01 December 2006

'கருத்து' நடத்திய கருத்தரங்கம்!

தலைப்பு: மரண தண்டனை தேவையா?
'கருத்து' இயக்கம் நடத்திய கருத்தரங்கத்துக்கு (பெட்டச்சி அரங்கம், நவம்பர் 29ஆம் தேதி,2006, மாலை 5.30 மணிக்கு) செல்லும் அழைப்பு வந்ததால், அங்கு கேட்ட சுவாரசியமான தகவல்களை இங்கே தருகிறேன். அரசியல் அல்லாத அமைப்பு எனும் முத்திரையோடு, இந்திய நிதி அமைச்சரின் மகனான கார்த்தி சிதம்பரமும், தற்போதைய தமிழக முதல்வரின் மகளுமான கனிமொழியும் ஆரம்பித்து நடத்தும் கருத்துச் சுதந்திர மேடைதான் கருத்து. இணையமும் உள்ளது ( www.karuthu.com).

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது.

கார்த்தி சிதம்பரம் பேசுகையில், ஒரு வருட வளர்ப்பு (அவரது இல்லங்க, கருத்து அமைப்பின் வளர்ப்பு) பற்றியும், முற்றிலுமாக மரண தண்டனை என்பதே வேண்டாம், அது மனித நேயத்துக்கு ஒரு காலத்தின் பின்சரிவு எனப் பேசினார்.

அடுத்து பேசிய மனித உரிமை கழக தலைவரும், கிரிமினல் வக்கீலுமான சுரேஷ், மிகவும் நெகிழ்ச்சியான சில சம்பவங்களையும், எப்படி எந்த நீதிபதி வந்தால், எந்த வழக்கு எப்படி திசை மாற வாய்ப்புள்ளது என தெரிந்து கொண்டு, எப்படி வக்கீல்கள், இம்மாதிரியான கேஸ்களில் வாய்தா வாங்குவார்கள் என்பதையும் சொன்னார். அவற்றில் சில உதாரணங்கள்:

தப்பித் தவறி, மும்பைக்கு ஓடிப்போன பல படிக்கத்தெரியாத, ஏழைகளுள் ஒருவன் (இவை மிக முக்கியம்) ஆறுமுகம் எனும் குப்பையில் பைகள் சேர்க்கும் ஒரு தமிழ் பிழைப்பாளி. (பொறுக்கி என்றால் அர்த்தம் வேறுபடும் அபாயம் உள்ளது; எனவே, பிழைப்பாளி). அங்கு ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது, கற்பழித்து, கொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் போடப்பட்ட 10 வயது பெண்ணைப் பார்த்து அலறிவிடுகிறார். சமய சந்தர்ப்பம், பணம், படிப்பு அதோடு பாஷை புரியாமை (பாவம் தமிழ் தவிர வேறு பாஷை தெரியாமல் அங்கு பிழைக்கப் போயுள்ளார்), தவிர பத்திரிகைகள், குழந்தை, பெண்கள், பாலியல் பலாத்காரம் பற்றி கூவும் சங்கங்களின் கூச்சல்கள் ஆகியவை அவருக்கு எதிராக இருக்க, காவல் துறையும் , நீதிமன்றமும் தனது காகித வேலைகளை (கேஸ் கட்டுகள், துணைக்கு நாலு சாட்சி தகவல்கள் தொகுப்புகள், என பல விஷயங்கள்) முடித்து, தீர்ப்பு எழுதின. என்ன? ஆயுள் தண்டனை! 12 ஆண்டுகள் முடியும் தருவாயில், இப்போது, கடந்த அக்டோபர் 14ஆம் தேதி, மும்பையில் ஒரு காவலதிகாரி தற்கொலை செய்துகொண்டார்; அதற்கும் ஆறுமுகம் ஆயுள் தண்டனைக்கும் என்ன சம்பந்தம்? உள்ளது!! ஜோடித்த தகவல்களால், இன்று நிரபராதி ஆறுமுகம் தண்டனையை அனுபவித்து வருகிறான். அதற்கு காரணமான அன்றைய அதிகாரி இன்றைய DCP. தானும் உடந்தை; இத்தனை ஆண்டு காலமாக இருந்த மன உளைச்சலே இந்த தற்கொலைக்குக் காரணம்" என எழுதி வைத்துள்ளார்! தண்டனையின் காலம் இன்னும் இரண்டே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போது ஆறுமுகம் விடுதலை ஆகிவிட்டார்! அப்போது ஆறுமுகம் தமிழில் அப்பாவியாகச் சொன்னது," என்ன நம்பி ஊருல ரெண்டு ஜெனம் இருந்துச்சு; அதுங்க இப்ப இருக்காங்களா, போயிட்டாங்களான்னு கூட தெரியலயே" என்று! மேலும் வழக்கறிஞர் சுரேஷ் கேட்ட கேள்வி சிந்திக்க வைத்தது. இதே குற்றத்துக்கு நீதிபதிக்கு இரண்டு முடிவுகள் உள்ளன. ஆயுள் தண்டனை தவிர, மரண தண்டனை! இந்த ஆறுமுகத்துக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தால்? காலமும், சமுதாயமும் நம்மைச் சாடாதா? ஒரு குறிப்பிட்ட தனி மனிதரான நீதிபதியின் அன்றைய நிலை, சிந்தனை, வாத ப்ரதிவாத சாதுர்யங்கள், பணம், போன்றவையே ஜெயிக்கும்; நிஜ சட்டமும், சமுதாயமுமல்ல; அத்தகைய ஆபத்தான சூழலில், மரண தண்டனை தேவையா? எனவே இந்த மரண தண்டனையையே, இந்திய சட்டத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என வாதிட்டார்.

