27 January 2007

வி.வ.போ - 5(விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டீ -5)

விடாதே பிடி!

முன்னர் ஈ.கோலி எனும் பாக்டீரியா செய்யும் அழிவு வேலைகளைப் பார்த்தோம். (http://maraboorjc.blogspot.com/2007/01/4.html) இந்த கட்டுரையில், ஒரு பாக்டீரியாவின் ஆக்க வேலையை பற்றி பார்ப்போம்!


நீர் ஈரம் உள்ள இடங்களில், மிக குறைவான உணவை உட்கொண்டு, எந்த விதமான நச்சு பொருட்களையும் காற்றில் கலக்காத ஒரு முனிவர் பாக்டீரியா இந்த காலோபாக்டர் க்ரெஸன்ட்டஸ் எனும் பாக்டீரியா. இது தனது நீண்ட தண்டுபோன்ற பகுதியின் மூலம் எந்த சமதளமானாலும், அதனோடு ஒட்டிக் கொள்கிறது! அத்தண்டினுள் பாலிசாக்கரைடு எனும் சர்க்கரை ரசாயன சங்கிலிகள் அமைந்துள்ளன. இவற்றில் சில சர்க்கரை மூல சங்கிலிகள் புரத சத்து சங்கிலிகளோடு இணைந்து, ஒரு விதமான ஜவ்வை உருவாக்கியுள்ளன. அந்த ஜவ்வு மூலமே, இந்த ஜந்து சமதளங்களோடு ஒட்டிக்கொள்கின்றன. இதில் ஆச்சரிய பட என்ன இருக்கிறது என்கிறீர்களா? இருக்கிறது!


நாம் சாதாரணமாகப் பார்க்கும் வஜ்ரம், இன்ன பிற கோந்துகள் ஒரு சதுர இன்ச் பரப்பளவில் சுமார் 2 கிலோ எடையை விடுபடாமல் தான்கி நின்றாலே அதிசயம். fபெவிகாலின் ஜோரு! என்று விளம்பரம் செய்யும் fபெவிகால், அதிக பட்சமாக 5 கிலோ எடையை ப்ரிந்து விழாமல் தாங்கும். ஆனால், இந்த பாக்டீரிய ஜவ்வுன் தாங்கும் சக்தி எவ்வளவு தெரியுமா? ஒரு சதுர இன்ச்க்கு 5 டன்!(ஒரு டன் = 1000 கிலோ. இந்த பாக்டீரியாவின் ஜவ்வை பல மடங்காக பரபணு சோதனை மூலம் பன்மடங்காக்கி, உற்பத்தி செய்யும் முறையை கண்டுபிடித்தால், உலகிலேயே மிக அதிகமான பிடிப்பு சக்தி கொண்ட பசை தயார்! ப்ளூமிங்டன் மற்றும் ப்ரவுன் பல்கலைக் கழகங்களில் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.


மருத்துவ அறுவை சிகிச்சைக்கு இரு பாகங்களை ஒட்ட இயற்கையிலிருந்து தயாரித்த ஜவ்வாகவும், கட்டிடக் கலை மற்றும் பொறியியல் துறைகளில் எந்த பொருளையும் ஒட்ட இந்த ஜவ்வு ஒரு வரப்ரசாதமாக இருக்கும்!


ஆனால், ஒரே ஒரு ப்ரச்னை! எல்லாவற்றோடும் ஒட்டிக்கொள்ளும் தன்மையுடையதால், எந்த கலத்தில்( பாத்திரத்தில்) இயந்திரத்தில் இதை தயாரித்தாலும், அந்த பத்திரத்தோடு இது ஒட்டிக்கொண்டு பிரிக்கமுடியாமல் போய்விட்டால்? !!


ஆராய்ச்சி தொடர்கிறது...

24 January 2007

முராரி பாபு!


ஆன்மீக வாதிகளுக்கு, நல்லதொரு எடுத்துக் காட்டு - முராரி பாபு! தன்னை ஒரு மத குருவாகவோ, ஒரு ஆன்மீக போதகராகவோ தம்பட்டம் அடித்துக் கொள்ளாதவர்! வால்மீகி ராமாயணத்தை சுவை படக் கூறுவதில் வித்தகர். ராமர் கதையில் பல நல்ல கருத்துக்கள் உள்ளன. அதை பின்பற்ற மக்களிடையே, மனித நேயம் வளர ஆவன செய்வதுதான் என் பணி, என்கிறார் முராரி பாபு. சமீபத்தில், அவர் செய்துவரும் ஒரு மிக நல்ல பணியைப் பற்றி சொல்வதே இந்த கட்டுரையின் நோக்கம்.

தொலைதூர நாடுகளான மெக்சிகோ, ஆஸ்திரேலியாவிலிருந்து, வெதுவெதுப்பான நீரை நோக்கி இந்த சொற்பமே எஞ்சியுள்ள சுறாத்திமிங்கிலங்கள் ( எட்டு முதல் பத்து - டன் எடை இருக்கக்கூடியது), குஜராத்திலுள்ள வீரவல், போர்பந்தர், துவாரகா, பீடியா, டியு, மங்க்ரோல் கடலோரங்களில் குட்டிபோட கரை சேருவது வழக்கம்.


அப்போது மீனவர்களுக்கு நல்ல வெட்டைதான்! பல வருடங்களாக இந்த சுறா இனம் அழிந்து வருவதைத் தடுக்க எத்தனையோ சட்டங்கள் போட்டாலும், பல லட்சம் பெறுமான ஒரிரு சுறா பிடித்தால் போதும், ஒரு வருட செலவுக்கான பணம் கிடைத்துவிடும் என்பதால், அங்குள்ள 'கார்வா' எனும் மீனவ சமுதாயத்தினரை யாராலும் கட்டுப் படுத்த முடியவில்லை.


அங்கு பயணிக்கையில் இதை கேள்விப்பட்ட முராரி பாபு, உடனே, படகிலேறிச் சென்று, ஒரு பிடிபட்ட திமிங்கிலத்தை வலையை அறுத்து விடுவித்தார்! பயங்கர எதிர்ப்பு கிளம்பியது; ஆனாலும், தங்கள் குருவாயிற்றே! என்ன செய்வது என்று தெரியாத அந்த மீனவர்களை நோக்கி முராரி பாபு சொன்னது: "குழந்தை பெற்றுக் கொள்ள தாய் வீட்டுக்கு வரும் உங்கள் பெண்ணை கொல்வீர்களா? அப்படித்தானே இந்த வாயில்லா ஜீவன்களும்? இனத்தில் சுறா ஆயினும் அவை இங்கு வருகையில் தாய்மை அடைந்து வருகின்றன. யாரையும் கொல்வதில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு அந்த இனத்தையே அழித்துவிட்டால்? வருங்காலம் நம்மை ஒரு ஜீவகாருண்யமற்ற கொலைகாரர்களாகத்தான் பார்க்கும். "இந்தோ, அறுத்த வலைகளுக்கான நஷ்ட ஈடு 10,000 ஆயிரம் ரூபாய்," என்று தன் கையால் எடுத்து கொடுத்தார்!

இந்த செய்கை அம்மீனவர்களின் மனதை உலுக்கி விட்டது. இன்று கடந்த மூன்று ஆண்டுகளாக, திமிங்கிலங்கள் வேட்டை ஆடப் படுவதில்லை!

முன்பு திமிங்கிலங்களை வேட்டையாடும்போது பிடியா, மற்றும் விராவல் கடல் நீரெல்லாம், ரத்தச்சிவப்பாகக் காட்சியளிக்குமாம்! இப்போது நீரின் நிறம், மனிதரின் மனதுள் ஈரம், பாயக் காரணம், ஒரு ஆன்மீகவாதி! இதுபோல், சமுதாய நோக்கோடு எல்லா சாமியார்களும், மத போதகர்களும் இருந்தால், மனம், மதம், எல்லாவற்றுக்கும் நல்லது.

அங்குள்ள வன அதிகாரிகள், மிருக வதை தடுப்பு ஆர்வலர்கள், முன்னணிக் கம்பெனிகளான குஜராத் கெமிகல்ஸ் மற்றும் உப்பளம் அதிகம் வைத்துள்ள டாடா கெமிகல்ஸ், தற்போது நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்! "இத்தனை ஆண்டுகள் எங்களால் முடியாததை பாபா செய்துவிட்டார்!" என்கின்றனர் மகிழ்ச்சி பொங்க!

