06 April 2006

குறி!!

"நல்லா தண்ணியடிச்சுக் கழுவுடா, அத சரியா கவனிக்கல மவனே,உனக்கு சோறு சம்பளம் கிடையாது,சா..கிராக்கி!" சத்தமாய் சொல்லிட்டு உள்ள போனான் முத்தண்ணன்.

முன் மூக்கு வீங்கின குரங்காட்டம் பானட் உள்ள பழைய லேலண்ட் வண்டி. இந்த லாரிய ஓட்டி ஓட்டி பணம் பார்த்து, தம்பிய இந்த அளவுக்குப் படிக்க வெச்ச பெருமை முத்தண்ணனுக்கு.

உள்ளேர்ந்து ஓடியாந்த தனம், "ஏங்க, தம்பி இப்பதான் வந்து படுத்துச்சு!மெதுவா பேசுங்க! ராவெல்லாம் ஏதோ, சேரி பக்கம் போயி மக்களுக்கு ஏதோ ப்ரச்னைன்னு கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதி போட்டானாம். அதான்.."

"அட, நாங்க என்ன பார்க், பீச்னு சுத்திட்டா வர்றோம்? நாலு நா முன்ன எடுத்த வண்டி. இந்த லூசுப்பய கிளீனர் முருகேசு எதோ உடம்பு சுகமில்லைன்னு, வேற பையன கூட்டிகிட்டு போனேன். முருகேசா இருந்தா, என்னய வண்டி விட்டு இறங்க விட மாட்டான். போலீசு, செக் போஸ்ட் எல்லாம் அவன் சரிபண்ணி, லோடு போட மெட்ராஸ் போக வர, ரெண்டே நாள்; ஆனா, இந்த லூசுப்பய, சின்னப்பய; ஒரு எளவும் தெரியல! வண்டிய நல்லா தொடைக்கச் சொன்னாகூட, பேன்னு முழிக்கிறான்! அதான் எல்லம் முடிஞ்சு வர நாலு நா ஆயிப்போச்சு. லேட், அதோட செலவும் இழுத்து விட்ருச்சு! சரி, தம்பி, இன்னும் சமுக சேவ அது இதுன்னு ஏன் மூக்க விடறான்? படிச்ச படிப்புக்கு ஏதாச்சும் கவர்மண்ட் பரிட்சை இல்ல போலீஸ் வேலக்கி எழுதி, பெரியாளா வரலாம்ல?இவன வெச்சு, நாமளும் நல்லா வசதியாயிரலாம்னு பார்த்தா, சேவை உப்மான்னு வம்ப வெலக்கி வாங்கறான்"

"சரி, விடுங்க பரவாயில்ல, கொஞ்சம் விவரம் வந்தா எல்லாம் சரியாயிரும்! கை கால கழுவிகிட்டு வந்து ஒரு வா சாப்டு நீங்களும் கொஞ்சம் படுங்க!"

8 மணிக்கு நன்றாக விடிந்திருக்கையில் எழுந்த ராம், "அண்ணி, அண்ணன் எப்ப வந்தாரு, எப்ப படுத்தாரு? இன்னும் எழுந்திரிக்கலையா?""இல்லப்பா, ரெண்டு நா வேல நாலு நாள் இழுத்துருச்சுன்னு ஒரே கோவமா வந்தாரு. அதோட நீ வேற வேலையத்தேடாம சீர்திருத்தமெல்லாம் செய்றது அவருக்கு பிடிக்கல கண்ணா. அண்ணி சொல்றேன்னு பார்க்காத, வேலக்கி ஆள் எடுக்கற பரிட்சைக்கு ஏதும் பணம் கட்டணும்னா சொல்லுப்பா,தர்றேன். ஆனா, அண்ணன் வாய்ல விழாத!""சரி அண்ணி, உங்க யாருக்கும் என்னால ஒரு தொந்தரவும் வராது. சரி, 10 ரூபா கொடுங்க, கலெக்டர் ஆபீஸ் போயிட்டு மதியம் வந்துர்றேன்.""அண்ணன் எங்கேன்னு கேக்கறாப்ல வெச்சுக்காத""சரி"- ராம் வெளிய போய்ட்டான்.

