17 July 2006

தேன்கூடு-போட்டி - காத்தான் !

"என்னடா வாயே திறக்க மாட்டேங்கறே? நேத்து படிச்சுப் படிச்சுச் சொன்னேன்; காத்தான் கிட்ட. தலைவர் போயிட்டாரு. ராவோட ராவா, சடங்கெல்லாம் முடிச்சு, காலைல பத்து மணிக்கெல்லாம் எரிச்சரணும்னு. அதுக்கு மேலே, மினிஸ்டிரீல கொஞ்சம் வேலையிருக்கு போகணும்னேன்ல?"

" கபாலி அண்ணே, விடுங்கண்ணே; ஏதோ புதுபயலாட்டம் தெரியறான். செய்றான்ல; இதோ இப்ப ஆயிடும்!டே, தம்பி, சீக்கரம் ஆகட்டும்பா; எத்தனை கட்டைங்க வெச்ச? 8 லோடு சொன்னோம்; 7 போலத் தெரியுதே?"

"மாமா, காலைல கட்ட எறங்கறச்சே நான் பார்த்தேன்; 8 லோடு போட்டானுங்க; சரிதான்."

"பானை இருக்கா? கோடி வேட்டி, 4 வடம் ரோசாப்பூ மாலை? காத்தான் இருந்தா எல்லாம் ரெடி பண்ணீருவான்; இன்னிக்கீன்னு பார்த்து எங்கய்யா போனான்; உன்ன பார்த்தா சின்னப் பயலாத் தெரியறே! இந்த வேலைக்கெல்லாம் ரொம்ப பக்குவம், அதே சமயம் அனுபவம், வேகம் ரெண்டும் வேணும். என்னவோ போ!நான் சொல்லிகிட்டே இருக்கேன், நேரமில்ல; சீக்கிரம், சீக்கிரம்..யோவ், அய்யரே, சந்தனக் கட்டை கொண்டாந்தீங்களா?"

"இல்லண்ணா, தலைவரை வண்டிலேர்ந்து இறக்கறச்சே, நம்ம சிஷ்யப் பைய கூடவே வருவான்ல; சந்தனக் கட்டை அவன் கைல இருக்கு; கட்டாயம் கொண்டாருவான்."

பக்கத்தில் ஒருவன் ஒத்து வாசித்தான்.."எல்லாம் ரெடிண்ணே; புதுசுன்னாலும், பைய கெட்டி, எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டான்; என்ன வாயத்தான் கொஞ்சம்கூட திறக்க மாட்டேங்கிறான்!"

கீழே குனிந்த படி வேலை செய்து கொண்டிருந்த முத்துவோ, கருமமே கண்ணாயிருந்தான். கடகடவென கட்டைகள் அடுக்கப் பட்டன. சமயத்தில் சில விளாறுகள், சில்லுகள் கையில் ஏறினாலும், ரத்தம் கசிந்தாலும் பொருட்படுத்தாமல், கட்டைகள் மளமளவென மேடையேறின! சுற்றி கட்டைகள், நடுவில் நன்கு காய்ந்த விராட்டிகள், அதற்கு மேலே, சிறிய சைஸ் கட்டைகள்; இப்படி. ஒரு வழியாக அடுக்குதல் முடிந்து, தலையை நிமிர்த்தி," ரெடி" என்றான்.

செல் போனில் கட்டளைகள் பறந்தன! மணி எட்டு! அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் தலைவரின் பூத உடலும், கழகக் கண்மணிகளின் ஆர்பாட்ட ஊர்வலமும் சுடுகாட்டை அடைந்தன! தாரை, தப்பட்டை, தப்பாட்டம், ஒப்பாரி, மலையென மாலை.. இப்படி கட்சிப் பயலுகள் நன்றாகவே ஏற்பாடு செய்திருந்தனர்! எல்லாம் முடிந்து, சரியாக 9.30க்கு அடுக்கிய கட்டைகளுக்கு மேல் தலைவரின் பாடை வைக்கப் பட்டு, ஒப்பாரி, மயக்கங்கள் இத்யாதி நாடகங்களுடன், சிதைக்கு அவர் மகன் (வருங்கால தலைவர்?) தீ வைக்க, சுடுகாட்டுப் படலம் நன்கே முடிந்தது.

