05 April 2006

புளிச்..!

சொந்தக் கார்ல போற மக்கள், ரோட்டுல நடக்கறப்ப, வெளி நாட்டுல இருக்குற மக்கள் கொஞ்சம் இந்தாண்டை வரச்ச, யோசிக்கவேண்டிய விஷயம். ஆனா திருவாளர் பொதுஜனதுக்கு, இது ரொம்ப அத்தியாவசியமான மேட்டர்!
மழைக்காலமில்லேன்னாலும் குடை எடுத்துகிட்டு போகணும். ஏன் , உச்சிவெய்யில் மண்டைக்குத் தாங்காதான்னு கேக்குறது காதில் விழுகுது. இல்லைய்யா, இல்லை. 'புளிச்' சுக்கு பயந்து தான். அதுல ரெண்டு வகை இருக்கு. வெத்தல வாய் புளிச், புளிச்ச வாய் புளிச்!!
பார்த்திருப்பீங்க! உம்முனு நரசிம்ம ராவ் கணக்கா ஒக்காந்திருப்பான்! பஸ்ல. இடமில்லைன்னாலும், அய்யா திருவாயப்பார்த்ததுமே, எல்லாம் எடம் விட்டுக்கொடுத்துடுவாங்க! ஓர சீட்டு! எதுக்கு? துப்பார்க்குத் துப்பாய... தூவும் மழை! இதுக்கு ஊர் பக்கத்துல அர்த்தமே, வேற சொல்லுவான்! வள்ளுவரு ரசிகருங்க மன்னிச்சுக்கோங்க! துப்புறவனுக்கு துப்புறதுனால ஒரு ப்ரச்னையோ, பயனோ இல்ல, கீழ அந்த 'சாரல'த் தாங்குறவனுக்குத்தான் அதன் கோரம் தெரியும். அதுலயும் வெள்ளயும் சொள்ளையும் போட்டு வர மகராசனுங்க, (முக்காவாசி விவசாயிங்க, எப்பவாச்சும் நகரத்துல வந்து, மோட்டார் ரிப்பேர் செய்யவோ, இல்ல வெத வாங்கவோ வரச்ச, நல்லா உடுத்திகிட்டு போணும்னு பாவம், வெள்ளைல வந்துருப்பாரு, பாவம். அதவிட படிக்க போற புள்ளைங்க, வேலக்கி போறவங்க, இண்டர்வ்யூவுக்கு போற அப்பாவிப்பசங்க நிலமைய யோசிச்சுப்பாருங்க. அவங்க சட்டைல செவப்பு ஸ்ப்ரே அடிக்க இந்த புளிச்சவாப்பயக யாரு? அப்படியே, துப்புன வாயில நாலு போடணும்னு கை துடிக்கும்! நிக்கிற வண்டில உள்ள ஆசாமியா இருந்தா சரி, பண்ண வேலைக்கு நல்லா நாலு கேள்வியாவது கேக்கலாம். அவன் திருந்தப் போறாங்கறீங்க? ஹ¤ம். ஆனா, ஓடுற வண்டிலேர்ந்து வர புளிச் தான், பளிச்னு சர்வ அங்கவியாபியா, தலை, மூஞ்சி, சட்டை, பான்ட், (வேட்டின்னா, இன்னும் கொடுமை) எல்லாத்துலயும் பரவியடிக்கும்! துப்ப்றவன் வாய என்னிகாவது பார்த்துருக்கீங்களா, 'ஊ'ன்னு லேசா ஊதி இருக்கும்; நாக்கு வெந்து நொந்து போயிருக்கும். சோத்துச் சுவை மறத்து, சும்மா உள்ள தள்ற மாதிரி நெலமை. வெத்தலையோட புகையில, கொட்டப்பாக்கு, எல்லாம் போட்டு குதப்பி, வினோதமா ஒரு 'கப்பு' அடிக்கும்! வாயத் திறந்தா, பக்கத்துல நின்னு பேச முடியாது!!
