிவறைகள் கட்ட என்றும் ஒரு சாரார் சொல்கின்றனர்.


தொல்பொருள் அதிகாரிகளைத் தொடர்பு செய்ய முயன்றால்,அவர்கள் சிலைகளுக்கும், சின்னங்களுக்கும் மட்டுமே பாதுகாவலர்கள் (?) என்றும், இந்த காடுகளை மைசூரிலிருந்து ஏ.எஸ். ஐ யின் தோட்டக் கலைத் துறையினர் நேர் மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும் உள்ளது என்றும் சொல்கின்றனர்.

இந்த காடுகளிலுள்ள அத்தனை தாவரங்களையும் இனம் கண்டு, தாவரப் பெயர்களைப் பதிவு செய்ய சுமார் மூன்று மாதங்கள் உழைத்த பேராசிரியர்கள், எஸ்.சுவாமிநாதன், திரு. அஜித் தாஸ், மற்றும் அவர்களது ஆராய்ச்சி மாணவர்களின் உழைப்பால் பல அரிய தாவரங்கள் இங்கே, இந்த கோரமண்டல், வரண்ட, என்றும் பசுமையான காட்டில் இருப்பதை உலகிலுள்ள பல கருத்தரங்களில் வரவேற்று மெச்சியுள்ளனர்.

சில அரிய மரம், செடி, கொடிகளும், அவற்றில் சில உலகிலேயே இங்கு மட்டும் உள்ளது என்பது, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சில ஆராய்ச்சியாளர்கள் சில தாவரங்களை என்ன விலையானாலும் தருகிறோம் என்று சொன்னதும், அதற்கு நமது தாவரவியல் ஆர்வலர்கள், இந்தியாவிற்கென பெருமை சேர்க்கும் சில விஷயங்களில் இங்கு வளரும் இந்த தாவரங்களும் ஒன்று. உயிர் போனாலும் தரமாட்டோம் என்று

மறுத்ததும், இந்த அரசுதுறை அரைவேக்காடுகளுக்கு எங்கே தெரியப் போகிறது? இவர்கள் இத்தொடு நிறுத்திக் கொண்டு, இந்த காட்டை தாவரவியல் ஆர்வலர் குழுக்களிடையே ஒப்படைத்துவிட்டால், மீண்டும் அக்காட்டின் அழகும் பெருமையும் உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு நந்தவனம் அமைக்க வாய்ப்புள்ளது.


பள்ளிக் குழந்தைகளுக்கு அரிய இயற்கைச் செல்வங்களை கற்றுத் தர வழி உள்ளது. அதற்கு வேண்டியவர்கள் வழி செய்வார்களா, இல்லை ஆயிரம் தடை சொல்லி மரங்களை

அழித்து அவப்பெயர்பெற்று, செல்லாக் காசுக்குப் படகுகள் ஓட்டிக் கொண்டிருக்கப் போகிறார்களா? அல்லது கழிப்பு அறை தந்த செம்மல்கள் என்று மெடல் வாங்கி சட்டையில்லா கல்நெஞ்சுகளில் குத்திக் கொள்ளப் போகிறார்களா?


இந்த மல்லை குகைகளைச் சுற்றியுள்ள, குறிப்பாக இந்த காட்டினருகேயுள்ளஏ.எஸ்.ஐ யின் கம்பிக் கதவுகள் என்றும் திறந்தபடியே உள்ளன.


நாம் குறிப்பிட்டபடி, சமூக விரோதிகளும், குடிகாரர்களும்,

கள்ளக் காதலர்களும், புதிதாக எரிந்துபோன மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் கிராம மக்களையும்தான் அங்கு பார்க்க

முடிகிறது. உலக அளவு அந்தஸ்து பெற்ற புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களிலா இந்த அவலம்? தாவரயியல் துறை மைசூர் அதிகாரிகளின் கட்டுபாட்டில் உள்ளது சரி. இந்த சரித்திரச் சின்னங்களின் பாதுகாப்பு யார் கையில் உள்ளது? கொடுமை என்ன என்றால், நாம் சென்ற அதே ஞாயிற்றுக் கிழமைதான், பெல்ஜிய மன்னர், ராணியான ஆல்பர்ட், பவோலா தம்பதியரை அரசு மரியாதையோடு, சென்னை வட்ட அகில இந்திய தொல்பொருள் துறைத் தலைவி சத்யபாமா பத்ரிநாத் அவர்கள் மாமல்லபுரம் சுற்றிக் காட்ட அழைத்து வந்திருந்தார்கள். நல்ல வேளை அவர்களை இந்த கருகிய காட்டிற்குள் அழைத்து வரவிலை.வந்திருந்தால், நமது மானம் படகு அல்ல, கப்பல் கடந்து, பல நாடுகளுக்குப் போயிருக்கும்!


