04 April 2006

பூக்களைத் தான் பறிக்காதீங்க..!

கால வேளைல நான் ஏன் வாக்கிங் அது இதுன்னு கிளம்பரதில்லைன்னு ஒரு பதிவு போட்டேன். நாகரிகக் கோமளிகள்னு.[ http://sirichuvai.blogspot.com ] அதுல பணக்கார ரவுசுகளப் பத்தி முக்கியமாச் சொன்னேன்.

அதுல சொல்லவிட்ட ஒரு தினசரி நடக்கும் தப்பான விஷயத்த தனி பதிவா போட்டாதான், நமக்குள்ள இருக்குற சில பல பழக்கத்த நாம் மாத்திக்க முடியும்.!!

மரங்களப் பார்க்கறதே அபூர்வமாயிகிட்டு இருக்குற நகரங்கள்ல, அழகான கால நேரம், பூமரம், செடிங்கள்ல இருக்குற ஆயிரமாயிரம் பூக்கள், மெதுவா, சூரிய வளிச்சம் பட்டு, பனி வெலகி, வாய் திறந்து, காலக் காத்த உள் வாங்கி, கொஞ்சம் கொஞ்சமா, நிறம் மாறி, பூக்கும். அது முழுசா, பூக்க, எப்படியும் 7-8 மணி ஆயிரும். ஆனா, அதுக்குள்ள அந்த பூக்களுக்கு வர்ற ஆபத்து இருக்கே, அது சொல்லி மாளாது!

செம்பருத்தி, நந்தியாவட்டை, பவள மல்லி (சீசன்லதான் பூக்கும்), மஞ்சள் ஆம்பல், மஞ்ச ஸ்பீக்கர் பூ (இதுக்கு தமிழ் பெயர் தெரியாதுங்க!), சுருள் நந்தியாவட்டை, கொன்னை, இன்னும் பல விதமான பூக்கள் பூக்கறதப் பாக்குறது, அழகு.இத எந்த கவிஞனாலும் வருணிக்க முடியாது, எந்த ஓவியனாலும் வரைய முடியாது. ஆனா, பச்ச பிள்ள கண் தெறக்கறதுக்கு முன்னமே, குரல்வளைய நெர்¢க்கிற மாதிரி, "பக் பக்" னு அத பறிச்சுகிட்டு போய்டுவானுங்க, சில பெருசுங்க.

வெள்ள வேஷ்டி மடிப்புக்குள்ள, கைல உள்ள மஞ்சப் பையி, விட்டா வாயிலயும் போட்டுகிட்டு போயிடுவாங்க போல! சூரியன் எந்திரிக்க லேட்டானாலும், இவனுங்க எந்திரிச்சு `அட்டாக்' பண்றத விடமாட்டாங்க! என்னங்கடா, இப்படி விடிகாலைல பறிக்கிறாங்களேன்னு பார்த்தா, கோவிலுக்கு, சாமிக்குன்னு சொல்லி பிடுங்குறாங்க! அட பாவிகளா, சாமி வாயத்திறந்து "எனக்கு பச்ச புள்ளயொத்த, கண்ணு தெறக்காத பூவப் பறிச்சு போட்டாதான், அருள்பாலிப்பேன்னு" சொன்னாரா? அதுக்குன்னு வேற பல பூ இருக்கே? முல்லை, மல்லிகை, துளசி இலை, வில்வ ன்னு பல தினுசு. ரெண்டு கோஷ்டிக்கும் ( குறுக்குக் கோடு கோஷ்டி, நெட்டுக் கோடு கோஷ்டி!! நான் இல்லைன்னாலும் மனுசப்பயலுவ விடுறாங்களா? கோடுல நிக்கிறவன் அதத் தாண்டி வரமாட்டேங்கிறான்கறத தனியா எழுதணும் போல; ஆனா, அது எழுதி, திருந்தற கோஷ்டியவிட, ஏன் எழுதினன்னு திட்டற கோஷ்டிதான் அதிகமாகும்கிறதால், அந்த மேட்டரை இப்ப டச் பண்ணல!)