2 மணின்னு சொன்னாலும், வரமுடியல. அவசர, அவசரமா, வீட்டுக்குள்ள நுழையறச்ச முத்தன்ணன் கோபமா ஏதோ அண்ணிகிட்ட சத்தம் போட்டுகிட்டிருந்தார்.

உள்ள போறப்ப, "வாய்யா, தருமதுர! ஊர்ல பாதின்னா.. பேர்ல.... ", ஏண்டா உனக்கு ஊர் வம்பு? சரி,சனிக்கிழம ஒரு லோடு அடிக்கணும்னு கூப்டாங்க, முருகேசன் மேலுக்கு முடியல, சரி ஆயிடுச்சான்னு கேக்கப் போனா, பையல ஆஸ்பத்திரில சேர்த்தோம்கிறாங்க! அட பாவி மக்கா, பார்க்கலாம்னு கவருமண்ட் ஆஸ்பத்திரி போறேன், வழில கலெக்டராபீஸ் முன்னாடி இந்த சண்டியர் தலமைல அந்த சேரிப் பயலுக, தர்ணா பண்றாங்களாம், தர்ணா!தொண்ட கிழிய சத்தம் போட்டா இவனுக்குப் பின் பாட்டு பாடறாங்க! ஏண்டா, லாரி ஓட்டி ஓட்டி உங்கண்ணன் செத்து சுண்ணாம்பாறான், நீ ஒரு வேலக் கழுத கெடைச்சு, எங்கள ஒக்கார வெச்சு காப்பாத்துவேன்னு பார்த்தா, தர்ணா பண்றானாம்! வயிரு எறியுது!சே!"

வாயில ஆயிரம் பதில் ஒரே நேரத்துல வந்தாலும், அண்ணன் கிட்ட எதிர் பேச்சு பேச முடியாது. நல்ல வேளை அண்ணி ஒரு கிளாஸ்மோரைக் குடுத்து, ரெண்டு பேர் மனசையும் 'கூல்'ஆக்கினாங்க!

"அண்ணா, நம்ம நாமக்கல் டவுனச்சுத்தி எத்தன கிராமம்?"

"என்னய்யா, கணக்கெடுக்கறயா, இது தெரியாதாக்கும்?"
"சரி, அத விடு. அனுமார் கோவிலத் தவிர, நம்ம ஊர் பேரச்சொன்னா, உனக்கு என்ன ஞாபகம் வரும்?லாரிங்கதான்! ஆல் இந்தியாவுக்கும் நம்ம பயலுவதான லாரி ஓட்டுறானுங்க! எல்லாம் எமப்பயலுக, பல பாஷை கத்துவெச்சுகிட்டு வடக்கத்திகாரன் கிட்டயே, ரிடர்ன் லாரி லோடுக்குக் கூட, ரெண்டு வெல பேசி சமாளிப்பாங்கன்னா பார்த்துக்கயேன்! அதுலயும் இந்த குஜராத்தி சேட்டுங்க, அடிமடியிலயே, கை வெச்சாங்கன்னா, நம்ம பயலுவ ஆடற மாட ஆடிக்கறக்கற மாதிரி, அவனுங்ககிட்டயே, ஏத்தியிறக்கிப் பேசி, ஜோலிய முடிச்சுறுவாங்க!"

அதுதான் அண்ணன்! லாரி, லாரித்தொழில், அவரு ஆளுங்க, இதெல்லாம் பேசினா, அவரு பாட்டுக்க பேசிகிட்டே இருப்பாரு. அண்ணி கண்ணாலேயே ராம் கிட்ட, "சரியான ஆளுப்பா, அண்ணன் மூடை மாத்த லாரி பத்தி லாரி லாரியா பேசுனா போதுமே, ஐயா மசிஞ்சுடுவாரு!" ன்னு சொன்னாங்க!