இதை பச்சைக் கற்பழிப்பு, அல்லது இனப் படுகொலை என்று சொல்லாமல், வேறு எப்படி அழைப்பதாம்?


இருக்கும் மரங்களைக் காக்க ஒரே வழி, இதை இயற்கை ஆர்வலர்கள் கொண்ட தனிக் குழுவின் பராமரிப்பில் விடவேண்டியதுதான். வாடிய பயிரையும் கண்டு வாடிய வள்ளலார் பிறந்த தமிழ் மண்ணில், இப்படி உலக பாரம்பரியச் சின்னங்கள் உள்ள இடத்திலேயே ஒரு பச்சைக் கொலை நடந்திருப்பது ஒரு பொது நல வழக்குக்கான விஷயம்தானே? அரசு நடவடிக்கை எடுக்குமா?


எதோ என் நல்ல நேரம், ஊடகத் துறையினர், (தொலைக் காட்சி மற்றும் தினசரிகள்) இதை உடனடியாக வெளியிட்டும்,பிரசுரித்தும், ஆவன செய்வதாய் உறுதியளித்துள்ளனர். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அச்சுகளில் ஏறி காலை (புதன் கிழமை- இந்திய நேரப்படி) வரும் என்ற நம்பிக்கையோடு தூக்கம் இழந்துவிட்ட கண்களை தூங்க வைக்க முயல்கிறேன்.. திரைப்படமாகவும் இதை எடுத்துள்ளேன். விரைவில் அதை சீர் செய்து வெளியிடுவேன். அடுத்த முறை இந்த மாதிரி தவறை ஜென்மத்துக்கும் துறையினர் செய்யக் கூடாது! :( நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்!

தினமலர் சென்னை பதிப்பில் 12-11-2008 ல் வெளிவந்த கட்டுரை



சற்றுமுன் கிடைத்த தகவல்: (16 நவம்பர் 2008)


எனது பத்திரிகை நண்பி ஏ.எஸ்.ஐ அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, முதலில் மறுத்தவர்கள், பின்னர், அரிய மரங்களை எங்கே வெட்டினோம்? புங்கை, வேம்பு போன்றவற்றை மட்டும்தானே வெட்டினோம்,” என்றார்களாம்.


அப்படியாகில், 100 ஆண்டுகள் மேல் தாண்டி விட்ட அந்த ‘பொது' மரங்கள் அரியவை ஆகும் நாள் வந்துவிட்டதே! இதோ, இவர்கள் அவற்றை வெட்டி, அவற்றை ‘சரித்திரம்' ஆக்கிவிட்டார்களே! சுற்றியுள்ள மரங்களை வெட்டிவிட்டால், நாம் குறிப்பிட்ட அரிய மரங்கள் மேலே விழும் வெயில் காற்று, சீதோஷ்ண நிலை மாறி, ‘என்றும் பசுமை' யாய் அவற்றை வைத்திருக்கக் கூடிய நிலமையும் மாறி, அந்த ‘அரிய' மரங்களும் அழிந்துவிடாதோ?


படகுத்துறை அமைப்பதை சுற்றுலா துறையினர் மற்றும் தொல்பொருள் துறையினர் இருவரும் மறுத்துவிட்டனராம். எனில், மண்ணைத் தோண்டி. அந்த நீர் நிலையை அதிகம் செய்தது யார்? பொது பணித் துறை என்ற பதில் வந்துள்ளது! எதற்காம்? ஊரிலுள்ள 36 நீர் நிலைகளாஇ மழை வலுக்குமுன் ஆளப்படுத்தி நீர் வளத்தை அதிகப் படுத்துவதற்காக இந்த குளத்தையும் சீர் செய்தார்களாம்! சுற்றியுள்ள மரங்களே கரை கெட்டிப்படுத்தி மண் சரியாமல் இருக்க ஆதாரம். அவற்றை வெட்டி நீர் நிலை சரி செய்வதஎன்பது, கண்ணைக் விற்று சித்திரம் வரைவதை போல் ஒப்பிடுவதாகும்!


Update: 19th Nov 2008

news in NDTV on this. I appear for few seconds!!!

நற்செய்தி: மரங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.


மரபூர் ஜெய.சந்திரசேகரன்.


20 October 2008

பண்டைய கோவில் ஓவியங்கள் அழிகின்றன

கோவில்களைப் புனரமைப்பு செய்யும் போது, சுவற்றில் உள்ள அழகான பல்லவர், சோழர், நாயக்கர் காலத்து ஓவியங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியிருந்த நாயக்கர் காலத்து ஓவியங்கள், இவ்வாறு அழிந்தது உலகப் ப்ரசித்தி ஆகிவிட்டது!

அப்படி அதில் என்ன இருக்கிறது?

பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?
இவை இயற்கை மூலிகைச் சாயங்களால் வரையப் பெற்றவை
கோட்டோவியங்களின் தடிமனைப் பார்த்தால், இன்று தயாரிக்கப்படும் மைக்ரோ டிப் பேனாக்கள் பக்கத்தில் கூட வராது! அத்தனை மெலிய கோடுகள்.