5600 ஆண்டுகளுக்கு முன்னரே, மரண தண்டனையைப் பற்றி கூறும் மதங்களே, அதிலும் சில விதிவிலக்குகளை வைத்துள்ளது; இரண்டாம் உலகப்போரினால் 16000000 (160 லட்சம்) மக்கள் அநியாயமாக இறந்தார்கள் என்றும், 170 நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், தகவல்கள் பரிமாறினார். எனவே, மனிதன் நிர்ணயம் செய்யும் எந்த கொலையும் (அது போராக இருந்தாலும் சரி, அல்லது நீதிபதியின் தீர்ப்பாயிருந்தாலும் சரி) மனித நேயம் எனும் சொல் முன், அநியாயமே! எனவே மரண தண்டனை முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு முத்தாய்ப்பாக, ஆப்பிரிக்க இனத்தலைவர் நெல்சன் மாண்டேலா, 27 வருடங்கள் பிறகு சிறையிலிருந்து வெளியே வருகையில் சொன்ன செய்தியைச் சொன்னார்!!

"அவர் சொன்னால், நாடே கேட்கும் நிலையிலிருந்தது! தன்னை சிறையிலிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டதற்கு, "அவர் என்ன செய்தாரோ, அதையே நானும் செய்தால் என்ன பயன்? இனத்தின் மீது வெறுப்பு வந்து கருப்பர்களை அவர் வதைக்க வைத்த துவேஷம்தான் இன்று விசுவ ரூபம் எடுத்துள்ளது. அதை ஒழிக்க, நான் அவருள் உள்ள 'மனிதத்தை' அவர் உணரச் செய்தேனானால், அதுவே அவர் மீது நான் எடுக்கும் சரியான நடவடிக்கை!" என்றாராம்! மாண்டேலாவே, ஆப்பிரிக்க சட்டதிட்டங்கள் மாற்றி எழுதியமைக்கையில், மரண தண்டனையை நீக்க வித்திட்டாராம்!

பெண் கழகப்பேச்சாளாரும், வழக்கறிஞருமான அருள்மொழி பேசுகையில், ஒரு பூனைக்கதை சொன்னார்."என் வீட்டருகில் ஒரு ரவுடிப்பூனை. எல்லா பெண்பூனைகள், அவற்றுக்கு பிறக்கும் பெண்குட்டிகள், என பாகுபாடு பாறாமல், குட்டிகள் போடச்செய்தது! சினை பூனைகள் நடக்கக் கஷ்டப்படுகையில், பல குட்டிகள் இறந்து போகையில், எனக்கு அந்த ரவுடிப் பூனை மேல் ஏகக் கோபம்! நண்பரிடம் சொல்லி, எப்படியாவது அந்த ரவுடியை கல்லால் அடித்துக் கொன்று விடுங்கள்," என்று சொன்னேன். அவர் கேட்டது, " அது மிருக சுபாவம்; யாருடனும் உடலுறவு கொள்ளும், ஊர் சுற்றும்; ஆனால் மனிதராகிய நாம், நம்மை விட பலகீனமான குறைந்த அறிவுள்ள, திரும்ப சண்டை போட முடியாத ஒரு பூனையை ஆள் வைத்துக் கொல்வதா? பின்னர், மனிதர்கள் மேம்படுவது எப்படி?" என்றாராம்!!

எனவே, ஒரு பூனைக்கே மனித நேயம் காட்டும் நாம், மனிதருள் மனிதனைக்காண கூடாதா," என்றார். மற்றொரு உதாரணத்தையும் சொன்னார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் எனும் மாணவன், "நான் கடையிலிருந்து 9V உள்ள பாட்டரிகளை சொந்த உபயோகத்திற்காக வாங்கிச் சென்றேன். ராஜீவ் காந்தியைக் கொல்லும் அளவுக்கு அந்த பாட்டரிகளை உபயோகித்து குண்டு செய்ய முடியுமா என்று எனக்கு இன்றுவரை தெரியாது, " என்றாராம், இந்த மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள குற்றவாளி!

ஆனால், மக்களிடையே கேள்வி நேரம் வருகையில், ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூற விரும்பிய அருள்மொழி, தேவையில்லாமல், பெரியார் சொன்ன, பாம்பையும்,______ ஒரு சேரப் பார்த்தால், முதலில் _____ அடி," எனும் கருத்தை நிறுத்தி நிதானமாகச் சொன்னது, அந்த சில வகுப்பினருக்கு அக்காலகட்டத்தில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது. அவர்களைப் போல்தான் வேறு ச ில சிறுபான்மையினர். எனவே, சமுதாயத்தில் அவர்கள் ஒடுக்கப் படுவதால்தான், தீவிரவாதிகள் ஆகிறார்கள். அந்த சமுதாய சீரமைப்பு செய்யாத அரசியல், பண, சட்ட மாற்றங்கள் கொண்டு வந்தால் இன்றி, இனப் ப்ரச்னை வரும்;" என்றார். ஆனால், அவரது துர்பாக்கியம், அந்த கருத்தை முழுமையாக கேட்கும் முன்னரே, ________ இழிவு படுத்தி, ___ இந்துக்கள் என்று ஏகமாகக் கூறி, வக்கிரங்களை, ஜாதிச்சண்டையைப் பற்றி ஒரு நபர் கூச்சல் செய்ய அருள்மொழி காரணமாகிவிட்டார்!

