11 November 2008

மகாபலிபுரத்தில் ஒரு பசுமைக் கற்பழிப்பு!

உலக புராதனச்சின்னமான மாமல்லபுரத்தில் பசுமைக் கற்பழிப்பு!


மாமல்லபுரத்திலுள்ள த்ரிமூர்த்தி குகைக்கு எதிரே, ஒரு நவீனக் கழியலறைக் கட்டப்படுள்ளது. அழகான புராதனச் சின்னங்கள் இருக்குமிடத்தில் இத்தகைய நவீனத்துவம் தேவைதானா? பார்க்க வருபவர்கள் தங்கள் சிரமபரிகாரங்களை அவர்கள் தங்கியுள்ள விடுதிகளிலோ, அருகாமையிலுள்ள சிற்றுண்டி சாலைகளின் ஓய்வறைகளிலேயோ செய்து கொள்ளலாம். அப்படியிருக்க, புராதனத்தைக் கெடுக்கும் இந்த நவீனம் தேவைதானா?


புராதன ஆர்வலர்கள் இந்த நவீன கழிப்பறைக்கு பின்புறமாய் தொடங்கும் இடத்திலிருந்து, குன்றுகளைச் சுற்றி, சுமார் 5 ஏக்கர் பரப்பளவிலிருந்த, கோரமண்டல் வரண்ட பசுமைக் காடுகளிலேயே இயற்கை மாறாமல், இன்றும் உள்ள காடுகளினூடே நடந்து சென்று, இயற்கை அழகையும், மிகவும் காண்பதற்கு அரிய தாவரங்களைக் கண்டும் மகிழ்ந்து வந்தனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த காடுகள் இருப்பதே தெரியாது. கள்ளக் காதலர்களும், தண்ணியடிப்பவர்களும், ஊரைச் சுற்றி செல்ல சோம்பல்பட்டு, குறுக்கு வழியில்

செல்பவர்களுக்கும் தான் இந்த இடம் பரிச்சயம். ஆனால், அவர்களால், மரங்களுக்கு இதுவரை எந்த கெடுதலும் வந்ததில்லை.

ஆனால், ஏ.எஸ்.ஐ. எனும் அகில இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் நேர் கண்காணிப்பில், வேலிகளால் வரையறுக்கப்பட்ட இடத்துள் இன்று, பாதி, காட்டு தீ வைத்தும்,புல்டோசர்களாலும், அரிவாள் அழிப்பினாலும், அழிக்கப்பட்டு விட்டது!


கேள்விப்பட்டதும், குடும்பத்தில் ஒருவருக்கு தீ விபத்தால் மரணம் ஏற்பட்ட தாக்கத்தோடு அங்கே வந்த இயற்கை ஆர்வலர்கள், பல தகவல்களை நமக்கு அளித்தனர்.

170க்கும் மேற்பட்ட அரிய தாவர வகைகள் இங்கு வளர்ந்துள்ளன. அவற்றில் சில உலகிலேயே இங்கு மட்டுமே காணக்கிடைக்கும்!

பாலைவனங்களில் மட்டும் வளரும் குட்டை பேரீச்ச மரங்கள் (100 வயதானவை) சில அழிந்துவிட்டன். சில பிழைத்துள்ளன.


பேய் அத்தி, கரடிப்புங்கம், என்றூம் பசுமை இலைகள் கொண்ட,இலையே உதிராத கார்சினியா ஸ்பிகடா வகை மரங்கள், ஆலமரத்திலேயே அதிக வைரம் பாய்ந்த, வேர், விழுதுகள்

விடாத வகை மரங்கள், சில காப்பிச் செடிகள், காட்டு எலுமிச்சை, ஒரு சில கருங்காலி மரங்கள், 250 வயது தாண்டிய டெரிஸ் ஸ்காண்டன்ஸ் எனும் அரிய வகைக் கொடி, போன்றவை, அதிர்ஷ்ட வசமாக உயிர்

தப்பியுள்ளன.

ஆனால் பல கணக்கற்ற 100 வயதிற்கும் மேலான மரங்கள், புகை கக்கியபடி சாய்ந்துள்ளன! அந்த புகை மூட்டமும், கருகிய மரங்களையும் காண்கையில், நமக்கும் நெஞ்சு விம்மியது.

த்ரிமூர்த்தி குகையிலிருந்து, இக்காட்டின் நடுவேயுள்ள கோனேரிக் குடைவறைக் குகை

வரையிருந்த மரங்கள் எல்லம் வெட்டப்பட்டுவிட்டன!ஒரு சில நாட்கள் முன்னர், ஒற்றையடிப் பாதையாய் இருந்த காட்டு வழி, வெயில் படாத இயற்கை இன்று இல்லை. புல்டோசர்களும், லாரிகளும் சென்று, பாதையில்,

சக்கரத் தடங்கள் தோன்றியுள்ளன.


கோனேரி மண்டபத்துக்கு நேர் எதிரே, வேலி வரை செல்லும் இப்புதிய பாதை, அங்கேயே முடிவடைகிறது! வேலிக்கு அந்தப் பக்கம் ஒரு பெரிய நீர் நிலை,கண்மாய் போல். புதிதாக அதன் கரைகள் உயர்த்தப் பட்டிருப்பது தெரிகிறது.

மரங்களை சாய்த்துவிட்டு, அப்படி என்ன செய்யப் போகிறார்கள்?

படகு சவாரி செய்யும் படகுத் துறை ஏற்படுத்தப் போவதாகக் கேள்வி! மல்லைக்கு அருகிலேயே முத்துக்காடும், முதலியார்குப்பம் படகுத் துறைகளும் கடலன்னையை வருடியபடி இருக்கையில், இந்த குளம் குட்டையில், அப்படி என்ன படகு சவாரி செய்ய மக்கள் வரப் போகிறார்கள்? இல்லையேல், மேலும் நவீன கழிவறைகள் கட்ட என்றும் ஒரு சாரார் சொல்கின்றனர்.


தொல்பொருள் அதிகாரிகளைத் தொடர்பு செய்ய முயன்றால்,அவர்கள் சிலைகளுக்கும், சின்னங்களுக்கும் மட்டுமே பாதுகாவலர்கள் (?) என்றும், இந்த காடுகளை மைசூரிலிருந்து ஏ.எஸ். ஐ யின் தோட்டக் கலைத் துறையினர் நேர் மேற்பார்வையிலும், கட்டுப்பாட்டிலும் உள்ளது என்றும் சொல்கின்றனர்.

இந்த காடுகளிலுள்ள அத்தனை தாவரங்களையும் இனம் கண்டு, தாவரப் பெயர்களைப் பதிவு செய்ய சுமார் மூன்று மாதங்கள் உழைத்த பேராசிரியர்கள், எஸ்.சுவாமிநாதன், திரு. அஜித் தாஸ், மற்றும் அவர்களது ஆராய்ச்சி மாணவர்களின் உழைப்பால் பல அரிய தாவரங்கள் இங்கே, இந்த கோரமண்டல், வரண்ட, என்றும் பசுமையான காட்டில் இருப்பதை உலகிலுள்ள பல கருத்தரங்களில் வரவேற்று மெச்சியுள்ளனர்.

சில அரிய மரம், செடி, கொடிகளும், அவற்றில் சில உலகிலேயே இங்கு மட்டும் உள்ளது என்பது, ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த சில ஆராய்ச்சியாளர்கள் சில தாவரங்களை என்ன விலையானாலும் தருகிறோம் என்று சொன்னதும், அதற்கு நமது தாவரவியல் ஆர்வலர்கள், இந்தியாவிற்கென பெருமை சேர்க்கும் சில விஷயங்களில் இங்கு வளரும் இந்த தாவரங்களும் ஒன்று. உயிர் போனாலும் தரமாட்டோம் என்று

மறுத்ததும், இந்த அரசுதுறை அரைவேக்காடுகளுக்கு எங்கே தெரியப் போகிறது? இவர்கள் இத்தொடு நிறுத்திக் கொண்டு, இந்த காட்டை தாவரவியல் ஆர்வலர் குழுக்களிடையே ஒப்படைத்துவிட்டால், மீண்டும் அக்காட்டின் அழகும் பெருமையும் உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு நந்தவனம் அமைக்க வாய்ப்புள்ளது.