சரியண்ணே, முருகேசனுக்கு என்ன ஆச்சாம்?
உடம்புல திடீர்னு வலி, கழுத்துப்பக்கம் ஒரு வீக்கம், அப்பப்ப ஏறுற ஜூரம், அப்படீன்னு ஆளையே போட்டு அடிக்குதாம்! இதுல நல்லா சாப்பிடேண்டான்னு சொல்லி ஆப்பிள் ஆரஞ்சுன்னு வாங்கிக் கொடுத்தா, பசியே இல்லேன்னு சுருண்டு படுத்துட்டான்! அப்படி என்ன வியாதியோ தெரியல. டாக்டரக் கேட்டா, நீங்களும் லாரி வேல தானா? ன்னு கேட்டு, அதுக்கப்புறம் சைலண்ட் ஆயிர்றாரு!, அதாண்டா குழப்பமாயிருக்கு! சரி, ஒஞ்சமூக சேவைய எங்களுக்கெல்லாம் செய்யக்கூடாதாக்கும்? அந்தப் பைய மருந்து செலவே, லாரிய வித்தாதான் தர முடியற மாதிரி இருக்கும்னு அவன் சுத்தம்சொந்தம்லாம் பேசிக்கிறாங்க! இவனே க்ளீனர், இவனுக்கு எதுப்பா லாரி வித்துத் தர மாதிரி காசு! ரொம்ப நாளா என் கிட்டயே வேல பார்த்தானா, எனக்குதான் மனசு கேக்க மாட்டேங்குது! ஏதாச்சும் பணமேற்பாடு செஞ்சு தர முடியுமாடா?

அண்ணே, நான் கலெக்டர் ஆபீஸ்ல தர்ணாவுக்கு போனதும், நம்ம லாரிக்காரங்க வாழ்வுக்காகதான்!
அப்படியா, நெஜம்மாவா? என்னடா விஷயம்?

சுத்துப் பத்து கிராமம் முழுக்க ஒருத்தனில்லைன்னா ஒருத்தன் லாரி வேலைல இருக்கான்; டிரைவரா, கிளீனரா, சரக்கு போடறவனா, வண்டிக்கு fரேம், பாடி கட்டறவன், வண்டி ரிப்பேர் பார்க்கற மெக்கானிக், பெயிண்டர் இப்படி.பல ஆளுங்க! வேல செய்ற இடத்துல சுத்தபத்தமிருக்கா, சுகாதாரமிருக்கா? பெயிண்ட் தின்னர், லாரி ஆயில் இதுல கெடுற மூச்சுக்காத்து, தண்ணீ, எல்லாம் சேர்ந்து அவனுக்கு பல வியாதிங்க வருது! குடும்பத்துக்கு ஒரு நல்ல இருக்க இடம், பிள்ளைங்க படிக்க ஒரு நல்ல பள்ளிக்கூடம், அவனுங்க சுகாதார நல மையம் ஊரெல்லாம் வேணும்னுதாண்ணே தர்ணா!"

முதலாளிங்களுக்கோ வேல நடந்தா சரி, சுகாதாரம் அது இதுன்னு என்னடா பேச்சு? வேலசெய்றவனுக்கு, கல்ல கடிச்சு தின்னாகூட செரிக்கும்டா; உடம்புக்கு ஒண்ணும் வராது!

அப்ப முருகேசனுக்கு என்ன வியாதியாம்? உங்க லாரி ஓட்டற சங்கம், டிரைவர் சங்கம், கிளீனர் சங்கம், அது இதுன்னு ஆயிரம் சங்கம் வெச்சுருக்கேங்க; எதுக்கு, யாராச்சும் ஒரு கட்சிக்காரனோட சேர்ந்து, எலெக்ஷன் வந்தா மாரடிச்சு, ஒரு கவுன்சிலராவது ஆகி, தலைவர் உருப்பட்டுருவாரு, பசங்க எல்லாம் மறுபடியும், வெளியூருக்கு சரக்கு அடிக்க, வலி தெரியாம இருக்க, உள்ளயும் 'கொஞ்சம்' சரக்கு அடிக்க திரிவாங்க! அப்படித்தானே?

அண்ணனுக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியல, கடைசியா, " ரொம்ப படிச்சுட்டீங்கடா, அதான் எங்க மேலயும், எங்க தொழில்காரங்க மேலயும் இப்படி பழி போடறேங்க!

இல்லண்ணே, அது வந்து...

சரி, இத்தோட முடிங்கப்பா உங்க பேச்ச; சண்டை ஆயிரப்போகுது" ன்னு, நல்ல வேளை அண்ணிதான் இத அத்தோட முடிச்சு வெச்சாங்க!!