பின்னர் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர், தான் வக்கீல் இல்லை என்றாலும், தமக்கு தோன்றும் கருத்தை மக்கள் முன் வைப்பதாக பீடிகையோடு ஆரம்பித்தார்!முதலில், எதிர்கருத்துக்களை நேருக்கு நேர் பேசக்கூடிய வாய்ப்பை, கேட்கும் வாய்ப்பை இன்றைய அரசியல் சூழலில் (பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பட்டிமன்றங்கள் தவிர) மக்கள் மறந்துவிட்ட நிலையில், 'கருத்து' அதற்கான களம் அமைத்ததைப் பாராட்டினார்.

" நாய்க்கும், பூனைக்கும் கருணை காட்டும் சமுதாயம், மனிதன் என்றால் இனம், மொழி, சாதி எனப் பிரித்துப்பார்ப்பது ஏன்? அவற்றுக்கு நீதி தந்தது நமக்கு புதிதல்ல; முல்லைக்குத்தேரும், புறாவுக்குப் பதிலாக பருந்துக்கு தனது தொடையையும், இறந்த கன்றுக்கு மாற்றாக, நீதி கேட்டு வந்த பசுவுக்கு முன் தன் மகனையே தேர்காலில் கொல்லச் செய்த மன்னனும், தான் தவறு செய்தோம் என்று கேட்டதும், உயிர் நீத்த பாண்டியனையும் கொண்ட பாரம்பரியம் மிக்க நாடு நம் நாடு!"எனத் தொடங்கினார்...

இப்போது திடீரென மரண தண்டனை பற்றிய விவாதங்கள் நாடெங்கும் நடக்கக் காரணம்? அப்சல் குரு! ஏன்? யார் அப்சல்? நாடாளுமன்றத்துக்கு குண்டு வைக்க திட்டமிட்டு பிடி பட்டு, இன்று தூக்கு தண்டனையை எதிர் நோக்கியுள்ளவன்! சிறுபான்மை வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே, அரசியல் கட்சிகள் சில, ஆதாய நோக்கில் அவனைத் தூக்கிலிடுவது தவறு என அரைகூவல் விடுகின்றன!

ஆனால், அவன் அதைப் பற்றி கவலை பட்டதாகத் தெரியவில்லை. ஒரு தனியார் தொலைக் காட்சியில், அவனது தாய் பேட்டி தருகிறார்; அவனது கண்களை துடைத்து விடுகிறார், ஆனால் அந்தக் கண்களில் கண்ணீரே வரவில்லை! அவன் முகத்திலும் கவலை தெரியவேயில்லை! பின்னர், எதற்காக இந்த வேஷம்? கோஷம்? ஏன்? அன்று பாராளுமன்றத்தில் அவனது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டபோது உயிர் நீத்த 6 ராணுவ வீரர்களுக்கு மட்டும் தாயாரோ, மனைவியோ இல்லை மக்களோ இல்லையா? அவர்களை ஏன் இந்த தொலைக்காட்சிகள் மறந்து போயின? அவர்கள் படும் துயரம் என்னவோ? நாட்டுக்காக அவர்களது இல்லத்தலைவர் உயிர் நீத்து, பல எம்.பி.க்களின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கான பரிசு- அந்த கயவணை கருணையுள்ளத்தோடு, தூக்கிலிருந்து தடுப்பதா? எம்பி.க்கள் எனது கட்சி, எதிர் கட்சி என்பது முக்கியமல்ல. அவர்கள் நம் நாட்டுத் தலைவர்கள். அவர்களை மட்டும் குண்டு வைத்துத் தகர்த்திருந்தால், உலகமே, நமது பாதுகாப்பு அமைச்சகத்தைப் பார்த்து எள்ளி நகைத்திருக்குமே?
மரண தண்டனை பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். ஆனால், போராட்டம், தனி விடுதலை, இயக்கம் என்ற பெயரில், நாம் போராளிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அழைக்கும் 'கோழைகள்' பஸ் ஸ்டாண்டிலும், ரயில்களிலும், பாதயாத்திரை போகும் யாத்ரீகர் மேலும் வைத்த குண்டுகளால், தாக்குதல்களால், நமது முன்னாள் பிரதமர் உட்பட, 26 லட்சம் அப்பாவி மக்களை நமது நாடு இழக்கவில்லையா? அவர்களாது உயிர் முக்கியமில்லையா?

அப்சல் குரு தூக்கிலிடப்படவேண்டுமா, இல்லையா எனக்கேட்டு 'இந்தியா டுடே'வும் MARGம் நடத்திய வாக்கெடுப்பில், 80% மக்கள் தூக்கிலிடுவது சரியே எனக் கூறியுள்ளனர்.

