08 April 2006

தெரிந்த ஊர் தெரியாத செய்தி-3




குன்றத்தூர்!!

சென்னையின் அருகேயுள்ள குன்றத்தூர் முருகன் கோயில் எல்லாரும் அறிந்ததே! ஆனால், அதன் வரலாற்றுச் சிறப்பும், அவை சீரழியும் அவலமும் நமக்கு ஒரு பேரதிர்ச்சியாக இருக்கும்.!! முருகன் கோயிலை நோக்கிச் செல்லும் பாதையில், வலது கைப்பக்கம் சேக்கிழாரின் கோவில் உள்ளது. இடப் பக்கம் அடுத்தடுத்து சிவ, விஷ்ணு ஆலயங்கள் உள்ளன!
சேக்கிழார் அவதரித்த ஸ்தலம் இது. அவரது இல்லம் கோயிலாகியுள்ளது. ஒரு காலத்தில், சைவ,வைணவ, சாக்த, கொளமார வழிபாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டிருக்க வேண்டிய இடம் குன்றத்தூர்.
கற்காலத்தில் நாகிரீகம் முளைத்துவிட்டதை குறிப்பது போல், குமரனின் கோயிலுக்கு மேற்கே பரந்து கிடக்கும் ஏரியும், அதனைச் சுற்றியுள்ள இடங்களில் கி.மு. 1000 ஆண்டு எனக் கணிக்கப் பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு தொல்பொருள் களஞ்சியமே கிடைத்துள்ளது!! குழிகளில் ஸ்வஸ்திகா அமைப்பில் தளம், கத்தி, மணிகள், பானைகள், குவளைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன.
இனி கோயில்களுக்கு வருவோம்.
எல்லாரும் அறிந்த நாகேஸ்வரர் கோவில், சேக்கிழார் பெருமானால் கட்டப்பட்டது. மலைமேலிருக்கும் குமரன் கோவிலும், திரைப்படங்களில் தோன்றியதால், நல்ல நிலையில் உள்ளது.
ஏறத்தாழ 900 ண்டுகள் முன், சோழர்கள், தெலுங்குச் சோழர்கள், விஜயநகரப்பேரரசு காலத்தில் ஆரம்பித்து, 16ம் நூற்றாண்டுவரை இக்கோயில்கள் நன்கு பேணியிருக்கக்கூடும். அதற்குக் கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. 'கந்து' என்றால் மரம். ஆதிகாலத்துமுதல், மரத்தைக் கடவுளாக பாவித்து வந்த மக்கள், பின்னர் அம்மரம் முதிர்ந்த பின் அதை மையமாக வைத்துக் கோவில் எழுப்பியுள்ளனர். அந்தக் கோயிலே கந்தழீஸ்வரர் ஆலயம். மூன்றாம் குலோத்துங்கனின் மகளை மணந்த அழகிய சீலன், இக்கோயிலை நன்கு பேணினான். அவனே சிதம்பரம் நடராசர் ஆலயத் தெற்கு கோபுரத்தையும் கட்டினான். காஞ்சியைசுற்றியுள்ள பல கோவில்கள் சீரமைக்கப் பட்டதில், கந்தழீஸ்வரர் கோவிலும் ஒன்று.
மற்றொரு கோயில் ஊரகப்பெருமாள் கோயில். இங்கும் முன் கோபுரத்து இரண்டுநிலைகள் உடைந்து போய்விட்டன! பூசைக்கு ஏற்பாடு செய்யபட்டிருந்தாலும், பக்க மண்டபங்கள் பழுதாகி விழுந்து கல்வெட்டுக்கள் காணமுடியாமல், மேலே மூடிக்கிடக்கின்றன!
ஆனால், 1990ல் லய உழவாரப்பணி குழுவினரால் சீரமைக்கப் பட்ட இக்கோயில்கள் சரியாகப் பராமரிக்கப் படாமலும், நேரத்தில் திறக்கப் படாமலும் உள்ளன! கோயில்களின் வளாகங்கள் பாழடைந்து காணப்படுகின்றன! கோபுரத்தில் சிருங்கார சிற்பங்கள் காணப்படுகின்றன. விஜய நகரக் கலைப்பாணி அழகாகத் தெரிகிறது. தூண்களில் கொடிசுற்றியதுபோன்ற அழகிய தூண்கள் அதில் கிழிகள் கொஞ்சுவது போன்ற சிற்பங்கள், அத்தனையும் அழகு மங்கி வருகின்றன!
மிகவும் மனதை பதைபதைக்கச் செய்யும் காட்சி, ஒரேடியாய் ஒடுங்கிவிட்ட வாலீஸ்வரர் கோயில்! பெருமாள் கோவிலுக்கு மிக அருகில், பின்னாலேயே உள்ள கோவில் வட்டவடமாகிய கஜப்ருஷ்டம் பாணியில் அமைந்துள்ளது. கல்வெட்டுச்செய்தி சுவர் முழுதும் காணப்பட்டுள்ளது. ஆனால், முழுதும் சிதைந்து போய், முட்காடு சூழ, அருகருகில் வீட்டைக்கட்டிவிட்ட ஆக்கிரமிப்பாளர் மேலும் கோவிலை கண்ணிலிருந்து மறைக்கச் செய்ய, முழுதுமாய் சீரமைக்கவேண்டிய அவசரத்தில் உள்ளது.

கல்வெட்டாரய்ச்சியாளர்கள் படியெடுத்து விட்டதாக அறிகிறேன். கோவில்? சிவலிங்கம், அருகிலுள்ள தகரம் வேய்ந்த ஒரு அவசரக் கோவிலில் தஞ்சம் புகுந்து விட்டார்; அம்மன் கந்தழீஸ்வரர் ஆலயதுக்கு ஓடிவிட்டாள்! அதைவிடக் கொடுமை, சரிவர பாதுகாக்கப் படாத கல்வெட்டுக்கள். சாலை நடுவிலும், ப்ரகாரங்களிலும் இறைந்துகிடக்கும் கல்வெட்டுக்கள் காலம் போகப் போக, நம் சரித்திரத்தை அழித்துக் கொண்டு போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

4 comments:

Kowsalya Subramanian said...

hi jc,
read your other blog templesrevival and the work you are doing is really commendable. i will see how i can help.

kowsalya

Maraboor J Chandrasekaran said...

நன்றி, கவுசல்யா. தற்போது உத்தரமேரூர் சிவன் கோவிலும், தரங்கம்பாடி மாசிலாமணி நாதர் ஆலயமும் எடுத்துச் செய்வதாக உத்தேசம். எல்லாம் அவன் செயல். எத்தகைய உதவியாயினும் நன்றிக் கடன் படுவேன்.

Anonymous said...

Restoration of 1,200-year-old temple to begin soon
Jun 01, 2008
http://www.thehindu.com/2008/06/01/stories/2008060156281500.htm



Software professionals take up cleaning of temples
Nov 28, 2007
http://www.hindu.com/2007/11/28/stories/2007112859880300.htm

Please post these articles on your TemplesRevival blog and keep up the good work !!!

Maraboor J Chandrasekaran said...

Thanks Mr.Ravi, Pls spread the message to all heritage lovers and join hands with us to conserve our temples.
http://templesrevival.blogspot.com
www.conserveheritage.org