  1. வர்ணத்தோடு, உணர்வுகளை மெலிதாகப் படம் பிடித்துக் காட்டும் நயம்.
    ஸ்தல புராணங்களை, இதிகாசங்களை, மன்னர் காலச் சரித்திரத்தைப் ப்ரதிபலிக்கும் ஓவியங்கள்.
  2. இவை காலச் சின்னங்கள். 100 வருடம் ஆகிவிட்ட அனைத்துமே, பாதுகாக்கப் பட வேண்டிய சின்னங்கள் என்று தொல்பொருள் இலாகா சொல்லும் காலத்தில், இந்து அறநிலையத் துறைக்கு மட்டும் அந்தச் சட்டங்கள் பொருந்தாதா என்ற கேள்வி எழுகிறது.
  3. இவற்றை மீண்டும் வரையவோ, மீட்கவோ, மிக சொற்பமான கலைஞர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள் உள்ளனர்!

    சமீபத்தில் அப்படி செப்பனிட்டுப் பணிகள் நடக்கும் இரண்டு கோவில்களுக்கு செல்ல நேர்ந்தது.

    1) மன்னார்கோவில்: குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் தினமும் பாடப்பெற்ற, அவரது சமாதி உள்ள ராஜ கோபாலஸ்வாமி பெருமாள் கோவில்.

ஏறத்தாழ 10 வருடங்களாய் ஹிந்து நாளிதழ் மற்றும் எனைய எல்லா பத்திரிகைகளிலும் கோவில் நலிந்த நிலையிலுள்ளது என்று கட்டம் கட்டி எழுதி வந்த முக்கிய ஸ்தலம். இன்று புனரமைப்பு நடக்கின்றதே என்ற சந்தோஷத்தில் பார்க்கப் போன நமக்கு மன வேதனை அதிகமானதுதான் மிச்சம்.

நின்ற, கிடந்த, அமர்ந்த கோலங்களில், இரண்டே கோவில்கள் ஒரே விமானத்தில் மூன்றடுக்குகளில் பெருமாளைப் பார்க்கலாம் என்றால் எனக்குத் தெரிந்து அது இந்த மன்னார்கோவில், மற்றும் உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில்கள் மட்டுமே.
சுதையினால் செய்யப்பட்டு, மேலே, கண்களைக் கவரும் இயற்கை சாயங்களினால் வர்ணம் பூசப்பட்ட மூலவர்கள்! கோவில் வேலைகள் நடப்பதால், மேலே ஏற முடியவில்லை. இருந்தாலும் வேலை செய்யக் கட்டிய சாரங்களால் மேல் ஏறிப் பார்த்தால்,

வழியிலேயே, கல்வெட்டுக்கள் மேலேயே சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளது. அருகில் வருங்காலத்தில் கோபுரத்தியே சாய்க்கக்கூடிய சிறி செடி தலை நீட்டிப்பார்க்கிறது!

கோவில்கள் அழிய முக்கிய காரணம் இந்த கவனிப்பார் அற்று வளரும் செடிகளே! பெரும்பாலும், ஆல், அரச மரங்கள் பெரிதாய் வளர்ந்து அஸ்திவாரத்தியே ஆட்டிச் சாய்த்த கோவில்களின் படங்கள் என்னிடம் ஏராளமாய் உள்ளன.

முதல் தளத்தின் முன் பகுதியை ஏதோ கழிவறை கட்டுவதுபோல், அழகின்றி, புராதன வடிவத்துக்கு சிறிதும் ஒப்பாமல், கட்டுவதையும், உள்ளே சன்னதி முன்மண்டபத்தில் முட்டுக் கொடுக்க வைத்த சவுக்குக் கம்புகளும், கரைத்த சிமெண்ட் சாரல்களும், அரிதான அந்த ஓவியங்களை அழித்துக் கொண்டிருப்பதையும் எந்த கண்கள் உள்ள புத்தி ஸ்வாதீனம் உள்ளவரும் பார்க்கச் சகியார்! புராதன முறையில் கட்டப் பட்ட சுதை செங்கல் கட்டுமானம் 1000 ஆண்டுகள் தாங்கி வந்துள்ளது. செடிகளினாலும், கவனிப்பாரற்று பராமரிப்பு இல்லாமையாலும் தான் இந்த கோவில்கள் சிதிலமடைந்துலள்ளன. தொல்பொருள் கட்டிடவல்லுநர்கள் சுண்ணாம்பு, செங்கலினாலேயே கட்ட முடியும் என்கிறபோது இந்த சிமெண்ட் பணி (கலையழகைக் கெடுக்கும் பாத்ரூம் கட்டும் முறை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ) தேவையா?

