22 November 2006

அறிவியல்- வி.வ.போ- 3

வி.வ.போ - "விஞ்ஞானத்தை வளர்க்க போறேண்டி" - நன்றி கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்கள் பாட்டின் ஆரம்ப வரிகள்!)

சென்னை வலை பதிவாளர் சந்திப்புல இராம.கி ஐயா, "அவங்கவுங்க சுமூகத்துக்கும், வருங்கால சந்ததிக்கும் உருப்படியா ஏதும் எழுத மாட்டீங்களா? காதலும், கவிதையும், கட்டுரையும் எழுத சினிமா, அரசியல்னு அடிதடி செய்ய நிறைய பேர் வருவாங்க. நாமளும் அதைச் செய்யணுமா"னு கேட்டது நியாயமாத்தான் எனக்கு பட்டது.

முந்தி, ஆமணக்குலேர்ந்து எரிபொருள் எண்ணை எடுக்குறதப் பத்தி எழுதுனேன்.
அடுத்து ப்ளாஸ்டிக் எதுக்கு அவசியம்னும் எழுதுனேன்.

ராம.கி ஐயா சொன்ன மாதிரி பின்னூட்டங்கள் அதிகம் இதுக்கெல்லாம் வராதுன்னு தெரிஞ்சும் ஏன் எழுதுறோம்? எப்படியும் செய்திகளால், இன்னிக்கில்லைனாலும், என்னிக்காச்சும் ஒரு கிராமம், நம் தமிழன், நண்பர், வாசிப்பவர், பயன் பெற்றால், என் ஜென்மம் கடைத்தேறும்!!

இந்த கட்டுரையிலயும், எரிபொருள் எண்ணை தரும் ஒரு காயைப் பத்தி பார்ப்போம்!
வழக்கமா, நம்ம ஊர்ல பஸ் ஸ்டாண்டுல பெரிசா நிக்கிற 'புங்க மரம்" எரிபொருள் எண்ணை எடுக்க பயன்படுதுன்னா நீங்க நம்புவீங்களா? நம்பித்தான் ஆகணும், இந்த உண்மைக் கதைகளைப் படிச்சா!

பெங்களூர்ல இருக்குற மாபெரும் விஞ்ஞான ஆய்வுக் கழகம், IISc. (Indian Institute of Science)
இதுல ஆராய்ச்சி செய்யற பேராசிரியர், உடுப்பி ஸ்ரீனிவாசான்னு பேரு. காடுகளில் எப்படி விஞ்ஞானத்த வளர்க்கலாம்னு போனவருக்கு, மகாராஷ்டிர ஆந்திரா பார்டர்ல இருக்குற ஒரு கிராமத்துல, பெரிய விடிவு கெடச்சது. என்ன?

"ஏன்யா, இன்க கரண்ட் வரணும்னா, என்ன தர முடியும்? தண்ணி ஓடை, இல்ல எதாச்சும் கனிமங்கள் இப்படி ஏதாவது?"

"சோத்துக்கே லாட்டரி. நாங்க ஆதிவாசிங்க. வெளி உலகம் என்னன்னு எங்களுக்குத் தெரியாது. ராத்திரி புங்க மரக் காயி ஏண்ணைல, காடா விளக்கு எரியும். அதான் இங்க காடு முழுச்சும் நிறைய கிடைக்கும். வேற ஒண்ணும் இல்ல," என்றனர் சலிப்பாக.

'காடா வெளிக்கு இந்த எண்ணையில எரிஞ்சா, கட்டாயம், இது எரிபொருளா இருக்கும்' என்று சந்தோஷமாக பரிசோதனை செய்து பார்த்தபோது, அவர் நினச்சது சரி! அந்த எரிபொருளால, ஒரு ட்ராக்டரே ஓடுச்சு!

சலிப்பைக் களிப்பாக மாற்றியது, புரொபஸர் உடுப்பி ஸ்ரீனிவாசா, அவரது உதவியாளர்கள், நயீம் மற்றும் குழுவினரின் அடாத முயற்சியே! அந்த ஆதிவாசிங்கள்ல, கொஞ்ச பேரை, கர்நாடகாவில இருக்குற ககெனஹல்லி எனும் ஊருக்கு அழைச்சுகிட்டு போயி, அவங்க ஏற்பாடு செஞ்ச "மாதிரி ப்ராஜக்டை"க் காண்பிச்சாரு.

அடுத்த தடவை, உலக வங்கி அதிகாரி இம்மானுவேல் டிசில்வா மற்றும் அங்கிருந்த ஆதிவாசிகள் ஒருங்கிணப்பு வளர்ப்புத் திட்ட செயலாளர் நவீன் மிட்டல் (இவரப் பற்றி இங்கு குறிப்பிட்டே ஆகணும்! நவீன், இந்தியாவின் உயரிய கல்விக்கூடங்களில் ஒன்றான I.I.T யில் தங்க மெடல் வாங்கியவர்! வாங்கின கையோடு அமெரிக்காவுக்கு கம்பி நீட்டாம, நம்ம மக்களுக்கு என்ன செய்யணும்னு, யோசிச்சு, I.A.S படிச்சு, கலெக்டராகி, ஆதிவாசிங்க நலத் திட்டசெயலாளரா விரும்பி வந்தவரு!) ஆகியோரோட, உட்னூர்ங்கிற இடம் வரையிலும் வண்டில வந்து, அதுக்கப்புறம், நயீம் சொல்ற மாதிரி," 30 கிலோமீட்டர் ரோடுங்கிற பேருல, போட்டிருக்கிற கூழாங்கல்லு பாதைதான் எங்களுக்கு மேலே போறதுக்கு வழி! (அட, ஆதிவாசிங்க இருக்குற சால்பார்ட்டி கிராமத்துக்கு!). முடிவேயில்லாம போயிகிட்டிருந்துச்சு.."
அப்படி போனவங்க, மண்டை காஞ்சு போயி, ஒரு வழியா மேல்மட்டத்தை அடைஞ்சு, தலைய நிமிர்ந்தா, அவங்களுக்கு, ஒரு அதிசயம் காத்திருந்துச்சு! ஆமாம்! எங்க பார்த்தாலும், புங்க மரக் கன்னுங்களை நட்டுவெச்சு, வளர்த்துருந்தாங்க அந்த ஆதிவாசிங்க! காத்துல ஆடுற மரக்கன்னுங்களைப் பார்த்து புரபஸருக்கு, சந்தோஷம் தலை கால் புரியல!