பள்ளிக் குழந்தைகளுக்கு அரிய இயற்கைச் செல்வங்களை கற்றுத் தர வழி உள்ளது. அதற்கு வேண்டியவர்கள் வழி செய்வார்களா, இல்லை ஆயிரம் தடை சொல்லி மரங்களை

அழித்து அவப்பெயர்பெற்று, செல்லாக் காசுக்குப் படகுகள் ஓட்டிக் கொண்டிருக்கப் போகிறார்களா? அல்லது கழிப்பு அறை தந்த செம்மல்கள் என்று மெடல் வாங்கி சட்டையில்லா கல்நெஞ்சுகளில் குத்திக் கொள்ளப் போகிறார்களா?


இந்த மல்லை குகைகளைச் சுற்றியுள்ள, குறிப்பாக இந்த காட்டினருகேயுள்ளஏ.எஸ்.ஐ யின் கம்பிக் கதவுகள் என்றும் திறந்தபடியே உள்ளன.


நாம் குறிப்பிட்டபடி, சமூக விரோதிகளும், குடிகாரர்களும்,

கள்ளக் காதலர்களும், புதிதாக எரிந்துபோன மரங்களை வெட்டி எடுத்துச் செல்லும் கிராம மக்களையும்தான் அங்கு பார்க்க

முடிகிறது. உலக அளவு அந்தஸ்து பெற்ற புராதனச் சின்னங்கள் உள்ள இடங்களிலா இந்த அவலம்? தாவரயியல் துறை மைசூர் அதிகாரிகளின் கட்டுபாட்டில் உள்ளது சரி. இந்த சரித்திரச் சின்னங்களின் பாதுகாப்பு யார் கையில் உள்ளது? கொடுமை என்ன என்றால், நாம் சென்ற அதே ஞாயிற்றுக் கிழமைதான், பெல்ஜிய மன்னர், ராணியான ஆல்பர்ட், பவோலா தம்பதியரை அரசு மரியாதையோடு, சென்னை வட்ட அகில இந்திய தொல்பொருள் துறைத் தலைவி சத்யபாமா பத்ரிநாத் அவர்கள் மாமல்லபுரம் சுற்றிக் காட்ட அழைத்து வந்திருந்தார்கள். நல்ல வேளை அவர்களை இந்த கருகிய காட்டிற்குள் அழைத்து வரவிலை.வந்திருந்தால், நமது மானம் படகு அல்ல, கப்பல் கடந்து, பல நாடுகளுக்குப் போயிருக்கும்!


இதை பச்சைக் கற்பழிப்பு, அல்லது இனப் படுகொலை என்று சொல்லாமல், வேறு எப்படி அழைப்பதாம்?


இருக்கும் மரங்களைக் காக்க ஒரே வழி, இதை இயற்கை ஆர்வலர்கள் கொண்ட தனிக் குழுவின் பராமரிப்பில் விடவேண்டியதுதான். வாடிய பயிரையும் கண்டு வாடிய வள்ளலார் பிறந்த தமிழ் மண்ணில், இப்படி உலக பாரம்பரியச் சின்னங்கள் உள்ள இடத்திலேயே ஒரு பச்சைக் கொலை நடந்திருப்பது ஒரு பொது நல வழக்குக்கான விஷயம்தானே? அரசு நடவடிக்கை எடுக்குமா?


எதோ என் நல்ல நேரம், ஊடகத் துறையினர், (தொலைக் காட்சி மற்றும் தினசரிகள்) இதை உடனடியாக வெளியிட்டும்,பிரசுரித்தும், ஆவன செய்வதாய் உறுதியளித்துள்ளனர். இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அச்சுகளில் ஏறி காலை (புதன் கிழமை- இந்திய நேரப்படி) வரும் என்ற நம்பிக்கையோடு தூக்கம் இழந்துவிட்ட கண்களை தூங்க வைக்க முயல்கிறேன்.. திரைப்படமாகவும் இதை எடுத்துள்ளேன். விரைவில் அதை சீர் செய்து வெளியிடுவேன். அடுத்த முறை இந்த மாதிரி தவறை ஜென்மத்துக்கும் துறையினர் செய்யக் கூடாது! :( நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்!

தினமலர் சென்னை பதிப்பில் 12-11-2008 ல் வெளிவந்த கட்டுரை



சற்றுமுன் கிடைத்த தகவல்: (16 நவம்பர் 2008)


எனது பத்திரிகை நண்பி ஏ.எஸ்.ஐ அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது, முதலில் மறுத்தவர்கள், பின்னர், அரிய மரங்களை எங்கே வெட்டினோம்? புங்கை, வேம்பு போன்றவற்றை மட்டும்தானே வெட்டினோம்,” என்றார்களாம்.


அப்படியாகில், 100 ஆண்டுகள் மேல் தாண்டி விட்ட அந்த ‘பொது' மரங்கள் அரியவை ஆகும் நாள் வந்துவிட்டதே! இதோ, இவர்கள் அவற்றை வெட்டி, அவற்றை ‘சரித்திரம்' ஆக்கிவிட்டார்களே! சுற்றியுள்ள மரங்களை வெட்டிவிட்டால், நாம் குறிப்பிட்ட அரிய மரங்கள் மேலே விழும் வெயில் காற்று, சீதோஷ்ண நிலை மாறி, ‘என்றும் பசுமை' யாய் அவற்றை வைத்திருக்கக் கூடிய நிலமையும் மாறி, அந்த ‘அரிய' மரங்களும் அழிந்துவிடாதோ?


படகுத்துறை அமைப்பதை சுற்றுலா துறையினர் மற்றும் தொல்பொருள் துறையினர் இருவரும் மறுத்துவிட்டனராம். எனில், மண்ணைத் தோண்டி. அந்த நீர் நிலையை அதிகம் செய்தது யார்? பொது பணித் துறை என்ற பதில் வந்துள்ளது! எதற்காம்? ஊரிலுள்ள 36 நீர் நிலைகளாஇ மழை வலுக்குமுன் ஆளப்படுத்தி நீர் வளத்தை அதிகப் படுத்துவதற்காக இந்த குளத்தையும் சீர் செய்தார்களாம்! சுற்றியுள்ள மரங்களே கரை கெட்டிப்படுத்தி மண் சரியாமல் இருக்க ஆதாரம். அவற்றை வெட்டி நீர் நிலை சரி செய்வதஎன்பது, கண்ணைக் விற்று சித்திரம் வரைவதை போல் ஒப்பிடுவதாகும்!


Update: 19th Nov 2008

news in NDTV on this. I appear for few seconds!!!

நற்செய்தி: மரங்களை வெட்டுவதை நிறுத்திவிட்டார்கள்.


மரபூர் ஜெய.சந்திரசேகரன்.


20 October 2008

பண்டைய கோவில் ஓவியங்கள் அழிகின்றன

கோவில்களைப் புனரமைப்பு செய்யும் போது, சுவற்றில் உள்ள அழகான பல்லவர், சோழர், நாயக்கர் காலத்து ஓவியங்கள் அழிக்கப்பட்டு விடுகின்றன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியிருந்த நாயக்கர் காலத்து ஓவியங்கள், இவ்வாறு அழிந்தது உலகப் ப்ரசித்தி ஆகிவிட்டது!

அப்படி அதில் என்ன இருக்கிறது?

பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன?
இவை இயற்கை மூலிகைச் சாயங்களால் வரையப் பெற்றவை
கோட்டோவியங்களின் தடிமனைப் பார்த்தால், இன்று தயாரிக்கப்படும் மைக்ரோ டிப் பேனாக்கள் பக்கத்தில் கூட வராது! அத்தனை மெலிய கோடுகள்.

  1. வர்ணத்தோடு, உணர்வுகளை மெலிதாகப் படம் பிடித்துக் காட்டும் நயம்.
    ஸ்தல புராணங்களை, இதிகாசங்களை, மன்னர் காலச் சரித்திரத்தைப் ப்ரதிபலிக்கும் ஓவியங்கள்.
  2. இவை காலச் சின்னங்கள். 100 வருடம் ஆகிவிட்ட அனைத்துமே, பாதுகாக்கப் பட வேண்டிய சின்னங்கள் என்று தொல்பொருள் இலாகா சொல்லும் காலத்தில், இந்து அறநிலையத் துறைக்கு மட்டும் அந்தச் சட்டங்கள் பொருந்தாதா என்ற கேள்வி எழுகிறது.
  3. இவற்றை மீண்டும் வரையவோ, மீட்கவோ, மிக சொற்பமான கலைஞர்கள், ஓவியர்கள், ஆய்வாளர்கள் உள்ளனர்!

    சமீபத்தில் அப்படி செப்பனிட்டுப் பணிகள் நடக்கும் இரண்டு கோவில்களுக்கு செல்ல நேர்ந்தது.

