09 November 2006

ரத்தத்தின் ரத்தமே!

ஒரு வெள்ளிக்கிழமை மாலை எனக்கு 0+ve ரத்தம் வேண்டுமென கைதொலைப்பேசி செய்தி வந்திருந்தது. வழக்கமாக ரத்ததானத்திற்கு நண்பர்களிடையே செய்தி அனுப்பி நாமும் ரத்ததானம் செய்யும் சுகமே அலாதி. வரும் திங்கள் காலை 8 மணிக்கு வருமாறும், பயனர்(ஒரு சிறுவன்), தொடர்புகொள்ள அவனது தந்தை பெயர் போன்ற அத்தியாவசியமான தகவல்கள் தரப்பட்டிருந்தது. வழக்கமாக எனக்கு வரும் அழைப்புகளில், A+ve, AB-, போன்றவையே அதிகம் வரும். ஓ பாஸிடிவ் என்பதை நான் நகைச்சுவையாக,"நாம ஓப்ளஸ் பசங்க (hopeless)! ஒரு பய கூட நம்ம ரத்தத்தை கேக்க மாட்டேங்கறானே" என்பதுண்டு! செய்தியறிந்ததுமே நான் அந்த தந்தைக்கு போன் போட்டு, "சார், .. நான் கட்டாயம் வரேன்" என ஊர்ஜிதம் செய்தேன்.
திங்கள் கிழமை விரைவாகவே சென்னை க்ரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே விவரத்தை சொன்னதும், ரத்த வங்கியில் ஒரு fபாரத்தை நிரப்பச் சொன்னார்கள். செய்தேன். ஆர்வமாக, பையன் பெயரைக் குறிப்பிட்டு, எப்படி இருக்கிறான்? என கேட்ட எனக்கு அதிர்ச்சி! ஆம்! முதல் நாள் இரவே அந்த சிறுவன் நோய் முற்றி போய் (என்ன நோய் என்பதா இப்போது முக்கியம்? மேலே படிக்கவும்...) இறந்துவிட்டான் என்றனர்! எனினும் நிரப்பிய fபாரம் நிரப்பியதுதான். நான் வங்கியில் சேர்த்திட ரத்தம் தருகிறேன் எனக் கூறிய என்னை அதிசயமாகப் பார்த்தாள் நர்ஸ்.

ரத்தம் குடுக்கவேண்டும் என்பதும், 4 மாதத்திற்கு அல்லது கொஞ்சம் நிதானமாக 6 மாதத்திற்கு, வியாதி, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றதனால் பாதிக்கப்படாமலும், எந்த மருந்துகளும் அருந்தாதவரும், மது, புகை பழக்கம் இல்லாதவராயும் இருப்பவரே, ரத்தம் தர தகுதியானவர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே நாம் fபாரத்தில் எழுதி உறுதி செய்ய வேண்டும். சரி, ஆனால்....

எங்குமே இல்லாத ஒரு புதிய விநோத சட்டத்தை அப்போலோ இங்கு நடைமுறை படுத்தியுள்ளது!கைகளில், கால்களில் உறை அணிந்து, எடை மிஷினின் மேல் நின்ற என்னைப் பார்த்து," சார், நீங்க ரத்தம் தர முடியாது", என்றாள் நர்ஸ். "எதுக்கு?" மிக அடிபட்ட மனதுடன் கேட்டேன். நீங்க 49.66 கிலோதான் சார் வெயிட். குறைஞ்சது 50 கிலோவாவது இருக்கணும்!" என்றாள்.
"அட, 0.340 கிராம்ல நான் குறைஞ்சுபோயிட்டா, ரத்தம் தரக்கூடாதா? சட்டப்படி, 45 கிலோக்கு மேலே இருக்குற யாரும் ரத்தம் தரலாமே?"
"ரூல்ஸ் பேசாதீங்க சார். இங்க இதுதான் ரூல்ஸ். உங்க ரத்த செல்கள் (platelets) செறிவா இருக்காது. அதான்," என்றாள் அடுத்த படியாக!
கணக்கற்ற முறை ரத்தம் தந்தவன் நான். கல்லூரி நாட்களில், 45 கிலோ வெயிட் கொஞ்சம் குறைந்தாலும்,பேயாய் தின்று, அடுத்த முறை N.S.S. காரர்கள் ரத்ததானத்தில் உதாசீனப்படுத்தாமல் பார்த்துக்கொண்டவன், அதிலும் அறிவியல் படித்தவன். செல்லின் செரிவு பற்றி ஒரு கிளிப்பிள்ளை நர்ஸ் எனக்கு பாடம் எடுக்கிறாள்! கஷ்டகாலம்! எனக்கு இந்த மருத்துவமனையின் நிராகரிப்பு மிகுந்த மனவேதனை அளித்தது!

மேலே போய் அங்கிருந்த வாயிற்காப்போன் போல் அங்கங்கு நிற்கும் மக்கள் தொடர்பு அதிகாரிகளை கேட்டால், "சாரி" என கை விரித்தார்கள்.