போலி பிஷப்களும், கோலாகலச் சாமியார்களும், கொலை கொள்ளையில் ஈடுபட்டும் 'பெயர்'இழப்பு ஆகாமல், இப்படி நல்ல காரியம் செய்தால், சுற்றுப்புற சூழலும் சரியாகும், மக்களும் மாறுவர்!

06 January 2007

வி.வ.போ - 4 - தலை நிமிர் தமிழா!

வி.வ.போ - 4 (விஞ்ஞானத்தை ளர்க்கப் போறேண்டீ -4)

மரபணு சோதனை செய்த பருத்தி, கடலை விதைகள், மற்றும் சிக்குன்குனியா போன்றவை நம்மை மட்டும் கிடுகிடுக்க வைக்க வில்லை! நுண்கிருமிகளான பாக்டீரியா அமெரிக்க அரசை கிடுகிடுக்க வைத்துள்ளது.

எல்லா கடைகளுக்கும் ச்பினாச் (Spinach) எனும் இலை வகைகளை விற்கும் ஒரு மாபெரும் பேரங்காடி (சூப்பர் மார்கெட்), நாட்டிலுள்ள அத்தனை இலைகளையும் திரும்பப் பெற்று, புதைத்து விட்டது! காரணம்? ஒரு ஈ! இது நம்மூர் ஈ அல்ல; ஈ.கோலி எனப்படும் எஸ்செரீசியா கோலி! இந்த பாக்டீரியக் கிருமி, உணவை உண்பவருக்கு வாந்தி, பேதி, மயக்கம், உண்டுபடுத்தி, சில சமயம் மரணத்துக்கே கொண்டு போய் விடும்! வருடத்துக்கு 60-80 பேர் இந்த கிருமி தாக்கிய உணவை உண்டு மடிகிறார்கள், இல்லை குறைந்தது 80,000 பேர் நோயுறுகிறார்கள்!
சராசரியாக இந்த கிருமியின் வீரியத்தை கண்டு பிடிக்க குறைந்த பட்சம், 24 மணி நேரமாகும். மிக அதிகமான பொருட்களை தயார் செய்யும் ஒரு உணவு தொழிற்கூடமோ, உபயோகப்படுத்தும் ஹோட்டல்களோ, எப்படி கால விரயமாகாமல், இதை கண்டு பிடிக்க முடியும்?
பத்தே நிமிடங்களில் முடியும் என செய்து காட்டியவர், ஒரு இந்தியர், தமிழர் - ராஜ் முத்தரசன்! 60 வயதே ஆன துடிப்பான விஞ்ஞானி! ட்ரெக்சல் பல்கலைக் கழகத்து வேந்தராக இருந்து, இப்போது, வேதியல் துறை பேராசிரியராக இருக்கும், ராஜ், ஒரு மிகச்சிறிய கண்ணடி ஊசியின் ஒரு முனையில் பீஜோஎலக்டிரிக் பீங்கான் டைடனேட் எனும் மின் இணைப்பையும், மறு முனையில், அந்த ஈ.கோலியின் எதிர்ப்பு கிருமிகளையும் கொண்ட சிறிய கருவியை உருவாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட உணவினுள் அதை வைத்தால் போதும்! எதிர்சக்தியை எதிர்க்க அந்த கிருமி போராடும் தன்மை அதிகமாக அதிகமாக, மின் அதிர்வும் அதிகமாகும். அதிர்வின் அளவை வைத்து, எத்தனை சதவிகிதம் அந்த ஈ.கோலி [ஈ கொல்லி என்று தமிழில் பெயர் வைக்கலாமோ? :-) ] உணவில் படிந்துள்ளது என துல்லியமாய் உடனடியாக கண்டுபிடித்துவிடமுடியும்! இதே போல் மற்றசில கிருமிகளை கண்டறியவும், ராஜ் இந்த கருவியை அமைத்துள்ளார். மிக குறைந்த செலவில், உடனடி தகவல் பெற இவர்கண்டுபிடித்த இந்த கருவிக்காக, பல பாராட்டுகளும், அமெரிக்க அரசின் மானியமும், லிவெர்சென்ஸ் எனும் பன்னாட்டு நிறுவனத்தோடு, கூட்டுறவு தொழில் முனைப்பும் ஏற்பட்டுள்ளன! மும்பை பாபா சோதனை கூடத்தினர், "மிளகாய், மிளகு போன்றவற்றினால் இந்த ஈ.கோலியின் எதிர்ப்பை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஆய்ந்து கட்டுரை வெளியிட்டுள்ளனராம்!
நான், திரு. ராஜ் முத்தரசனை பாராட்டி, அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன். கூடவே, அவரின் கல்வி, பின்னணி பற்றியும் கேட்டு வினவினேன்! அவரும், அவரது அண்ணனும், சிறு வயதில், தமிழ் மொழியில் தான் எல்லா பாடங்களையும் படித்தார்களாம்! ஆங்கில தேர்ச்சி பெற, தனியாக ஒரு வாத்தியாரை அமர்த்தினாராம், இவர் தந்தை, திரு. ராஜகண்ணனார். அந்த ஆசிரியர், ஆதி அந்த விஷயங்களான 'வாட் இஸ் யுவர் நேம், வாடிஸ் யுவர் ஏஜ்?" போன்ற விஷயங்களே சொல்லித் தந்துள்ளார். ராஜின் தந்தை, பள்ளிக்கூடமே பார்க்காமல், தானாகவே படித்து தொலை தொடர்புக் கல்வியிலேயே பி.ஏ முடித்து, பின்னர் எம்.ஏ சென்னை பிரசிடன்ஸியிலேயே முதல் மாணவராகத் தேர்ந்தவராம்! மேம்பாட்டுக்காக, குடும்ப மொத்தமும் சிங்கப்பூர் செல்ல, அங்கு, மற்றவருடன் ஒப்பிடும் போது, ஆங்கிலம் குறைவாகவே தெரிந்தததால், வெட்கி தலை குனியாமல், விடாது முயன்று, இவர், இவர் அண்ணன், பள்ளியில் முதலிடத்தில் வந்தார்கள், எனும் செய்தி இன்றைய இளைஞர்களுக்கு மிக முக்கியம்! மீண்டும் இவர் தந்தை இந்தியா வந்து, கும்பகோணம் கலைக்கல்லூரியில் தமிழ் துறை பேராசிரியராக இருந்து, சிறிது காலம் ஊட்டியிலும், பின்னர் பல ஆண்டுகள் சென்னை பிரசிடன்ஸி கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தாராம். அப்போது சென்னையிலிருந்த ராஜுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைத்துள்ளது! அதிலும் வேதியல் துறையில், முதல் மாணவராக வந்த ராஜ், ட்ரெக்சல் பல்கலைக் கழகத்திலேயே முதுநிலையும், ஆராய்ச்சியும் மேற்கொண்டு, இன்று பல அங்கீகாரம் பெற்று, பல்கலைக் கழக தலைவராக இருந்து, மீண்டும், இந்த பயோசென்ஸர் (நுண்உயிர்காட்டி) ஆராய்ச்சியை 2000 ஆண்டிலிருந்து செய்து வந்து, இப்போது வெற்றியும் பெற்றுள்ளார்! பல இந்திய மாணவருக்கு டாக்டர் பட்டத்துக்கான பரிந்துறையும், வழிகாட்டுதலும் புரிந்துள்ளார். இவர் அடிக்கடி, ஐ.ஐ.டி(IIT), பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி(IISc), பூனாவிலுள்ள என்.சி.எல்(NCL), ஹைதராபாத்திலுள்ள சி.சி.எம்.பி (CCMB) மற்றும் ஏனைய கல்வி நிலையங்களில் கலந்துரையாடல், சொற்பொழிவுகள் செய்துள்ளார்! CSIRO விஞ்ஞான துறை தலைவர், பாரத பிரதமரின் விஞ்ஞான ஆலோசகருமான டா. மால்ஷேகருக்கு பல விஞ்ஞான ரீதியான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். ஐ.ஐ.டியை சார்ந்த டா. எனாக்ஷி பட்டாசாரியா இவரது ஆராய்ச்சி கூடத்தில் இவரது ஆலோசனை பேரில் சில ஆய்வுகள் நடத்தியுள்ளார். எனவே தனது ஆராய்ச்சியின் மூலம் உலகுக்கே தமிழர் பெருமை பறைசாற்றி, அதோடு, தன்னால் இயலும்போது, நம் நாட்டினருக்கும் ஆலோசனை வழங்கி வருகிறார். இப்படி, எத்தனையோ இந்தியர்கள் மதிநுட்பத்தால் இந்தியா ஏற்கனவே ஒரு வல்லரசு ஆகிவிட்டது என்று உலகுக்கு பறை சாற்றி வருகின்றனர்!