    1) மன்னார்கோவில்: குலசேகர ஆழ்வாரின் பாடல்கள் தினமும் பாடப்பெற்ற, அவரது சமாதி உள்ள ராஜ கோபாலஸ்வாமி பெருமாள் கோவில்.

ஏறத்தாழ 10 வருடங்களாய் ஹிந்து நாளிதழ் மற்றும் எனைய எல்லா பத்திரிகைகளிலும் கோவில் நலிந்த நிலையிலுள்ளது என்று கட்டம் கட்டி எழுதி வந்த முக்கிய ஸ்தலம். இன்று புனரமைப்பு நடக்கின்றதே என்ற சந்தோஷத்தில் பார்க்கப் போன நமக்கு மன வேதனை அதிகமானதுதான் மிச்சம்.

நின்ற, கிடந்த, அமர்ந்த கோலங்களில், இரண்டே கோவில்கள் ஒரே விமானத்தில் மூன்றடுக்குகளில் பெருமாளைப் பார்க்கலாம் என்றால் எனக்குத் தெரிந்து அது இந்த மன்னார்கோவில், மற்றும் உத்தரமேரூர் சுந்தர வரதராஜப் பெருமாள் கோவில்கள் மட்டுமே.
சுதையினால் செய்யப்பட்டு, மேலே, கண்களைக் கவரும் இயற்கை சாயங்களினால் வர்ணம் பூசப்பட்ட மூலவர்கள்! கோவில் வேலைகள் நடப்பதால், மேலே ஏற முடியவில்லை. இருந்தாலும் வேலை செய்யக் கட்டிய சாரங்களால் மேல் ஏறிப் பார்த்தால்,

வழியிலேயே, கல்வெட்டுக்கள் மேலேயே சுண்ணாம்பு பூசப்பட்டுள்ளது. அருகில் வருங்காலத்தில் கோபுரத்தியே சாய்க்கக்கூடிய சிறி செடி தலை நீட்டிப்பார்க்கிறது!

கோவில்கள் அழிய முக்கிய காரணம் இந்த கவனிப்பார் அற்று வளரும் செடிகளே! பெரும்பாலும், ஆல், அரச மரங்கள் பெரிதாய் வளர்ந்து அஸ்திவாரத்தியே ஆட்டிச் சாய்த்த கோவில்களின் படங்கள் என்னிடம் ஏராளமாய் உள்ளன.

முதல் தளத்தின் முன் பகுதியை ஏதோ கழிவறை கட்டுவதுபோல், அழகின்றி, புராதன வடிவத்துக்கு சிறிதும் ஒப்பாமல், கட்டுவதையும், உள்ளே சன்னதி முன்மண்டபத்தில் முட்டுக் கொடுக்க வைத்த சவுக்குக் கம்புகளும், கரைத்த சிமெண்ட் சாரல்களும், அரிதான அந்த ஓவியங்களை அழித்துக் கொண்டிருப்பதையும் எந்த கண்கள் உள்ள புத்தி ஸ்வாதீனம் உள்ளவரும் பார்க்கச் சகியார்! புராதன முறையில் கட்டப் பட்ட சுதை செங்கல் கட்டுமானம் 1000 ஆண்டுகள் தாங்கி வந்துள்ளது. செடிகளினாலும், கவனிப்பாரற்று பராமரிப்பு இல்லாமையாலும் தான் இந்த கோவில்கள் சிதிலமடைந்துலள்ளன. தொல்பொருள் கட்டிடவல்லுநர்கள் சுண்ணாம்பு, செங்கலினாலேயே கட்ட முடியும் என்கிறபோது இந்த சிமெண்ட் பணி (கலையழகைக் கெடுக்கும் பாத்ரூம் கட்டும் முறை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது ) தேவையா?

நல்ல தொல்பொருள் ஆய்வாளர்கள், புராதன ஓவியம் தெரிந்த வல்லுநர்கள், ஸ்தபதிகள் ஆகியவர்களை கலந்தாலோசிக்காமல், நம் பண்டைய சின்னங்களை,கலை பொக்கிஷங்களை சீர் செய்கிறேன் பேர்வழி என்று அழிக்கிறார்களே! கேட்பார் இல்லையா? இவற்றைத் தடுக்க எதேனும் சட்டங்கள் இல்லையா (anti- antique and artifacts act??)

மனதை நெருடும் கோவில் புனரமைப்பு செலவுகள் பட்டியலில், சுமார் 19 லட்சம் சாண்ட் ப்ளாஸ்டிங் (கல் சுவர்களை மிக அதிக அழுத்தக் கம்ப்ரெஸர் காற்றால், மணல் கலந்து அடிப்பது! இதன் மூலம் கல்வெட்டுக்கள் அழிந்துவிடுவது திண்ணம். இந்த முறையை எப்போதோ தொல் பொருள் துறையினர் தடை செய்து விட்டனர். இங்கே எப்படி அனுமதித்தார்கள்? சம்பந்தப் பட்டவர் கவனிப்பார்களா?
படங்களை இந்த பிகாசா படத்தொகுப்பில் அளித்துள்ளேன்.
மன்னார்கோவில் பற்றி அறிய இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

இரண்டாவதாக நான் பார்க்கப்போன கோவில் களக்காடு சத்திய வாகீஸ்வரர் ஆலயம். ஆம், முண்டந்துறை – களக்காடேதான்!

மலைசூழ் இயற்கை பின்பலத்தோடு, தனியே தெரிய நிற்கும் கோபுரம், ஒரு கண்கவர்காட்சி. அங்கே கோபுரம் 9 நிலைகள் கொண்டது. அத்தனை நிலைகளும், மரத்தாலேயே நிறுவப்பட்டு, சுண்ணாம்புச் சுதையினால் பூசப்பட்டு, வெளிச் சுற்றில் கணக்கிலடங்கா சுதை பொம்மைகள் நிறுவப் பெற்று, உள்சுற்றில் ஒன்பது நிலைகளிலும் ஓவியங்கள் வரையப் பட்டு, காலத்தை வென்ற கலைப் பெட்டகமாகத் திகழ்கிறது.

இதுவரை வந்த புனரமைப்பு கணக்கீடுகளில், அரசியல் சத்தியங்கள் செயலற்றுப் போய், உள்ளூர் மக்கள், தாங்களே ஒவ்வொரு செலவாய் சேர்த்து, உள்ளேயுள்ள ஓவியங்கள், வெளியே உள்ள சுதை பொம்மைகளை நிறுவ ரீச் பஃவுண்டேஷனின் உதவியை நாடியுள்ளனர்.

இங்கேயும், பெண் உருவங்களின் முக்கிய பகுதிகளில் குரூரர்கள் பொத்தல் போட்டு ஓவியங்களை பாழாக்கியுள்ளனர்.

கணக்கிலடங்கா , மரச் சித்திரங்கள், இதிகாச, புராண, அன்றைய வாழிவியல் ஓவியங்கள் என 9 நிலைகளிலும் ஓவியங்கள், சிற்பங்கள். அதிகம் ஆகையால் அவற்றை பிகாசாவில் வெளியிட்டுள்ளேன்.

களக்காடு பற்றி மேலும் தகவல்கள் பெற இங்கே மற்றும் இங்கே சொடுக்கவும்.

மேலும், குற்றாலம் சித்திரசபையிலுள்ள ஓவியங்கள், திருவாரூர் தியாகராஜர் கோவில் ஓவியங்கள், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலிலுள்ள அம்மன் சன்னதியிலுள்ள ஓவியங்கள் இப்படி எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம். காலம் கடந்து அவை அழியுமுன், காப்பார் யார்?

மேற்சொன்ன ரீச் பஃவுண்டேஷன் மூலம், காஞ்சி வரதராஜர் பெருமாள் கோவில் பிரகாரத்தில் உள்ள ஓவியங்களை கோவை L.M.W அதிபர் ரவி சாம் தன் செலவிலேயே செப்பனிட முன் வந்துள்ளார். இம்மாதிரியான தன்னார்வலர் குழுக்களுக்கு அரசு உடனே அனுமதி தந்தால், மக்கள் பலத்தோடு, அவர்களே இப்படி பல கலைச் செல்வங்களை காப்பார்ற இயலும்.

இப்படி ஆயிரம் தன்னார்வக் குழுக்கள் நம்மிடையே உடனே தேவை! இல்லையேல் கோவில் கலைகளும், ஓவியங்களும், நம் கண் முன்னேயே அழிவதைக் காணும் ‘கண்ணிருந்தும் குருடர்கள்’ என்ற அவப் பெயர் நம் சந்ததியினருக்கு வரும்!