ஆண்டவனே, துளசியையும், வில்வத்தையும் படைச்சு வெச்சுருக்கானே? ஒரு துளசியால பாமா, கிருஷ்ண்ன அடைஞ்சதும், ராத்திரி பூரா, வில்வ மரத்துல ஒதுங்குன திருடன், வில்வம்னு தெரியாம பறிச்சு,பறிச்சு கீழ எறிஞ்சுகிட்டேயிருந்ததுல, கீழே இருந்த சிவலிங்கம் சந்தோஷப்பட்டு, திருடனுக்கு காட்சியளிச்சு, அவனுக்கு நல்ல புத்தி தந்ததையும் நாம படிச்சதில்லையா? பின்ன, பிஞ்சுப் பூக்களை ஏன்யா பறிக்கிறீங்க??

அதுலயும், சில தாத்தாக்கள் பலே தாத்தாக்களாக இருப்பாங்க! கைல ஒரு நடை குச்சிய (walking stick க்கு தமிழாக்கம். 'டாக்டர் ஐயா' மன்னிப்பாராக!) கொண்டாந்து, அத விட்டு, மேலேயுள்ள கிளைய அப்படியே வளைச்சு, மத்த கையால இறுக்கிப் பிடிச்சு, சட சடன்னு,மேல உள்ள பூவையெல்லாம் பறிக்கிறப்ப, "அட, மேல தப்பிச்ச, கொஞ்ச நஞ்சப் பூவ, தல தப்ப விட மாட்டேங்கிறாங்களே"ன்னு, கோவமா வரும். ஆனா, பெருசுங்கள திட்ட முடியுமா? ஒரு பத்து நிமிஷம் கழிச்சுப் பார்த்தா, மொத்த மரமும் கைம்பெண் போல் நிக்கிறதப் பார்க்கும் மனசுள்ள மனுசனுக்கு 'பகீர்' னு இருக்கும்.

ஆனா, "பூ பறிக்கத்தான் செய்வேன்; சாமிக்குப் போடத்தான் போடுவேன்; பாட்டன், முப்பாட்டன் காலத்துலேர்ந்து பூ பறிச்சு போடறோம். பழக்கத்த விட முடியாதுன்னு" சொல்ற மக்களுக்கு ஒரு தலை சாய்ந்த விண்ணப்பம், வேண்டுகோள் :

பூவோட காலம், ஒரு நாள் தான்; ராத்திரில வாடிடும். ஆனா, சாயங்காலம் பார்த்தீங்கன்னா, நல்லா பூத்து, வரப்போகும் இரவின் வாடுதலைப் பற்றி கவலைப் படாத, மாலைக் காத்துல சிலுசிலுத்துகிட்டு நிக்கும். அப்ப அந்த பூ கிட்ட பேசுங்க; "ஏ,பூவே.காலைல கண்ணுக்கு குளிர்ச்சியா, மனதுக்கு இதமா காட்சி தந்த. இப்ப, வாடி எப்படியும் கீழ விழப்பொற. அதுக்கு நான் சொல்ற உபாயம் ரெண்டு பேருக்குமே நல்லது. என்னால பூ பறிச்சு போடாம இருக்க முடியாது. உன்னால் உதிர்றத தடுக்க முடியாது. அதனால நான் உன்ன பறிச்சு, இறைவனடில சேர்க்கறேன். சந்தோஷமா இரு!" ன்னு!

கட்டாயம் வாய் இருந்தா அந்த பூ காலைல பறிச்சா உங்கள சாபமிடும், ஆனா மாலைல இறைவனடி சேர்த்தா, வாழ்த்தும்! என்ன, சரிதானே? நீங்க அப்படி காலைல பூ பறிச்சா, அத மாலை வேளைக்கு மாத்திக்கங்க! ஓ, ஒரு வேளை அத மாலை வேளைன்னு சொல்ற காரணம், இதுவாக் கூட இருக்குமா? பூக்கள் பறிக்கபபட்டு, மாலையாக சேர்ந்து, இறைவனடி சேரும் நேரம்ங்கிறதால, 'மாலை' நேரமாச்சுதோ?