நல்ல தொல்பொருள் ஆய்வாளர்கள், புராதன ஓவியம் தெரிந்த வல்லுநர்கள், ஸ்தபதிகள் ஆகியவர்களை கலந்தாலோசிக்காமல், நம் பண்டைய சின்னங்களை,கலை பொக்கிஷங்களை சீர் செய்கிறேன் பேர்வழி என்று அழிக்கிறார்களே! கேட்பார் இல்லையா? இவற்றைத் தடுக்க எதேனும் சட்டங்கள் இல்லையா (anti- antique and artifacts act??)

மனதை நெருடும் கோவில் புனரமைப்பு செலவுகள் பட்டியலில், சுமார் 19 லட்சம் சாண்ட் ப்ளாஸ்டிங் (கல் சுவர்களை மிக அதிக அழுத்தக் கம்ப்ரெஸர் காற்றால், மணல் கலந்து அடிப்பது! இதன் மூலம் கல்வெட்டுக்கள் அழிந்துவிடுவது திண்ணம். இந்த முறையை எப்போதோ தொல் பொருள் துறையினர் தடை செய்து விட்டனர். இங்கே எப்படி அனுமதித்தார்கள்? சம்பந்தப் பட்டவர் கவனிப்பார்களா?
படங்களை இந்த பிகாசா படத்தொகுப்பில் அளித்துள்ளேன்.
மன்னார்கோவில் பற்றி அறிய இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

இரண்டாவதாக நான் பார்க்கப்போன கோவில் களக்காடு சத்திய வாகீஸ்வரர் ஆலயம். ஆம், முண்டந்துறை – களக்காடேதான்!

மலைசூழ் இயற்கை பின்பலத்தோடு, தனியே தெரிய நிற்கும் கோபுரம், ஒரு கண்கவர்காட்சி. அங்கே கோபுரம் 9 நிலைகள் கொண்டது. அத்தனை நிலைகளும், மரத்தாலேயே நிறுவப்பட்டு, சுண்ணாம்புச் சுதையினால் பூசப்பட்டு, வெளிச் சுற்றில் கணக்கிலடங்கா சுதை பொம்மைகள் நிறுவப் பெற்று, உள்சுற்றில் ஒன்பது நிலைகளிலும் ஓவியங்கள் வரையப் பட்டு, காலத்தை வென்ற கலைப் பெட்டகமாகத் திகழ்கிறது.

இதுவரை வந்த புனரமைப்பு கணக்கீடுகளில், அரசியல் சத்தியங்கள் செயலற்றுப் போய், உள்ளூர் மக்கள், தாங்களே ஒவ்வொரு செலவாய் சேர்த்து, உள்ளேயுள்ள ஓவியங்கள், வெளியே உள்ள சுதை பொம்மைகளை நிறுவ ரீச் பஃவுண்டேஷனின் உதவியை நாடியுள்ளனர்.

இங்கேயும், பெண் உருவங்களின் முக்கிய பகுதிகளில் குரூரர்கள் பொத்தல் போட்டு ஓவியங்களை பாழாக்கியுள்ளனர்.

கணக்கிலடங்கா , மரச் சித்திரங்கள், இதிகாச, புராண, அன்றைய வாழிவியல் ஓவியங்கள் என 9 நிலைகளிலும் ஓவியங்கள், சிற்பங்கள். அதிகம் ஆகையால் அவற்றை பிகாசாவில் வெளியிட்டுள்ளேன்.

களக்காடு பற்றி மேலும் தகவல்கள் பெற இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

மேலும், குற்றாலம் சித்திரசபையிலுள்ள ஓவியங்கள், திருவாரூர் தியாகராஜர் கோவில் ஓவியங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுள்ள அம்மன் சன்னதியிலுள்ள ஓவியங்கள் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். காலம் கடந்து அவை அழியுமுன், காப்பார் யார்?

மேற்சொன்ன ரீச் பஃவுண்டேஷன் மூலம், காஞ்சி வரதராஜர் பெருமாள் கோவில் பிரகாரத்தில் உள்ள ஓவியங்களை கோவை L.M.W அதிபர் ரவி சாம் தன் செலவிலேயே செப்பனிட முன் வந்துள்ளார். இம்மாதிரியான தன்னார்வலர் குழுக்களுக்கு அரசு உடனே அனுமதி தந்தால், மக்கள் பலத்தோடு, அவர்களே இப்படி பல கலைச் செல்வங்களை காப்பார்ற இயலும்.

இப்படி ஆயிரம் தன்னார்வக் குழுக்கள் நம்மிடையே உடனே தேவை! இல்லையேல் கோவில் கலைகளும், ஓவியங்களும், நம் கண் முன்னேயே அழிவதைக் காணும் ‘கண்ணிருந்தும் குருடர்கள்’ என்ற அவப் பெயர் நம் சந்ததியினருக்கு வரும்!