அப்படியும், அரசாங்கமும், நீதிமன்றமும் தவறான தீர்ப்பளித்தாலும், அதனை மறு பரிசீலனை செய்ய மாநில ஆளுநருக்கும், நாட்டின் ஜனாதிபதிக்கும் உரிமையை இந்த சட்டம் அனுமதித்துள்ளது. எனவே, பயங்கரவாதத்தை நிறுத்த மரண தண்டனை போன்றவை அவசியமே", எனப் பேசினார்.

அது தவிர, வீர சாவர்கர் பற்றி, அதிகம் பலருக்குத் தெரியாது என்று வருத்தம் கொண்டார். லண்டனில் நமது சுதந்திர போராட்ட வீரர் ஒருவர், வெள்ளையனை சுட்டுக் கொன்றதற்கு (பெயரை நான் குறித்துக் கொள்ளவில்லை, மன்னியுங்கள்) அங்கு வசித்த இந்தியர்களே எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் போட்டனராம்! ஆங்கிலத்தில் unanimously oppose என எழுதவே, அங்கேயே அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே மனிதர் வீர சாவர்கர். உடனே, அருகிலிருந்த எதிர்ப்பாளர்கள், அவரை தாக்க முற்படவே, சாவர்கருக்கு துணையாக நின்ற வா.வே.சு. ஐயர், தனது துப்பாக்கியை எடுத்து, அவர்களை சுட முயன்றாராம். அதற்கு, சாவர்கர், "விட்டுவிடு; நாம் தயாரிக்கும் ஒவ்வொரு தோட்டாவும், ஒரு வெள்ளையனை அழிக்கவே! நமது மக்களையே சுடுவதற்கு அல்ல!" என்றாராம்! ஆனால், அன்றைய அரசாங்கம் அவருக்கு தந்த பெயர், "தீவிரவாதி" ! தன்னை கொல்ல முயன்றவனுக்கே, மன்னிப்பு அளிக்குமாறு காந்தி அடிகள் சொன்னதை அன்றைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதா? இல்லையே? நமது தலைவர் ஒருவரைக் கொன்றார் என்ற காரணத்துக்காகவே, கோட்ஸே தூக்கிலிடப்படவில்லையா? காரணம் - நமது தேசத்தின் பாதுகாப்பு, தலைவர்களின் பாதுகாப்பு. அதேபோல் தான் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்ற காரணத்தினால், சில சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், காரணம் அவர் நமது நாட்டின் தலைவர்!

ராஜீவ் வழக்கிலும் நாம் அவரைக் கொன்றவருக்கு தூக்குத்தண்டனை கொடுத்தாலும் தகும் என ஏன் நினைக்கிறோம்? கட்சிப்பாகுபாடின்றி நான் பார்க்கிறேன். அவர் நமது நாட்டுத் தலைவர்! அவருக்கு நேர்ந்தது, வேறு எவருக்கும் நேரக் கூடாது என்பதற்கு, இந்த மரண தண்டனை ஒரு பாடமாக அமையட்டும்."

"சரி, கோட்ஸேவுக்கு மன்னிப்புத் தருமாறு சொன்ன காந்தி அடிகள், பகத்சிங்குக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றுதருவதற்கு மறுத்தது ஏன்? அவர் இம்சை வழியில் போனதால் தான், மரண தண்டனையை மாற்றக் குரல் கொடுக்கவில்லை என்றார் காந்திஜி. அப்படியானால், தனக்கு சாதகமான கருத்தை சொல்பவருக்கு ஒரு நியாயம், தனது விருப்புகளுக்கு எதிராக இருந்ததாலேயே இன்னொரு நியாயம் என ஒருவர் எண்ணலாமா? ஆனால், இன்று நாடு பகத்சிங்கை தியாகியாக போற்றுகிறது! காந்திஜி செய்தது அப்படியென்றால் தப்பா? அவர் பகத்சிங்கை உயிரோடு இருக்கச் செய்திருக்கலாமே?
எனவே, நீதி என்பது இருந்தால், மரண தண்டனை இருக்கட்டும்; இல்லையென்றால், ஒரேடியாக எடுத்துவிடு. ஒருவனுக்கு ஒரு நியாயம், மற்றவனுக்கு அநியாயம் - இப்படி அதை உபயோகிக்காதே! எனினும், சுரேஷ் சொல்வது போல், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால், தவறான ஒரு தண்டனை தரப்படுமேயானால், அவர் அதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. மன்னிக்கும் அதிகாரம், சூழ்நிலைகளுக்கேற்ப, ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் உள்ளது."
"தமிழகத்தில் சில வருடங்களுக்கு ஒரு ஊரில் நடந்த சம்பவத்தை கணேசன் எடுத்துக் காட்டினார். இரவில் வங்கியைக் கொள்ளையடிக்க வந்தவர்கள், பிடிபட்டதும், அவர்களை அந்த ஊராரே, கல்லால் அடித்திக் கொன்றுவிட்டனர்! அந்த ஊரார் செய்தது கொலை குற்றமா? அரசாங்கமே, அவர்களுக்கு பாராட்டு விழா எடுத்து, அதிக சலுகைகளையும் அறிவித்ததே? எனவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்தே, குற்றம் ஆராயப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டுமே, தவிர, தண்டனையே, வேண்டாம் என்று சொல்வது, குற்றவாளிகளை ஊக்குவிப்பது போலாகிவிடும்."