இவனுக்கு சிநேகிதி, அம்மா, எல்லாம் அண்ணிதான்.
ஏன் அண்ணி அண்ணன் என்னோட எப்பவும் சண்ட போடறாரு? முருகேசனோட டாக்டரை நானும் போய் பார்த்தேன். அவனுக்கு வந்துருக்கறது ..."அண்ணி காதோரம் சொன்னான் ராம்.

அடப்பாவி! எப்படிடா, இவன்? வெடலப் பயலாச்சே; கல்யாணம் கூட இன்னும் கட்டலையே!

அதான் அண்ணி ப்ரச்னையே! எப்படி இவனுங்களுக்கு புரிய வெக்கிறது, யார் புரிய வெக்கிறது? பேசாத ஊர் முழுக்க தண்டோரா போட்டு, எல்லார்க்கும் இலவசமா ரெத்த சோதனை செய்யக் கூட நான் கலெக்டரு, டாக்டருங்க கிட்ட பேசிடுவேன், ஆனா இவனுங்க தப்பா நெனச்சு, விவகாரமாயிடுச்சுன்னா?

தெரியலயேப்பா! ஓ, மறந்தே போயிட்டேன். நாமக்கல் டவுனு அனுமார் கோவில்ல ரொம்ப வருஷமா ஒரு பெரியவர் பூக்கட வெச்சுருக்காரு, அவர் அண்ணன் கிட்ட ஏதோ ராம நவமின்னு பண வசூலுக்கு வந்து போனாரு! பாவம் வயசானவர், இத்தன தூரம் வந்து போறாரு. அண்ணன் கிட்ட சொல்ல மறந்துட்டேனே! அவருதான், நீ கைப்புள்ளயா இருக்கறச்ச, திருவிழாக்குப் போன வண்டி கொட சாஞ்சு அப்பனாத்தா சாகக்கிடக்கையில, உன்னை அந்தக் கஷ்டத்துலேர்ந்து மீட்டு, விசாரிச்சு, ஊரூராத் தேடி, உங்கண்ணன் கைல ஒப்படச்சாரு! எங்காத்தாவையும் நான் அந்த விபத்துல தான் பறி கொடுத்தேன்; எங்கய்யா கஷ்டப் படறத பார்த்து, என் சோகக்கதையும் தெரிஞ்சுதான் உங்கண்ணன் சல்லிகாசு செலவு வெக்காம, அந்த பெரியவர் முன்ன வெச்சு, கோயில்லயே என்ன கட்டிகிட்டாரு! கல்யாணத்தன்னிக்கீ கைப்புள்ள வெச்சுகிட்ட ஒரே பொண்ணு நானாத்தான் இருப்பேன்!

யாருக்கா அது?

அடக் கிறுக்கா, நீதாண்டா அது, என்ன படிச்சயோ போ! விடிய விடிய ஆட்டோகிராப் படம் ஓட்னேன், எப்ப வெளக்கு போடுவீகன்னு கேக்குற மாதிரி"- சொல்லிச்சிரிச்சுகிட்டே போய்ட்டாங்க அண்ணி.

மறுநாள்- அண்ணன் தந்த தொகையோட போயி, பெரியவர்கிட்ட அறிமுகப் படுத்திகிட்டு கால்ல விழுந்து கும்பிட்டான்.
என்னமோ, பெரிய நாமம் போட்டு, பொக்கையா சிரிக்கிற அந்த தொண்டு கிழத்தப் பார்த்தா, இவனுக்குள்ள என்னமோ ஒரு அமைதி, பரவசம் ரெண்டும் மோதியடிச்சு அடங்குது! என்னான்னு சொல்லத்தெரியல. ரொம்ம்ம்ப நேரம் பேசிகிட்டிருந்தான். கிராமத்துல எல்லாரோட பேரும் நல்லா நினவுபடுத்தி விசாரிச்சாரு! குமரேசன் பேச்சும் வந்தது! அவன் நிலமையக் கேட்டு, பெரியவரு ரொம்ப சங்கடப் பட்டு போனாரு! நல்ல பயலாச்சே? ராமருக்கு எப்படி லெச்சுமணனோ, அந்த மாதிரி நீ கூட அண்ணனோட போனதில்ல, ஆனா, அந்த குமரேசுக்கு உங்கண்ணன் தானேடா எல்லாம்?" னாரு, பெரியவரு!