ஹிந்து மற்றும் Front line மூத்த நிருபர் டி. எஸ். சுப்ரமணியம் அவ்வப்போது இவற்றைப் பற்றி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். அச்சோடு நின்று விடாமல் அரசிலும் கவனிக்கவேண்டியவர்கள், கவனிப்பார்களா?
ஒரு மடல் இங்கே

29 September 2008

மல்லை என்ன கொல்லையா?

மல்லை அல்லது மகாபலிபுரம் எனும் மாமல்லபுரம் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று போற்றப்படுகிறது. ஆனால் அங்கே அத்தகைய பெரிய இடத்திற்குத் தகுந்தாற்போல் காவலர்கள்,பாதுகாவலர்கள், உள்ளார்களா என்பது சந்தேகமே.

அகில இந்திய தொல்லியல் துறையின் ஓரிருவரே கண்களில் தென்படுகின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஆட்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு பஞ்சம். அர்ச்சுனன் தவசு எனப்படும் பாறையை நோக்கி நிற்கையில், உங்களுக்கு வலது பக்கத்தில் உள்ள கம்பி கேட் (சிறிய வாயில்) நேராக தர்மராஜா மண்டபம் போன்றவற்றுக்குப் போக முடியாமல் எப்போதும் மூடியே வைத்திருக்கிறார்கள்?! ஆனால், த்ரிமூர்த்தி குகைக்கு எதிரே உள்ள கேட் எப்போதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது! (இரவில் எனக்கு எப்படி என்று தெரியாது, பகலில் நான் பார்த்த எந்த நேரத்திலும் அது திறந்தே இருக்கிறது! யார் நன்மைக்கு?

உள்ளூர் மக்கள் உள்ளே போய்வந்து, காலைக் கடன்களை பின்னே உள்ள பஞ்சபாண்டவர் குகை மற்றும் கோடிக்கால் மண்டபக் குகைகளில் மல ஜலம் கழிக்கவும், சிராய், விறகு ஒடித்துக் கொள்ளவும், சுற்றுப் பாதையாய் ஊருக்குள் நடக்காமலிருக்கவும் அதனால், பின் புறம் பலர் கண்களுக்கு தென்படாத குகைக் கோவில்களில் ‘குடி’ மக்கள் அதகளம் செய்யவும், இன்ன பிற அசிங்கங்கள் நடந்தேறவும் வழி செய்கிறார்களே காவலர்கள் என்ற பெயரில் அங்கே பணிக்கு அமர்த்தப் பட்ட பண்டை கால சின்னங்களை சின்னாபின்னப் படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட கிராதகர்கள்? அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. வெளிநாட்டவருக்கு 250 ரூபாயும் பிடுங்கிக் கொள்ளும் தொல்பொருள் துறையும், இந்த உலக அதிசயத்தை ஊரறியச் சொல்லிச் சொல்லியே பெயரும் பணமும் வாங்கத் துடிக்கும் தமிழக சுற்றுலாத் துறையும் என்ன கிழிக்கிறார்கள்?

மேலும் சில மெய்ப்பொருள் காண்பது .. கொடுமை!

மகிஷாசுரமர்த்தினிக் குகை மற்றும் தர்மராஜ மண்டப சுவர்களில் மற்றும் வாயில் நடைபாதையில் உள்ள அபூர்வ கிரந்த எழுத்துக்கள். நடந்து நடந்தே தேய்ந்து போவிடும், காலப் போக்கில். இந்தக் கோயிலில் சிறப்புவாய்ந்த வடமொழிக் கல்வெட்டு ஒன்று தென்புறச் சுவரில் காணப்படுகிறது. இதில் பதினொரு செய்யுட்கள் உள்ளன.

'பகைவர்களை வென்றவனும் ரணஜெயன் என்று பட்டம் கொண்டவனுமான அத்யாந்தகாமன் என்ற மன்னனால் இக்கோயில் சிவபெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது.

இது போன்ற கல்வெட்டுக்களை ஒரு கண்ணாடி அல்லது உடைக்க முடியாத சிலிகோன் பூசப்பட்ட பாலிகார்பனேட் எனும் கண்ணாடி போன்ற ஷீட்டினால் கவசம் செய்து மூடினால் என்ன? கணேச மண்டபத்திலும், பின்னர் புலிக்குகை அருகே உள்ள அதிரண சண்டேஸ்வர மண்டபத்திலும் கூட அறிய பல்லவக் கிரந்த எழுத்துக்களும், தர்மராஜ மண்டபத்தில் காணப்படும் அறிய செய்யுளின் அதே பிரதி, தேவநாகரி எழுத்துக்களில் ஒரே பொருள் பட எதிரும் புதிருமாக பொறிக்கப்பட்டுள்ளன. ஒரே பொருள் படும் இரு வேறு எழுத்துக் கல்வெட்டுக்கள் ஒரே இடத்தில் இருப்பது உலகிலேயே வேறெங்கும் கிடையாது.
அதிரண சண்டேஸ்வரக் குகையின் கிரந்த எழுத்துக்களுக்கு நேர் கீழே தரையில், அரிய சோழர்கால கல்வெட்டும் உள்ளது.
இதுவும் காலாகாலத்தில் மூடி வைக்கப்படவில்லையென்றால், தேய்ந்து அழிந்து போய்விடும்.