"காவலர்களைக் குறை கூறிக்கொண்டே இருக்கிறோம்; நல்ல காவலர்களையும் நான் அறிவேன். சட்டப்படி குற்றம் நிரூபிக்க அவர் செய்ய வேண்டிய காகித சமாசாரங்கள் எல்லாம் தாண்டி அவன் தண்டிக்கப்படுமுன்பே, அரசியல் குறிக்கீடும், பணமும் அந்த தண்டனை வராமலே செய்துவிடும். எனவே, அவர்களுக்கு தெரிந்த ஒரே ஆயுதம், ஓரத்தில் ***க்கு ஒதுங்கச் சொல்லி, தப்பிக்கப் பார்த்தான் என்று 'என்கவுன்டர்' கொலையாகவே அதை முடித்து விடுகிறார்கள்! (சாமி பட க்ளைமாக்ஸ் நமக்குத் தெரியாதா? நாம் அதை வரவேற்கவில்லையா?)" என்று தன் பக்க நியாங்களைக் கூறி வாதிட்டார்.

முடிவுரை படிக்க வந்த கனிமொழி, " அன்றைய தீவிரவாதி இன்றைய தேசத்தலைவர்; அவர் அன்று தூக்கிலிடப்பட்டிருந்தால்? ஒரு தலைவரை நான் இழந்திருப்போம்! (இழந்தாயிற்றே? பகத்சிங்கை? வேறு யாரைக் குறிப்பிட்டார் என்பதை அவரே சொல்லட்டும்???) உலகில் எங்கும் இல்லாத மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை நாம் அறவே நீக்கவேண்டும். 'ஐயன்' வள்ளுவர் குறிப்பிட்டதாக, இல. கணேசன் ஒரு குறளைக் குறிப்பிட்டார். அதன் அர்த்தம்: நெற்பயிர்கள் நன்கு வளர வேண்டுமானால், களைகளை எடுக்கவேண்டும். அதுபோல்தான் அரசனும் முடிவு செய்யவேண்டும். அதற்கு அர்த்தம், கொல்வது அல்ல, நீக்குவது மட்டுமே!" என்றார். (அப்படீன்னா, என்ன, நாடு கடத்தச் சொல்றீங்களா? நமக்கே எதிரிங்கறப்ப, அடுத்தவன் எப்படி அவனை உள்ளே சேர்ப்பான்? நீக்குவதற்கு வெறென்ன அர்த்தம் இருக்கமுடியும்?)
இப்படியே போனால், எல்லா ஊர்களிலும் மக்களே கல்லால் அடிப்பது போன்ற தீர்ப்பை தாங்களே எடுக்கும் நிர்பந்தம் வந்தால், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும்," என எச்சரித்துவிட்டு அமர்ந்தார்.

பின்னர் வந்த பார்வையாளர்கள் கேள்வி நேரத்தில், முதலில் பேசியவர், மிக அருமையான ஒரு கண்ணோட்டத்தைத் தந்தார்.!
ஓரிரு தவறான தீர்ப்புகளால், அந்த தண்டனையையே ரத்து செய் (மரண தண்டனை), அப்படியே பார்த்தால், நல்ல நீதிகிடைக்கவில்லையா, நீதிமன்றத்தையே மூடிவிடு, காவலர்கள் கயவர்களாகிறார்களா, காவல் நிலையங்களை மூடிவிடு; மந்திரிகள் சரியில்லையா, சட்ட சபையையும், நாடாளுமன்றத்தையே மூடிவிடு!" என்றா நாம் முடிவெடுக்கிறோம்? எனவே, இந்த மாதிரியான தண்டனைகள் இருந்தால்தான், கொஞ்சமேனும் நாட்டில் தவறு செய்பவர்க்கு பயம் இருக்கும் என்றார்!

"சரி, தீர்ப்பை ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்றாலும், பணம் படைத்தவர்கள், காவல் நிலையங்களிலேயே, மீட்டிங் போடுகிறார்கள்; தொண்டர், குண்டர் வைத்துக்கொள்கிறார்கள்; மொபைல், ஏ.ஸி. என வைத்துக் கொள்கிறார்கள்; ஏன் சில சிறைச் சாலையில், குடும்பமே நடத்தியுள்ளார்கள்! எனவே, மரண தண்டனை எனும் ஒன்று தேவையே," என்றார்.

முடிவில், பார்வையாளர்கள் என்ற போர்வையில், சில சந்தர்ப்பவாதிகளும், சாதிச்சாயம் பூசி அங்கு வந்தவர்களும், அருள்மொழி குடுத்த குறிப்பைக் கொண்டு, பிற இனத்தவரை குறிப்பிட்டு பேசி, கீழ்தரமாக அடித்துக் கொள்ளத் துவங்கியதும், சரி, இனி இங்கே கருத்துப் பரிமாற்றம் தவிர வேறு சில பரிமாற்றங்களும் ஆகலாம் என யூகித்து நாம் அந்த இடத்தை விட்டு "எஸ்கேப்' ஆனோம்!