02 January 2007

யார் மிருகம்?

காஷ்மீர் ஸ்ரீநகர் அருகேயுள்ள த்ரால் நகரத்தின் வெளிக் கிராமங்களில் ஒன்றான 'மண்டோரா' வில் சென்ற நவம்பர் மாதம் நடந்த துயர சம்பவம் இது!

காட்டிலிருந்து கரடி ஒன்று வழி தவறி ஊருக்குள் வந்துவிட்டது. வழியில் அகப்பட்ட குழந்தையையும் பிடித்துச் சென்றது! அதைக் கண்ட ஊரார், உடனே அதனை விரட்டினர். என்ன தோன்றிற்றோ தெரியவில்லை! அது குழந்தையை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டது. ஆனால், இரவு முழுதும் காத்திருந்த ஊரார், கரடி மீண்டும் உள்ளே நுழைகையில், அதனைப் பிடித்து அடித்து, எரித்துக் கொன்றுவிட்டனர்! வனவிலங்கு அதிகாரிகள் ஒரு சிலர் அங்கு போனாலும், இந்த இழிசெயலை தடுக்க முடியாமல் போனது. காரணம்? "மக்கள் கண்களில் தெரிந்த கொலை வெறி!" என்கிறார்களாம்!
வனவிலங்கு பாதுகாப்பு சட்டப்படி, கருப்புக் கரடி, அதிசய பாதுகாக்கப்படவேண்டிய விலங்கினங்களில் ஒன்று. ஆனால், இரக்கமின்றி அதை கொலை செய்துவிட்டார்கள். அதை விடக் கொடுமை, கரடி பிடிபட்ட செய்தி கேட்டு அங்கே போன தனியார் திலைகாட்சியினர்! கொல்வதை தடுக்க முற்படாமல், சாவதானமாக, அந்த அடித்துக் கொடுமை செய்யும் காட்ச்சியையும், எரித்து கொலை செய்யும் காட்சியையும், படம் பிடித்து தொலைகாட்சியில் வெளியிட்டார்கள்! இதனை நமது நாட்டிம் முதல் எதிர்கண்ணோட்ட தகவல்தளமான BBC வெளியிட்டது! பாபர் மசூதி இடிக்கப் பட்ட போதும், குஜராத் கலவரத்தின் போதும், மும்பை வெடிகுண்டு செய்தியையும், முண்டியடித்து முதலில் உலகுக்கு தெரியச் செய்தது BBC! நாம் சுதந்திரம் பெற்று எத்தனை காலமாகியும், நம்முள் உள்ள சில சில தவறான செய்திகளை வெளியிட்டு குளிர் காய்வதை கடமையாக செய்கிறது. இவர்களுக்கு இப்படி செய்திகளை திரட்டி த் தருபவர் யார்? அவர்க்ளை முதலில் இனம் கண்டு தேச துரோக குற்றத்துக்கு அவர்களை உள்ளே தள்ளலாம். தப்பே இல்லை. இதை கருத்து சுதந்திரம் என்றோ, பத்திரிகை சுதந்திரம் என்றோ சொல்லி ஒருவர் நழுவக் கூடாது. சரி, விஷயத்துக்கு வருவோம். கரடி கொலையில் காவலர் விசாரணையின் கீழ் சிலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பீகார் காடுகளில் சமீபத்தில் வெறிபிடித்த யானை பலரை கொன்று குவித்து அட்டகாசம் செய்துள்ளது. அதனை அதிகாரிகளே சுட்டு கொன்றுவிட்டனர். அது பரவாயில்லை. ஏனெனில், யானைக்கு 'மதம்' பிடித்து விட்டது. எத்தனையோ முயற்சி செய்தும், மருத்துவர்களால் அதனை கட்டுப் படுத்த முடியவில்லை! ஆனால், இங்கே? குழந்தை என்று தெரிந்தோ, அல்லது, ஆட்கள் கூச்சல் கேட்டோ, ஒரு விலங்கான கரடி கூட, குழந்தையை கீழே போட்டுச் சென்று விட்டது. ஆனால், ஆறறிவு படைத்த, பண்பட்ட மனிதர்கள், காத்திருந்து, ஒரு மிருகத்தை பிடித்து, அடித்து, எரித்தே கொன்றுவிட்டார்கள். இப்போழுது சொல்லுங்கள்? யார் மிருகம்?

19 December 2006

தோஹாவில் "தோக்கா" :சாந்தி!

சாந்தி, சாந்தி, சாந்தி: - இது வேத மந்திரத்தின் இறுதி வரிகள் என்பதைப் பற்றி நான் சொல்லவரவில்லை!

இந்த பெயரைக் கேட்டவுடன் எல்லாருக்கும் அண்மையில் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப்போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் பெற்ற நபர்தான் நினைவுக்கு வருவார். தோஹாவில் அவருக்கு 'தோக்கா' (இந்தியில் காலை வாரிவிடுதல்!) தந்துவிட்டனர்!

இன்று காலை செய்தித் தாள்களில், "தமிழக முதல்வர் அவருக்கு அறிவித்தபடியே, வதந்திகளையும் அவதூறுகளையும் புறந்தள்ளிவிட்டு, மனிதாபிமானத்தின் அடிப்படையில் 15 லட்சத்தைத் தந்தார்" என்ற செய்தியைபார்த்ததும்தான் மனதில் நிம்மதி பிறந்தது!

முதலில் சர்ச்சையைப் பற்றி:அவர் ஆணா, பெண்ணா, இல்லை 'நடுநிலையாளரா' (இந்தப் பதம்தான் சரி என்று எனக்கு பட்டது!) என்பது, இத்தனை நாட்கள் அவரை பலதரப்பட்ட மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும், சோதனைத் தேர்வு போட்டிகளிலும் ஓடச்செய்த நடுவர்களுக்கு தெரியாமலா இருக்கும்? இல்லை சக போட்டியாளருக்கும் கூட வித்தியாசம் தெரியாமலிருக்கும்? அதிசயம்தான்! சாந்தி நேற்று குறிப்பிட்டபடி, "என் மனசாட்சியின்படி நான் குற்றமற்றவள்" என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்! அப்படி மனசாட்சியை உதறிவிட்டு அவர் போட்டியில் கலந்து கொண்டிருப்பார் என்று மனம் எண்ணிப்பார்க்க மறுக்கிறது!

சரி, ஒரு வேளை அவர் 'அப்படியே' இருக்கட்டும்! அவரை கடைசிவரை அனுப்பிவைத்த அதிகாரிகள் தானே குற்றம் செய்தவர்கள்? தண்டனை என்று ஒன்றிருந்தால், அதை அவர்களுக்குத்தான் தரவேண்டும்! இனி அவர்கள் எந்த போட்டிக்கும் அதிகாரியாகவோ, நடுவராகவோ கலந்து கொள்ளக் கூடாது!அப்படி தெரிந்தே அவர்கள் சாந்தியைப் பகடை காய் ஆக்கியிருப்பார்களே ஆனால், அவர்களுக்கும் 'மாமா' வேலை செய்பவனுக்கும் அதிகம் வித்தியாசமில்லை.

சாந்தியின் நிலையை எண்ணிப் பாருங்கள்! அவர் 'அப்படியே' இருக்கட்டும்! காலை தினமும் ஏழ்மையின் முகத்தில் விழிக்கும் குடும்பம் ஒரு பக்கம்; சத்துணவோ போஷாக்கோ இல்லாத பயிற்சி ஒரு பக்கம். சந்தேகமும் மருத்துவமும் காலை வாரிவிட்ட ஏக்கம் ஒரு பக்கம்; வேலையின்மையும், ஓட்டத்துக்காக தொடரும் கல்வி ஒருபக்கம் - இப்படி பல சுமைகளை தூக்கி அவர் ஓடியது - தனது வாழ்கையின் விடியலைக் காண கடைசி மூச்சுள்ள ஒரு நோயாளிபோல், உயிரோடு 'காலில்' பிடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்!