ஹிந்து மற்றும் Front line மூத்த நிருபர் டி. எஸ். சுப்ரமணியம் அவ்வப்போது இவற்றைப் பற்றி பத்திரிகைகளில் எழுதி வருகிறார். அச்சோடு நின்று விடாமல் அரசிலும் கவனிக்கவேண்டியவர்கள், கவனிப்பார்களா?
ஒரு மடல் இங்கே

29 September 2008

மல்லை என்ன கொல்லையா?

மல்லை அல்லது மகாபலிபுரம் எனும் மாமல்லபுரம் உலகப் பாரம்பரியச் சின்னம் என்று போற்றப்படுகிறது. ஆனால் அங்கே அத்தகைய பெரிய இடத்திற்குத் தகுந்தாற்போல் காவலர்கள்,பாதுகாவலர்கள், உள்ளார்களா என்பது சந்தேகமே.

அகில இந்திய தொல்லியல் துறையின் ஓரிருவரே கண்களில் தென்படுகின்றனர். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. ஆட்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு பஞ்சம். அர்ச்சுனன் தவசு எனப்படும் பாறையை நோக்கி நிற்கையில், உங்களுக்கு வலது பக்கத்தில் உள்ள கம்பி கேட் (சிறிய வாயில்) நேராக தர்மராஜா மண்டபம் போன்றவற்றுக்குப் போக முடியாமல் எப்போதும் மூடியே வைத்திருக்கிறார்கள்?! ஆனால், த்ரிமூர்த்தி குகைக்கு எதிரே உள்ள கேட் எப்போதும் திறந்து வைக்கப்பட்டுள்ளது! (இரவில் எனக்கு எப்படி என்று தெரியாது, பகலில் நான் பார்த்த எந்த நேரத்திலும் அது திறந்தே இருக்கிறது! யார் நன்மைக்கு?

உள்ளூர் மக்கள் உள்ளே போய்வந்து, காலைக் கடன்களை பின்னே உள்ள பஞ்சபாண்டவர் குகை மற்றும் கோடிக்கால் மண்டபக் குகைகளில் மல ஜலம் கழிக்கவும், சிராய், விறகு ஒடித்துக் கொள்ளவும், சுற்றுப் பாதையாய் ஊருக்குள் நடக்காமலிருக்கவும் அதனால், பின் புறம் பலர் கண்களுக்கு தென்படாத குகைக் கோவில்களில் ‘குடி’ மக்கள் அதகளம் செய்யவும், இன்ன பிற அசிங்கங்கள் நடந்தேறவும் வழி செய்கிறார்களே காவலர்கள் என்ற பெயரில் அங்கே பணிக்கு அமர்த்தப் பட்ட பண்டை கால சின்னங்களை சின்னாபின்னப் படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட கிராதகர்கள்? அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. வெளிநாட்டவருக்கு 250 ரூபாயும் பிடுங்கிக் கொள்ளும் தொல்பொருள் துறையும், இந்த உலக அதிசயத்தை ஊரறியச் சொல்லிச் சொல்லியே பெயரும் பணமும் வாங்கத் துடிக்கும் தமிழக சுற்றுலாத் துறையும் என்ன கிழிக்கிறார்கள்?

மேலும் சில மெய்ப்பொருள் காண்பது .. கொடுமை!

மகிஷாசுரமர்த்தினிக் குகை மற்றும் தர்மராஜ மண்டப சுவர்களில் மற்றும் வாயில் நடைபாதையில் உள்ள அபூர்வ கிரந்த எழுத்துக்கள். நடந்து நடந்தே தேய்ந்து போவிடும், காலப் போக்கில். இந்தக் கோயிலில் சிறப்புவாய்ந்த வடமொழிக் கல்வெட்டு ஒன்று தென்புறச் சுவரில் காணப்படுகிறது. இதில் பதினொரு செய்யுட்கள் உள்ளன.

'பகைவர்களை வென்றவனும் ரணஜெயன் என்று பட்டம் கொண்டவனுமான அத்யாந்தகாமன் என்ற மன்னனால் இக்கோயில் சிவபெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்டது.

இது போன்ற கல்வெட்டுக்களை ஒரு கண்ணாடி அல்லது உடைக்க முடியாத சிலிகோன் பூசப்பட்ட பாலிகார்பனேட் எனும் கண்ணாடி போன்ற ஷீட்டினால் கவசம் செய்து மூடினால் என்ன? கணேச மண்டபத்திலும், பின்னர் புலிக்குகை அருகே உள்ள அதிரண சண்டேஸ்வர மண்டபத்திலும் கூட அறிய பல்லவக் கிரந்த எழுத்துக்களும், தர்மராஜ மண்டபத்தில் காணப்படும் அறிய செய்யுளின் அதே பிரதி, தேவநாகரி எழுத்துக்களில் ஒரே பொருள் பட எதிரும் புதிருமாக பொறிக்கப்பட்டுள்ளன. ஒரே பொருள் படும் இரு வேறு எழுத்துக் கல்வெட்டுக்கள் ஒரே இடத்தில் இருப்பது உலகிலேயே வேறெங்கும் கிடையாது.
அதிரண சண்டேஸ்வரக் குகையின் கிரந்த எழுத்துக்களுக்கு நேர் கீழே தரையில், அரிய சோழர்கால கல்வெட்டும் உள்ளது.
இதுவும் காலாகாலத்தில் மூடி வைக்கப்படவில்லையென்றால், தேய்ந்து அழிந்து போய்விடும்.

அதேபோல், மக்கள் நடமாடும் கடற்கரையில், கடற்கரைக் கோவிலின் தெற்கே, ஒரு குட்டிப் பாறை உள்ளது. அது, புலிக் குகையின் மாதிரி (model) போல் உள்ளது. அதை அப்படியே வெளியே விட்டு விட்டார்கள். வேலி கிடையாது. மக்கள் கிறுக்கல்கள் ஏராளம். கடற்கரைக் கோவிலின் வடக்கே, தொல்பொருள் ஆராய்ச்சித் துறையினரின் வேலிக்கு வெளியே, மகிடாசுரனை தேவி அடக்குமுன், வாகனமான சிங்கம் அப்படியே பாய்வது போலவும், அரக்கன் ஓடமுயலுவது போலவும் புடைப்புச் சிற்பமும் கூட பாதுகாப்பில்லாமல், மக்களின் (அருகிலுள்ள மீனவர் குப்பத்தின்) அறிவிக்கப்படாத கழிவறையாக உள்ளது!

இவையும் காலச்சின்னங்கள் தான். ஒருதலைப் பட்சமாக, இவற்றை வேலியால் மூடாமல், திறந்த வெளியில் விட்டதற்கு காரணம் என்ன?

மூக்கை பொத்திக் கொண்டே காண வேண்டிய குகை தர்மராஜ மண்டபக் குகை மற்றும் கோனேரி மண்டபம். ஒரே மூத்திர நாற்றம். ஏன்?

த்ரிமூர்த்தி குகை சுற்றி உள்ள பாறைகள் மேலெல்லாம், வழியெங்கும் கண்ணாடி பாட்டில் சிதறல்கள். ஏன் இங்கே குடிக்க அனுமதிக்கிறார்கள்?

அடர்ந்த காட்டினுள் சென்று இந்த மண்டபங்களைக் காணலாம். இப்படி கடற்கரையை ஒட்டி எஞ்சியுள்ள பசுஞ்சோலைகளின் ஒன்று இந்த பாதை! இப்பாதை த்ரிமூர்த்தி குகையின் எதிரே ஆரம்பித்து, சிங்கக் கட்டில்வரை செல்கிறது.

பல இடங்களில் சிலைகளின் மீது கிறுக்கியுள்ள, தங்கள் வெறுக்கத்தக்க கலை அபிமானத்தை (?) வெளிப்படித்தியுள்ள ‘நவீன சித்திரக்காரர்கள் அல்லது ‘கிறுக்கர்’களின் கையை வெட்ட வேண்டாம்?

புகழ் மிக்க உழக்கு எண்ணை ஈச்வரர் கோவில் சிற்பமான ராவணேஸ்வரன் கைலைமலையைத் தூகுவது போன்ற சிலை முழுவதும் கிறுக்கல்கள். ராவணனின் வயிறு முழுதும் ‘கிறுக்கர்;களின் பெயர்கள்!