மத்தவங்க அப்படி பறிக்கறதப் பார்த்தா, இதமா எடுத்துச்சொல்லி, நேரத்த மாத்தச் சொல்லுங்க!
சரி, காலைலதான் போடணும்னு அடம் பிடிக்கிறவங்க, அதுக்குன்னே விற்குற அந்தந்த சீசன் பூவ (மல்லிகை, முல்லை ஒரு சீசந்தான், கனகாம்பரம், டிசம்பர் பூ, ஒரு சீசன், சவந்தி ஒரு சீசன்) - இப்படி சல்லிசாவும் வாங்கி, சாமிக்கு சாத்தலாம்ல? எதோ, பூவித்து பொழக்கிற ஆத்மாக்கள் சந்தோஷப் பட்டு போலாம்ல?

மல்லிகைன்னதும் ஞாபகம் வருது. சென்னைக்குப் பக்கத்துல நத்தம் கிராமம். அங்க பசங்களுக்கு என்.எஸ்,கே. மாதிரி, "விஞ்ஞானத்த வளர்க்கப் போறோம்" னு சொல்லி, IIT பசங்களோட சேர்ந்து சில நாட்கள் போனோம். அந்த ஊருக்கு முக்கிய வருமானம் வர்றதே, மல்லிகை வியாபாரம்தான். ஆனா, சீசன்ல, கையால அத அவசரமா, பறிக்க முடியாம, பல பூக்கள் வாடி கீழ விழுகறதாயும், பல பூக்கள் பறிக்க நேரமில்லாம, வாடி வீணாப் போறதாயும் சொன்னாங்க! IIT படிச்ச பசங்களுக்கு ஒரு சவால்! "மொத்த பூவையும் சுலபமா, சீக்கிரமா, கீழ சிந்தாம, வீணாகாம பறிக்க ஒரு சாதனம், மெஷின கண்டுபிடிச்சு கொடுங்க ராசா"ன்னு ஒரு கிழவி கேட்டுச்சு! யாராச்சும் அப்படி ஒண்ணை யோசிச்சு சொல்லுங்களேன்!!
சொன்னா, பல கிராமங்கள்ல இதயே பொழப்பா வெச்சு நடத்தறவங்களுக்கு இந்த கண்டுபிடிப்பு ஒரு வரபிரசாதமா இருக்கும்! சரி, இது பறிக்கறதுக்கு மிஷன். ஆனா நான் இந்த பதிவ எழுதுனது, பூக்களப் பறிக்காதீங்கன்னு சொல்ற Mission! ரெண்டும் வேற; வேற!

20 comments:

Muthu said...

நானெல்லாம் மரத்திற்கு ஒரு பூ தான் பறிப்பேன்..நான் நல்லவனா கெட்டவனா சார்?

(உங்களுடைய இண்டர்வ்யூ கதை சுவாரசியம்...ஆனால் முடிவை முன்னரே ஊகித்துவிட்டேனாக்கும்)

Maraboor J Chandrasekaran said...

முத்து- மரத்துக்கு ஒரு பூ சரி, ஆனா காலைலயே எத்தன மரம் "கவர்" பண்ணுவீங்க? அதச்சொல்லுங்க!
உங்க கேள்விக்கு பதில்- "தெரியலயேப்பா?" (பதில் தெரியலைன்னு சொல்லல; நீங்க good ஆ badஆ தெரியலைன்னு சொன்னேன்!)

Muthu said...
This comment has been removed by a blog administrator.
Muthu said...

மரபூராரே,

காலைல வாக்கிங் போயிட்டு வரும்போது எங்க வீதியில கடைசி வீட்ல ஒரு செம்பருத்தி, அப்புறம் கொஞ்சம் மல்லி, அப்புறம் சில பெயர் தெரியாத பூக்கள் எல்லாம்
சேர்த்தா மொத்தம் ஐந்து மரங்கள் கூட வராதேங்க..

Maraboor J Chandrasekaran said...

சரி, முத்து, நீர் ரொம்ப நல்ல்ல்ல மனுஷன்யா!! ஐயா, பூப்பறிய்யா, ஆனா, அந்த வாக்கிங்கையும், பூப்பறிக்கறதையும் மாலை நேரத்துல வெச்சுக்கய்யா, இந்த சின்ன டைம் அட்ஜஸ்ட்மண்டுக்கு போயி, என்ன அப்பாவி இல்ல, அதுலயும் போட்டோல இருக்குற மாதிரி அப்பாவி இல்ல, அது இதுன்னு எழுதறயேய்யா? நியாயமா? என் முகம் அப்படி. போட்டோ என்ன பண்ணும்? இல்ல என் கைதான் என்ன பண்ணும்? சத்தியமா பூப்பறிச்சுகிட்டு இருக்காது!!!