அதேபோல், மக்கள் நடமாடும் கடற்கரையில், கடற்கரைக் கோவிலின் தெற்கே, ஒரு குட்டிப் பாறை உள்ளது. அது, புலிக் குகையின் மாதிரி (model) போல் உள்ளது. அதை அப்படியே வெளியே விட்டு விட்டார்கள். வேலி கிடையாது. மக்கள் கிறுக்கல்கள் ஏராளம். கடற்கரைக் கோவிலின் வடக்கே, தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் வேலிக்கு வெளியே, மகிடாசுரனை தேவி அடக்குமுன், வாகனமான சிங்கம் அப்படியே பாய்வது போலவும், அரக்கன் ஓடமுயலுவது போலவும் புடைப்புச் சிற்பமும் கூட பாதுகாப்பில்லாமல், மக்களின் (அருகிலுள்ள மீனவர் குப்பத்தின்) அறிவிக்கப்படாத கழிவறையாக உள்ளது!

இவையும் காலச்சின்னங்கள் தான். ஒருதலைப் பட்சமாக, இவற்றை வேலியால் மூடாமல், திறந்த வெளியில் விட்டதற்கு காரணம் என்ன?

மூக்கை பொத்திக் கொண்டே காண வேண்டிய குகை தர்மராஜ மண்டபக் குகை மற்றும் கோனேரி மண்டபம். ஒரே மூத்திர நாற்றம். ஏன்?

த்ரிமூர்த்தி குகை சுற்றி உள்ள பாறைகள் மேலெல்லாம், வழியெங்கும் கண்ணாடி பாட்டில் சிதறல்கள். ஏன் இங்கே குடிக்க அனுமதிக்கிறார்கள்?

அடர்ந்த காட்டினுள் சென்று இந்த மண்டபங்களைக் காணலாம். இப்படி கடற்கரையை ஒட்டி எஞ்சியுள்ள பசுஞ்சோலைகளின் ஒன்று இந்த பாதை! இப்பாதை த்ரிமூர்த்தி குகையின் எதிரே ஆரம்பித்து, சிங்கக் கட்டில்வரை செல்கிறது.

பல இடங்களில் சிலைகளின் மீது கிறுக்கியுள்ள, தங்கள் வெறுக்கத்தக்க கலை அபிமானத்தை (?) வெளிப்படித்தியுள்ள ‘நவீன சித்திரக்காரர்கள் அல்லது ‘கிறுக்கர்’களின் கையை வெட்ட வேண்டாம்?

புகழ் மிக்க உழக்கு எண்ணை ஈச்வரர் கோவில் சிற்பமான ராவணேஸ்வரன் கைலைமலையைத் தூகுவது போன்ற சிலை முழுவதும் கிறுக்கல்கள். ராவணனின் வயிறு முழுதும் ‘கிறுக்கர்;களின் பெயர்கள்!

ஏன்? உலகப் புகழ் பெற்ற மல்லை என்ன உங்கள் கொல்லையா? பராமரிக்க வக்கில்லை என்றால், வழி விடுங்கள்; ஆர்வலர்கள் பலரைக் கொண்டு நாங்கள், தன்னார்வலர் குழுக்கள் இவற்றை சுத்தம் செய்கிறோம். அரசு தடுப்புகள், அனாவசிய சட்டங்கள், குறுக்கீடுகள் வழிவிடுமா? அதன் பிறகு, தப்பு செய்வோரை தண்டிக்கவும் அதே தன்னார்வக் குழுக்களுக்கு அதிகாரம் தரப்படுமா? சரி, என்றால் இந்த மல்லை எனும் உங்கள் கொல்லையை முல்லை நந்த வனமாய் மாற்ற நாங்கள் ரெடி!
--------------------------------------------------------------------------------------------------------
படங்கள் உதவி: ஸ்ரீராம் ராஜாராம், நந்தகுமார் செல்வராஜ், லெஷ்மி -பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தினர்.
லலிதா வெங்கட்டின் படங்கள் கிடைத்த உரலி: http://www.indian-heritage.org/poimahabs/mahabtrp.html
நானும் மற்ற பொன்னியின் செல்வன் யாஹூ இணையக் குழுமத்தினருடன், மேற்சொன்ன ஐ.ஐ.டியின் ஓய்வு பெற்ற மாமல்லை ஆராய்ச்சியாளர் திரு. சுப்ரமணியம் சுவாமிநாதன் அவர்களுடன் சமீபத்தில் மல்லை விஜயம் செய்தோம். மேலுள்ள உரலியில் சொன்ன கருத்துக்களுக்கு முற்றிலும் ஒப்பான கலந்துரையாடலே நடந்தமையால், அவற்றை மீண்டும் பதியவில்லை. உரலியில் கண்டது போக, கடற்கரை கோவிலையும், அதன் வேலிகளின் வெளியே உள்ள பாதுகாப்பற்ற நிலையிலுள்ள மகிடன் குன்றும், புலிக் குகையின் மாதிரிக் குன்றும், பார்த்தோம்.