ஏன்? உலகப் புகழ் பெற்ற மல்லை என்ன உங்கள் கொல்லையா? பராமரிக்க வக்கில்லை என்றால், வழி விடுங்கள்; ஆர்வலர்கள் பலரைக் கொண்டு நாங்கள், தன்னார்வலர் குழுக்கள் இவற்றை சுத்தம் செய்கிறோம். அரசு தடுப்புகள், அனாவசிய சட்டங்கள், குறுக்கீடுகள் வழிவிடுமா? அதன் பிறகு, தப்பு செய்வோரை தண்டிக்கவும் அதே தன்னார்வக் குழுக்களுக்கு அதிகாரம் தரப்படுமா? சரி, என்றால் இந்த மல்லை எனும் உங்கள் கொல்லையை முல்லை நந்த வனமாய் மாற்ற நாங்கள் ரெடி!
--------------------------------------------------------------------------------------------------------
படங்கள் உதவி: ஸ்ரீராம் ராஜாராம், நந்தகுமார் செல்வராஜ், லெஷ்மி -பொன்னியின் செல்வன் யாஹூ குழுமத்தினர்.
லலிதா வெங்கட்டின் படங்கள் கிடைத்த உரலி: http://www.indian-heritage.org/poimahabs/mahabtrp.html
நானும் மற்ற பொன்னியின் செல்வன் யாஹூ இணையக் குழுமத்தினருடன், மேற்சொன்ன ஐ.ஐ.டியின் ஓய்வு பெற்ற மாமல்லை ஆராய்ச்சியாளர் திரு. சுப்ரமணியம் சுவாமிநாதன் அவர்களுடன் சமீபத்தில் மல்லை விஜயம் செய்தோம். மேலுள்ள உரலியில் சொன்ன கருத்துக்களுக்கு முற்றிலும் ஒப்பான கலந்துரையாடலே நடந்தமையால், அவற்றை மீண்டும் பதியவில்லை. உரலியில் கண்டது போக, கடற்கரை கோவிலையும், அதன் வேலிகளின் வெளியே உள்ள பாதுகாப்பற்ற நிலையிலுள்ள மகிடன் குன்றும், புலிக் குகையின் மாதிரிக் குன்றும், பார்த்தோம்.





02 March 2008

சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி...

சென்னை நாரத கான சபாவில், இன்றைய மாலைப் பொழுது.. (ஞாயிறு 2 மார்ச்) வாசல் வரை நிரம்பி வழியும் கூட்டம்.. கலைந்த தலை, கசங்கிய சட்டைகளுடன் இருவர் என்னை பிடித்துத் தள்ளாத குறையாக முண்டியடித்து போய், இருக்கை தேடி அமருமுன், அவர்களை நேரில் ஒரு பிடி பிடித்து ஏன் இப்படி? ' என்று கேட்கும் முன், நானும் அரங்கத்துள் நுழைந்தேன். அந்த சூழ்நிலை யாரையுமே பேசவிடாது. மேடையில் ஒருவர் பின் ஒருவராக பேசுபவரைத்தவிர!

என்னை தள்ளிவிட்டு இருக்கை தேடி அமர்ந்தவர்கள் கணேஷ். வசந்த்! சுஜாதாவின் ஆதர்ஸ புருஷர்கள், கதை நாயகர்கள்! வசந்தை இதுபோல் சிரிப்பு கலைந்து நான் பார்ப்பது இதுவே முதல் முறை! கணேஷின் சீரியஸ் முகம், முதல் முறை வெளிரிப் போயிருந்தது! இனி இவர்கள் ப்ரதாபத்தை யார் அரங்கேற்றுவார்கள்?

ஆம், அங்கு நடந்த நிகழ்ச்சி, சுஜாதா அவர்களுக்கு அஞ்சலி. கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன், நல்லி செட்டியார், பார்த்திபன், இயக்குநர் வசந்த், மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி!

எல்லார் பேசியதிலிருந்து சில சாராம்சம்:

சத்யராஜும், பத்திரிகையாளர் சுதாங்கனும், பெருமை பட்டுக்கொண்டார்கள். அவர்கள் இயற்பெயரும் ரங்கராஜன் என்பதால்! தன் மனைவியின் பெயரில் அவர் பிற்காலத்தில் தான் எழுதினாராம். முதலில் எஸ்.ரங்கராஜன் என்ற பெயரில் குமுதமும், கணையாழியும்தான் கதைகள் பிரசுரித்துள்ளன!

திரு. கஸ்தூரி ரங்கனுடன் இணைந்து அவர் நடத்திய கணையாழி இதழில், சுஜாதாவின் 'கடைசி பக்கம்' எத்தனை எத்தனை பேருக்கு தமிழ் தாக்கம் ஏற்படுத்தியிருந்தது என்பதை ரா.கி.ரங்கராஜன், சாரு நிவேதிதா, எஸ்.ராம்கிருஷ்னன், மதன், சுதாங்கன், இரா.முருகன், போன்றோரின் சொற்களில் வெளிப்பட்டன!

அவர் தம்பி பேசும்போது, சுஜாதா தமிழ் சொற்களை கணினிமயமாக்கியதில் சுஜாதாவின் பங்களிப்பைப் பற்றிச் சொன்னார். பேடண்ட் வாங்கியிருந்தால், அவர் பல கோடிகளுக்கு சொந்தக்காரார் ஆகியிருப்பார், ஆனால் தமிழை நவீன மயமாக்குதலில் இருந்த ஆர்வத்திலும், இன்றைய இளைஞர்களுக்கு தமிழின் ஆழ அகலதை சுட்டிக் காட்ட அவர் கணினி தமிழைத் தந்தார் என்றும் குறிப்பிட்டார்.

அவரது தங்கையார் பேசுகையில், சுஜாதாவுக்கு புல்புல்தாரா, மாண்டொலின் அருமையாக வாசிக்கவும், திறம்பட ஓவியம் வரையத் தெரியும் என்றும், எல்லாரும் அவர் ஒரு இசைக்கலைஞராகவோ அல்லது ஒரு ஓவியனாகவோ வருவார் என எண்ணியிருக்கையில், விஞ்ஞானியாகவும் (பெங்களூரூ பாரத் எலக்ட்ரிகலில் உயரதிகாரி - மின் ஓட்டுப்பதிவு இயந்திரம் கண்டுபிடித்த குழுவின் தலைவர்), கவிஞராகவும் (சுதாங்கன் வாசித்துக் காட்டிய வேலை செய்யும் சிறுவனைப்பார்த்து சுஜாதா எழுதிய கவிதை கண்களில் நீர் வரவழைத்தது!), வசன கவியாகவும் (கவிஞர் தமிழச்சி வாசித்துக் காட்டினார்), நகைச்சுவை உணர்வு மிக்கவராகவும் (எல்லாரும் இதை குறிப்பிட்டு பல மேற்கோள் காட்டினர்), எல்லாரும் அறிந்த கதை, கட்டுரை, நாவல் ஆசிரியராகவும் எப்படி ஆனார்," என அதிசயித்தார். என்று அவர் வீட்டுக்குச் சென்றாலும், சுற்றி பல பிரபலங்கள் பேசிக் கொண்டிருப்பதால், இவர் உள்ளே செல்ல தயங்குகிறார் என்றால், நாற்காலியைத் திருப்பிப் போட்டுக் கொண்டு, தமக்கையை மட்டும் பார்த்தவாரே நலம் விசாரித்து, இருக்கச் சொல்லி வற்புறுத்துவாராம்!

மதன் மற்றும் கமலஹாசன் பேசுகையில் எழுத்தாளர்களையும், திரைக் கதை எழுத்தாளர்களையும் சில தயாரிப்பாளர்கள் எத்தணை மோசமாக நடத்துவார்கள், பணம் பட்டுவாடா செய்யாமல், என்பதையும் சற்று காட்டமகவே சுட்டிக் காட்டினார்கள் !

பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில், கள்ளழகர் மலையில்தான் ஆண்டாளின் ஜீபசமாதியிருக்கிறது என்பதை மதுரைக்காரரான தமக்கு சுஜாதாவுடன் அக்கோவிலுக்கு செல்லுகையில்தான் தெரிந்தது என்று, செய்வன திருந்தச் செய்யும் பண்பாளர்களில் சுதாதாவை மிஞ்ச ஆள்கிடையாது என்று அடித்துச் சொன்னார்.

ஆம், கமல், பார்த்திபன், பேசமுடியாமல் கண்ணீர் விட்ட பாலு மகேந்திரா, சிவசங்கரி, வைரமுத்து, சுஜாதாவின் நாடகங்களை மேடைகளில் அரங்கேற்றிவரும் பூர்ணம் விஸ்வநாதனின் நாடகக் குழுவினர், திருப்பூர் கிருஷ்ணன், ஆல் இந்திய ரேடியோ முன்னாள் இயக்குநர் நடராஜன் போன்றோர் பேசுகையில்தான் சுஜாதா எனும் மனிதன், கோபமே காட்டாத மனிதன், பல்கலை வித்தகன்(multi tasking), இசைக் கலைஞன் சுஜாதா, என்கின்ற அவரது பல புதிய பரிமாணங்கள் வெளிச்சத்துக்கு வந்தன!