Maraboor J Chandrasekaran said...

சரி, முத்து, கேக்க மறந்துட்டேன், அந்த கடைசி வீடு, மத்த பூப்பறிக்கிற வீட்டுல இருக்குறவுங்க 'சவுண்ட'க் கொடுத்தறக் கூடாதேன்னு தான் காலைலயே ஒரு நட போய்ட்டு வர்றேங்களா? எதுக்கு வம்பு,பேசாம வாங்கிப் போடுங்க,இல்ல இருக்கே, துளசி, வில்வம், அருகம்புல்!

Muthu said...

அது(அப்பாவி விஷயம்..தனி மடல்) அதுக்கு இல்லைங்க...வெற காரணம்...அப்புறம் சொல்றன்..

வாக்கிங் சாயங்காலமா? சரிதான் எட்டு மணிக்குதான்யா வீட்டுக்கே போறென் நைட் ..
அந்த வீட்டுகாரங்க யாரும் சவுண்ட் விடறதில்லை...நான் பாக்க அப்பாவியா இருக்கேனில்லையா? :))))

துளசி கோபால் said...

ஹைய்யோ, நான் நினைச்சதை அப்படியே சொல்லிட்டீங்க ஜே எஸ்.

சாமி இப்படித் 'திருட்டு'ப்பூவைக் கேட்டாரா? நம்ம செடியில்லாத வேற எந்தச் செடியானாலும்
எடுக்கற பூ திருடுன்னுதான் என் எண்ணம்.

அடுத்தவங்க காம்பவுண்டுலே இருந்து அப்படி பயந்து பயந்து எடுக்கறப்ப பூவை மட்டுமில்லாம
இன்னும் ஒரு வாரம் கழிச்சு மலரக்கூடிய மொட்டுக்களையும் துவம்சம் செஞ்சுடறாங்க பார்த்தீங்களா?

நான் நம்ம வீட்டுலே ஏராளமா பூ இருந்தாலுமே சாமிக்குப் பூ வைக்கறதில்லை. செடியிலே இருந்தா
சாமி ஏத்துக்க மாட்டாரா? இன்னும் நாலுநாள் செடியிலே இருக்கட்டுமே.
அதான் சாமிக்கு என் மனசுன்ற பூவை தினமும் வச்சுடறேன், இல்லையா?

அதுல்லாம சாமிக்கு துளசி இருக்குன்னு நீங்கவேற சொல்லிட்டீங்க. அப்புறம் அப்பீல் ஏது?:-))

போனவாரம் இங்கே ஹரே கிருஷ்ணா கோயிலுக்கு வழக்கமாப் போறமாதிரி போனோம்.
அங்கத்து பூஜை முடிஞ்சதும் பூஜாரிணி, என்னைக் கூப்பிட்டு என்னமோ தந்து வாயிலே
போட்டுக்கச் சொன்னாங்க. கையைத் திறந்து பார்த்தா எண்ணி நாலு துளசி இலை.
இந்த 19 வருசத்துலே முதல்முறையா கிடைச்சது. கிருஷ்ணனோட குறும்பைப் பாருங்க,
'துளசிக்கே' துளசி. அங்கே என்னையும் சேர்த்து நாலு பேர் இருந்தோம், ஆளுக்கு ஒண்ணாச்சு.

சம்மட்டி said...

வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார் தெரியும், மெரபூராரே,
பூக்களை பறிக்கும் போது வலிக்கிறது நன்றாக சொல்லியிருக்கிறீர்கள் - ஒரு நல்ல பதிவு.

பொன்ஸ்~~Poorna said...