அவர் தோற்றிருந்தால்? அவர் 'அப்படியே' இருப்பது, அப்படியே அமுங்கிபோயிருக்கும்! செய்தி வெளியே வந்திருக்காது! இந்திய செய்தியாளர்களைப் போல ஒரு "negative news mongers" ஐ நான் எங்கும் பார்த்ததில்லை! இந்த செய்தியை முதல் பக்கத்தில் போட்டு நாட்டின் மானத்தை காற்றில் பறக்கவிடும் கேவலமான வேலையை வழக்கம்போல் செவ்வனே பல பத்திரிகைகள் செய்தன! அப்துல் கலாம் அவர்கள் கூறியது போல், இராக்கில் போர் உச்சத்திலிருந்த பொதுகூட, அவர்கள் எல்லாப் பக்கங்களிலும், வெற்ற பெற்ற தொழில் அதிபர்கள், நன்கு விற்கும் பொருட்கள், நல்ல மதிப்பெண் பெற்ற குழந்தைகள், இப்படி நல்லவையையே வெளியிட்டு, கடைசி பக்கங்களில், ஒரு பத்தி செய்தியாக, போரில் காலமானவர்கள் பற்றிய தொகுப்பை வெளியிட்டார்களாம்! காய்ந்த புல்லிலும் சத்துணவை காணும் இராக்கியன் எங்கே, ஆயிரம் ஆயிரம் விருந்து வகைகள் கண் முன் இருந்தும் மலத்தை தேடி உண்ணும் இந்த மாதிரியான முதல் பக்க செய்தி வெளியீட்டாளர்கள் எங்கே?

இதில் இன்னொரு விஷயத்தை மனித உரிமைக் காரர்கள் வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும்! இம்மாதிரியான 'நடுநிலையாளர்களுக்காக' ஏன் ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு முதல் உள்ளூர் மைதானம் வரை தனியே போட்டிகள் நடத்தக் கூடாது? அவர்கள் எல்லா நாட்டிலும் 'கணிசமான' எண்ணிக்கையில் நிரம்பி உள்ளனர்! எதிலும் அங்கீகாரம் தராமல், கீழே தள்ளப்படுவதால்தான் அவர்கள் சமூகத்துக்கெதிராக பிராத்தல்கள் நடத்தவோ,பிச்சை எடுக்கவோ, ஏனைய பிற தவறான பாதையில் செல்லவோ முற்படுகின்றனர் (எல்லாரும் அல்ல; பெரும்பாலானவர்கள்). ஆண்டவனில் 'அர்த்தநரீஸ்வர தத்துவத்தில் தொடங்கி, இதிகாசங்களில் அர்ச்சுனன் 'பிரகன்நளையாக' இருந்ததுவும், 'சல்லியன்' அரவானாக தேரோட்டியதிலிருந்து, சங்க காலத்தில், (இது மார்கழி மாதமாகையால் நினைவுக்கு வந்தது) திருநாவுக்கரசர் பாடிய திருவெம்பாவையில், "..ஆணாகி, பெண்ணாகி, அலியாய் பிறங்கொளிசேர், மண்ணாகி, விண்ணாகி, அத்தனையும் வேறாகி.." என வரும் காலம் தொட்டு, இன்று பல துறைகளில் முன்னேறத் துடிக்கும் இந்த 'நடுநிலை மக்களை' முன்னேற்ற வழி செய்ய நாம் முயல்வோமாக!

05 December 2006

'கருத்து' நடத்திய கருத்தரங்கம்! விவாதம் 2ம் பாகம்

கருத்து நடத்திய கருத்தரங்கம் - 1 பார்க்க http://maraboorjc.blogspot.com/2006/12/blog-post.html மரண தண்டனை தேவையா?

நான் இந்த இடுகையை எழுதும் சில நாட்களுக்கு முன், எஸ்.வி.ராஜதுரை என்பவர், குற்றங்களுக்காக வருந்தச் செய்வதே நீதி எனும் தலைப்பில் குற்றம் புரிந்தவர்களை திருந்தச் செய்வது குறித்து தினமணி நாளிதழில் எழுதியிருந்ந்ததைக் காண நேர்ந்தது. அதற்கு பதில் ஒன்றை அரூரிலிருந்து திரு.ஸ்ரீ.மதிவாணன், என்பவர் எழுதியுள்ளார். அதன் சாராம்சத்தை கீழே தருகிறேன். இக்கட்டுரைக்கு இந்த பதிலும் மிகப்பொருந்தும். ஆனால். அவர் ஒரு இடத்தில், "நூறு அப்பாவிகள் தண்டிக்கப் பட்டாலும், ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படக்கூடாது (!!!) என எழுதியுள்ளார். அதை பத்திரிகை ஆசிரியரும், திருத்தங்கள் செய்யாமலே வெளியிட்டுள்ளார்!"நூறு குற்றவாளிகள் விடுபட்டாலும் கூட, ஒரு நிரபராதி கூட தவறாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது", என்றுதானே இருக்க வேண்டும் அந்த வரிகள்?ஸ்ரீ.மதிவாணனுக்கு அந்த நீதியும் ஏற்புடையதாக இல்லை. அவர் கூறும் காரணம்?" ..உட்கார்ந்த இடத்திலிருந்தே விரும்பியதைச் செய்யும் வசதியை ஆயுட்சிறை பயங்கரவாதிகளுக்குத் தருமேயன்றி - அவர்களை வைத்துப் பாதுகாக்கையில், அன்னாரின் சிறைவழி ரெளடியிசங்களால் சிறைக்குள்ளேயே ஆபத்துகள் வளரவும், தீய திட்டங்கள் மேலும் வலுப்பெறவும் வழிசெய்யும்; ஆயிரம் கிரண்பேடிகள் உருவெடுத்தாலும் கொடூரக் கொலையாளிகள் திருந்த வாய்ப்பே இல்லை!"" ... பயங்கரவாதிகளால் கொல்லப்படும் ஆயிரமாயிரம் ராணுவ வீரர்களுக்கு இரங்கி, ஒரு சொட்டுக் கண்ணீர் விட எந்த அறிவு ஜீவியோ, மனித உரிமைவாதியோ முன் வருவது இல்லை!""...ஜெசிகா லால், ப்ரியதர்சனி மாட்டூ, போன்ற பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப் படுகையில், எத்தகைய அவமானமும், வேதனையும், கதறலையும் அனுபவித்திருப்பர்? அது அந்த தவறைச் செய்யும் ஆணுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அந்த காலித் தனத்தை உடலிலும், உயிரிலும் தாங்கித் துடித்து, மானத்தையும் உயிரையும் ஒரு சேர, உச்சபட்ச வலியினூடே இழக்கும் பென்ணின் நிலையில் தன்னை கற்பனை செய்துகொண்டால், அங்கே, எத்தகைய மனிதாபிமானங்களுக்கும் இடமிருக்காது,".. என்று எழுதியுள்ளார்.இதைப் படித்து, போன ஞாயிற்றுக்கிழமை, கண்பார்வையற்றவர்களுக்காக பாடங்கள் படிக்கச்செல்கையில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர் இருவர், சிறுகதை தொகுப்பொன்றை படிக்கச் சொன்னார்கள்; அதில் மனித நேயத்தை மேலிட்டுக்காட்டும், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் கதியினூடே, கோவி.மணிசேகரனின் "கழுவேறிமேடு" எனும் கதையைப் படிக்க நேர்ந்தது! சரித்திர ஆசிரியரின் கதை இங்கே எங்கே வந்தது? என எண்ணி வியந்தபடி கதையை படித்தேன். அந்தக் கதையிலும் மனிதம் நிலைத்தது! நீதியும் நிலைத்தது!அந்தக் கதையின் முடிவையே இந்தக் காலத்திலும் கடை பிடித்தால், கட்டாயம் காசுவாங்கி நீதி விற்கும் அவலம் இருக்காது!கதையின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்...இன்றைய விழுப்புரம் அருகேயுள்ள வில்லியனூர் கோவிலருகே இருக்கும் பாகூர். அங்கு, விஜய நகர பேரரசுக்கு உட்பட்ட மண்டலாதிபதிகளுள் மல்லமராஜு என்பவன் ஆள்கிறான். சாமானியன், காதலந் பெயர்- வில்வநேசன்; வில்லியனூர் சிவன் கோவிலின் சுவாமி பெயர்! (அம்மனின் பெயர்- குயிலம்மை!- இந்த அழகிய பெயர்களைக் கண்டதும், அந்தக் கோவில் இன்னும் இருக்கிறதா எனக் காண மனம் விழைகிறது!). காதலி சுந்தர மேனியாள்!கதையை ஊகித்திருப்பீர்களே! பலம் கொண்ட மல்லமராஜு, கோவிலில் சுந்தர மேனியாளைக் கண்டவுடன் மயக்கம் கொள்கிறான். அவளை அடைய எல்லாம்செய்து பார்க்கிறான். ஆனால் அவள் மசிவதாயில்லை! தான் அடைய முடியாத ஒரு பெண்ணை ஒரு சாமானியன் அடைவதா, எனவெண்ணி, ஒரு பொய் கொலையில் சுந்தர மேனியாளை சிக்க வைத்து அவளை கழுவிலேற்ற நாள் குறித்து பறை அறிவிக்கிறான்! ஊரே அதிர்கிறது!கழுவிலேற்றும் நாளில், எதிர்பாராத விதமாக, பேரரசன் கிருஷ்ண தேவராயர், தன் சைன்யத்தோடு பாகூர் வழியே செல்கிறார். அவர் வரும் நாளன்று, அபசகுனமாக கழுவிலேற்றலாகாது, என, அந்த தண்டனையை மல்லமராஜு, தள்ளிப் போடுகிறான்; அரசனை எதிர்கொண்டழைக்கிறான். எல்லா உபசரிப்புகளும் நடைபெற்றபின், உள்ளூர் கவிஞர் குப்புசாமி கவி பாட அழைக்கப் படுகிறார். அவரோ, மன்னனை பற்றி பாட மறுக்கிறார். சினம் கொண்ட மாமன்னன் காரணம் கேட்கிறான். அதற்குக் கவிஞர், மல்லமராஜுவின் கொடுமைகளை எங்கே சபையில் கூறினால், பின்னர் மன்னன் சென்ற பின் அவன் எல்லா மக்களையும் சித்ரவதை செய்வான் எனப் பயப்படுவதாக அறிவிக்கிரார்! மதிமந்திரி ராயர் அப்பாஜி, அதற்கு சம்மதம் அளித்து, மாலையில் கவிஞரும், மன்னரும் தனியே சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அச்சந்திப்பில், மல்லமராஜுவின் அக்கிரம காவியங்கள் அரங்கேறுகின்றன! சாட்சியாக அழுதபடி கை கட்டி எதிரே நிற்கும் விவநேசன், மற்றும் கைதியாய் சிறையில் வாடும் சுந்தர மேனியாள்!உண்மையறிந்த மன்னன், மறுநால், அந்த பெண்ணை விடுவித்து சபையில் வர ஏற்பாடு செய்கிறான். தைரியமாக தனை எதிர்நோக்கி நிற்கும் பெண்ணைப் பார்த்ததும் மன்னனுக்கு தலைநகரிலுள்ள தனது பெண்ணின் நினைவும், துணிவும் ஏனோ, மனதில் தோன்றிவிடுகின்றன! சுந்தரமேனியாளுக்கு தவறுக்குப் பரிகாரமாக என்ன வேண்டுமானாலும் தருவதாக வாக்களிக்கிறான். கொடுங்கோல் அழிய வேண்டுமென்றும், தனது காதல் கல்யாணமாக நிறைவேற வேண்டுமென்றும் கேட்கிறாள்; அதோடு நின்று விடாமல், மாமன்னன் நீதி என்றென்றும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் ஒரு வினோத தண்டனையை மல்லமராஜுவுக்கு பெற்றுத்தருகிறாள், சுந்தரமேனியாள்! என்ன தவறு? என்ன தண்டனை?தவறான தீர்ப்பு சொன்னதற்காக, அந்த தண்டனையை, தீர்ப்பு சொன்னவனே அனுபவிக்க வேண்டும்! அதாவது, மல்லமராஜு, கழுவிலேற்றப்பட வேண்டும்!!தண்டனை நிறைவேறுகிறது; காதலும் நிறைவேறுகிறது! புலவனும் மாமன்னனை போற்றி, பாடல்கள் பாடுவதாக முடிகிறது கதை! இது எப்படியிருக்கு!இது மாதிரியான தீர்ப்பு தந்தால், நிறைய ஆட்சியாளர்கள், நீதிபதிகள் இன்று சிறையில்தான் வாட வேண்டும், தூக்கு மேடையும் ஏற வேண்டும்! நடக்குமா? இல்லை இப்படி சட்டம் வந்தால், பொய் வழுக்கு போடும் காவலர்களும், வக்கீல்களும், வாய்தா வாங்கியே மக்களை ஏமாற்றும் வக்கீல்களும், காசுக்கு நீதியை விலை பேசும் நீதிபதிகளும் காணாமல் போவார்கள்! ஹ¥ம்ம்ம்ம். பெருமூச்சு விட்டு என்ன பலன்?