பத்து வருடங்களாக அவரை நோய்களினூடே, காலனின் வரவைத் தள்ளி வைத்து தமிழ் சேவை செய்ய அவரது மனைவியார் சுஜாதா எத்தனை மெனக்கட்டிருக்கிறார் என்பதும், பெற்றோரை தனியே விட்டு வெளிநாடுகளில் வாழ் இளைஞர்களினால் அவருக்கு இருந்த மனபாரமும், பற்பல கலைஞர்களுக்கு அவர் ஒரு சுமைதாங்கிக் கல்லாகவும் (தங்கர் பச்சான் பேசியதிலிருந்து) இருந்த செய்தியும் புதிது!

இனி ஒரு சுஜாதா வருவாரா? கலையுலகத்து விருதுகளான ஏகப்பட்ட "பத்ம.., சாகித்ய.." விருதுகளை இவருக்கு தந்து, நல்ல வேளை இவர் தரத்தை அரசாங்கம் ஜால்ரா அடிக்கும் மற்றும் பலராக்கிவிடவில்லை! சிவாஜிக்கு தேசிய விருதும், சுஜாதாவுக்கு சாகித்ய, பத்ம.. விருதுகளைவிட, அரங்கமே நிறைந்த மக்கள் கூட்டம், இந்த அஞ்சலி நாள் நிகழ்வே,பெரியதொரு விருது.

ஓவியர் ஸ்ரீதர் வரைந்த சுஜாதாவின் வண்ண ஓவியம் அவரது மகன்களிடம் நினைவுச்சின்னமாக வழங்கப்பட்டது. அந்தப் படத்தின் தீர்க்கமான பார்வையும், அவரது பிரத்யேகமான முன் முடிக் கற்றையும் என் கண்களில் பிம்பமாக இன்னும் நிலைத்து நிற்கிறது!

வெளியே வரும் போது யாரோ தோளைத் தொட்டனர்! திரும்பிப் பார்த்தால், கணேஷ¤ம், வசந்த்தும்! "ஸாரி, ப்ரதர், அவசரத்துல கொஞ்சம் இடிச்சுட்டு போய்ட்டேன்.." என ஆரம்பிக்க, "பரவாயில்லை" என நட்புரிமையோடு கைகுலுக்கி வந்தேன். இந்தத் காலத்தில் யார் இதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்கிறார்கள்? அதும் 4 மணி நேரம் கழித்து? என்ன இருந்தாலும் சுஜாதாவின் வளர்ப்பு அல்லவா? அவர்கள் அப்படித்தான்!

05 October 2007

இதுதாண்டா பாக்டீரியா!

பூமியின் மிக ஆழமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாழும் நுண்ணுயிரி பாக்டீரியா!

இந்தக் கண்டுபிடிப்பு இந்தியானா மாவட்டம், ப்ளூமிங்டனிலிருந்து (அட, அமெரிக்காவிலிருந்துதாங்க!) வெளியிட்டு, ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைகிறதால், விஞ்ஞானம் விரும்பும் தமிழ் கூறும் நல்லுலகினருக்கு இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை.

தென்னாப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்களில், நிலத்தின் சமவெளியிலிருந்து ஏறக்குறைய 2 மைல்கள் அடியில், தன்னுயிர்ப்பு பாக்டீரியாக்களைக் கண்டறிந்துள்ளனர். கதிரியக்க யுரேனியத்தை வைத்து, தண்ணீர் அணுக்களை சிதறடித்து, அதிலிருந்து சக்தியை மீட்டு உண்டு, உயிர் வாழ்கிறது, இந்த ஹை-தெக் பாக்டீரியாக்கள்!

அதிசயம் என்னவென்றால், இவை பல லட்சம் ஆண்டுகளாக அவ்விடத்திலேயே உயிர் வாழ்ந்து வருகின்றன! எனவே, நம் கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டு, செவ்வாயிலும், ஏனைய சில கிரகங்களிலும், உயிர்கள் இருக்கும் எனும் கருத்து, வலுப்பெருகிறது!

லிஸா ப்ராட் எனும் உயிரிவேதியல் (BIOCHEMIST) நிபுணர், "நிஜத்தில், நமக்கு, மூலம், காலமாற்றம், உயிர்களின் எல்லை என்று எதுவும் சரிதாகத் தெரிவதில்லை. இப்போதுதான் விஞ்ஞானிகள், புதிது புதிதாக பல நுண்ணுயிர்களை கண்டறிந்து, ஆராய்ந்து வருகிறார்கள். ஆழ்கடலடிகளிலும், பூமியிலிருந்து சுமார் அரைக் கிலோமீட்டருக்கும் மேலான இடங்களிலும் நாம் சரியாக ஆராயவில்லை! நம் கண்ணுக்குத் தெரியும் வாழ்க்கை முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் இவை வாழ்கின்றன," என்று ஆச்சரியப் படுகிறார்!

சுரங்களின் வெடிப்புகளுக்குள் தண்ணீர் விட்டு, சுமார் 54 நாட்களாக சேமித்த பலதரப்பட்ட தண்ணீர் மாதிரிகளை சேர்த்து ஆராய்ந்ததில், இக்கிருமிகள் கண்களில் பட்டுள்ளன! நாட்கள் அதிகமாக, அதிகமாக, இவை நிறம் மாறுகின்றனவா, உயிர்வாழ்கின்றனவா, உருமாற்றம் செய்கின்றனவா, என்றெல்லாம் ஆராய்ந்தனர்.

அதேபோல் நாட்கள் அதிகமான, சுரங்கத்து நீரையும், அதன் மூலப் பொருட்களின் ரசாயனக் கலவையையும் ஆராய்ந்தனர். அந்த நீர் அணுக்களை சிதைத்து (FRACTIONING) பார்க்கையில், அவை உயிரியல் கலவையால் உருவாகாமல், யுரேனியம் உள்ள பாறைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால், சிதறுபட்ட நீர்திவலைகளால் உருவானதை கண்டறிந்தனர்!

அதிக சக்திவாய்ந்த டீ.என்.ஏ. நுண்ணுயிர் சோதனை செய்தபோது, அந்த பாக்டீரியாவிலேயே, பல வகை இருந்தது தெரிய வந்தாலும், அதிகபட்சமாக, ·பிர்மிக்யூட்ஸ் எனும் நீராவியிலுருவாகும் பாக்டீரிய இனமே அதிகமாகக் காணப்பட்டது! இந்த கால அவகாச சோதனையால், இந்த பாக்டீரியாக்கள் நிலப்பரப்பிலுல்ள ஏனைய பாக்டீரியாக்களிருந்து சுமார் 30 லட்சம் ஆண்டுகளிலிருந்து, 25 லட்சமாண்டுகளுக்கு முன்னரேயே பிரிந்து, "என் வழித் தனிவழி" என்று பூமிக்கடியில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கபட்டது!

இவை வாழும் பாறைகள் சுமார் 270 லட்சம் ஆண்டுகள் முதுமையானவை! எப்படி, பூமியின் மேற்பரப்பிலிருந்த இந்த பாக்டீரியாக்கள், பல லட்சம் ஆண்டிகளுக்கு முன்பே, பிரிந்து, இப்படி பூமிக்கடியில் உயிர் வாழ்ந்து வந்துள்ளது, என்பதே, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது!

26 September 2007

கணபதி பப்பா, மோரியா!!!

ரீ.ச் பவுண்டேஷன் மூலம் பழைய கோவில்களைத் தேடிப் போவேன் என்பது பலருக்குத் தெரியும். அப்படி நான் போன ஒரு கோவில், சென்னை மகாபலிபுரம் ரோட்டிலுள்ள கோவளம் கைலாசநாதர் கோவில். எதிர்பார்த்தபடியே, புராதனமான, உதாசீனப் படுத்தப்பட்ட கோவில். கோவிலை எதிர்த்துள்ள காலி இடத்தில் இஸ்லாமியருக்கான மயானத்தை கட்டிவிட்டதால், கோவிலைச் சேர்ந்தவர்கள் அதை மூடி சுவரெடுத்துவிட்டு, தெற்குப்பக்கமாய் ஒரு வாசல் வைத்து விட்டார்கள். அப்படி இப்படி என்று சில நல்லவர்கள் சேர்ந்து, ஒரு கால பூசை நடக்கிறது. விமானம் முழுதும் மரங்கள் வளர்ந்துள்ளன. அவற்றை நீக்க மரம் கொல்லி ரசாயனம் வரவழைத்துள்ளோம். நித்திய பூசை செய்ய கோவில் பூசாரியும் தேடி வருகிறோம். சனி, ஞாயிறுகளில், பஜனை அல்லது தேவாரப் பாடல் பாட வழிசெய்து வருகிறோம். கோவில் மதில்சுவர்களைச்சுற்றி மற்றவர்கள் மூன்று சுவர்கள் எழுப்பி, ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். குளத்தியும் அசுத்தப் படுத்தி வைத்துள்ளார்கள். அதை ரோட்டரி சங்கம் மூலம் தூர்வார முயற்சி செய்து வருகிறோம்.