எனக்கு தோன்றிய சில அடிப்படை சந்தேகங்கள்தான் என்போன்ற சாதாரண குடிமகனுக்கு வரும்:

170 நாடுகளில் இல்லை என்று, இங்கும் எடுத்துவிடவேண்டும் என்று சுரேஷ் சொன்னார். அவர்கள் சூழ்நிலை பண்பாடு, வளர்ப்பு வேறு. அங்கே, குழந்தைகள் கைகளில் துப்பாக்கியால் சுட்ட கதை எத்தனை படித்திருக்கிறோம்? ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்வார்கள்; குடும்பம் எனும் அமைப்பே பல நாடுகளில் குறைந்து வருகிறது. எனவே, நமது நாட்டின் சூழ்நிலைக்கு எது சரியோ அதைத்தான் நாம் சட்டமாக வைக்க வேண்டும்.
பயங்கரவாதி மரணதண்டனையைப் பற்றி பயப்படுவதில்லை. அவன் மரணம் வரும் என எதிர்நோக்கிதானே, மனித குண்டாகவும், வெடி வைக்கும் ஆளாகவும் மாறுகிறான்? அவனே கவலைபடாமல்,பல்லாயிரம் அப்பாவி மக்களை கொல்ல முடிவு செய்யும் போது, பிடிபட்டால் அவனை நாம் கொல்லக் கூடாதா? நாய் வளர்ப்பு மிருகம்தான். அதன் மேல் நமக்கு கருணை வேண்டும்தான். ஆனால், வெறி பிடித்த நாயை அரசாங்கமே சுட்டுக் கொன்றுவிடுகிறதே? யானை அழகுதான்; ஆனால் மதம் பிடித்த யானை? அங்குசத்துக்கு அடங்காது போனால், மயக்க ஊசியை செலுத்தி அடக்கப் பார்ப்பார்கள்; இல்லையேல் சுட்டுக்கொன்றுவிடுவார்கள். மதம் பிடித்த (2 பொருளில்) மனிதனும், மிருகம்தானே?

இதை எண்ணும் நெஞ்சம்தான், மற்றொரு வினாவையும் எழுப்புகிறது!

"பல குற்றவாளிகள் விடுபடலாம்; ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக்கூடாது" என்கிறது சட்டம்.
எனவே இதைப் பற்றி நன்கு ஆராய்ந்து சட்டதிட்டங்களை மாற்றி எழுத வேண்டியது நமது சட்ட வல்லுநர்களே! மாற்றும் கமிட்டியே இதுவரை 4 முறை மாற்றப்பட்டு, அரசியல் காரணங்களால் சட்டதிட்டம் மாற்றம் செய்யப்படவில்லையாம்! மக்கள விழித்துக் கொள்ளுங்கள்! தவறான தகவலால் சிறை செல்லும் ஒரு அப்பாவி, சரியில்லாத ஒரு தண்டனை முறையால் தூக்கிலிடப்படலாமா? அரசாங்கத்தை விழித்தெழச் செய்ய மக்கள் முதலில் விழித்தெழுங்கள்!

11 comments:

Sivabalan said...

நன்றாக எழுதியுள்ளீர்கள்

நன்றி

Maraboor J Chandrasekaran said...

உடனடி பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சிவபாலன்

சிறில் அலெக்ஸ் said...

பகிர்வுக்கு நன்றி. சிறப்பான கட்டுரை.

Boston Bala said...

சிவபாலனை வழிமொழிகிறேன். நன்றி.

Maraboor J Chandrasekaran said...

நன்றி, சிறில் அலெக்ஸ். வஷிஷ்டர் வாயால்...:-)

Maraboor J Chandrasekaran said...

வருகைக்கும், சிவபாலனை வழிமொழிந்ததற்கும் நன்றி, பாஸ்டன் பாலா!

லக்கிலுக் said...

அருமையான, அவசியமான பதிவு. கருத்து மீட்டிங்குகளில் தொடர்ந்து கலந்துகொள்கிறீர்களா? அடுத்த முறை மீட்டிங் வரும்போது சொல்லுங்கள். சந்திப்போம்.

ஓகை said...

மிகச் சிறந்த ஒரு பதிவு. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.

இதற்கெல்லாம் கொஞ்சம் சொல்லிவிட்டு போகக் கூடாதா? நானும் வந்திருபேனே!

Maraboor J Chandrasekaran said...

//... கருத்து மீட்டிங்குகளில் தொடர்ந்து கலந்துகொள்கிறீர்களா?//

வருக லக்கி லுக். எல்லா கருத்தரங்கங்களுக்கும் செல்லவில்லை. உறுப்பினராயிருந்தும்,இம்முறைதான் அழைப்பு வந்தது! இனி தவறாமல் செல்ல உத்தேசம். கட்டாயம் சந்திப்போம்.

ஓகை, ஸாரி, நானே, புது வேலையில் சேர்ந்து, அடித்தேன் பிடித்தேன் என்று 5.30 ஆபீஸ் முடிந்ததும், முதல் முறையாக இரு சக்கரவண்டியை அத்தனை வேகமாக ஓட்டினேன், நேரத்தில் போய் சேரவேண்டுமே என்று! அடுத்த முறை தெரிய வரும் போது, கட்டாயம் அழைக்கிறேன்.