புகையில, வெத்தல! குஜராத்ல ஆனந்த்னு ஒரு ஊரு. அங்க, புகையில தோட்டமதிகம். நல்ல துட்டுஅடிக்கலாம்னு அத பயிரிட்ட NRI குஜராத்திங்க, அடிச்ச நோட்டெல்லாம், ஆஸ்பத்திரில கட்டிகிட்டு இருக்காங்க! காரணம்? இலைய பதப்படுத்தற மக்கள் இலைய அடிச்சு கட்றப்ப அந்த காத்துப் பட்டு, பட்டு, அதுபோக புகையிலைக்கும் அடிமையாகி, இப்ப வாயில் புத்து நோய் வந்து, பொதுநல கேசு ஒண்ணு போட்ட ஒரு சமூக சேவகராண்ட பயந்து போய், இப்ப ஆஸ்பத்திரிக்கும், கோர்ட்டுக்கும் நடையா நடக்குறாங்க!
மத்த ஒரு புளிச்! சாராயம்; அதுலயும் நேரம் காலம் தெரியாம காலைல பல்லு விளக்குறதுக்கு முன்னாடியே, தீர்த்தவாரி பண்ணிக்கிற கேசுங்க பண் லொள்ளு தாங்க முடியாது! பஸ்ல, பஸ் ஸ்டாண்ட்ல, டீக்கடைல, ஹோட்டல்ல, எல்லா இடத்துலயும் நிறஞ்சுரருக்குற 'சர்வலோக வ்யாதி'. ஒரு முறை அந்த திருவாய் மலர்ந்தருளிநாங்க, தண்ணி அடிக்காமலேயே, எதிராளி அம்பேல்! அப்படி ஒரு குமட்டு குமட்டும். இதோட சிகரெட்டையும் சேத்துப் பிடிச்சுகிட்டு, அந்த வாயாலயே போற வழி எல்லாம் பொன்மொழி உதுர்த்துகிட்டு போற ஜென்மங்கள என்ன செய்ய? அதவிட மகா புளிச், இந்த தண்ணிப் பார்ட்டிங்க, பஸ்ஸ¥லேர்ந்து எடுக்குற வாந்திதான்! அபிஷேகமான பாவப்பட்ட ஆள, பெனாயில் போட்டுக்குளிப்பாட்டினாலும், டெட்டால்லயே ஒரு நா முழுக்க ஊரவெச்சாலும், அந்த 'கப்பு போகாது'.! அதிசயமா, இந்த வழக்கத்த விட்ட எங்க ஆபிஸ் ப்யூனைக் கேட்டேன்! "எப்படிய்யா? சொல்லு, நாலு பேருக்கு சொன்னா திருந்து வாங்க"ன்னேன்.மெதுவா, "காதக் கொடுங்க சொல்றேன்- அதுவா, நான் வீட்டுக்கு ரிடர்ன் போறச்ச, பஸ்ல உட்கார்ந்துகிட்டு இருந்தேனா, வீட்டாண்ட கிட்டத்தட்ட போயி சேர்ந்தாச்சு. பஸ் ஒரு இடத்துல திடீர்னு ப்ரேக் போட்டுச்சு! எதில வர மொபெட்ட சமாளிக்க! அப்ப, கப்னு வயத்த பொரட்டி, வாந்தி வந்துடுச்சு. எப்படியோ, ஜென்ன வழியா மொகத்த கொடுத்து, வாந்தி எடுத்துட்டேன்! பஸ்ல இருக்குறவன்லாம் திட்டறான், மனசுல பதியல! ஆனா, வீட்டுக்கு போனா, வீடு பூட்டி இருந்துச்சு; ஒரு அர மணி நேரம் போனப்புறம் பொண்டாட்டி வந்தா!" எங்கடி போன? மவளே, வயத்த பொரட்டுது, கொல்லக்கி போணும்னா, பூட்டிட்டு போய்ட்டயே"ன்னேன். அவ, மெதுவா, அட, சாமான் வாங்கியாற கடைக்குப் போனேன். வழில, ரோட்டோரமா நடக்கறச்ச, பஸ் ஒண்ணு திடீர்னு ப்ரேக் போட்டுச்சு! அதுலேர்ந்து உன்ன மாதிரி கேடு கெட்ட குடிகாரன் ஒருத்தன் 'உவே; ன்னு என் மேல வாந்தி எடுத்துட்டான்! நாயி, அவன் மட்டும் என் கைல கெடச்சான், கைமா பண்ணியிருப்பேன்"னா! எனக்கு பனு ஆயிருச்சு!" "சரி, ஆனா எதுக்கு இம்புட்டு லேட்டு?"