மனம் நொந்து வரும் வழியில், ஜீவன் ரத்த வங்கி வந்தது. ஆத்திரத்துடன் அங்கே போய், "நான் ஓப்ளஸ்.. சாரி, ஓ பாசிடிவ், தானம் செய்யலாமா?" என்றேன். வழக்கம் போல் fபாரம் நிரப்புதல், எடை பார்த்தல் படலங்கள் நடந்தேறின. நான் மெதுவாக, "நான் (அங்கிருந்த எடை மிஷின் படி கம்மி!) 49 கிலோதான இருக்கேன்?" என்றேன்.

அங்கிருந்தவர், பட்டென்று, "ஆனா என்ன சார்? தானம் செய்ய மனசு இருக்கே? சீக்கு இல்லாம இருக்கீங்கல்ல? 45 கிலோ இருந்தாலே தரலாம் சார்," என்று என் மனதில் பால் வார்த்து, ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டாள்(சாரி... தானமாக எடுத்துக்கொண்டாள்). அப்போலோ ஆத்திரம் ஜீவனில் தணிந்தது :)

இம்மாதிரியான ரத்த வங்கிகள், உருப்படியாக elisa டெஸ்ட் (எய்ட்ஸ் உள்ளதா எனப்பார்க்கும் டெஸ்ட்) செய்தால் நல்லது. உலகமிருக்கும் நிலையில் தான தரும் யாருமே கட்டாயம் சம்மதித்திருப்பார்கள். ஆனால், அப்போலோ தனக்கென ஒரு தப்பான சட்டத்தை வைத்துக்கொண்டு, தானம் தர முன் வருபவர்களை இதுபோல் நிராகரித்தால்? நியாயமா?

4 comments:

துளசி கோபால் said...

மொதல்லே உங்க நல்ல மனசுக்குப் பாராட்டு(க்)கள்.

ஏங்க இப்படி ஒல்லியா இருக்கீங்க? கொஞ்சம்
சதை போடுங்களேன். ஒரே ஒரு கிலோதானே போடச்சொல்றேன்.

எனக்கு 'அந்தநாள் ஞாபகம்' வந்துருச்சே!

'எடை ரொம்பக் குறைவு, உனக்கே ரத்தம் ஏத்தணுமு'ன்னு ஜி.ஹெச்.லே ரத்தவங்கியிலிருந்து துரத்தி அடிக்கப்பட்டவள், இன்னிக்கு 'டபுள்' (-:

சீனு said...

பெரிய ஆஸ்பத்திரிகளில் இப்படி கேட்க ஆளில்லாததால் அவர்கள் இஷ்டத்துக்கு தான் ரூல்ஸ் பேசுவார்கள்.

//இம்மாதிரியான ரத்த வங்கிகள், உருப்படியாக elisa டெஸ்ட் (எய்ட்ஸ் உள்ளதா எனப்பார்க்கும் டெஸ்ட்) செய்தால் நல்லது.//
இதெல்லாம் இப்பொழுது கட்டாயம் ஆக்கியிருக்கிறார்கள். ஒரு ஆஸ்பத்திரியில் சொன்னது: தானம் செய்வது தான் அவர்களுக்கு செலவு அதிகமாக ஆகிறது என்று. காரணம், தானம் செய்பவர்களிடம் எலிஸா டெஸ்டிற்கென்று பணம் கேட்க முடிவதில்லையாம். அந்த செலவை இரஹ்ட்த வங்கி தான் ஏற்றுக்கொள்கிறதாம்.

(அப்புறம், மறுபடியும் தமிழ்மணத்திற்கு வந்திருக்கீங்க போல இருக்கு? ஆழ்ந்த அனுதாபங்கள்).

Maraboor J Chandrasekaran said...

துளசி கோபால்! உங்களை கண்ணாத்தாளாகவே பார்க்கிறேன்! அதெப்படி, இத்தனை பதிவுகளையும் படித்து, பின்னூட்டம் இடுகிறீர்கள்?
சரி, ரத்த மேட்டருக்கு வருவோம். ஒரு கிலோ வெயிட் ஏறிட்டா போச்சு! ஆனா, அடுத்தவன் ஏத்தணும்னு சொல்லலையே? ஒரு ஆஸ்பத்திரிதானே இம்மாதிரியான விநோத சட்டத்தை வெச்சுருக்கு? இன்னிக்கி டபுளோ, சிங்கிளோ நீங்களும் ரத்த தானம் செய்பவராய் இருந்தால், என்க்கு டபுள் சந்தோஷம் தான் :)

Maraboor J Chandrasekaran said...

சீனு, வாங்க. தானம் கொடுக்கற மாட்டுப் பல்ல பிடிச்சு பார்க்கட்டும்; (elisa test). ஒரு உயிர் போறத விட, ஒரு தடுப்பு சோதனை செய்யறது நல்லதுதானே?
அது சரி..ரி..ஈ,ஈ,... அதென்ன அனுதாபங்கள்? என்னாச்சு தமிழ் மணத்துக்கு? கொஞ்சம் டச் விட்டுப்போச்சா, என்ன நடக்குதுன்னே தெரியல. புதுசா தமிழ்மணத்த வாங்கினவங்க பேருக்கு முன்னாடி ஒரு 'ங்' போட்டுகிட்டத தவிர வேற ஒண்ணும் எனக்கு தெரியல. வேற எங்க எழுதச்சொல்றீங்க? சொல்லுங்க, அங்கயும் எழுதுடுவோம்!