01 December 2006

'கருத்து' நடத்திய கருத்தரங்கம்!

தலைப்பு: மரண தண்டனை தேவையா?
'கருத்து' இயக்கம் நடத்திய கருத்தரங்கத்துக்கு (பெட்டச்சி அரங்கம், நவம்பர் 29ஆம் தேதி,2006, மாலை 5.30 மணிக்கு) செல்லும் அழைப்பு வந்ததால், அங்கு கேட்ட சுவாரசியமான தகவல்களை இங்கே தருகிறேன். அரசியல் அல்லாத அமைப்பு எனும் முத்திரையோடு, இந்திய நிதி அமைச்சரின் மகனான கார்த்தி சிதம்பரமும், தற்போதைய தமிழக முதல்வரின் மகளுமான கனிமொழியும் ஆரம்பித்து நடத்தும் கருத்துச் சுதந்திர மேடைதான் கருத்து. இணையமும் உள்ளது ( www.karuthu.com).

நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது.

கார்த்தி சிதம்பரம் பேசுகையில், ஒரு வருட வளர்ப்பு (அவரது இல்லங்க, கருத்து அமைப்பின் வளர்ப்பு) பற்றியும், முற்றிலுமாக மரண தண்டனை என்பதே வேண்டாம், அது மனித நேயத்துக்கு ஒரு காலத்தின் பின்சரிவு எனப் பேசினார்.

அடுத்து பேசிய மனித உரிமை கழக தலைவரும், கிரிமினல் வக்கீலுமான சுரேஷ், மிகவும் நெகிழ்ச்சியான சில சம்பவங்களையும், எப்படி எந்த நீதிபதி வந்தால், எந்த வழக்கு எப்படி திசை மாற வாய்ப்புள்ளது என தெரிந்து கொண்டு, எப்படி வக்கீல்கள், இம்மாதிரியான கேஸ்களில் வாய்தா வாங்குவார்கள் என்பதையும் சொன்னார். அவற்றில் சில உதாரணங்கள்:

தப்பித் தவறி, மும்பைக்கு ஓடிப்போன பல படிக்கத்தெரியாத, ஏழைகளுள் ஒருவன் (இவை மிக முக்கியம்) ஆறுமுகம் எனும் குப்பையில் பைகள் சேர்க்கும் ஒரு தமிழ் பிழைப்பாளி. (பொறுக்கி என்றால் அர்த்தம் வேறுபடும் அபாயம் உள்ளது; எனவே, பிழைப்பாளி). அங்கு ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது, கற்பழித்து, கொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் போடப்பட்ட 10 வயது பெண்ணைப் பார்த்து அலறிவிடுகிறார். சமய சந்தர்ப்பம், பணம், படிப்பு அதோடு பாஷை புரியாமை (பாவம் தமிழ் தவிர வேறு பாஷை தெரியாமல் அங்கு பிழைக்கப் போயுள்ளார்), தவிர பத்திரிகைகள், குழந்தை, பெண்கள், பாலியல் பலாத்காரம் பற்றி கூவும் சங்கங்களின் கூச்சல்கள் ஆகியவை அவருக்கு எதிராக இருக்க, காவல் துறையும் , நீதிமன்றமும் தனது காகித வேலைகளை (கேஸ் கட்டுகள், துணைக்கு நாலு சாட்சி தகவல்கள் தொகுப்புகள், என பல விஷயங்கள்) முடித்து, தீர்ப்பு எழுதின. என்ன? ஆயுள் தண்டனை! 12 ஆண்டுகள் முடியும் தருவாயில், இப்போது, கடந்த அக்டோபர் 14ஆம் தேதி, மும்பையில் ஒரு காவலதிகாரி தற்கொலை செய்துகொண்டார்; அதற்கும் ஆறுமுகம் ஆயுள் தண்டனைக்கும் என்ன சம்பந்தம்? உள்ளது!! ஜோடித்த தகவல்களால், இன்று நிரபராதி ஆறுமுகம் தண்டனையை அனுபவித்து வருகிறான். அதற்கு காரணமான அன்றைய அதிகாரி இன்றைய DCP. தானும் உடந்தை; இத்தனை ஆண்டு காலமாக இருந்த மன உளைச்சலே இந்த தற்கொலைக்குக் காரணம்" என எழுதி வைத்துள்ளார்! தண்டனையின் காலம் இன்னும் இரண்டே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போது ஆறுமுகம் விடுதலை ஆகிவிட்டார்! அப்போது ஆறுமுகம் தமிழில் அப்பாவியாகச் சொன்னது," என்ன நம்பி ஊருல ரெண்டு ஜெனம் இருந்துச்சு; அதுங்க இப்ப இருக்காங்களா, போயிட்டாங்களான்னு கூட தெரியலயே" என்று! மேலும் வழக்கறிஞர் சுரேஷ் கேட்ட கேள்வி சிந்திக்க வைத்தது. இதே குற்றத்துக்கு நீதிபதிக்கு இரண்டு முடிவுகள் உள்ளன. ஆயுள் தண்டனை தவிர, மரண தண்டனை! இந்த ஆறுமுகத்துக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தால்? காலமும், சமுதாயமும் நம்மைச் சாடாதா? ஒரு குறிப்பிட்ட தனி மனிதரான நீதிபதியின் அன்றைய நிலை, சிந்தனை, வாத ப்ரதிவாத சாதுர்யங்கள், பணம், போன்றவையே ஜெயிக்கும்; நிஜ சட்டமும், சமுதாயமுமல்ல; அத்தகைய ஆபத்தான சூழலில், மரண தண்டனை தேவையா? எனவே இந்த மரண தண்டனையையே, இந்திய சட்டத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என வாதிட்டார்.

5600 ஆண்டுகளுக்கு முன்னரே, மரண தண்டனையைப் பற்றி கூறும் மதங்களே, அதிலும் சில விதிவிலக்குகளை வைத்துள்ளது; இரண்டாம் உலகப்போரினால் 16000000 (160 லட்சம்) மக்கள் அநியாயமாக இறந்தார்கள் என்றும், 170 நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், தகவல்கள் பரிமாறினார். எனவே, மனிதன் நிர்ணயம் செய்யும் எந்த கொலையும் (அது போராக இருந்தாலும் சரி, அல்லது நீதிபதியின் தீர்ப்பாயிருந்தாலும் சரி) மனித நேயம் எனும் சொல் முன், அநியாயமே! எனவே மரண தண்டனை முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு முத்தாய்ப்பாக, ஆப்பிரிக்க இனத்தலைவர் நெல்சன் மாண்டேலா, 27 வருடங்கள் பிறகு சிறையிலிருந்து வெளியே வருகையில் சொன்ன செய்தியைச் சொன்னார்!!

"அவர் சொன்னால், நாடே கேட்கும் நிலையிலிருந்தது! தன்னை சிறையிலிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டதற்கு, "அவர் என்ன செய்தாரோ, அதையே நானும் செய்தால் என்ன பயன்? இனத்தின் மீது வெறுப்பு வந்து கருப்பர்களை அவர் வதைக்க வைத்த துவேஷம்தான் இன்று விசுவ ரூபம் எடுத்துள்ளது. அதை ஒழிக்க, நான் அவருள் உள்ள 'மனிதத்தை' அவர் உணரச் செய்தேனானால், அதுவே அவர் மீது நான் எடுக்கும் சரியான நடவடிக்கை!" என்றாராம்! மாண்டேலாவே, ஆப்பிரிக்க சட்டதிட்டங்கள் மாற்றி எழுதியமைக்கையில், மரண தண்டனையை நீக்க வித்திட்டாராம்!

பெண் கழகப்பேச்சாளாரும், வழக்கறிஞருமான அருள்மொழி பேசுகையில், ஒரு பூனைக்கதை சொன்னார்."என் வீட்டருகில் ஒரு ரவுடிப்பூனை. எல்லா பெண்பூனைகள், அவற்றுக்கு பிறக்கும் பெண்குட்டிகள், என பாகுபாடு பாறாமல், குட்டிகள் போடச்செய்தது! சினை பூனைகள் நடக்கக் கஷ்டப்படுகையில், பல குட்டிகள் இறந்து போகையில், எனக்கு அந்த ரவுடிப் பூனை மேல் ஏகக் கோபம்! நண்பரிடம் சொல்லி, எப்படியாவது அந்த ரவுடியை கல்லால் அடித்துக் கொன்று விடுங்கள்," என்று சொன்னேன். அவர் கேட்டது, " அது மிருக சுபாவம்; யாருடனும் உடலுறவு கொள்ளும், ஊர் சுற்றும்; ஆனால் மனிதராகிய நாம், நம்மை விட பலகீனமான குறைந்த அறிவுள்ள, திரும்ப சண்டை போட முடியாத ஒரு பூனையை ஆள் வைத்துக் கொல்வதா? பின்னர், மனிதர்கள் மேம்படுவது எப்படி?" என்றாராம்!!

எனவே, ஒரு பூனைக்கே மனித நேயம் காட்டும் நாம், மனிதருள் மனிதனைக்காண கூடாதா," என்றார். மற்றொரு உதாரணத்தையும் சொன்னார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் எனும் மாணவன், "நான் கடையிலிருந்து 9V உள்ள பாட்டரிகளை சொந்த உபயோகத்திற்காக வாங்கிச் சென்றேன். ராஜீவ் காந்தியைக் கொல்லும் அளவுக்கு அந்த பாட்டரிகளை உபயோகித்து குண்டு செய்ய முடியுமா என்று எனக்கு இன்றுவரை தெரியாது, " என்றாராம், இந்த மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள குற்றவாளி!

ஆனால், மக்களிடையே கேள்வி நேரம் வருகையில், ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூற விரும்பிய அருள்மொழி, தேவையில்லாமல், பெரியார் சொன்ன, பாம்பையும்,______ ஒரு சேரப் பார்த்தால், முதலில் _____ அடி," எனும் கருத்தை நிறுத்தி நிதானமாகச் சொன்னது, அந்த சில வகுப்பினருக்கு அக்காலகட்டத்தில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது. அவர்களைப் போல்தான் வேறு ச ில சிறுபான்மையினர். எனவே, சமுதாயத்தில் அவர்கள் ஒடுக்கப் படுவதால்தான், தீவிரவாதிகள் ஆகிறார்கள். அந்த சமுதாய சீரமைப்பு செய்யாத அரசியல், பண, சட்ட மாற்றங்கள் கொண்டு வந்தால் இன்றி, இனப் ப்ரச்னை வரும்;" என்றார். ஆனால், அவரது துர்பாக்கியம், அந்த கருத்தை முழுமையாக கேட்கும் முன்னரே, ________ இழிவு படுத்தி, ___ இந்துக்கள் என்று ஏகமாகக் கூறி, வக்கிரங்களை, ஜாதிச்சண்டையைப் பற்றி ஒரு நபர் கூச்சல் செய்ய அருள்மொழி காரணமாகிவிட்டார்!

பின்னர் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர், தான் வக்கீல் இல்லை என்றாலும், தமக்கு தோன்றும் கருத்தை மக்கள் முன் வைப்பதாக பீடிகையோடு ஆரம்பித்தார்!முதலில், எதிர்கருத்துக்களை நேருக்கு நேர் பேசக்கூடிய வாய்ப்பை, கேட்கும் வாய்ப்பை இன்றைய அரசியல் சூழலில் (பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பட்டிமன்றங்கள் தவிர) மக்கள் மறந்துவிட்ட நிலையில், 'கருத்து' அதற்கான களம் அமைத்ததைப் பாராட்டினார்.

" நாய்க்கும், பூனைக்கும் கருணை காட்டும் சமுதாயம், மனிதன் என்றால் இனம், மொழி, சாதி எனப் பிரித்துப்பார்ப்பது ஏன்? அவற்றுக்கு நீதி தந்தது நமக்கு புதிதல்ல; முல்லைக்குத்தேரும், புறாவுக்குப் பதிலாக பருந்துக்கு தனது தொடையையும், இறந்த கன்றுக்கு மாற்றாக, நீதி கேட்டு வந்த பசுவுக்கு முன் தன் மகனையே தேர்காலில் கொல்லச் செய்த மன்னனும், தான் தவறு செய்தோம் என்று கேட்டதும், உயிர் நீத்த பாண்டியனையும் கொண்ட பாரம்பரியம் மிக்க நாடு நம் நாடு!"எனத் தொடங்கினார்...