"ஹ¥ம், அந்த கண்ராவியோட வீட்டுக்கு வர முடியல, பக்கத்துலயே இரூக்குற தனம் வீட்டுக்கு போயி, நல்ல கழுவிகிட்டு, சேல கூட அவகிட்ட கேட்டு மாத்திகிட்டு வர்றேன், கேள்வி கேகுறயே, போய்யா"ன்னா! சோத்த போடறப்ப மெதுவா, "ஏய், கோச்சுக்காத, ஏதோ போற வயசுக்கிழம்னு நெனச்சுக்கோ, நாந்தான் அந்த வாந்தி எடுத்த பாவி"ன்னு ஒத்துகிட்டேன். பார்த்தாளே ஒரு பார்வை! காளியாத்தாவாட்டம்! கைல கிடச்ச கரண்டியாலேயே புருசன்னு பார்க்காம, விட்டா பாருங்க, கன்னம் செவந்துருச்சு. நான் எங்க பழக்கத்த விட்டேன்? என் பொண்டாட்டி 'விட்ட'த நெனச்சுப்பார்த்தேன், அதா என்ன விடு போயிருச்சு! என் வயசுல எனனாச்சும் பொண்டாட்டி கையால அடி வாங்குவானா சார்?" அதான், விட்டேன் - அப்படீன்னான். எனக்கு சிரிப்பு வந்தாலும் ரொம்ம்ம்பக் கஷ்டப்பட்டு அடக்கிகிட்டேன்!
அதேமாதிரி, புகை பிடிக்கிறவங்க பத்தி சொல்லவே வேணாம்! ஆயிரம் முறை புகை பிடிப்பது உடல்நலத்துக்குக் கேடுன்னு சொன்னாலும், புகை பிடிச்சவன் பிடிச்சது தான். சனி பிடிச்சாலும் விடும், ஆனா புகைபிடிச்சா அது இவன விடாது! யோவ், தம் பிடிக்கிற மவராசா, உன் உடல்நலத்துக்குக் கேடு இல்ல, பக்கத்துல இருக்குற உன் பொண்டாட்டி, பிள்ள குட்டி, வெளில நீ போறப்ப பக்கத்துல நிக்கிற ஆசாமி, மாமி, எல்லாத்துக்கும், Passive smoke தந்து சாவடிக்கிறயே! மருத்துவங்க, பத்திரிகைகாரங்க, பொது சேவகிங்க, எல்லாரும் என்ன சொல்றாங்க? புகைக்கிறவன விட, அத பக்கத்துல இருந்து உள்ள வாங்குறானே, அவனுக்கு 5 மடங்கு நச்சு உடம்புல சேரும்னு!
வெளிநாட்டுல புகைச்சா, இல்ல பொது எடத்துல துப்பனா, அபராதம் கட்டணுமாம்! அதே ஆளுங்க, இங்க வந்தா, துப்பறத நிறுத்திறாங்களா? எதோ, ரொம்ப நாளா விட்ட குறை தொட்ட குறைன்னு, சேர்த்து வெச்சு, பார்க், பீச், ஏர் போர்ட், ரெயில்வே ஸ்டேஷன் இப்படி எல்லா எடத்துலயும் ஸ்ப்ரே அடிச்சா என்ன அர்த்தம்? உன் நாட்ட நீயேஅழகா வெச்சுக்கலைன்னா, அடுத்தவன் எப்படி வெச்சுப்பான்? (அட, அப்படி செய்ற ஆளுகளத்தான் சொல்றேன், எல்லா மக்களையும் இல்லப்பா!)
ஆகையினால் இதுமூலமா நான் சொல்ல விரும்பறது என்னன்னா, ஒண்ணு புளிச்சவாயர்களை திருத்தப்பாருங்க, இல்ல தடுக்க பாருங்க, இல்ல தல தப்பிக்க குடை,கர்சீப் (மூக்கப் போத்திக்க) எல்லாம் எதுத்துகிட்டு வெளிய `தைரியமா' நடைய கட்டுங்க! என்ன நான் சொல்றது? சரிதானே?