2001ல, அப்படியே வளார்ந்த மரங்களோட காய்களை ஆட்டி எண்ணை எடுத்து, ஒரு புது 7.5 Kva கிரிலோஸ்கர் மோட்டர்ல விட்டு, அங்கிருக்கிற குடிசைங்களுக்கெல்லாம் வயரிங் பண்ணி, பல்பு மாட்டி,(சுமார் 5,00,000 செலவு) விளக்கு எறியச் செய்தார்,புரபஸர் ஸ்ரீநிவாசா! அந்த செய்தி, காட்டுத் தீ போல பரவி, இப்ப, கிட்டத்தட்ட ஆந்திராவுல சித்தூர், விஜயநகரம், விசாகபட்டிணம், ப்ரகாசம் ஜில்லா, ஸ்ரீகாகுளம் போன்ற எல்லா இடங்களிலுள்ள கிராமங்களுக்கும், கர்நாடகாவிலுள்ள பிஜாபூர், பெல்லாரி, சித்திரதுர்கா மாவட்டங்கள்ல இருக்கிற கிராமங்கள் தவிர, மகாராஷ்டிரத்திலுள்ள இந்த சால்பார்டி கிராமம் தவிர, ஏனைய ஆதிவாசிகள் குடியிருக்கும் மலைகள்லயும், அக்கம்பக்கத்து ஊர்கள்லயும் வேகமா இந்த திட்டம் பரவி,புரட்சி பண்ணிகிட்டிருக்கு! கர்நாடகாவுல ஒரு கிராமத்துக்கு 'பவர்குடா' ன்னே பேரு வெச்சுட்டாங்கன்னா, பார்த்துக்குங்க! (தமிழ்ல ஆரம்பிச்சா, கரண்ட்பட்டின்னு வெச்சா எப்படியிருக்கும்?)

இந்த திட்டத்துல செலவு ரொம்ப கம்மி. மாசம் ஒரு வீட்டுக்கு அஞ்சு ரூபாயும், 300 கிலோ புங்கமரக்காயும் குடுத்துடணும்! அவ்வளாவுதான், சாயந்திரம் 6 மணிலேர்ந்து ராத்திரி 10 மணி வரைக்கும் கரண்ட் கிடைக்கும்! இதனால பலருக்கு புது வேலைவாய்ப்புகள், படிப்பு கிடைச்சிருக்கு!

நிறைய பேரு, எண்ணை ஆட்டற ஆலை வெச்சு காசு சம்பாதிக்கிறாங்க. நிறைய ஆதிவாசி இளைஞர்கள் அந்த ஜெனரேட்டர், பம்ப் ரிப்பேர் செய்ய கத்துகிட்டாங்க. சிலர் அந்த புங்க மரக்காய் எண்ணை எடுத்த புண்ணாக்க இயற்கை உரமா பொடி பண்ணி காய வெச்சு, வியாபாரம் பண்றாங்க; பசங்க நிறைய பேரு ராத்திரி படிச்சு காலேஜுகள்ல காலடி எடுத்து வெச்சுருக்காங்க!

இன்னும் சில தொழிற்சாலைகள், இந்த எண்ணைய வாங்கி, அவங்களோட டீசல் பம்ப் செட்டுக்கு உபயோகிச்சுக்கறாங்க!

ரயில்வே நிர்வாகம், எங்கல்லாம் நிலங்கள் இருக்கோ, அங்கல்லாம் ஜாத்ரோபாவும்,புங்க மரங்களும் நட்டு வெச்சு, அவுங்களும் டீசல் இஞ்சின்ல இந்த இயற்கை எண்ணைய உபயோகப்படுத்த ஆரம்பிச்சுருக்காங்க!

தரிசு நில விவசாயிங்க, ஏனைய பலர் இந்த பயிர்களை (ஜாத்ரோபா, புங்க மரம்) ஊடு பயிராவோ, வயல் கரைகளிலோ நட்டு, எண்ணை வித்துக்களை வித்து [பார்றா, சிலேடையா வருது :-) ] காசு பார்க்கலாம்.

நாட்ல இருக்குற எரிபொருள் எண்ணை பற்றாக்குறையும் குறையும், விவசாயிங்களுக்கு கரண்டும் குறைஞ்ச செலவுல கிடைக்கும், நாலு காசும் புழங்கும். என்ன விஞ்ஞானத்தால் பலன் அடைஞ்ச இந்த நிஜக்கதையும் உங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்குதா?மேல தகவல் தெரிஞ்சுக்கணும்னா, தொடர்பு கொள்ள:

புரொ. உடுப்பி ஸ்ரீநிவாசா,Dept.of Mechanical EnggIndian Institute of ScienceBangalore 560012மின்னஞ்சல்: udipi@mecheng.iisc.ernet.in மற்றும் திரு.A.R.Nayeem [nayeem@mecheng.iisc.ernet.in]தொலைபேசி: 91-80-23566617,23566618,51281736மொபைல்: 9342129295

===========================================================================
more positive stories from www.goodnewsindia.com

17 November 2006

பீட்டா போட்டா, பூட்ட நீ!