இப்போது திடீரென மரண தண்டனை பற்றிய விவாதங்கள் நாடெங்கும் நடக்கக் காரணம்? அப்சல் குரு! ஏன்? யார் அப்சல்? நாடாளுமன்றத்துக்கு குண்டு வைக்க திட்டமிட்டு பிடி பட்டு, இன்று தூக்கு தண்டனையை எதிர் நோக்கியுள்ளவன்! சிறுபான்மை வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே, அரசியல் கட்சிகள் சில, ஆதாய நோக்கில் அவனைத் தூக்கிலிடுவது தவறு என அரைகூவல் விடுகின்றன!

ஆனால், அவன் அதைப் பற்றி கவலை பட்டதாகத் தெரியவில்லை. ஒரு தனியார் தொலைக் காட்சியில், அவனது தாய் பேட்டி தருகிறார்; அவனது கண்களை துடைத்து விடுகிறார், ஆனால் அந்தக் கண்களில் கண்ணீரே வரவில்லை! அவன் முகத்திலும் கவலை தெரியவேயில்லை! பின்னர், எதற்காக இந்த வேஷம்? கோஷம்? ஏன்? அன்று பாராளுமன்றத்தில் அவனது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டபோது உயிர் நீத்த 6 ராணுவ வீரர்களுக்கு மட்டும் தாயாரோ, மனைவியோ இல்லை மக்களோ இல்லையா? அவர்களை ஏன் இந்த தொலைக்காட்சிகள் மறந்து போயின? அவர்கள் படும் துயரம் என்னவோ? நாட்டுக்காக அவர்களது இல்லத்தலைவர் உயிர் நீத்து, பல எம்.பி.க்களின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கான பரிசு- அந்த கயவணை கருணையுள்ளத்தோடு, தூக்கிலிருந்து தடுப்பதா? எம்பி.க்கள் எனது கட்சி, எதிர் கட்சி என்பது முக்கியமல்ல. அவர்கள் நம் நாட்டுத் தலைவர்கள். அவர்களை மட்டும் குண்டு வைத்துத் தகர்த்திருந்தால், உலகமே, நமது பாதுகாப்பு அமைச்சகத்தைப் பார்த்து எள்ளி நகைத்திருக்குமே?
மரண தண்டனை பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். ஆனால், போராட்டம், தனி விடுதலை, இயக்கம் என்ற பெயரில், நாம் போராளிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அழைக்கும் 'கோழைகள்' பஸ் ஸ்டாண்டிலும், ரயில்களிலும், பாதயாத்திரை போகும் யாத்ரீகர் மேலும் வைத்த குண்டுகளால், தாக்குதல்களால், நமது முன்னாள் பிரதமர் உட்பட, 26 லட்சம் அப்பாவி மக்களை நமது நாடு இழக்கவில்லையா? அவர்களாது உயிர் முக்கியமில்லையா?

அப்சல் குரு தூக்கிலிடப்படவேண்டுமா, இல்லையா எனக்கேட்டு 'இந்தியா டுடே'வும் MARGம் நடத்திய வாக்கெடுப்பில், 80% மக்கள் தூக்கிலிடுவது சரியே எனக் கூறியுள்ளனர்.

அப்படியும், அரசாங்கமும், நீதிமன்றமும் தவறான தீர்ப்பளித்தாலும், அதனை மறு பரிசீலனை செய்ய மாநில ஆளுநருக்கும், நாட்டின் ஜனாதிபதிக்கும் உரிமையை இந்த சட்டம் அனுமதித்துள்ளது. எனவே, பயங்கரவாதத்தை நிறுத்த மரண தண்டனை போன்றவை அவசியமே", எனப் பேசினார்.

அது தவிர, வீர சாவர்கர் பற்றி, அதிகம் பலருக்குத் தெரியாது என்று வருத்தம் கொண்டார். லண்டனில் நமது சுதந்திர போராட்ட வீரர் ஒருவர், வெள்ளையனை சுட்டுக் கொன்றதற்கு (பெயரை நான் குறித்துக் கொள்ளவில்லை, மன்னியுங்கள்) அங்கு வசித்த இந்தியர்களே எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் போட்டனராம்! ஆங்கிலத்தில் unanimously oppose என எழுதவே, அங்கேயே அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே மனிதர் வீர சாவர்கர். உடனே, அருகிலிருந்த எதிர்ப்பாளர்கள், அவரை தாக்க முற்படவே, சாவர்கருக்கு துணையாக நின்ற வா.வே.சு. ஐயர், தனது துப்பாக்கியை எடுத்து, அவர்களை சுட முயன்றாராம். அதற்கு, சாவர்கர், "விட்டுவிடு; நாம் தயாரிக்கும் ஒவ்வொரு தோட்டாவும், ஒரு வெள்ளையனை அழிக்கவே! நமது மக்களையே சுடுவதற்கு அல்ல!" என்றாராம்! ஆனால், அன்றைய அரசாங்கம் அவருக்கு தந்த பெயர், "தீவிரவாதி" ! தன்னை கொல்ல முயன்றவனுக்கே, மன்னிப்பு அளிக்குமாறு காந்தி அடிகள் சொன்னதை அன்றைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதா? இல்லையே? நமது தலைவர் ஒருவரைக் கொன்றார் என்ற காரணத்துக்காகவே, கோட்ஸே தூக்கிலிடப்படவில்லையா? காரணம் - நமது தேசத்தின் பாதுகாப்பு, தலைவர்களின் பாதுகாப்பு. அதேபோல் தான் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்ற காரணத்தினால், சில சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், காரணம் அவர் நமது நாட்டின் தலைவர்!

ராஜீவ் வழக்கிலும் நாம் அவரைக் கொன்றவருக்கு தூக்குத்தண்டனை கொடுத்தாலும் தகும் என ஏன் நினைக்கிறோம்? கட்சிப்பாகுபாடின்றி நான் பார்க்கிறேன். அவர் நமது நாட்டுத் தலைவர்! அவருக்கு நேர்ந்தது, வேறு எவருக்கும் நேரக் கூடாது என்பதற்கு, இந்த மரண தண்டனை ஒரு பாடமாக அமையட்டும்."

"சரி, கோட்ஸேவுக்கு மன்னிப்புத் தருமாறு சொன்ன காந்தி அடிகள், பகத்சிங்குக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றுதருவதற்கு மறுத்தது ஏன்? அவர் இம்சை வழியில் போனதால் தான், மரண தண்டனையை மாற்றக் குரல் கொடுக்கவில்லை என்றார் காந்திஜி. அப்படியானால், தனக்கு சாதகமான கருத்தை சொல்பவருக்கு ஒரு நியாயம், தனது விருப்புகளுக்கு எதிராக இருந்ததாலேயே இன்னொரு நியாயம் என ஒருவர் எண்ணலாமா? ஆனால், இன்று நாடு பகத்சிங்கை தியாகியாக போற்றுகிறது! காந்திஜி செய்தது அப்படியென்றால் தப்பா? அவர் பகத்சிங்கை உயிரோடு இருக்கச் செய்திருக்கலாமே?
எனவே, நீதி என்பது இருந்தால், மரண தண்டனை இருக்கட்டும்; இல்லையென்றால், ஒரேடியாக எடுத்துவிடு. ஒருவனுக்கு ஒரு நியாயம், மற்றவனுக்கு அநியாயம் - இப்படி அதை உபயோகிக்காதே! எனினும், சுரேஷ் சொல்வது போல், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால், தவறான ஒரு தண்டனை தரப்படுமேயானால், அவர் அதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. மன்னிக்கும் அதிகாரம், சூழ்நிலைகளுக்கேற்ப, ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் உள்ளது."
"தமிழகத்தில் சில வருடங்களுக்கு ஒரு ஊரில் நடந்த சம்பவத்தை கணேசன் எடுத்துக் காட்டினார். இரவில் வங்கியைக் கொள்ளையடிக்க வந்தவர்கள், பிடிபட்டதும், அவர்களை அந்த ஊராரே, கல்லால் அடித்திக் கொன்றுவிட்டனர்! அந்த ஊரார் செய்தது கொலை குற்றமா? அரசாங்கமே, அவர்களுக்கு பாராட்டு விழா எடுத்து, அதிக சலுகைகளையும் அறிவித்ததே? எனவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்தே, குற்றம் ஆராயப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டுமே, தவிர, தண்டனையே, வேண்டாம் என்று சொல்வது, குற்றவாளிகளை ஊக்குவிப்பது போலாகிவிடும்."