விநாயகர் சதுர்த்தி முடிந்து போன ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரை கிணற்றிலோ,குளத்திலோ, கடலிலோ போடவேண்டும். நான் வேறு ஒரு பழைய கோவிலுக்குப் போய் தகவல்கள் சேகரிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அதிசயமாய் வீட்டில் எல்லாரும், எதோ, கோவளமாமே? கேரளத்துக் கோவளம் மாதிரி இல்லையென்றாலும், காலியாய் இருக்குமாமே? அங்கே போய் மண் பிள்ளையாரைக் கடலில் கரைத்துவிட்டு வருவோமா? என்று கேட்டார்கள்! எனக்கு அதிசயமாய் போகிவிட்டது! என்ன இது அந்த கைலாசநாதர் மீண்டும் அழைக்கிறார் என்று! அங்கே எனக்கு பரிச்சயமானவர் நாராயணன். மீனவ நண்பர். பக்கத்திலிருக்கும் டாஜ் நட்சத்திர ஹோட்டலில் வரும் வெளிநாட்டவர்கள், கடலில் நீந்த செல்வது வழக்கம். அப்போது கடலில் தத்தளிப்பவர்களை காப்பற்றுவது இவரது வேலை! அப்படி கிட்டத்தட்ட 300 பேர்களுக்கு மேல் இவர் காப்பற்றியுள்ளார்! அதி ஒரு நாட்டு தூதரும் அடங்குவார்! மகிழ்ந்துபோய் பணமோ, பரிசோ தருபவர்களிடம், "எனக்காக எதுவும் செய்யவேண்டாம். என் கிராம பெண்களுக்கு காலைக் கடன் செய்ய இடமில்லை. கடற்கறையோரம் செல்வது சங்கடமான வேலை. எனவே, ஒரு கழிப்பிடம் கட்டிக் கொடுங்கள் என்று கேட்டும், பிள்ளைகளுக்கு கல்விக் கூடம், மற்றும் சுயவேலை வாய்ப்புக்காக சமுதாயக் கூடம் என்று பல கட்டிடங்களை கட்டி வாங்கியுள்ளார்! தனக்காக எல்லாம் கேட்டும் உலகத்தில், தன் ஊருக்காக இவர் கேட்க, மனமகிழ்ந்து செய்வோரும், அதிகமாகவே இவர்களுக்கு செய்ய முன் வருகின்றனர். கைலாசநாதர் கோவிலையும் இவரே பராமரித்து வருகிறார். விவேகானந்த பக்தரான இவர், கோவிலை செப்பனிட முனைந்துள்ளார். கட்டாயம் இந்த சமூக நலக் காவலரோடு, எங்கள் ரீ.ச் இயக்கமும் கை கோர்த்து, கோவிலிலேயே, மூலிகைத் தோட்டம், கல்விக் கூடம், மற்றும் மருத்துவர் வருகை போன்றவற்றையும் நாங்கள் செய்ய முயல்கிறோம்.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் என் குடும்ப சகிதமாய் அங்கே வருகிறேன் என்றதும் சந்தோஷமாய் வரச்சொன்ன நாராயணன், எங்களை கடலுக்கருகில் கூட்டிக் கொண்டு பொய் விநாயகர் சிலைகளை கடலில் போட உதவினார். என் நண்பர் ராஜன் கணேஷ் கோவில் செலவுக்காக பலரிடம் சேர்த்த பணத்தை அவரிடம் குடுத்தேன். மனமகிழ்ந்த அவர், கட்டாயம் வார பிரார்த்தனையை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.

கடல் அன்று கொஞ்சம் ஆக்ரோஷமாய் இருந்தது. அதனால், அருகில் தேங்கிய நீரில், படகை விட்டு, எங்கள் அண்ணன் மகனின் படகு சவாரி ஆசையையும் தீர்த்து வைத்தார்.

சரி, பிள்ளையார்படத்தைப் பாருங்கள்! அதை செய்தது அடியேந்தான். கடலில் சேர்க்கையில் மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது, எதோ நம் பிள்ளையை நாம் வெளியூருக்கு அனுப்புவது போல்!

பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் குழந்தைகளை அழைத்து ஒரு நண்பர் வீட்டில், நிறைய களிமண் கொடுத்து அவரவரிஷ்டம் போல் பிள்ளையார் பிடிக்கச் சொன்னார்கள்! தெரியாத் தனமாய் நிறைய்ய்ய்ய்ய மண் வாங்கிவிட்டார்கள்! என் அண்ணனும், இதுக்கு எதுக்கு கவலைப் படறீங்க? கொஞ்சம் என் கையில் குடுங்க, என் தம்பி நல்லாவே சிலை செய்வான் என்று சொல்லி, ஒரு அரை சாக்கு மண்ணோடு வீடு வந்து சேர்ந்தார்! முதலில், திண்டில் சாய்ந்தபடி, புது போஸாக இருக்கட்டுமே என்று குட்டியாய் ஒன்று செய்து முடித்தேன். 11 மணிக்கு பார்த்த என் அம்மா, "அட, என்னடா இது? நிறைய மாலைகள் வாங்கி வெச்சுருக்கேன். நல்லா பெரிய பிள்ளையாராப் பண்ணுடா!," என்று 'அன்பு'க் கட்டளை இடவே, ஆரம்பித்தது இரண்டாம் பிள்ளையார் சிலை செய்தல்! நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! நல்லா இருந்தால், "கணபதி பப்பா, மோரியா, கணபதி பப்பா, லவ்கரியா", என்று ஜோராக ஒரு முறை சொல்லி கூவி அழையுங்கள்! மராட்டியர்கள் அப்படித்தான் கடலில் போடும்போது கூவுவார்கள் (கணபதியே, திரும்பிவா, சீக்கிரமாய் வா, என்று அர்த்தம்). என்ன கூவிட்டீங்களா? எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பிள்ளையாரை எடுத்துக் கொண்டு கிளம்புகையில் அவரை தலையில் வைத்துக் கொண்டு, கணபதி பப்பா...கூவினார்கள். என் பெண் தன் சைசுக்குத் தகுந்த மாதிரி, பிள்ளையாரின் வாகனமான 'எலி' யாரை தலையில் எடுத்து வைத்துக் கொண்டாள்! சும்மா அதிருதுல்ல?

04 September 2007

ஆத்ம விசாரம்!

பத்திரிகைகள் தொலைகாட்சி ஊடகத்தினருக்கு ஒரு ஆத்ம விசாரம்!
அன்புள்ள தினசரி, நாளிதழ்கள், வார, மாத பத்திரிகை மற்றும் தொலைகாட்சி சானல் உறுப்பினர்களுக்கு, சற்றே சிந்தித்துப் பாருங்கள்!


நீங்கள் இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கையிலேயே அனந்தநாக்கில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட மேஜர்.மனீஷ் பிதாம்பரேவின் தகனம், ராணுவ மரியாதைகளுடன் நடந்து முடிந்திருக்கும்.