பீடா போட்டா வாய் செவக்கும்கிற மாதிரி, ப்ளாக்கர் பீட்டாவுக்கு மாறினால், மூஞ்சி சிவக்கும். தெரியாத்தனமா மறிட்டேன். கடல் கணேசன் அப்பவே வார்ன் பண்ணாரு. கடலே சொல்லி கேக்காம, கவுந்துட்டேன்! :-(எப்படி html எடிட் செஞ்சாலும், பார்டர் போலிஸ் மாதிரி, "உங்கள் செய்தியோடையில் பிழை இருக்கிறது. சரி செய்யவும் அப்படீன்னோ, இல்லை, 200000 kbக்கு மேலே உள்ளது, சின்ன அயிட்டமா ஒண்ணை பதிவிட்டு atom feed ஆட்டம் காணுதா இல்லையான்னு பார்க்கச் சொல்லும்! சரி 'test' அப்படீன்னு ஒரே ஒரு வார்த்தை எழுதி அதை பதிவிட்டேன். மீண்டும் "உங்கள் செய்தியோடையில் பிழை இருக்கிறது. சரி செய்யவும் அப்படீன்னோ, இல்லை, 200000 kbக்கு மேலே ......." என்று பழைய பாட்டையே படித்தது! என் சிற்றறிவுக்கு பட்டபடி, maraboorjc ப்ளாக்கிலிருந்து நீக்கி, அவற்றை எனது மற்ற்றொரு ப்ளாக்கான "சிரிச்சுவை" யில் போட்டு வைத்திருக்கிறேன். முன்பு பின்னூட்டம் தந்த நண்பர்கள் அரைத்த மாவையே அரைக்கிறான் என்று ஏசாமல், மீண்டும் பின்னூட்டுங்கள்! பின்னி பெடலெடுக்காதீர்கள்! பீட்டா ப்ரச்னை சரியானால், தமிழன்னைக்கு (அன்னைக்) காவடி எடுப்பதாக வேண்டிக்கொண்டுள்ளேன்!

15 November 2006

இலவசம் தேன்கூடு போட்டிக்கு

தவறிய நேரம், தவிச்ச படிப்பு சோத்துக்கு லாட்டரி இலவசம்
ராத்திரி முழிப்பு ஆத்தா பழிப்பு கண்களில் வளையங்கள் இலவசம்
குப்புற படுத்து குத்துப் படம் பார்த்தா, பெண்டுவலி முதுகில் இலவசம்
கணக்கில்லாம புகை பிடிச்சா காசம், கான்சர் இலவசம்
வீட்டை மறந்தா மத்தவ கிட்ட எய்ட்ஸ் நோயும் இலவசம்
வாயில வார்த்தை தடிச்சு இருந்தா தர்ம அடிகளும் இலவசம்
எதுக்கும் அடிதடி வம்புன்னு போனா, அடுத்தவன் பகையும் இலவசம்
பொங்கப் பண்டிகை தீபாவளின்னு வேட்டிச் சட்டை இலவசம்
கட்சிக்காரன் முட்டாளாக்க டி.வி. கொடுத்தான் இலவசம்,
பாவி மனுஷா, மேலும் உன்னை சோம்பச் செய்யும் இலவசம்
எல்லாஞ் சரிதான் ஏளனம் செஞ்சா ஏமாற்றம் என்றும் இலவசம்!

இந்த இலவசங்கள் தேவையா?

எடுத்ததை நடத்தி, தடுப்பதை விடுத்தா வெற்றிப் பாதை இலவசம்
வாழற வாழ்க்கை ரசிச்சு வாழ்ந்தா நீங்கா மகிழ்ச்சி இலவசம்!

14 November 2006

குழந்தைகள் தினம்???


இன்று பேச்சளவில் குழந்தைகள் தினம் என்று கொண்டாடினாலும், fபிரோசாபாத்திலும், சிவகாசியிலும் அல்லல்படும் ஏராளமான குழந்தைகளுக்காக வருந்தி இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.

சிவகாசியில் இன்றும் குழந்தைகள் வெடிகள், மத்தாப்புகள் செய்யும் அவலம் பலருக்குத் தெரிந்திருக்கும். முறையாக லைசன்ஸ் பெறாத திருட்டி மத்தாப்புக் கம்பெனிகளே சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளம்.

ஆனால், Fபிரோசாபாத்தில் 4 வயதுமுதலே, பள்ளிப் பை தூக்கும் முன்னரே, கண்ணாடிக் கைவளையல்களுக்கு மெருகேற்ற, ஜிமிக்கி ஒட்ட, உருக்கு கண்ணாடியை அச்சில் சுற்றி வட்டமாய் ஒட்ட, இப்படி ஏராளமான வளையல்கள் செய்யும் வேலைகளுக்கு பெரும்பாலும் குழந்தைகளையே ஈடுபடுத்துகின்றனர், அங்கே வளையல் தயாரிப்பாளர்கள்! காரணம்? ஸ்ட்ரைக் செய்ய மாட்டார்கள், கவனித்து செய்வார்கள், அதிக ஊதியம் கேட்கமாட்டார்கள்! எப்படி? அவர்கள் குடும்பத்தின் வருமை காரணமாக, பெற்றோர்களும் பிள்ளைகளை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள்! சரி, அப்படி தரப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா? 100 வலையல்களில் ஜரிகை வேலை செய்தால் வெறும் 2.50 ரூபாய்தான்! பிஞ்சுக் கைகளினால் ஒருநாள் முழுதும் 100 வளையல்கள் ஒட்டினாலே பெரிது! அதேபோல், 320 வளையல்கள் நெருப்பில் காட்டி ஒட்டினால் வெறும் ஒரு ரூபாய்! அந்த வளையல்களை ஒட்ட, குழந்தைகள் அல்லாடுவது, கிரசின் விளக்குகளில்! அந்த புகையை அருகிலிருந்து சுவாசிப்பதனால், அவர்களுக்கு, ஆஸ்மா, டீ.பி. மற்றும் கண் பார்வை மங்கலாகுதல் போன்ற வியாதிகள் ஏற்படுகிறது!