02 March 2008

சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி...

சென்னை நாரத கான சபாவில், இன்றைய மாலைப் பொழுது.. (ஞாயிறு 2 மார்ச்) வாசல் வரை நிரம்பி வழியும் கூட்டம்.. கலைந்த தலை, கசங்கிய சட்டைகளுடன் இருவர் என்னை பிடித்துத் தள்ளாத குறையாக முண்டியடித்து போய், இருக்கை தேடி அமருமுன், அவர்களை நேரில் ஒரு பிடி பிடித்து ஏன் இப்படி? ' என்று கேட்கும் முன், நானும் அரங்கத்துள் நுழைந்தேன். அந்த சூழ்நிலை யாரையுமே பேசவிடாது. மேடையில் ஒருவர் பின் ஒருவராக பேசுபவரைத்தவிர!

என்னை தள்ளிவிட்டு இருக்கை தேடி அமர்ந்தவர்கள் கணேஷ். வசந்த்! சுஜாதாவின் ஆதர்ஸ புருஷர்கள், கதை நாயகர்கள்! வசந்தை இதுபோல் சிரிப்பு கலைந்து நான் பார்ப்பது இதுவே முதல் முறை! கணேஷின் சீரியஸ் முகம், முதல் முறை வெளிரிப் போயிருந்தது! இனி இவர்கள் ப்ரதாபத்தை யார் அரங்கேற்றுவார்கள்?

ஆம், அங்கு நடந்த நிகழ்ச்சி, சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி. கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன், நல்லி செட்டியார், பார்த்திபன், இயக்குநர் வசந்த், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி!

எல்லார் பேசியதிலிருந்து சில சாராம்சம்:

சத்யராஜும், பத்திரிகையாளர் சுதாங்கனும், பெருமை பட்டுக்கொண்டார்கள். அவர்கள் இயற்பெயரும் ரங்கராஜன் என்பதால்! தன் மனைவியின் பெயரில் அவர் பிற்காலத்தில் தான் எழுதினாராம். முதலில் எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் குமுதமும், கணையாழியும்தான் கதைகள் பிரசுரித்துள்ளன!

திரு. கஸ்தூரி ரங்கனுடன் இணைந்து அவர் நடத்திய கணையாழி இதழில், சுஜாதாவின் 'கடைசி பக்கம்' எத்தனை எத்தனை பேருக்கு தமிழ் தாக்கம் ஏற்படுத்தியிருந்தது என்பதை ரா.கி.ரங்கராஜன், சாரு நிவேதிதா, எஸ்.ராம்கிருஷ்னன், மதன், சுதாங்கன், இரா.முருகன், போன்றோரின் சொற்களில் வெளிப்பட்டன!

அவர் தம்பி பேசும்போது, சுஜாதா தமிழ் சொற்களை கணினிமயமாக்கியதில் சுஜாதாவின் பங்களிப்பைப் பற்றிச் சொன்னார். பேடண்ட் வாங்கியிருந்தால், அவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரார் ஆகியிருப்பார், ஆனால் தமிழை நவீன மயமாக்குதலில் இருந்த ஆர்வத்திலும், இன்றைய இளைஞர்களுக்கு தமிழின் ஆழ அகலதை சுட்டிக் காட்ட அவர் கணினி தமிழைத் தந்தார் என்றும் குறிப்பிட்டார்.

அவரது தங்கையார் பேசுகையில், சுஜாதாவுக்கு புல்புல்தாரா, மாண்டொலின் அருமையாக வாசிக்கவும், திறம்பட ஓவியம் வரையத் தெரியும் என்றும், எல்லாரும் அவர் ஒரு இசைக்கலைஞராகவோ அல்லது ஒரு ஓவியனாகவோ வருவார் என எண்ணியிருக்கையில், விஞ்ஞானியாகவும் (பெங்களூரூ பாரத் எலக்ட்ரிகலில் உயரதிகாரி - மின் ஓட்டுப்பதிவு இயந்திரம் கண்டுபிடித்த குழுவின் தலைவர்), கவிஞராகவும் (சுதாங்கன் வாசித்துக் காட்டிய வேலை செய்யும் சிறுவனைப்பார்த்து சுஜாதா எழுதிய கவிதை கண்களில் நீர் வரவழைத்தது!), வசன கவியாகவும் (கவிஞர் தமிழச்சி வாசித்துக் காட்டினார்), நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் (எல்லாரும் இதை குறிப்பிட்டு பல மேற்கோள் காட்டினர்), எல்லாரும் அறிந்த கதை, கட்டுரை, நாவல் ஆசிரியராகவும் எப்படி ஆனார்," என அதிசயித்தார். என்று அவர் வீட்டுக்குச் சென்றாலும், சுற்றி பல பிரபலங்கள் பேசிக் கொண்டிருப்பதால், இவர் உள்ளே செல்ல தயங்குகிறார் என்றால், நாற்காலியைத் திருப்பிப் போட்டுக் கொண்டு, தமக்கையை மட்டும் பார்த்தவாரே நலம் விசாரித்து, இருக்கச் சொல்லி வற்புறுத்துவாராம்!

