06 February 2006

கல்லிலே கலை வண்ணம்!-3


அடுத்த ,கலைச் சதுரம், ருத்ர தாண்டவம்!! கல்லினை அடிக்கும், உளிக்குக் கூட உக்ரம் ஏற்பட்டாலொழிய, இத்தகைய ஒரு சிற்பத்தை வடித்திருக்க இயலாது! கோர ரூபம், ஜடை முடி குலுங்க, சகல அவயங்களும் ஆட, ஒவ்வொரு கையும், உடுக்கு, மணி, ஆயுதங்கள் ஏந்தி, ஆட, இடது பக்கத்து ஒரு கை மட்டும், கலைஞனின் தனது ஆச்சரியத்தை, சிவபெருமானின் ஒரு கையில் முத்திரையாகப் பதித்து விட்டான்! இறைவம் மிகப்பெரியவன் எனும் தத்துவத்தைக் கூட அந்த கை காட்டுவதாக அர்த்தம் கொள்ளலாம்!

சிவனின் கீழே ஒரு யானை சிரம் தாழ்ந்து தலை குனிவதைக்காட்டி, ருத்ரனின் விசுவரூபத்தை நமக்கு சிற்பி எவ்வளவு எளிமையாகக் காட்டிவிட்டார்!!
(இது கஜசம்ஹாரமூர்த்தி வடிப்பு என்பது பின்னாளில் எனக்குத் தெரிய வந்து, இந்த வரியை சேர்த்துள்ளேன். படிப்பூட்டியவர்க்கு நன்றி.)

சரி, ஓவியம் வரையும் போது, 'balancing' என்று ஒன்றை குறிப்பிட்டுச் சொல்வார்கள். ஒரு செய்தியோ, அல்லது நிறமோ மிக அதிக அளவில் வரையப் படும் போது, அது மிகையாகத் தோன்றும்! எனவே, அதை சரி செய்ய, contrast நிறங்களோ, அல்லது, வெண்மையோ, ஓவியத்தில் புகுத்தப்படும். அதே பாணியை, இங்கே, சிற்பக் கலைஞரும் பின்பற்றியுள்ளார்! ருத்ரம் கல்லில் மிகை படுவதை, அழகான நகைச்சுவையும், வாழ்வியலும் புகுத்தி, நம்மை வியக்க வைக்கிறார்!

சிவனின் இடப்பக்கம் கீழே,பாருங்கள்! குழந்தை ஒன்று, தன்னை மறந்து, சிவதாண்டவத்தைக் காணும் பெண்ணின் கைகளிலிருந்து தாவிக்குதிக்க, அதை அவசரமாக ஏந்த மற்றொரு பெண் விரைவதையும், எத்தனை அழகாக வடித்துள்ளார்? நாட்டியத்தைக் காணும் பெண்ணின் மனதில் மகிழ்ச்சி!! உக்ரன் சிவனைப் பார்த்து எப்படி சிரிக்க முடியும்? ஆம், முடியும்!! வாழ்வியல் தத்துவம் அது! ஆட்டுவித்தால் ஆடும் மனித மனநிலையை ப்ரதிபலிக்கிறது, இச்சித்திரம்! அதே போல், கோபம், துன்பம், இன்பம் போன்றவை இறைவன் அடியார்க்கு ஒன்றே எனச் சொல்லுகிற மாதிரியும் உள்ளது, இப்பதிப்பு!

இச்செய்தி balancing செய்ய போதாதே? என்ன செய்ய? கீழே பாருங்கள்! குட்டி பூதகணம் ஒன்று, வாய் கோணி, கேலி செய்கிறது! அதைப் பார்த்துச் சிரிக்காதவர்கள் இருப்பார்களோ?

கோபத்தை ப்ரதிபலிக்கும் இந்த கல்லோவியத்தை, காண்பவர் மனம் வியக்கும் வகையாக செதுக்கிய சிற்பியின் கற்பனை வளத்தை என்னேவென்பது?

4 comments:

ஞானவெட்டியான் said...

//அதே போல், கோபம், துன்பம், இன்பம் போன்றவை இறைவன் அடியார்க்கு ஒன்றே //
அப்பக்குவ நிலை கிட்டுவதுதான் எப்போ?

Maraboor J Chandrasekaran said...

அன்பர் ஞான வெட்டியான் ! எப்படி இத்தனை சீக்கிரம் கருத்து பரிமாற்றம் செய்கிறீர்கள்? வியப்புதான்!
கேள்வியை நீர் கேட்கிறீர்களா? அல்லது கல் கேட்டதாக நான் சொன்னதை ஆமோதிக்கிறீர்களா? நீங்கள் கேட்பதாக இருந்தால், என் பதில் இதோ! வெட்டியாக இராமல், ஞான வெட்டியான் ஆகும் அன்பருக்கு, இன்பமும், துன்பமும், இறைவனது செயல்பாடே என்பது விளங்கும் !
( தங்கள் புனைப் பெயரை நான் படிப்பது- ஞானத்தை வெட்டியவன் - In english dissection - சரியாக பாகங்களை தெரிந்தவன் தான் சரியான வெட்டியான் ஆக முடியும்! only a good surgeon can dissect properly!!)

Anonymous said...

good link between art and stone! I started reading one kalloviyam, and ended up finishing all the 5! Write more!

Maraboor J Chandrasekaran said...

Thanks,Ramesh. I will try my best