கும்பல் ஒட்டுமொத்தமாகக் கலைந்தவுடன், அண்ணன் கபாலி தனது பரிவாரங்களுடன், முத்துவினருகில் வந்தான்.
"என்னய்யா, காத்தான் கடைசி வரைக்கும் வரல? தலைவர்னா அவ்வளவு இளப்பமாப் போச்சா? இப்பதான்யா எதிர்கட்சி; நாளைக்கு? ம்ம்.. சரி, சரி என்ன செலவாச்சு, சொல்லு தரேன்..."

அதற்குள், பின் பக்கமாக வேலை முடிந்து பையெல்லாம் முடிந்துக் கொண்டு வந்த சாஸ்திரியின் சிஷ்யன் முத்துக்கிருஷ்ணன், அவசரமாக, கபாலி கிட்டே வந்து, "அண்ணா, இது முத்து! நம்ம ஹைஸ்கூல்ல வாத்தியார்! இவன்..ஸாரி, இவரெங்க இங்க வந்து..?"

"யோவ், இன்னாய்யா இது? உம்மாதிரி குஷால் வேல செய்ற ஆளுக்கு எதுக்குய்யா இந்த வேலைல்லாம்? என்ன ரெட்ட வேலை பார்க்கறியா? இதக் கூட விட்டு வைக்க மாட்டீங்களா? காத்தான் பொழப்பக் கெடுக்கறயா, இல்ல இங்கயும் ஷிப்டு, கமிஷன்னு வந்துருச்சா? வாத்திண்றாரு அய்யரு, நீ என்னடான்னா பொணத்த எரிக்க வரயே?"

"இப்ப நான் பேசலாமா? +2 பசங்களுக்கு ராத்திரி இலவசமா எக்ஸ்ட்ரா க்ளாஸ் எடுத்துட்டு வரப்ப, அய்யா, ரொம்ப இருமிகிட்டு இருந்தாரு. கொஞ்சம் போல மருந்து குடுத்துட்டு, சாமானெல்லாம் அடுக்க உதவி பண்ணேன்; பக்கத்துல இருந்த என்னக் கூப்பிட்டு, "யப்பா, எல்லாம் ரெடி; தலைவர காலைல வெக்க வராங்க; பத்து மணிக்குள்ள எல்லாம் ஆயிறணும்; அதனால நீ சுருக்க எந்திரிச்சு, எனக்கு உதவியா ஒரு கை கொடுத்தா, வேலை நேரத்துல முடிஞ்சுடும்," னார்!

காலைல 5 மணிக்கு எந்திரிச்சுப் பார்த்தா, அவர வீட்ல காணல; அவசரமாத் தேடி வந்தா, சாமானெல்லாம் இங்க வரிசையா அடுக்கிக் கிடக்கு; ஒரு பக்கம் இருமிகிட்டே, கட்டை அடுக்கி கிட்டு இருந்தாரு...

"ஒரு வார்த்தை ஓங்கிக் குரல் கொடுத்தா, எந்திரிச்சுருப்பேன்ல?" ன்னு கேட்டதுக்கு, "அட, நீ பகல் பூரா பசங்களோட கத்தி கத்தி லோல் படறே; அசந்து தூங்கிட்டு இருந்தே, சரி, எழுப்ப வேணாம்னு நானே, மெதுவா எல்லா வேலையையும் முடிச்சிட்டேன்," ங்கறார்!

"என்னய்யா, கொஞ்சம் இருங்க, ஒரு வா காபி போட்டு கொண்டாறேன்,"னு கிளம்பின என்ன, தடுத்து நிறுத்திடார்;
"இருப்பா, ஒரு வா தண்ணி கொடு போதும்,"னு சொல்லி என் கையால தண்ணி வாங்கிக் குடிச்சுட்டு அப்படியே என் முகத்தப் பார்த்தவர்தான்...