10 comments:

துளசி கோபால் said...

காலையிலே கணினியைத் திறந்ததும், என்னடா இது ஒரே 'கப்பு'ன்னு பார்த்தா அது
உங்க 'புளிச்'லெ இருந்து வருது.

மேற்படி சமாச்சாரமெல்லாம் மனுஷனுக்குக் கட்டாயமா வேணுமா? இங்கேயும், 'குடி'க்கு இருக்கற
மதிப்பு ஓஹோ..... பார்ட்டிகளிலே போனா எனக்கு ஒரு மறைமுக ஏளனப் பார்வைதான். ஆனா நான், 'போங்கடா
குடிகாரனுங்களா'ன்னுட்டு கம்பீரமா இருக்கக் கத்துக்கிட்டேன்.

இவ்வளொ என்னாத்துக்கு, இண்டர்நேஷனல் ஃப்ளைட்லே குடிக்கறவனுகு மவுசு ஜாஸ்தி. ஊத்திக் கொடுக்கன்னே
ஏர்ஹோஸ்ட்டஸ் இழையறப்ப எரிச்சலா இருக்கும்.

இப்ப இங்கெ பப், வேலை இடங்கள் எல்லாம் புகைக்கக்கூடாதுன்னு சட்டம் வந்துருக்கு. நல்லதுதான். ஆனாக்
குடியை விடமாட்டாங்க. இப்பெல்லாம் பீரும் ஒயினும் சூப்பர் மார்க்கெட்டுலேயும் வந்துருச்சு.

Maraboor J Chandrasekaran said...

துளசி கோபால், சரியாச் சொன்னீங்க. நான் வேலைக்குச் சேர்ந்த புதுசு, ஒரு பெங்காலி பாஸ் எனக்கு. அவர் மார்க்கெடிங் சந்திப்புகளில் என்னை குடிக்க வற்புறுத்துவார். நானும் கொள்கையாகவே இருந்தேன். எப்படியும் இந்த சனியனில் விழக்கூடாதென்று. பலமுறை மற்றவரிடம் விளையாட்டாக, "Chandrasekar is not fit for 'company'" என்று சொல்லுவார். நான் ஒரு நல்ல கும்பல் சுற்றியிருக்கும் தருணத்தில், "he fits into any company like a cork in a rum bottle" என்றேன். மனுஷர் அதற்கப்புறம் என்னை ஏளனம் செய்வதை நிறுத்திவிட்டார்!!

Anonymous said...