ஏங்க.. இலையைப் பறிச்சு சாமிக்கு போட சொல்றீங்களே, இலை இருந்தா தானேங்க மரம் உயிரோட இருக்கும், பூவும் பூக்கும்??!! ஒட்டு மொத்தமா எல்லா பூவையும் பறிச்சு மரத்தை மொட்டை அடிக்கறது தப்பு.. ஆனா, நாங்க செம்பருத்தி, மல்லி எல்லாம் வளர்த்தப்போ அதிலேர்ந்து ஒரு நாளைக்கு ரெண்டு பூவாவது பறிச்சாத் தான் அது அடுத்த நாள் நல்லாப் பூக்கும். செடிக்கும் மனசு இருக்கும்னு சொல்லுவாங்க.. "நாளைக்கும் இதே மாதிரி அழகாப் பூக்கணும்"னு சொல்லிக்கிட்டே பறிச்சா மறுநாளும் அழகா பூக்கும்.. பறிக்காம ஒரு நாள் விட்டிட்டேன்னா, மறுநாள் பூ குறைஞ்சிடும்..

கடைகள்ல வாங்க சொல்லி இருக்கீங்க.. அவங்க மட்டும் என்ன? பறிச்சு தானே எடுத்துகிட்டு வர்றாங்க??

Geetha Sambasivam said...

தினமும் உங்கள் பதிவைப் படிக்கும்போது தமிழில் மட்டும் என்று பின்னூட்டம் கொடுக்க முடிகிறதோ அன்று தான் எழுதவேண்டும் என்று நினைத்தேன். நான் தமிழ் எழுத ஆரம்பித்த நேரம் உங்கள் நட்சத்திர வாரமாக அமைந்து விட்டது. என் வாழ்த்துக்கள்.உங்கள் தமிழ் அறிவையும், உங்கள் வேலை செய்யும் திறனையும் அதுவும் தமிழுக்காகச் செய்யும் தொண்டுக்கும் என் வணக்கங்கள்.என்னால் உதவ முடிய வில்லை என நினைக்கும்போது வருத்தமக உள்ளது.

Maraboor J Chandrasekaran said...

அந்த வேற காரணம் என்னன்னு தனி மெயில் போடச்சொல்லும்மா கண்ணு! எட்டு மணிக்கு உங்கப்பா
வீட்டுக்கு வர்றார்ல? அப்ப, அப்படியே பூக்கடைல ஒரு முழம் வாங்கியாந்து சாமிக்கும் போட்டு, அம்மாவுக்கும் குடுக்கச் சொல்லு செல்லம்! உன் படத்தைப் பார்த்து உன் அப்பா அப்பாவியா, அடப்பாவியான்னு எப்படி கண்ணு நான் சொல்லுவேன்? அப்பா படத்தக் காட்டும்மா!

Maraboor J Chandrasekaran said...

`பொன்ஸ்' வைக்கிற இடத்தில பூ வைக்கணும்கிற விஷயத்த தப்பா புரிஞ்சிகிட்டேங்களே ;-) !! எத்தனை இலைங்க? ஒண்ணு ரெண்டு தளம் பறிச்சுப் போட்டா, ஒண்னும் ஆகாது. நான் ஓரிரண்டு பூவ
பறிக்காதீங்கன்னு சொல்லலையே, சாயங்காலமா பறிச்சுப் போடலாம்னு ஒரு உபாயம் சொன்னேனே, படிக்கலையா? நீங்க பூக்கள மதிச்சு பேசறது பற்றி ரொம்ப சந்தோஷம். ஆனா, என்ன சொல்லணும்? கவலைப் பாடாதே, நாளைக்கும் உன் மாலை இனியதாக முடியும், இறைவன் திருவடியில்- அப்படீன்னு தானே?
பூவிக்கிறவங்களுக்கு அது ஒரு தொழில், ரெண்டாவது நான் சொன்ன பூக்கள்- மல்லி, முல்லை, கனகாம்பரம், இதெல்லாம், பறிக்கலைன்னாலும் வாடும், பறிச்சு அப்படியே கடந்தாலும் வாடும். அவங்க வியாபாரம் செய்யலைன்னா, அவங்க அடுப்பு வேகாது. நீங்க பறிக்ககூடாதுன்னது, அடுத்தவன் வீட்டுப்பூவையும், உங்க வீட்டுப்பூவையும், அக்குவேர், ஆணிவேரா, புதுசா இல்லாம மாலைவேளைல வாடுமுன் பூவை; சாமிக்கு படைச்சு, பூக்கும் மோட்சம் தரச்சொல்கிறேன்!

Maraboor J Chandrasekaran said...