கிளம்பறச்ச, அனுமார் வடையக் கொடுத்து, "எல்லார்க்கும் கொடு, பிரசாதம்" னு சொல்லி வழி அனுப்பிச்சாரு.

வாச வரைக்கும் வந்தவன திரும்பக் கூப்பிட்டு, "தம்பி, ஒரு உதவி செய்வயா? நீதான் சமூகத்துல நல்லா ஓடியாடி வேல செய்ற நற்பணிமன்றப் பசங்கல்லாம் தயார் பண்ணி வெச்சுருப்பயே? எட்டுபத்து கிராமத்துக்கும் ராம நவமி நோட்டீசு அனுப்பறது வழக்கம்; எப்பவும் குமரேசன் பயலுதான் உதவி செய்வான். அந்த ஒரு வாரம் மட்டும் உங்கண்ணன் அவன் ஒண்ணும் சொல்லமாட்டான்; கடைசி நாள் அனுமார் ஜயந்தி நடக்கறவரை, குமரேசன் என் வீட்லதான் கடப்பான்; நீதாம் முத்துக்கு நிஜ தம்பியாச்சே! இந்த தடவ நீ செய்! குமரேசன் பொழச்சு எந்திரிக்கட்டும்!

என்னய்யா, இதுகூட செய்ய மாட்டேனா!- வாங்கிகிட்டு போனான்!

இவன் வேல செஞ்ச முஹ¥ர்த்தம், பெட்டிஷன், அது இதுன்னு ஊர்பட்ட வேலையெல்லாம் செய்யிறதால, பெரிசு நினச்சத விட கூட்டம் அதிகமாவே, கூடியிருச்சு!

கடைசி நாள்.பெரியவரு பெரிய தொண்டைல உணர்ச்சிகரமா பாடிகிட்டு இருக்காரு; ஜனங்க தெரந்த வாயில டினாசரே நொழஞ்சாலும் வாய மூடமட்டாங்க போல! அப்படி பார்த்துகிட்ருக்காங்க! சுத்தி ஜால்ரா சத்தம், கோஷ்டி கானம் எல்லாம் சேர்த்து மனச கட்டிவெச்சுருக்கு ராம நாமம்!

திடீர்னு பெரியவருக்கு சாமி வந்துருச்சு! இதெல்லாம் முத தடவை பார்க்கற, நம்பாத ஜனம் கூட, பெரியவர் மேல உள்ள மரியாதைனால நம்பறதா வேணாமான்னு ஒரே குழப்பத்துல இருந்தாங்க!

அடிமேல அடி வெச்சு நடக்கிற தாத்தாவா இது? அப்படியே பாஞ்சு பாஞ்சு அனுமாரே நேர்ல வந்த மாதிரி.!!ராம்தான் தைரியத்த வரவழைச்சுகிட்டு கேட்டான்!

சாமீ, என்ன வேணும்? பூசைல குறையா, இல்ல பானகம் நீர்மோர்லயா? வடையா இல்ல மாலைகளா?

ஜெய் ஸ்ரீராம்; அதெல்லாம் என் ராமனுக்கு முன்ன ஒண்ணுமில்ல! அவரு பேரச்சொல்லி பஜன செஞ்சாப் போதும்!

பின்ன?

உங்கள்லதான் சுத்த பத்து குறஞ்சு போச்சு! நான் பிரம்மசாரி, தெரியுந்தானே? பின்ன, என்னைய ஊர்ல பெரிசா நிக்கவெச்சுட்டு, ஊர்ல அவனவன் அநியாயம் பண்றேங்களே!

முத்து, தம்பிக்கு சாமீ ஏதும் சாபம் கீபம் போடுமோன்னு பயந்து, குறுக்கப் புகுந்து, " சாமீ, சொல்றது விளங்கல சாமி; சின்னப்பய அவன கண்டுக்காதீங்க; என்னன்னு விவரமாச் சொன்னா பயலுகள நான் சொல்லி சரி பண்ணீடுவேன்!"