Maraboor J Chandrasekaran said...

நான் இந்த இடுகையை எழுதும் சில நாட்களுக்கு முன், எஸ்.வி.ராஜதுரை என்பவர், குற்றங்களுக்காக வருந்தச் செய்வதே நீதி எனும் தலைப்பில் குற்றம் புரிந்தவர்களை திருந்தச் செய்வது குறித்து தினமணி நாளிதழில் எழுதியிருந்ந்ததைக் காண நேர்ந்தது. அதற்கு பதில் ஒன்றை அரூரிலிருந்து திரு.ஸ்ரீ.மதிவாணன், என்பவர் எழுதியுள்ளார். அதன் சாராம்சத்தை கீழே தருகிறேன். இக்கட்டுரைக்கு இந்த பதிலும் மிகப்பொருந்தும். ஆனால். அவர் ஒரு இடத்தில், "நூறு அப்பாவிகள் தண்டிக்கப் பட்டாலும், ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படக்கூடாது (!!!) என எழுதியுள்ளார். அதை பத்திரிகை ஆசிரியரும், திருத்தங்கள் செய்யாமலே வெளியிட்டுள்ளார்!

"நூறு குற்றவாளிகள் விடுபட்டாலும் கூட, ஒரு நிரபராதி கூட தவறாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது", என்றுதானே இருக்க வேண்டும் அந்த வரிகள்?

ஸ்ரீ.மதிவாணனுக்கு அந்த நீதியும் ஏற்புடையதாக இல்லை. அவர் கூறும் காரணம்?

" ..உட்கார்ந்த இடத்திலிருந்தே விரும்பியதைச் செய்யும் வசதியை ஆயுட்சிறை பயங்கரவாதிகளுக்குத் தருமேயன்றி - அவர்களை வைத்துப் பாதுகாக்கையில், அன்னாரின் சிறைவழி ரெளடியிசங்களால் சிறைக்குள்ளேயே ஆபத்துகள் வளரவும், தீய திட்டங்கள் மேலும் வலுப்பெறவும் வழிசெய்யும்; ஆயிரம் கிரண்பேடிகள் உருவெடுத்தாலும் கொடூரக் கொலையாளிகள் திருந்த வாய்ப்பே இல்லை!"

" ... பயங்கரவாதிகளால் கொல்லப்படும் ஆயிரமாயிரம் ராணுவ வீரர்களுக்கு இரங்கி, ஒரு சொட்டுக் கண்ணீர் விட எந்த அறிவு ஜீவியோ, மனித உரிமைவாதியோ முன் வருவது இல்லை!"

"...ஜெசிகா லால், ப்ரியதர்சனி மாட்டூ, போன்ற பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப் படுகையில், எத்தகைய அவமானமும், வேதனையும், கதறலையும் அனுபவித்திருப்பர்? அது அந்த தவறைச் செய்யும் ஆணுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அந்த காலித் தனத்தை உடலிலும், உயிரிலும் தாங்கித் துடித்து, மானத்தையும் உயிரையும் ஒரு சேர, உச்சபட்ச வலியினூடே இழக்கும் பென்ணின் நிலையில் தன்னை கற்பனை செய்துகொண்டால், அங்கே, எத்தகைய மனிதாபிமானங்களுக்கும் இடமிருக்காது,".. என்று எழுதியுள்ளார்.

இதைப் படித்து, போன ஞாயிற்றுக்கிழமை, கண்பார்வையற்றவர்களுக்காக பாடங்கள் படிக்கச்செல்கையில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர் இருவர், சிறுகதை தொகுப்பொன்றை படிக்கச் சொன்னார்கள்; அதில் மனித நேயத்தை மேலிட்டுக்காட்டும், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் கதியினூடே, கோவி.மணிசேகரனின் "கழுவேறிமேடு" எனும் கதையைப் படிக்க நேர்ந்தது! சரித்திர ஆசிரியரின் கதை இங்கே எங்கே வந்தது? என எண்ணி வியந்தபடி கதையை படித்தேன். அந்தக் கதையிலும் மனிதம் நிலைத்தது! நீதியும் நிலைத்தது!

அந்தக் கதையின் முடிவையே இந்தக் காலத்திலும் கடை பிடித்தால், கட்டாயம் காசுவாங்கி நீதி விற்கும் அவலம் இருக்காது!

கதையின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்...

இன்றைய விழுப்புரம் அருகேயுள்ள வில்லியனூர் கோவிலருகே இருக்கும் பாகூர். அங்கு, விஜய நகர பேரரசுக்கு உட்பட்ட மண்டலாதிபதிகளுள் மல்லமராஜு என்பவன் ஆள்கிறான். சாமானியன், காதலந் பெயர்- வில்வநேசன்; வில்லியனூர் சிவன் கோவிலின் சுவாமி பெயர்! (அம்மனின் பெயர்- குயிலம்மை!- இந்த அழகிய பெயர்களைக் கண்டதும், அந்தக் கோவில் இன்னும் இருக்கிறதா எனக் காண மனம் விழைகிறது!). காதலி சுந்தர மேனியாள்!