இனியேனும், வளைகாப்பு, சீமந்தம், நவராத்திரி போன்ற விசேடங்களுக்கு வளையல்கள் வாங்கும் பெண்கள், அந்தப் பொருட்கள் குழந்தைத் தொழிலாளர்களால் ஆனவை இல்லை என உறுதி படுத்திக் கொண்டு வாங்குவதே உத்தமம். தங்க நகைகளுக்கு ஹால்மார்க் போல், "குழந்தைகளை ஈடுபடுத்தப்பட்ட பொருள் இல்லை" என்பதற்கு ஏதேனும் ஒரு முத்திரை அரசே கொண்டுவரலாம்.

அதேபோல் கல்யாணங்களிலும், ஊர்வலங்களிலும், விசேட நாட்களிலும் வெடி, மத்தாப்பு கொழுத்தும் போது, அங்கே ஒரு பிஞ்சுத் தளிரும் கந்தகத்தில் எரிந்து வாடுவதை மனதில் கொண்டு, அம்மாதிரி பொருட்களை வாங்கி காசை கரியாக்குவதை விட, அருகிலுள்ள குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்களுக்குச் சென்று, நம் பிள்ளைகள் மூலமே அக்குழந்தைகளுக்கும் எதேனும், புத்தாடை, இனிப்புகள் வழங்குவதை ஒரு நிரந்தரச் சடங்காகக் கொள்ளலாம்.

தகவல், புகைப்படம் ஆதாரம்: நன்றி. IBN news.

12 November 2006

நிஜ இந்தியனுக்கு... ஒரு கடிதம்!

படித்ததில் பிடித்தது - பிடித்தது என்றால் படிக்கச் சுவையாக இருந்ததென சொல்லவில்லை. என்னையே, 'பிடித்தது'! இந்த செய்தி, என்னை, என்னுள், ஒரு பொறியைப் பற்றி வைத்தது. நிஜ இந்தியராகிய எவரும் உதாசீனப்படுத்த முடியாத கருத்துக்களை ஹைதராபாத்தில் பேசுகையில் வெளியிட்டார், ஒரு மூத்த குடிமகன்,தலைவர்! பலர் படித்திருக்கலாம், பலருக்கு இதை முன்மொழிந்திருக்கலாம். அந்த தலைவர் கூறிவது போல் மின்னஞ்சல் அடையும் 100 பேரைவிட உரலி, வலைச் செய்தி மூலம் அதிகம் பேருக்கு செய்தி சொல்லுவோம் எனும் ஆசையில் இதை வலையில் பின்னுகிறேன்:-

=====================================================================================

இங்கே செய்தி தொடர்பு துறை மற்றும் பத்திரிகைகள் ஏன் தவறான செய்திகளையே வெளியிடுகின்றன?
நமது நாட்டின் பலம், சாதனைகளை பறை சாற்றிக்கொள்ள நாமே தயங்குவது ஏன்?
எத்தனை மாபெரும் தேசம் நமது தேசம்? எத்தனை சாதனைக் கதைகள் நம்மில் உருவாகியுள்ளன. அதை ஆமோதிக்க நாம் தயங்குகின்றோம். ஏன்?
பால் உற்பத்தியில், தொலைக் கண்காணிப்பு விண்கோள்கள் ஏவுதலில், நாம் உலகிலேயே முதலிடம் பெற்றுள்ளோம். கோதுமை, அரிசி பயிறிடுதலில் உலகின் இரண்டாமிடத்தை பெற்றுள்ளோம்.
டாக்டர் சுதர்சனம் என்பவரைப் பாருங்கள். ஆதிவாசி குடியிருப்புகளை தன்னிறைவு பெற்ற இடங்களாக மாற்றியுள்ளார்! இப்படி எத்தனையோ சாதனைகளுக்கு பதிலாக நமது தகவல் தொடர்புத் துறையினர், எப்போதும் சோக செய்திகள், தோல்விகள், பேரிழப்புகளை வெளியிடுவதிலேயே ஆர்வம் காட்டுகின்றனர்!

நான் ஒரு நாள் இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ் நகரில் காலை செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தேன். ஊரெங்கும் குண்டு மழை, அழுகைகள், போர் சங்குச் சப்தம். ஆனால், அப்பத்திரிகையின் முதல் பக்கத்திலோ, ஒரு யூதர் அங்கே பாலைவனத்தில், ஐந்தே வருடங்களில், சொட்டு நீர்ப்பாசனம் செய்து, பழ மரங்கள் நட்டு, சோலைவனமாக மாற்றிய கதைதான் பெரிய அளவில் பிரசுரமாகியிருந்தது! காலை எழுந்து முதன்முதலாக செய்தித்தாளைப் படிக்கும் யாரையும் அம்மாதிரியான சாதனையைச் செய்யத் தூண்டும் செய்தி அது! மற்ற குண்டு வெடிப்பு, கொலைகள், போர் செய்திகள், ஏனைய பக்கங்களில்,சிறு செய்திகளாக புதைந்து போயிருந்தது!