இங்க நிறைய பேரு, லாரி ஓட்றவங்க, சரிதான? காடாறு மாசம், வீடாறு மாசம்னு போறவங்க! சரிதானே? அப்ப போற இடத்துல வேலயப் பார்த்தோமா, வந்தமான்னு இல்லாம வேத்து பொம்பள சகவாசம் எதுக்குடா? யாரோ,என்னவோ?
ஊர் பேரக் கெடுக்குற மாதிரி எங்க போனாலும், நம்ம பயலுவ வம்ப வெலக்கி வாங்கறீங்க! இதுல வெடலைப் பசங்க? கல்யாணமில்லாத ஆசை கேக்குதோ? அது கருமாதில தாண்டா முடியும்!!

நீ ஊர்ல இல்லாதப்ப, உன் பொண்டாட்டி வேற சகவாசம் வெச்சுகிட்டா, உனக்கு எப்படி கோபம் வரும்? அவங்க சீதையா இருக்கணும், ஆன நீங்க ராமனா இருக்க மாட்டேங்க, அப்படித்தானே!! டேய், அனுமாரு பலம் எல்லாத்துக்கும் தெரியும்!..... த்துடுவேன்!

ரொம்பப்பேரு ஒருத்தனுக்கொருத்தன், "டேய், நீதாண்டா அடுத்துங்கற மாதிரி பார்த்துக்குறாங்க!" அவனவனுக்கு அடி வயத்துல கலவரம் பண்ணீருச்சு! அனுமாருகிட்ட போயி இப்படி மாட்டிகிட்டமே''ன்னு!

பொண்டுகளுக்கோ, "அப்பா, இந்தாளுங்க பண்ற ரவுச அந்தச் சாமியாப் பார்த்து கண்டிச்சுருச்சு! இனி பயலுவ திருந்திடுவாங்கன்னு நம்பிக்கை வந்துருச்சு!

அனுமாரு தாத்தா தொடர்ந்தார், " ஏய், சின்னப் பையா, ராமு! ஊர்ல இருக்குற பெரிய ஆஸ்பத்திரில ராமானுஜம்னுதான் பெரிய வைத்தியர்! என்மீது அவருக்கு பக்தி அதிகம்! அவருகிட்ட நான் சொன்னேன்னு சொல்லு! 10 பேரக் கூட்டிகிட்டு, அடுத்த மாசம் முடியறதுக்கு முன்ன, சுத்துபத்து கிராமம், ஊரு ஒண்ணு விடாத போயி அவனவனுக்கு பெருநோய்ங்கிற எய்ட்ஸ் இருக்கான்னு பாரு! வைத்தியம், மருந்துக்கு ஏற்பாடு பண்ணு.
அடுத்த வருஷம் ராம நவமிக்குள்ள அவனவன் 'பொத்திகிட்டு' இருக்கல, அப்புறம் நடக்கறதேவேற!" ஜெய் ஸ்ரீராம்," ன்னு சொல்லி, பக்கத்துல இருந்த ஒரு பெரிய குண்டானா பானகத்த ஒரே வாயில எடுத்து கவுத்துகிட்டாரு!" அப்படியே கீழ விழுந்தவர்தான்!

கொஞ்ச நேரம் கழிச்சு எந்திரிச்சார்!"ஏம்பா, முத்து, நான் கீழ விழுந்துட்டா இந்த கிழவனுக்கு கை கொடுக்கக் கூடாதா"ன்னார்!
அட, சாமி! வாங்க, வாங்க, இப்படி காத்து பட உட்காருங்க!நடந்ததையெல்லாம் ஒருத்தன் முந்தி ஒருத்தன் ஒப்பிச்சான். தாத்தா மெதுவா சிரிச்சுட்டு, "அனுமார் எலக்ஷன்ல நின்னா ஜெயிச்சுடுவார்"ன்னாரு!
அவ்வளவு பெரியவர், எடக்கா பேசினால்? ஆனா, அவருக்குத்தானே சாமி வந்துச்சு? ஒண்ணும் சொல்லமுடியாம ஊர்ஜெனம் மவுனமா இருந்தது!

பேச்ச மாத்த நினச்ச ராம், "அண்ண இருட்டிடுச்சுண்ணே, நான் தாத்தாவ வீட்ல விட்டுட்டு, சைக்கிள்ல ஊர்வந்து சேர்ந்துர்றேன்; நீங்கெல்லாம் கிளம்புங்க!" ன்னு சொல்லி, பிரசாதம் விநியோகத்தை முடிச்சிட்டு, தாத்தாவோட மெல்ல அவர் வீட்ட நோக்கி நடந்தான்.