பேருந்தில் கடைசி இருக்கையில் அதுவும் சன்னல் ஓரமா இருக்கிறவங்க நிலைமை தான் பாவம். என்ன செய்வது எல்லாத்துக்கும் ஒரு விலை இருக்கே, சன்னல் ஓரம் அதுவும் கடைசி இருக்கைன்னா வாந்தி, புளிச் எல்லாத்தையும் சகித்துக்கொள்ளதான் வேண்டும். ஐயா சாமி இது அனுபவம் ஐயா அனுபவம்.
எச்சரிக்கை: குறிப்பா காலங்காத்தால ஆம்னி & நீண்ட தூர பேருந்து பக்கம் போகாதிங்க. விபத்தை தவிர்க்க 10 மீட்டர் இடைவெளி விடவும் என்பது மாதிரி புளிச் தவிர்க்க 20 மீட்டர் இடைவெளி விடவும் என்று எழுதி வைக்கனும்.
இதை நகைச்சுவை/நையாண்டி என்பதற்கு பதிலா அனுபவம்/நிகழ்வுகள் என்று வகைபடுத்தி இருக்கலாம் :-)

Maraboor J Chandrasekaran said...

குறும்பன், நல்லா சந்தோஷமா சிரிச்சுகிட்டு இருக்குற உங்களுக்கு இப்படி ஒரு அனுபவமா? நெனக்கவே கஷ்தமா இருக்கு. நீங்க சொல்றதெல்லாம் கரெக்ட். பஸ்ல எழுதிப் போடறது, நல்ல ஐடியாதான். ஆனா, பாவிமக்கா அந்த போர்டு மேலயே துப்பி,துப்பி, கொஞ்ச நாள்ல செங்காவி அடிச்சுடுவாங்களே!!

Muthu said...

மரபூராரே,

நான் சின்ன வயசில சைக்கிள்ள போயிடிட்டு இருந்தேன். என்னை கிராஸ் பண்ணி போன பஸ்ஸில இருந்து உங்க கூட்டாளி (புளிச் பார்ட்டி) துப்பிட்டான்.

அப்படியே எச்சில் (சளி வேற கருமம்) சட்டையில.திட்ட கூட முடியலை. நாயி பஸ்ஸோட போயிடுச்சி...உங்க பதிவை படிச்சதும் இதத்தான் நெனச்சேன்...

இவனுங்களை யார் திருத்தறது?

Maraboor J Chandrasekaran said...

தமிழினி, என்ன நீ? என் கூட்டாளின்னு ஒரே போடாப் போட்டீங்க? இதுக்கு பேசாம அந்த எச்சிய என் மேல ஈ-க்ரீட்டிங் மாதிரி அனுப்பிறலாம்!! :-( நாங்க துடைக்கிற கட்சி, துப்புற கட்சியில்ல! சரி, விஜயகாந்த், அந்த காலத்து எம்.ஜி.ஆர் இவங்கெல்லாம் எப்படி பறக்கற கார், ரெயிலு இதெல்லாம் ஓடியே போயோ,இல்ல சக்கரம் கழண்ட வண்டிலயோ போயி பிடிச்சாங்க? நீங்க சைக்கிள்ல அந்த பஸ்ஸ பிடிக்க துரத்தலயா? யாரு திருத்துறது? நல்லா அப்ராதம் போடணும். போடற போலீஸே துப்புனா? அவரு முதுகுலயும் போடணும்! (நடக்குமா?)

குமரன் (Kumaran) said...

நல்ல வேளைக்கா நமக்கு இந்த அனுபவம் இல்லையப்பா. நினைச்சாலே குமட்டுது...

Maraboor J Chandrasekaran said...

குமரன், ஒன்ணு குடையும் கையுமா போயிருப்பீங்க, இல்லை சரியான முன் ஜாக்கிரதை முத்தண்ணாவா இருந்திருப்பீங்க :-)

meenamuthu said...

\\ துப்பார்க்குத் துப்பாய... தூவும் மழை! \\

:)))

சொல்றத சுவாரஸ்யமா சொல்றீங்க!

Maraboor J Chandrasekaran said...

//சொல்றத சுவாரஸ்யமா சொல்றீங்க//

மீனா, அப்பத்தான 'பின்னூட்டம்' வரும்? இல்லன்னா, 'பின்னோட்டம்' ஆயிடாதா?