ஆனால், இங்கு நாம் மரணம், நோய்கள், நீவிரவாதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு என செய்திகளைப் பற்றியே அதிகம் காண்கிறோம்.

ஏன் இத்தனை பின்தங்கிய சிந்தனைகள், தவறான பார்வைகள்?

மற்றொரு கேள்வி. நாம் ஏன் வெளிநாடு, வெளிநாட்டுப்பொருட்கள் மேல் இத்தனை மோகம் கொள்கிறோம்?
நமக்கு வெளிநாட்டு டி.வி, வெளிநாட்டு சட்டை, வெளிநாட்டு தொழில்நுட்பம் வேண்டும் என ஏங்குகிறோம். இறக்குமதிப் பொருட்களில் அப்படி என்ன மோகம்?

சுயநம்பிக்கையும், சுயசார்புமே நமக்கு சுய மரியாதையைத் தரும் எனும் எண்ணத்தை நாம் ஏன் மறந்துவிட்டோம்?

நான் ஹைதராபாத்தில் சொற்பொழிவு ஆற்றியவுடன் என்னிடம் ஆட்டோகிராப் வாங்க வந்த சிறுமியிடம் கேட்டேன்."உன் வாழ்கை குறிக்கோள் என்ன?" என்று. அவள்" முன்னேறிய இந்தியாவில் வாழ வேண்டும்," என்றாள்!

அவளுக்காக, அவளைப்போன்ற வருங்கால சந்ததியருக்காக, 'முன்னேறிய இந்தியாவை' உருவாக்க வேண்டியது நமது முதல் கடமை.
நாம் இதற்காக ஒரு உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் முற்போக்கு சிந்தனையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.
என்ன என்று?

இந்தியா 'முன்னேறும்' நாடல்ல; 'முன்னேறிய' நாடு!

சரி, இன்னும் ஒரு பத்து நிமிஷங்கள் எனக்காக ஒதுக்க முடிந்தால் நல்லது. நான் மீண்டும் உத்வேகத்தோடு, உணர்ச்சியோடு சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். நிஜ இந்தியனாய் இருந்தால்,படித்தால் படியுங்கள்.

நீங்கள்...
- நமது சட்டங்கள் மிகவும் பழமையானதாக உள்ளன;
- நமது முனிசிபாலிடி, கார்ப்பரேஷன்காரர்கள் குப்பை அள்ளுவதில்லை;
- நமது தொலைபேசிகள் வேலை செய்வதில்லை என்று;
- ரயில்வே துறை ஒரு கோமாளிக் கூட்டம் என்று;
- உலகிலேயே மோசமான விமான சர்வீஸ் இங்குள்ளது என்று;
- கடிதங்கள் நேரத்தில் போவதில்லை என்று;
- நாட்டை நாய்களுக்கு ரொட்டித்துண்டு போல் கடித்துக் குதற விட்டுவிட்டோம், மிகவும் அதளபாதாளத்தில் உள்ளது...."

இப்படி எத்தனையோ ... சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள், சொல்கிறீர்கள்! என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூருக்கு செல்லுமொரு இந்தியனாக உங்களையே கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்கள் முகம், உடல், உயிர். சரியா?
நீங்கள் சிங்கப்பூர் விமான நிலையத்திலிருந்து வெளியேரும்போது, உலகிலேயே முதல் தர மன்ணில் கால் பதிப்பதை உணர்கிறீகள்!
சிங்கப்பூரில் நீங்கள் தெருக்களில் சிகரெட் முனைகளை எற்¢வதில்லை. கடைகளுக்குள்ளேயே தின்பதில்லை.
பாதாள சாலைகளை நீங்களும் பெருமையான ஒரு சாதனையாக எண்ணுகிறீர்கள்; அங்கே ஆர்சர்ட் சாலையில் (மும்பையில் மாஹிம்- பெட்டார் ரோடு போலவேயுள்ள சாலை) மாலை 5 மணியிலிருந்து 8 மணி வரை பறக்கிறீர்கள். சர்வ சாதாரணமாக கார் பார்க்கிங்கில் அதிக நேரம் செவவிட்டமைக்காக $5 சிங்கப்பூர் டாலரை கப்பம் கட்டுகிறீர்கள் (சுமார் ரூ.60) ஆனால் குறை சொல்வதில்லை! வாயைத்திறக்கிறீர்களா? இல்லை. ஏன்?

துபாயில் ரமலான் நோன்பு காலங்களில் வெளியிடங்களில் தப்பித்தவறி உணவு உண்பதில்லை. ஏன்?

லண்டனில் ஒரு தொலைபேசி நிறுவன ஊழியரிடம், "ஏன்பா, என் STD,ISD பில்லெல்லாம், வேற ஏதாச்சும் இளிச்சவயன் பில்லோட சேர்த்துடு,' எனக் கூறி அவருக்கு பணத்தை லஞ்சமாகத் 'தள்ளுவதில்லை'! ஏன்?

வாஷிங்டன் தெருக்களில் மணிக்கு 55 mph (88 Km/h) காரோட்டிவிட்டு தட்டிக் கேட்கும் போக்குவரத்து போலீஸிடம், "ஏய் நான் யார்னு தெரியுமா. ..... இன்னாரோட மகன், இந்தா இந்த நோட்ட எடுத்துகிட்டு ஓடிப்போ?'' என்று சூளுரைப்பது இல்லை. ஏன்?