தோணின சந்தேகத்த மெதுவாக் கேட்டான்! பெரியவரே, வழக்கமா, குறிதான் சொல்வீங்களாமே; இந்த தடவ என் மனச அரிச்சுகிட்டிருந்த ப்ர்ச்னைய அனுமாரு பேசிருச்சே! அது அதிசயம்தான்!

அட, நீங்க மட்டும்தான் சமூக சேவ செய்வீங்களோ? அனுமாரு கூடத்தான் செய்வாரு! இது அவரு மக்கள் இல்லையா?" ன்னு சொல்லி தாத்தா மெதுவா சிரிச்சார்!
"சட்"னு புரிஞ்சுபோன சந்தோஷத்துல ராம்,"தாத்தா, யு ஆர் க்ரேட்" ன்னு என்ன செய்றோம்னு தெரியாம, அவர அப்படியே அலக்கா தூக்கி தல மேல ரெண்டு சுத்து சுத்திட்டான்!!

சாதாரணமா எது சொன்னாலும் சண்டைக்கு வர்ற பக்குவம்; ஆனா சாமியோ, ஒரு சாமியாரோ சொன்னா அப்படியே நம்பீர்றாங்க; அது அவங்க பலவீனம்; நமக்கு பலம்; அதான்! விடுப்பா, நட வீட்டுக்குப்போற வழியப் பாரு!

ஆனாலும் ஒரு சந்தேகம், அம்புட்டு பானகத்த எப்படி ஒரேடியா குடிச்சீங்க?

"ஏதோ புத்தகத்துல பேர் வரணும்னு அவனவன் ப்ளேனு, பஸ்னு இழுக்கலயா? அந்த ஒரே 'குறி', வெறி, மக்கள் சூழ்நிலை, இது மனுஷன மலையக் கூட பேக்க வெச்சுடும்! பிள்ளையார் பால் குடிக்கலாம், அம்மன் வருஷம் பூராவும் பச்ச புடவ கேக்கலாம், அனுமாரு வைத்தியம் பார்க்ககூடாதா? வழக்கமான குறி வேற, இந்தக் குறி வேற!!"

பேசத்தோணாத, அந்த பெரிய மனுசனையே பார்த்தபடி நின்னான் ராம்! முத முறையா ராம் அனுமனுக்கு தாசனானான்!

14 comments:

துளசி கோபால் said...

ஒரே கல்லுலே ரெண்டு மாங்காயா? பேஷ் பேஷ்.
ஸ்ரீராம நவமிக்கும் ஆச்சு, அப்படியே 'பெரு நோய்க்கும்' ஆச்சு. நல்லா வந்துருக்குக் கதை.

அந்தக் காலத்துலே இப்படிப் போற ஆளுங்களுக்கு 'குஷ்டம்' வருமுன்னு ரத்தக்கண்ணீர்லே சொல்லியிருப்பாங்க.
அப்ப அதுதான் பெரு நோய். ஆனாக் காலம் மாறிடுச்சு பாருங்க. இன்னைக்குப் பெரு நோய் எய்ட்ஸ்தான் இல்லே?

அனைவருக்கும் ஸ்ரீராமநவமி வாழ்த்து(க்)கள்.

இலவசக்கொத்தனார் said...

பியூட்டிஃபுல். ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

Maraboor J Chandrasekaran said...

துளசி கோபால் உங்க வேகம் என்னை ப்ரமிக்க வைக்குது! எப்படி அத்தனையும் படிச்சு, பின்னூட்டமும் இவ்வளவு சீக்கரம் போடறீங்க? வாத்யாரம்மான்னா வாத்யாரம்மா தான்! ஆசாமி பண்ற கூத்துக்கு, சாமியதான் இப்ப துணைக்கு கூப்பிடணும்! எய்ட்ஸ் பரவ முக்கியமான காரணம் வழிப்போக்கராயுள்ள லாரி டிரைவருங்க தான். எல்லாரையும் சொல்லல, பெரும்பாலானவங்கன்னேன்!

Maraboor J Chandrasekaran said...