சமீபத்தில் 'சஞ்சய் தத் ஜாமீனில் விடுதலை' என்பதை முதல் பக்க செய்தியாகவும், தொலைக் காட்சியிலோ, நாள் முழுவதும், கிளிப் பிள்ளையின் வரட்டு செய்தியாகவும், பலமுறை வந்திருக்கும். மற்றும், வெறும் 'முன்னா', தான், 'பாய்' இல்லை' (குழந்தை, குண்டர் இல்லை எனும் பொருள் பட), '13 ஆண்டுகளின் வனவாசம் முடிகிறது?', துப்பாக்கி வைத்திருந்தாரென்ற குற்றச்சாட்டு இருந்தாலும், தடா குற்றம் ரத்து," என்றெல்லாம் செய்திகளை நாள் முழுதும், ஏன் வாரக் கணக்காக காட்டிக் கொண்டிருந்தீர்களே? அதற்கு மகுடம் வைத்தார்போல், சல்மான் கான் (மானைச் சுட்ட குற்றத்துக்காக கோர்ட் வாசல் மிதித்த அதே சல்மான் கான் தான்!), "சஞ்சய் மிகவும் நல்லவர்; அவர் பரிசுத்தமாக வெளியே வருவார், " என்றும், அமிதாப் போன்றோர், " தத் குடும்பமும் நாங்களும் பால்ய காலத்திய நண்பர்கள், சஞ்சய் நல்ல பிள்ளை; அவர் என் மகன் அபிஷேக்கிற்கு அண்ணன் போல,"என்று சொல்வதையும், அவர் சகோதரியும் எம்.பி யுமான ப்ரியா தத், "நாங்கள் இன்று நிம்மதியாக தூங்கலாம்; இச்செய்தி மிகப்பெரிய விடிவு," என்றெல்லாம் பேசியதை மீண்டும் மீண்டும் செய்திகளாக்கினீர்களே?

அதே நேரத்தில், மற்றொரு சானலில், ஷாருக்கானா, அமிதாபா, யார் 'கோன் பனேகா க்ரோர்பதி' யை நன்கு நடத்தினார்கள் என்பதையும், க்ரேக் சாப்பல் இந்திய கிரிக்கெட் அணியை பற்றி விமர்சித்ததையும், இன்ன பிற அவலங்களையும் மீண்டும் மீண்டும் சொல்லிவந்தாலும், "சஞ்சய் தத்" பீனி·க்ஸ் பறவைபோல் மீண்டு வந்ததையே, அனேகமாக கிட்டத்தட்ட நாட்கள் கணக்காக தொடர்ந்து சளைக்காமல் காட்டிக்கொண்டிருந்தன!

எதேச்சையாக பி.பி.சி சானலைப் பார்க்கையில் தான், இந்த அதிர்ச்சிகரமான செய்தியை கண்டேன்! "சோஹல் பைசல்" எனும் முஜாஹிதீனின் பயங்கரவாதி, அனந்தநாகில், இந்திய ராணுவ மேஜர் ஒருவரின் நேரடி தாக்குதல் மற்றும் உயிர் தியாகத்தால், கொல்லப்பட்டான், எனும் செய்தி! அத்துடன் மேலும் 4 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்!


நடுநிசியில் தூக்கம் வராமல், புரண்ட போது டீ.வி.யை சுவிட்சினால், அது, மீண்டும் "சஞ்சய் தத் (?!) மகிமை பாடிக்கொண்டிருந்தது! சஞ்சய் தத் எப்படி கோர்ட்டாரிடம், " நான் எனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டுபவன்; என் மகள் அமெரிக்காவில் படிக்கிறாள், அவளுக்கு நான் தான் பணம் அனுப்ப வேண்டும், "என்றெல்லாம் மன்றாடியதை காட்டினார்கள்! அவர் தனது ராசியான நீல சட்டை அணிந்திருந்தது, எப்படி கோவில் கோவிலாக போய் ப்ரார்த்தனை செய்கிறார், என்றெல்லாம் விலாவாரியாக காண்பித்தார்கள்.
மும்பை குண்டு வழக்கின் குற்றவாளி, ஆயுதம் கடத்தியதற்கு சிறை சென்றவன், இன்று ஒரு பெரிய கதாநாயகன் போல் உலவி வருவதை வெட்கம் கெட்ட சானல்காரர்கள் காட்டிவருகிறார்கள்.ஆம், சஞ்சய் தத்துக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள்;சரி. அவர் எந்த தீவிரவாத நடவடிக்கையும் செய்யவில்லை, ஏ.கே.47 ரக துப்பாக்கி வைத்திருந்தது பயங்கரவாதிகள் பாஷையில், "சிறு பிள்ளை பொம்மை", ஆம், அவர் கோவில் கோவிலாக ஏறி இறங்கினார், சரி. மறந்தேவிட்டேன், அவர், "காந்திகிரி செய்து, மகாத்மாவானார் (படத்தில்..!) எல்லாம் சரி.

மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது ரகசிய செய்தியாளர்களிடமிருந்து தீவிரவாதிகள் இருக்குமிடத்தைப் பற்றிய தகவல் கிடைத்ததுமே, நொடிப்பொழுதும் வீணாக்காமல், அவர்கள் கூடாரத்தை தாக்கி, ஹிஸ்புல் முஜாஹிதீனின் தலைவனான சோஹல் பைசலைக் கொன்றார். அந்த சண்டையில், தனது உயிரை கொன்றது எது தெரியுமா? தீவிரவாதிகளால் "பொம்மை" என்று கேலி செய்யப்படும் ஏ.கே.47 க்கிலிருந்து வந்த குண்டு ஒன்றுதான்! மேஜர் மனீஷ் பிதாம்பரேவுக்கு அவரது மனைவியும், 18 மாதமேயான மகளும் இருக்கின்றனர்! அவர் ஒருபோதும், "எனக்கு ஒரு மகள் இருக்கிறாள்," என்று தயங்கவில்லை. அவர் தனது குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் என்று யோசித்துக் கொண்டிருக்கவில்லை. அவர் மரணத்தையோ, அல்லது, கொடி போர்த்தி அஞ்சலி செய்த காட்சியையோ, எந்த சானலும் நேரடி ஒலிபரப்பவில்லை! காரணம், ஒரு முன்னாள் போதை பழக்கத்தினன், குண்டு வெடிப்புக்கு சம்பந்தமுள்ள குற்றவாளி, எம்.பி, தந்தை, எம்.பி சகோதரி கொண்ட, 50 கோடி சொத்து கொண்ட, பணக்கார மகன்கள் வயசில் செய்யும் குறும்பு அதிகமாக துப்பாக்கி ஒளித்து விளையாடிய, காந்தி பேச்சை கேட்பதுபோல் (காசு வாங்கிக் கொண்டுதான்) நடித்த ஒரு மகா, மகா புருஷனான சஞ்சய்தத் மகராஜை பின் துரத்தி படம் எடுப்பதில் எல்லா சானல்காரர்களும் பிஸியாக இருந்துவிட்டார்கள்! அதனால்தான் மனீஷ் போன்ற 'சாதாரண' ராணுவ தியாகிகளை படமெடுக்கவில்லை! ஆனால், மறுபக்கம், இங்கே சஞ்சய் தத் விஷயத்திலோ, தடா சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி எப்படி அவரை குற்றவாளியை தப்பிக்கவைத்தோம்," என்று ஒரு பெரிய பணக் கும்பல் சந்தோஷப்பட்டு, மிட்டாய் வழங்கிக் கொண்டிருந்தது! அவர் தாய் தந்தையர், வானத்திலிருந்து அவர்களது "மகனை" வாழ்த்திக்கொண்டிருப்பார்கள், என்ற ரன்னிங் கமெண்டரி வேறு! தூ!


மேஜர் மனீஷின் பெற்றோர் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள்; தியாகி மகனின் நினைவுகளுடன், அவர்தம் மனைவி மக்களுடன், ஒரு அற்ப பதக்கமும், பென்ஷனும்பெற்றுக்கொண்டு! அந்த பெண்குழந்தை இனி அவளது தந்தையை நேரில் காண முடியாது!


இதைப் படிக்கும் ஒலி, ஒளி காட்சியாளர்கள், இனியேனும் மனசாட்சியை மாட்டிக்கொண்டு, பின்னர் காமெராவையும் மைக்கையும் கையிலெடுத்தால் நல்லது!நம் நாட்டு ராணுவ அதிகாரியின் தியாகம் கேவலம் ஒரு வெளிநாட்டு சானல் மூலம் நம் மக்களுக்கு தெரியவருகிறது! இந்திய தொலைக் காட்சியாளர்களே விழித்துக் கொள்வீர்களா?


(இது எனது மின்னஞ்சலில் வந்த ஒரு உண்மை செய்தியின் தமிழாக்கம், படித்து, ஒருநாள் முழுதும் உணவு உள்ளே செல்லவில்லை. நல்லவேளை எங்கள் வீட்டில் கடந்த 5 வருடங்களாக, தொ(ல்) லைக் காட்சி பெட்டியை ஒழித்துக் கட்டிவிட்டோம்! இந்த கண்ராவியை எல்லாம் பார்க்காமலிருக்க.

மனீஷ் போல் எத்தனையோ தியாகிகளின் வாழ்க்கை நம் கண்களுக்கு காட்டப் படுவதேயில்லை. இதில் புதிதாக இன்னும் பல சானல்கள் வேறு! ஹ¥ம்!