ஆஸ்திரேலியாவிலோ, நியூசிலாந்திலோ தின்றுவிட்டு பேப்பரையோ, குடித்துவிட்டு இளநீர் காயையோ அப்படியே நடு ரோட்டில் எற்¢யாமல், குப்பை தொட்டியிலேயே எற்¢கிறீர்கள்! ஏன்?

ஜப்பானிலுள்ள டோக்கியோவின் வீதிகளில் வெற்றிலை குதப்பிவிட்டு 'புளிச்' எனத் துப்புவதில்லை. ஏன்?

பாஸ்டன் பல்கலைக்கழகத்தில், பரிட்சை எழுதவோ, போலி சர்டிபிகேட் வாங்கவோ, வேறு ஆளையோ, பிட்டுகளையோ நம்புவதில்லை; பயப்படுகிறீர்கள். ஏன்?

நான் அதே- 'உங்களை'ப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறேன்.

அங்கெல்லாம் சட்டத்தை மதிக்கும் நீங்கள், இந்த மன்ணை மிதித்ததும் மாறிவிடுகிறீர்கள்! பேப்பரை எறிவீர்கள், சிகரெட்டை போட்டு மிதிப்பீர்கள், அனாசாயமாக துப்புவீர்கள்! மற்ற நாட்டு சட்ட திட்டங்களை இவ்வளவு மதித்து போற்றும் நீங்கள், சொந்த நாட்டில் வேறு மாதிரி நடந்து கொள்வது ஏன்? எப்போது நம் நாட்டு சட்ட திட்டங்களையும் மதிக்க கற்றுக் கொள்ளப் போகிறீர்கள்?

மும்பையில் மிகவும் பிரபலமாக இருந்த முன்னாள் முனிசிபல் கமிஷனர், திரு.தினாய்கர், ஒரு பேட்டியில், " இந்த ஊரில் பெரிய மனிதர்கள் நாய்களை கூட்டிக்கொண்டு தெருவில் வாக்கிங் போவார்கள். அப்போது நாய் தெருவிலேயே செய்யும் அசிங்கங்களை பாராமல் இருப்பார்கள். அதே பெரிய மனிதர்கள் தான், நிர்வாகத்தைப் பற்றி," என்ன கவர்ன்மெண்ட்? கொஞ்சம்கூட ரோடையெல்லாம் சரியா வெச்சுக்க மாட்டேங்கறாங்க?," என்று குற்றப் பத்திரிகை வாசிப்பார்கள்! நீங்கள் அந்த அரசாங்கத்தினரிடம் என்ன எற்றிபார்க்கிறீர்கள்? நாய் எப்போதெல்லாம் காலை தூக்குகிறதோ, எப்போதெல்லாம் உட்கார முற்படுகிறதோ, அப்போது அங்கே ஆஜராகி ஒரு சட்டியை அடியில் ஏந்திப்பிடிக்கச் சொல்கிறீகளா?" என்று சூடாக சொன்னாராம்!

அமெரிக்காவிலும், லண்டனிலும் நாய் சொந்தக்காரர்களே, நாயின் அசிங்களை சுத்தம் செய்ய கைகளில் உறை அணிந்து, உடன் ஒரு பையையும் கொண்டு வரவேண்டுமாம்; ஜப்பானிலும் அப்படியே. பின்னர் இந்தியாவில் மட்டும் ஏன் நாம் அப்படிச் செய்வதில்லை? தினாய்கரின் கோபம் சரியே!

தேர்தலில் ஓட்டுப் போட்டதோடு நாம் நமது கடமைகளை மறந்துவிடுகிறோம். ஒன்றும் செய்யாமல், சோம்பியிருந்து, இனி எல்லாமே புதிய அரசாங்கம் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம். நமது பங்களிப்பு? - பெரிய சைபர்!

நாம் குப்பைகளை எங்கும் எறிவோம்; அர்சாங்கம் உடனே சுத்தம் செய்ய வேண்டும். நாம் ஒரு சிறிய காகிதத்தைக் கூட கீழே குனிந்து, எடுத்து, குப்பை தொட்டியில் போட மாட்டோம்.

ரயில்வே துறை, ரயில் நிலையங்களிலும், ரயில் பெட்டிகளிலும் கழிவறைகள் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்று கோபமாக சொல்லுவோம்;ஆனால் நாம் அதை சுத்தமாக வைத்திருக்க மாட்டோம்.

இந்தியன் ஏர்லைன்ஸ¤ன், ஏர் இந்தியாவும் நல்ல சுத்தமான, சுவைமிக்க உணவும், துடைத்துக்கொள்ள நல்ல நாப்கின்களையும் தரவேண்டுமென எதிர்பார்ப்போம்; ஆனால், சாப்பிட்டவுடன் அந்த தட்டு, பேப்பர் நாபிகின் போன்றவற்றை அப்படியே, ஏர்போர்ட் எனக்கூட பாராமல், எறிய நாம் தயங்கமாட்டோம்! இது அங்கு பணி புரிபவர்களுக்கும் பொருந்தும். "பொதுமக்களுக்கு சேவை செய்கிறோம்; நாம் சுத்தமாக இருக்கவேண்டும், சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்,"என அங்கிருப்பவர்களும் எண்ணுவதில்லை.

பெண் குழந்தைகள் காப்பு, வரதட்சிணைக்கொடுமை,பெண்ணுரிமை பற்றி வாய் கிழிய வெளியே பேசி விட்டு, வீட்டில் அப்படியே நேர்மாராக நடப்போம்!

அதற்கு நாம் சொல்லும் சாக்குப்போக்கு?சப்பை கட்டுதல்கள்?