உங்க பின்னூட்டத்துக்கு நன்றி, இலவசக்கொத்தனார்! நிறைய சாமி மேட்டர் எழுதற உங்க கையால, அனுமாரு செஞ்சது சரின்னா, சரிதான்! :-)

krishjapan said...

அருமையாய் எழுதியுள்ளீர்கள். இதே போன்ற சம்பவத்தை நேரில் பார்த்திருக்கிறேன்.

தவறாய் எடுத்துக் கொள்ளக்கூடாது, தலைப்பு பொருந்தாதது போன்ற ஒரு நினைப்பு. வேறு தலைப்பாய் இருந்தால் மேலும் பலர் படித்திருப்பார்களோ, என்று நினைக்கிறேன்.

துளசி கோபால் said...

புரியலைங்களே, இலவசம் சாமி மேட்டர் எழுதறாரா? எப்போ? எங்கே?

Maraboor J Chandrasekaran said...

துளசிஅக்கா, தப்பா சொல்லிட்டேன்; இலவசம் சாமி மேட்டர் எழுதல! அந்த பதில நீக்கிட்டேன்!

Maraboor J Chandrasekaran said...

கிருஷ்ணா, அந்த சம்பவத்தைப் பத்தி எழுதுங்களேன்! படிக்கலாம்! நீங்க என்ன தலைப்பு வைக்கணும்னு சொல்லுங்க, பிடிச்சா மாத்திடுறேன்! குறி சொல்றதுன்னு உண்டு, குறி வைக்கிறதுன்னு ஒண்ணு உண்டு! தாத்தா, தப்பு செய்ற மக்களைக் குறி வைக்க சாமியாடி குறி சொல்றதால, இந்தப் பேர வெச்சேன்!

குமரன் (Kumaran) said...

நல்ல கதை சார். இப்படித் தான் அந்தக் காலத்துலயும் பாவ புண்ணியம், சொர்க்க நரகம்ன்னு சொல்லி வச்சாங்களோ? :-)

அனுமார் சொன்ன குறின்னு தலைப்பின் பெயரை மாத்திடுங்களே? நானும் குறிங்கறத் தலைப்பைப் பாத்துட்டு ஒரு நொடி தயங்கினேன். அப்புறம் முதல் வரியைப் பார்த்து இன்னொரு நொடி தயங்கினேன். அப்புறம் தான் கவியோகியோட பேரம் தப்பா எழுதியிருக்கமாட்டார்னு தைரியமாப் படிச்சேன். :-)

Maraboor J Chandrasekaran said...

குமரன், நீங்க சொல்ற மாதிரி தலைப்பு வெச்சா, கதையவே சொன்ன மாதிரிதான்! நான் முன்னவே இதற்கு விளக்கம் கொடுத்தேன்! குறி- இரண்டு அர்த்தம். Target, (அந்த தவறாக நடக்கும் லாரி ஓட்டுனர்கள்) இரண்டாவது 'குறி'- ஜோசியம் சொல்றது- சாமி வந்து சொல்றது. இரண்டு அர்த்தமும் கொண்ட கருத்து ஒரே கதையில் வருது!!

குமரன் (Kumaran) said...

வச்ச குறி தப்பாது....

இது பரவாயில்லையா?

Maraboor J Chandrasekaran said...

குமரன், பரவாயில்ல. நான் நீளமா எழுதின கதைய தலைப்புலயே முடிச்சுட்டீங்க!

meenamuthu said...

கதை!ன்னெ நெனைக்க முடியலை :)

'ராம்'ன்னே தலைப்பு வச்சுருக்கலாம் போல
ஹீரோ பெயரும், ராமநவமியன்னைக்குத்தானே
அவங்களை திருத்தறதுக்கு வழியும் கெடச்சிருக்கு

ராம் ஓரிடத்தில் ராஜ் ஆகிட்டாரே :)

Maraboor J Chandrasekaran said...

நன்றி மீனா- கதை நிஜம்போல இருக்குன்னு சொன்னதுக்கு. ரெண்டாவது நன்றி தப்பை திருத்தினதுக்கு. (ஓரிடத்தில் ராஜ்!) இப்ப போய் பாருங்க; மாத்திட்டேன்.கதை எழுதினது நட்சத்திர வாரத்துல, ராம நவமி அன்னிக்கு.