"போய்ட்டார்! என்ன பண்றதுன்னே தெரியல; ஒரு பக்கம் இவரு, மறு பக்கம் உங்க வேலை! சரின்னு மனசக்கல்லாக்கிகிட்டு, அடுக்கின கட்டைலயே, அவரக் கிடத்தி, அவருக்கு கொள்ளிய வெச்சு எரியூட்டிட்டு, புதுசா இந்தப் பக்கம் தலைவருக்காக கட்டைங்கள அடுக்க ஆரம்பிச்சேன், அதான் லேட்டாயிடுச்சு!"

ஓஹோ, அதான் வாத்தியாரு, காத்தான் வேலையச் செஞ்சீகளா? பார்றா, காத்தான் வீட்ல பேயிங் கஸ்ட் வேறயா? இக்கட்ல மாட்டிகிட்டு, அதான் லோல் பட்டீகளோ? உங்களுக்கு எதுக்குய்யா இந்த வேல? சரி, வரேன்; காத்தான் இப்படி திடீர்னு மண்டையப் போடுவான்னு நான் எதிர்பார்க்கலை; கொடுக்கல் கணக்கிருந்தா அவன் கிட்ட கொடுப்பேன்; வாத்யாரு, உங்ககிட்ட என்னத்த தர?"

"பரவாயில்ல கொடுங்க; நான் வாங்கிக்கிறேன்; கணக்கு கணக்குதான? இதோ செலவு எழுதி வெச்ச பேப்பர்!"
"ஏய், வாத்தி! உனக்குதுக்குய்யா குடுக்கணும்? பொணம் எரிக்க கட்டணத்த நேத்தே ஆபீசுல கட்டி ரசீது வாங்கியாச்சு; சாமான்களுக்குத்தானே; உங்கிட்ட எப்படி கொடுக்கறது? போய்யா, அடுக்கி வெச்ச கட்டைலதான் கை வெச்சன்னு பார்த்தா, இப்ப காத்தான் பணத்துலயும் கை வெக்கிறயே! வேணும்னா, அவரு யாராச்சுமிருந்தா அவங்கிட்ட கொடுக்கலாம், சொல்லு.."

"நாந்தான் அவர் பையன்; காத்தான் என் அப்பாதான்! அவர் பேரு மட்டும் 'காத்தான்' இல்ல. அவர் சொல்லும் அப்படித்தான்; அதனாலதான் நான் அவர் வாக்கைக் காப்பாத்த வேலையச் செஞ்சு முடிச்சேன். அங்க பாருங்க, இப்பதான் அவருக்கு வெச்ச நெருப்பு நல்லா பத்திகிட்டு எறியுது! இப்பதான் அவர் நெஞ்சு நல்லா வேகும்!" உடைந்து போய் அழும் வாத்தியார் முத்துவை எழுப்ப அங்கே யாருக்கும் திராணி இல்லை!

4 comments:

dondu(#11168674346665545885) said...

"வேணும்னா, அவரு யாராச்சுமிருந்தா அவங்கிட்ட கொடுக்கலாம், சொல்லு"

"வேணும்னா, அவரு மவன் யாராச்சுமிருந்தா அவங்கிட்ட கொடுக்கலாம், சொல்லு"

ஒரு வார்த்தை மிஸ் ஆகி விட்டது போல இருக்கிறதே.

நல்ல கதை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Maraboor J Chandrasekaran said...

பின்னூட்டத்துக்கு நன்றி டோண்டு ராகவன், தப்பை கண்டுபிடிச்சதுக்கு நன்றி.போட்டிவிதிப்படி, எதையும் மாற்றக் கூடாது. அவங்கள் கேட்டு வேணாம் அப்புறம் மாற்றுகிறேன்.

Anonymous said...

Good story.Very touching too.

Maraboor J Chandrasekaran said...

Thanks for your encouraging comment, Chellu.