நான் ஒருவன் மட்டும் என் மகனுக்காக வரதட்சிணை வாங்காமலிருந்தால் போதாது. வேறென்ன செய்ய வேண்டும்?
யார் இந்த வழக்கங்களை மாற்றுவது?

இந்த வழக்கங்களை கையாள்பவர்கள் யார், யார் மாறவேண்டும் என்றால், எல்லாரும் மாறவேண்டும்!

"என் பக்கத்து வீட்டுக்காரர், என் தெருவிலுள்ளவர்கள், என் அதிகாரிகள், மற்றைய ஊர்களில் உள்ளோர், ஏனைய மதத்தினர், ஜாதியினர், இவையெல்லாம் போக, நமது அரசாங்கம் மாற வேண்டும்," என்று சொல்வோமே தவிர "நான் என்னை, என் பழக்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்", என்று யாராவது நினைக்கிறார்களா?

இந்த சீர்திருத்தங்களையும் சமுதாய நலத் திட்டங்களையும் செய்ய நாம் முன்வராமல், வீட்டுக்குள் அடைகாக்கும் பெட்டை போல் ஒளிந்துகொண்டு, தூரத்திலிருக்கும் நாடுகளைப் பார்த்து, அங்கிருந்து நமக்காக, ஒரு மிஸ்டர்.க்ளீன் வந்து, கையிலுள்ள மந்திரக் கோலால், எதேனும் மந்திரங்கள், மாயாஜாலங்கள் செய்து, நமது நாட்டையே மாற்ற வேண்டுமென எதிர்பார்க்கிறிர்கள்!

கோழையாக ப்ரச்னைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க திராணி இல்லாமல், "இது சரியில்லை, அது சரியில்லை," எனக்கூறி, அமெரிக்காவுக்கு ஓடிப்போய் அங்கே அண்டிப்பிழைத்து, அவர்களின் வெளிச்சத்தில் குளிர் காய்ந்து, அவர்கள் புகழ் பாடுகிறீர்கள்! அங்கே நமது நாட்டைப்பற்றிய கவலையோ, பயமோ இன்றி, வாழ்கிறீர்கள்!

நியூயார்க்கில் குண்டு வெடிப்பு, பாதுகாப்பு இல்லையெனத் தெரிந்ததும், இங்கிலாந்துக்கு ஓடி, ஒளிகிறீர்கள்!

இங்கிலாந்தில் வேலையில்லாத் திண்டாட்டம் எனத் தெரிந்ததும், உடனே, துபாய்க்கான அடுத்த விமானத்தைப் பிடிக்கிறீர்கள்!

அங்கேயும் வளைகுடா நாடுகளில் போர் முரசு கேட்டவுடன், உடனே, நமது அரசாங்கம் செலவில்லாமல், நம்மை மீட்டு, நமது மண்ணில் பத்திரமாக சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; இல்லையேல் அரசாங்கத்தை வாயில் வந்தபடியெல்லாம் ஏசி, குறை கூறி குளிர்காய்கிறீர்கள்!

யாரும், இந்த முறைகளை மாற்ற முனைவதில்லை. இந்த அரசு சக்கரத்தில் பிழை சரி செய்து, எண்ணெய் ஊற்றி, ஓடவைக்க முற்படுவதில்லை!

எல்லாரும் நமது மனங்களை பணத்துக்கு ஆசைப்பட்டு அடகு வைத்துவிட்டோம்!

ஜான் கென்னடி சொன்னது போல், நாம் இந்த இந்திய நாடு மேம்பட என்ன செய்கிறோம் என்று மனம் கூர்ந்து கேட்டுக்கொள்ளுங்கள். அதை இன்றே செய்ய முற்பட்டு, நமது தேசமும், அமெரிக்காவைப் போல், ஏனைய முற்போக்கு நாடுகள் போல் உருவாக்க முயலுங்கள்.

நம்மிடம் இருந்து இந்தியா என்ன எதிர்பார்க்கிறதோ, அதை இன்றே செய்ய முற்படுங்கள். இந்த செய்தியை நீங்களும் உள்வாங்கி, உங்களைப் போல் சிந்திக்கும் நல்லுள்ளங்களுக்கும் மின்னஞ்சல் செய்யுங்கள்; வெத்து ஜோக்குகளையும், அல்ப படங்களையும், மின்னஞ்சல் செய்வதை விட இதை அதிகம் பேருக்கு அனுப்ப முயலுங்கள்! நன்றி.

டாக்டர். அப்துல் கலாம்.
ஜனாதிபதி - இந்தியக் குடியரசு

09 November 2006

ரத்தத்தின் ரத்தமே!