திருநெல்வேலிக்கே அல்வான்னுவாங்க, இங்க துளசிக்கே, துளசியா. ரொம்ப சந்தோஷம். திருட்டுப்பூங்கிற சிந்தனையும், மரத்தோட பூவை சாமி ஏத்துக்காதான்னு சொல்றது கூட மிக நல்ல சிந்தனை! ஒரு வேளை என் பதிவுக்கு, துளசி தீர்த்தம் தெளிக்கவேணும்னு தான் அந்த சிந்தனை எனக்கு வரவில்லையோ? சந்தோஷமான மனப்பூவை மணக்க மணக்க பூசையில் வைக்கும் பூவையே, உங்கள் சிந்தனைக்கு நன்றி :)

Maraboor J Chandrasekaran said...

சம்மட்டின்னு பேரு வச்சிருக்கீங்க, ஆனா ரொம்ப மென்மையான மனசு உள்ளவராயிருக்கீங்க.தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.

Maraboor J Chandrasekaran said...

கீதா சாம்பசிவம்; உங்க சித்திய எப்ப நான் பார்க்க வரலாம், அதை முதல்ல சொல்லுங்க; சுத்தானந்த பாரதியாரைப் பத்தி பேசுவாங்கன்னு சொல்லிட்டு, என்ன தேவுடு காக்க வெச்சுட்டீங்களே? உங்க வாழ்த்துக்கு நன்றி. நீங்க தமிழ்ல எழுதறது பற்றி மகிழ்ச்சி. நீங்கள் எதற்கு வருத்தப் படுறீங்கன்னு எனக்குப் புரியல. சுப்ரமணிய பாரதியார், வெள்ளைத் தாமரை...னு தொடங்குற பாடல்ல இப்படி சொல்றாரு:-

அன்ன சத்திரம் அயிரம் வைத்தல்,
ஆலயம்பதினாயிரம் நாட்டல்...

இப்படி சொல்றவரு, கடைசியா, யாரு என்ன என்ன தருமமா கொடுக்கணும்னு சொல்றாரு...
நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதிகுறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் வாய்சொல் அருளீர்
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!!... அப்படீன்னு!!

நீங்க முடிஞ்சா, உழவாரப் பணில கலந்துக்கங்க, நாலு பேர்கிட்ட சொல்லி இளைஞர்கள எங்க நற்பணில சேரச்சொல்லுங்க, யாராச்சும் பழைய கோவில புதுப்பிச்ச செய்தி கேட்டா, முடிஞ்ச உதவி பண்ணுங்க, தமிழ் ஆங்கிலத்துல ஆயிரமாயிரம் நண்பர்களுக்கு கடிதம் எழுதுங்க; எங்கெல்லாம் இப்படி புராதனக் கோயில்கள் சிதிலமடைஞ்சு இருக்கோ, எங்களுக்கு தகவல் தரச்சொல்லுங்க; அந்தந்த ஊர்ல இருக்கற இளைஞர்களை வெச்சு குழு அமைச்சு, முடிஞ்சவரை சுத்தம் செய்யப் பாருங்க, அவ்வளவு தானே!

குமரன் (Kumaran) said...

நல்ல வேளை எனக்கு இந்தப் பூக்கள் பறிக்கின்றப் பழக்கம் இல்லாமல் போனது. பூக்கடையில் தான் பூ வாங்கியிருக்கிறேன். :-)

Maraboor J Chandrasekaran said...

ஆ, குமரன், (பூங்)கொடி காத்த குமரன்னு உங்களை இனி அழைக்கலாம்!

meenamuthu said...

பாருங்க எனக்கு இது தெரியாமலேயே எப்பவும் சாயங்காலம்தான் பூ எடுத்து சாமிக்கு வைப்பேன்
இதுல வேற மனதுக்குள் என்னை திட்டிக்குவேன்
இப்படி செய்வதற்கு! :)

Maraboor J Chandrasekaran said...

மீனா, பார்த்தீங்களா, உங்களை அறியாமலே நல்லது செஞ்சு வந்திருக்கீங்க! பூவுக்கு மோக்ஷம்! எதுக்கு திட்டிக்கணும்?கை முதுகு வரைக்கும் போச்சுன்னா, தட்டிக்கொடுங்க! :-)