கதையை ஊகித்திருப்பீர்களே! பலம் கொண்ட மல்லமராஜு, கோவிலில் சுந்தர மேனியாளைக் கண்டவுடன் மயக்கம் கொள்கிறான். அவளை அடைய எல்லாம்செய்து பார்க்கிறான். ஆனால் அவள் மசிவதாயில்லை! தான் அடைய முடியாத ஒரு பெண்ணை ஒரு சாமானியன் அடைவதா, எனவெண்ணி, ஒரு பொய் கொலையில் சுந்தர மேனியாளை சிக்க வைத்து அவளை கழுவிலேற்ற நாள் குறித்து பறை அறிவிக்கிறான்! ஊரே அதிர்கிறது!

கழுவிலேற்றும் நாளில், எதிர்பாராத விதமாக, பேரரசன் கிருஷ்ண தேவராயர், தன் சைன்யத்தோடு பாகூர் வழியே செல்கிறார். அவர் வரும் நாளன்று, அபசகுனமாக கழுவிலேற்றலாகாது, என, அந்த தண்டனையை மல்லமராஜு, தள்ளிப் போடுகிறான்; அரசனை எதிர்கொண்டழைக்கிறான். எல்லா உபசரிப்புகளும் நடைபெற்றபின், உள்ளூர் கவிஞர் குப்புசாமி கவி பாட அழைக்கப் படுகிறார். அவரோ, மன்னனை பற்றி பாட மறுக்கிறார். சினம் கொண்ட மாமன்னன் காரணம் கேட்கிறான். அதற்குக் கவிஞர், மல்லமராஜுவின் கொடுமைகளை எங்கே சபையில் கூறினால், பின்னர் மன்னன் சென்ற பின் அவன் எல்லா மக்களையும் சித்ரவதை செய்வான் எனப் பயப்படுவதாக அறிவிக்கிரார்! மதிமந்திரி ராயர் அப்பாஜி, அதற்கு சம்மதம் அளித்து, மாலையில் கவிஞரும், மன்னரும் தனியே சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அச்சந்திப்பில், மல்லமராஜுவின் அக்கிரம காவியங்கள் அரங்கேறுகின்றன! சாட்சியாக அழுதபடி கை கட்டி எதிரே நிற்கும் விவநேசன், மற்றும் கைதியாய் சிறையில் வாடும் சுந்தர மேனியாள்!

உண்மையறிந்த மன்னன், மறுநால், அந்த பெண்ணை விடுவித்து சபையில் வர ஏற்பாடு செய்கிறான். தைரியமாக தனை எதிர்நோக்கி நிற்கும் பெண்ணைப் பார்த்ததும் மன்னனுக்கு தலைநகரிலுள்ள தனது பெண்ணின் நினைவும், துணிவும் ஏனோ, மனதில் தோன்றிவிடுகின்றன! சுந்தரமேனியாளுக்கு தவறுக்குப் பரிகாரமாக என்ன வேண்டுமானாலும் தருவதாக வாக்களிக்கிறான். கொடுங்கோல் அழிய வேண்டுமென்றும், தனது காதல் கல்யாணமாக நிறைவேற வேண்டுமென்றும் கேட்கிறாள்; அதோடு நின்று விடாமல், மாமன்னன் நீதி என்றென்றும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் ஒரு வினோத தண்டனையை மல்லமராஜுவுக்கு பெற்றுத்தருகிறாள், சுந்தரமேனியாள்!

என்ன தவறு? என்ன தண்டனை?

தவறான தீர்ப்பு சொன்னதற்காக, அந்த தண்டனையை, தீர்ப்பு சொன்னவனே அனுபவிக்க வேண்டும்! அதாவது, மல்லமராஜு, கழுவிலேற்றப்பட வேண்டும்!!

தண்டனை நிறைவேறுகிறது; காதலும் நிறைவேறுகிறது! புலவனும் மாமன்னனை போற்றி, பாடல்கள் பாடுவதாக முடிகிறது கதை! இது எப்படியிருக்கு!

இது மாதிரியான தீர்ப்பு தந்தால், நிறைய ஆட்சியாளர்கள், நீதிபதிகள் இன்று சிறையில்தான் வாட வேண்டும், தூக்கு மேடையும் ஏற வேண்டும்! நடக்குமா? இல்லை இப்படி சட்டம் வந்தால், பொய் வழுக்கு போடும் காவலர்களும், வக்கீல்களும், வாய்தா வாங்கியே மக்களை ஏமாற்றும் வக்கீல்களும், காசுக்கு நீதியை விலை பேசும் நீதிபதிகளும் காணாமல் போவார்கள்! ஹ¥ம்ம்ம்ம். பெருமூச்சு விட்டு என்ன பலன்?

Maraboor J Chandrasekaran said...

17ஆம் தேதி செய்தி : ஆர்.பி.தியாகி எனும் காவல் மேலதிகாரி, 1987, கைதியை சித்திரவதை செய்து கொன்றது நிரூபணம் ஆனதால், அவருக்கு மரண தண்டனை அளிக்க தில்லி உயர்நீதி மன்றம் ஆணையிட்டது. சட்டம் இன்னும் உறங்காமலிருக்கிறது என்பதற்கு உதாரணம், போன வாரத்தின் இந்த தீர்ப்பு! நான் முன்னே குறிப்பிட்ட கோவி. மணிசேகரனின் கதை ஞாபகம் வருகிறது அல்லவா?