ஒரு வெள்ளிக்கிழமை மாலை எனக்கு 0+ve ரத்தம் வேண்டுமென கைதொலைப்பேசி செய்தி வந்திருந்தது. வழக்கமாக ரத்ததானத்திற்கு நண்பர்களிடையே செய்தி அனுப்பி நாமும் ரத்ததானம் செய்யும் சுகமே அலாதி. வரும் திங்கள் காலை 8 மணிக்கு வருமாறும், பயனர்(ஒரு சிறுவன்), தொடர்புகொள்ள அவனது தந்தை பெயர் போன்ற அத்தியாவசியமான தகவல்கள் தரப்பட்டிருந்தது. வழக்கமாக எனக்கு வரும் அழைப்புகளில், A+ve, AB-, போன்றவையே அதிகம் வரும். ஓ பாஸிடிவ் என்பதை நான் நகைச்சுவையாக,"நாம ஓப்ளஸ் பசங்க (hopeless)! ஒரு பய கூட நம்ம ரத்தத்தை கேக்க மாட்டேங்கறானே" என்பதுண்டு! செய்தியறிந்ததுமே நான் அந்த தந்தைக்கு போன் போட்டு, "சார், .. நான் கட்டாயம் வரேன்" என ஊர்ஜிதம் செய்தேன்.
திங்கள் கிழமை விரைவாகவே சென்னை க்ரீம்ஸ் ரோடில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கே விவரத்தை சொன்னதும், ரத்த வங்கியில் ஒரு fபாரத்தை நிரப்பச் சொன்னார்கள். செய்தேன். ஆர்வமாக, பையன் பெயரைக் குறிப்பிட்டு, எப்படி இருக்கிறான்? என கேட்ட எனக்கு அதிர்ச்சி! ஆம்! முதல் நாள் இரவே அந்த சிறுவன் நோய் முற்றி போய் (என்ன நோய் என்பதா இப்போது முக்கியம்? மேலே படிக்கவும்...) இறந்துவிட்டான் என்றனர்! எனினும் நிரப்பிய fபாரம் நிரப்பியதுதான். நான் வங்கியில் சேர்த்திட ரத்தம் தருகிறேன் எனக் கூறிய என்னை அதிசயமாகப் பார்த்தாள் நர்ஸ்.

ரத்தம் குடுக்கவேண்டும் என்பதும், 4 மாதத்திற்கு அல்லது கொஞ்சம் நிதானமாக 6 மாதத்திற்கு, வியாதி, சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்றதனால் பாதிக்கப்படாமலும், எந்த மருந்துகளும் அருந்தாதவரும், மது, புகை பழக்கம் இல்லாதவராயும் இருப்பவரே, ரத்தம் தர தகுதியானவர் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அதையே நாம் fபாரத்தில் எழுதி உறுதி செய்ய வேண்டும். சரி, ஆனால்....

எங்குமே இல்லாத ஒரு புதிய விநோத சட்டத்தை அப்போலோ இங்கு நடைமுறை படுத்தியுள்ளது!கைகளில், கால்களில் உறை அணிந்து, எடை மிஷினின் மேல் நின்ற என்னைப் பார்த்து," சார், நீங்க ரத்தம் தர முடியாது", என்றாள் நர்ஸ். "எதுக்கு?" மிக அடிபட்ட மனதுடன் கேட்டேன். நீங்க 49.66 கிலோதான் சார் வெயிட். குறைஞ்சது 50 கிலோவாவது இருக்கணும்!" என்றாள்.
"அட, 0.340 கிராம்ல நான் குறைஞ்சுபோயிட்டா, ரத்தம் தரக்கூடாதா? சட்டப்படி, 45 கிலோக்கு மேலே இருக்குற யாரும் ரத்தம் தரலாமே?"
"ரூல்ஸ் பேசாதீங்க சார். இங்க இதுதான் ரூல்ஸ். உங்க ரத்த செல்கள் (platelets) செறிவா இருக்காது. அதான்," என்றாள் அடுத்த படியாக!
கணக்கற்ற முறை ரத்தம் தந்தவன் நான். கல்லூரி நாட்களில், 45 கிலோ வெயிட் கொஞ்சம் குறைந்தாலும்,பேயாய் தின்று, அடுத்த முறை N.S.S. காரர்கள் ரத்ததானத்தில் உதாசீனப்படுத்தாமல் பார்த்துக்கொண்டவன், அதிலும் அறிவியல் படித்தவன். செல்லின் செரிவு பற்றி ஒரு கிளிப்பிள்ளை நர்ஸ் எனக்கு பாடம் எடுக்கிறாள்! கஷ்டகாலம்! எனக்கு இந்த மருத்துவமனையின் நிராகரிப்பு மிகுந்த மனவேதனை அளித்தது!

மேலே போய் அங்கிருந்த வாயிற்காப்போன் போல் அங்கங்கு நிற்கும் மக்கள் தொடர்பு அதிகாரிகளை கேட்டால், "சாரி" என கை விரித்தார்கள்.

மனம் நொந்து வரும் வழியில், ஜீவன் ரத்த வங்கி வந்தது. ஆத்திரத்துடன் அங்கே போய், "நான் ஓப்ளஸ்.. சாரி, ஓ பாசிடிவ், தானம் செய்யலாமா?" என்றேன். வழக்கம் போல் fபாரம் நிரப்புதல், எடை பார்த்தல் படலங்கள் நடந்தேறின. நான் மெதுவாக, "நான் (அங்கிருந்த எடை மிஷின் படி கம்மி!) 49 கிலோதான இருக்கேன்?" என்றேன்.

அங்கிருந்தவர், பட்டென்று, "ஆனா என்ன சார்? தானம் செய்ய மனசு இருக்கே? சீக்கு இல்லாம இருக்கீங்கல்ல? 45 கிலோ இருந்தாலே தரலாம் சார்," என்று என் மனதில் பால் வார்த்து, ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டாள்(சாரி... தானமாக எடுத்துக்கொண்டாள்). அப்போலோ ஆத்திரம் ஜீவனில் தணிந்தது :)

இம்மாதிரியான ரத்த வங்கிகள், உருப்படியாக elisa டெஸ்ட் (எய்ட்ஸ் உள்ளதா எனப்பார்க்கும் டெஸ்ட்) செய்தால் நல்லது. உலகமிருக்கும் நிலையில் தான தரும் யாருமே கட்டாயம் சம்மதித்திருப்பார்கள். ஆனால், அப்போலோ தனக்கென ஒரு தப்பான சட்டத்தை வைத்துக்கொண்டு, தானம் தர முன் வருபவர்களை இதுபோல் நிராகரித்தால்? நியாயமா?