மதன் மற்றும் கமலஹாசன் பேசுகையில் எழுத்தாளர்களையும், திரைக் கதை எழுத்தாளர்களையும் சில தயாரிப்பாளர்கள் எத்தணை மோசமாக நடத்துவார்கள், பணம் பட்டுவாடா செய்யாமல், என்பதையும் சற்று காட்டமகவே சுட்டிக் காட்டினார்கள் !

பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில், கள்ளழகர் மலையில்தான் ஆண்டாளின் ஜீபசமாதியிருக்கிறது என்பதை மதுரைக்காரரான தமக்கு சுஜாதாவுடன் அக்கோவிலுக்கு செல்லுகையில்தான் தெரிந்தது என்று, செய்வன திருந்தச் செய்யும் பண்பாளர்களில் சுதாதாவை மிஞ்ச ஆள்கிடையாது என்று அடித்துச் சொன்னார்.

ஆம், கமல், பார்த்திபன், பேசமுடியாமல் கண்ணீர் விட்ட பாலு மகேந்திரா, சிவசங்கரி, வைரமுத்து, சுஜாதாவின் நாடகங்களை மேடைகளில் அரங்கேற்றிவரும் பூர்ணம் விஸ்வநாதனின் நாடகக் குழுவினர், திருப்பூர் கிருஷ்ணன், ஆல் இந்திய ரேடியோ முன்னாள் இயக்குநர் நடராஜன் போன்றோர் பேசுகையில்தான் சுஜாதா எனும் மனிதன், கோபமே காட்டாத மனிதன், பல்கலை வித்தகன்(multi tasking), இசைக் கலைஞன் சுஜாதா, என்கின்ற அவரது பல புதிய பரிமாணங்கள் வெளிச்சத்துக்கு வந்தன!

பத்து வருடங்களாக அவரை நோய்களினூடே, காலனின் வரவைத் தள்ளி வைத்து தமிழ் சேவை செய்ய அவரது மனைவியார் சுஜாதா எத்தனை மெனக்கட்டிருக்கிறார் என்பதும், பெற்றோரை தனியே விட்டு வெளிநாடுகளில் வாழ் இளைஞர்களினால் அவருக்கு இருந்த மனபாரமும், பற்பல கலைஞர்களுக்கு அவர் ஒரு சுமைதாங்கிக் கல்லாகவும் (தங்கர் பச்சான் பேசியதிலிருந்து) இருந்த செய்தியும் புதிது!

இனி ஒரு சுஜாதா வருவாரா? கலையுலகத்து விருதுகளான ஏகப்பட்ட "பத்ம.., சாகித்ய.." விருதுகளை இவருக்கு தந்து, நல்ல வேளை இவர் தரத்தை அரசாங்கம் ஜால்ரா அடிக்கும் மற்றும் பலராக்கிவிடவில்லை! சிவாஜிக்கு தேசிய விருதும், சுஜாதாவுக்கு சாகித்ய, பத்ம.. விருதுகளைவிட, அரங்கமே நிறைந்த மக்கள் கூட்டம், இந்த அஞ்சலி நாள் நிகழ்வே,பெரியதொரு விருது.

ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் வண்ண ஓவியம் அவரது மகன்களிடம் நினைவுச்சின்னமாக வழங்கப்பட்டது. அந்தப் படத்தின் தீர்க்கமான பார்வையும், அவரது பிரத்யேகமான முன் முடிக் கற்றையும் என் கண்களில் பிம்பமாக இன்னும் நிலைத்து நிற்கிறது!

வெளியே வரும் போது யாரோ தோளைத் தொட்டனர்! திரும்பிப் பார்த்தால், கணேஷ¤ம், வசந்த்தும்! "ஸாரி, ப்ரதர், அவசரத்துல கொஞ்சம் இடிச்சுட்டு போய்ட்டேன்.." என ஆரம்பிக்க, "பரவாயில்லை" என நட்புரிமையோடு கைகுலுக்கி வந்தேன். இந்தத் காலத்தில் யார் இதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கிறார்கள்? அதும் 4 மணி நேரம் கழித்து? என்ன இருந்தாலும் சுஜாதாவின் வளர்ப்பு அல்லவா? அவர்கள் அப்படித்தான்!