"காவலர்களைக் குறை கூறிக்கொண்டே இருக்கிறோம்; நல்ல காவலர்களையும் நான் அறிவேன். சட்டப்படி குற்றம் நிரூபிக்க அவர் செய்ய வேண்டிய காகித சமாசாரங்கள் எல்லாம் தாண்டி அவன் தண்டிக்கப்படுமுன்பே, அரசியல் குறிக்கீடும், பணமும் அந்த தண்டனை வராமலே செய்துவிடும். எனவே, அவர்களுக்கு தெரிந்த ஒரே ஆயுதம், ஓரத்தில் ***க்கு ஒதுங்கச் சொல்லி, தப்பிக்கப் பார்த்தான் என்று 'என்கவுன்டர்' கொலையாகவே அதை முடித்து விடுகிறார்கள்! (சாமி பட க்ளைமாக்ஸ் நமக்குத் தெரியாதா? நாம் அதை வரவேற்கவில்லையா?)" என்று தன் பக்க நியாங்களைக் கூறி வாதிட்டார்.

முடிவுரை படிக்க வந்த கனிமொழி, " அன்றைய தீவிரவாதி இன்றைய தேசத்தலைவர்; அவர் அன்று தூக்கிலிடப்பட்டிருந்தால்? ஒரு தலைவரை நான் இழந்திருப்போம்! (இழந்தாயிற்றே? பகத்சிங்கை? வேறு யாரைக் குறிப்பிட்டார் என்பதை அவரே சொல்லட்டும்???) உலகில் எங்கும் இல்லாத மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை நாம் அறவே நீக்கவேண்டும். 'ஐயன்' வள்ளுவர் குறிப்பிட்டதாக, இல. கணேசன் ஒரு குறளைக் குறிப்பிட்டார். அதன் அர்த்தம்: நெற்பயிர்கள் நன்கு வளர வேண்டுமானால், களைகளை எடுக்கவேண்டும். அதுபோல்தான் அரசனும் முடிவு செய்யவேண்டும். அதற்கு அர்த்தம், கொல்வது அல்ல, நீக்குவது மட்டுமே!" என்றார். (அப்படீன்னா, என்ன, நாடு கடத்தச் சொல்றீங்களா? நமக்கே எதிரிங்கறப்ப, அடுத்தவன் எப்படி அவனை உள்ளே சேர்ப்பான்? நீக்குவதற்கு வெறென்ன அர்த்தம் இருக்கமுடியும்?)
இப்படியே போனால், எல்லா ஊர்களிலும் மக்களே கல்லால் அடிப்பது போன்ற தீர்ப்பை தாங்களே எடுக்கும் நிர்பந்தம் வந்தால், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும்," என எச்சரித்துவிட்டு அமர்ந்தார்.

பின்னர் வந்த பார்வையாளர்கள் கேள்வி நேரத்தில், முதலில் பேசியவர், மிக அருமையான ஒரு கண்ணோட்டத்தைத் தந்தார்.!
ஓரிரு தவறான தீர்ப்புகளால், அந்த தண்டனையையே ரத்து செய் (மரண தண்டனை), அப்படியே பார்த்தால், நல்ல நீதிகிடைக்கவில்லையா, நீதிமன்றத்தையே மூடிவிடு, காவலர்கள் கயவர்களாகிறார்களா, காவல் நிலையங்களை மூடிவிடு; மந்திரிகள் சரியில்லையா, சட்ட சபையையும், நாடாளுமன்றத்தையே மூடிவிடு!" என்றா நாம் முடிவெடுக்கிறோம்? எனவே, இந்த மாதிரியான தண்டனைகள் இருந்தால்தான், கொஞ்சமேனும் நாட்டில் தவறு செய்பவர்க்கு பயம் இருக்கும் என்றார்!

"சரி, தீர்ப்பை ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்றாலும், பணம் படைத்தவர்கள், காவல் நிலையங்களிலேயே, மீட்டிங் போடுகிறார்கள்; தொண்டர், குண்டர் வைத்துக்கொள்கிறார்கள்; மொபைல், ஏ.ஸி. என வைத்துக் கொள்கிறார்கள்; ஏன் சில சிறைச் சாலையில், குடும்பமே நடத்தியுள்ளார்கள்! எனவே, மரண தண்டனை எனும் ஒன்று தேவையே," என்றார்.

முடிவில், பார்வையாளர்கள் என்ற போர்வையில், சில சந்தர்ப்பவாதிகளும், சாதிச்சாயம் பூசி அங்கு வந்தவர்களும், அருள்மொழி குடுத்த குறிப்பைக் கொண்டு, பிற இனத்தவரை குறிப்பிட்டு பேசி, கீழ்தரமாக அடித்துக் கொள்ளத் துவங்கியதும், சரி, இனி இங்கே கருத்துப் பரிமாற்றம் தவிர வேறு சில பரிமாற்றங்களும் ஆகலாம் என யூகித்து நாம் அந்த இடத்தை விட்டு "எஸ்கேப்' ஆனோம்!

எனக்கு தோன்றிய சில அடிப்படை சந்தேகங்கள்தான் என்போன்ற சாதாரண குடிமகனுக்கு வரும்:

170 நாடுகளில் இல்லை என்று, இங்கும் எடுத்துவிடவேண்டும் என்று சுரேஷ் சொன்னார். அவர்கள் சூழ்நிலை பண்பாடு, வளர்ப்பு வேறு. அங்கே, குழந்தைகள் கைகளில் துப்பாக்கியால் சுட்ட கதை எத்தனை படித்திருக்கிறோம்? ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்வார்கள்; குடும்பம் எனும் அமைப்பே பல நாடுகளில் குறைந்து வருகிறது. எனவே, நமது நாட்டின் சூழ்நிலைக்கு எது சரியோ அதைத்தான் நாம் சட்டமாக வைக்க வேண்டும்.
பயங்கரவாதி மரணதண்டனையைப் பற்றி பயப்படுவதில்லை. அவன் மரணம் வரும் என எதிர்நோக்கிதானே, மனித குண்டாகவும், வெடி வைக்கும் ஆளாகவும் மாறுகிறான்? அவனே கவலைபடாமல்,பல்லாயிரம் அப்பாவி மக்களை கொல்ல முடிவு செய்யும் போது, பிடிபட்டால் அவனை நாம் கொல்லக் கூடாதா? நாய் வளர்ப்பு மிருகம்தான். அதன் மேல் நமக்கு கருணை வேண்டும்தான். ஆனால், வெறி பிடித்த நாயை அரசாங்கமே சுட்டுக் கொன்றுவிடுகிறதே? யானை அழகுதான்; ஆனால் மதம் பிடித்த யானை? அங்குசத்துக்கு அடங்காது போனால், மயக்க ஊசியை செலுத்தி அடக்கப் பார்ப்பார்கள்; இல்லையேல் சுட்டுக்கொன்றுவிடுவார்கள். மதம் பிடித்த (2 பொருளில்) மனிதனும், மிருகம்தானே?

இதை எண்ணும் நெஞ்சம்தான், மற்றொரு வினாவையும் எழுப்புகிறது!

"பல குற்றவாளிகள் விடுபடலாம்; ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக்கூடாது" என்கிறது சட்டம்.
எனவே இதைப் பற்றி நன்கு ஆராய்ந்து சட்டதிட்டங்களை மாற்றி எழுத வேண்டியது நமது சட்ட வல்லுநர்களே! மாற்றும் கமிட்டியே இதுவரை 4 முறை மாற்றப்பட்டு, அரசியல் காரணங்களால் சட்டதிட்டம் மாற்றம் செய்யப்படவில்லையாம்! மக்கள விழித்துக் கொள்ளுங்கள்! தவறான தகவலால் சிறை செல்லும் ஒரு அப்பாவி, சரியில்லாத ஒரு தண்டனை முறையால் தூக்கிலிடப்படலாமா? அரசாங்கத்தை விழித்தெழச் செய்ய மக்கள் முதலில் விழித்தெழுங்கள்!